Pages

Monday, June 14, 1999

சிலம்பு மடல் 10

சிலம்பு மடல் - 10 இந்திரவிழாவும் பலிக்கொடையும்!
புகார்:
இந்திர விழவூரெடுத்த காதை:

மருவூர்ப்பாக்கத்தையும், பட்டினப்பாக்கத்தையும் பிரித்து அல்லது சேர்த்து வைத்த பகுதியிலே பேரங்காடி ஒன்று இருந்தது; நாட்பொழுதில் இயங்குவதால் அது நாளங்காடி எனப்பட்டது.

"இருபால் பகுதியின் இடைநிலம் ஆகிய
கடைகால் யாத்த மிடைமரச் சோலைக்

கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்
நடுக்குஇன்றி நிலைஇய நாள்அங் காடியில்"........

(ஓதை = ஒலி)

அந்த நாளங்காடியிலே பூதம் ஒன்றின் கோயில் இருந்தது: இந்த பூதமானது சோழமன்னனுக்கு நேர்ந்த துன்பத்தைத் தீர்ப்பதற்காக, தேவர் தலைவன் இந்திரனால் (தேவர் கோமான்) அனுப்பப்பட்டதாம்.

"வெற்றிவேல் மன்னர்க்கு உற்றதை ஒழிக்கெனத்
தேவர் கோமான் ஏவலின் போந்த
காவல் பூதம்"

இந்த பூதத்தை மறக்குல மகளிர், சித்திரை மாதத்தில், சித்திரை நட்சத்திரத்தில் வரும் முழுநிலவு நாளன்று (சித்திரைப் பெளர்ணமி ) வழிபட, இந்திர விழா தொடங்குகிறது.

"சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென".......

மகளிர், ஊன்தசைச் சோறு, பொங்கல், மலர் போன்றவற்றை வைத்து வழிபட்டு, துணங்கைக் கூத்து (இருகைகளையும் மடக்கி அடித்து ஆடும் கூத்து), குரவைக் கூத்து (கைகோர்த்தாடுவது) போன்றவற்றை ஆடி "எம்மன்னனின் ஆட்சி முழுதும் பசியும், பிணியும், பகையும் நீங்கி மழையும் வளமும் பெருகுக" என வா
ழ்த்தி வழிபடுகின்றனர்!

"பெருநில மன்னன் இருநிலம் அடங்கலும்
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி"...........

மறக்குல மகளிர் தன் அரசனின் ஆட்சி நலம் பெற வாழ்த்தி வழிபட, வீரர்களின் வீரத்துக்கு வரம்பு அல்லது எல்லை என்றால் "தன் தலையைத் தான் அரிந்து, தம் மன்னனுக்குத் துன்பம் நேர்ந்தால், அதிலிருந்து அவனைக் காப்பதன் பொருட்டு பூதத்திற்குப் பலியிடலே" என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு, வீரமிக்க மருவூர் மறவரும், பட்டினப் பாக்கப் படைவீரரும் பலிபீடம் சென்று, "எம்மன்னனுக்கு ஏற்படும் இன்னல்களை ஒழிப்பாயாக" என்று வேண்டி, ஆரவாரித்து, பலபோர்களிலே வெற்றிவாகை சூடிய வீரர்திலகங்கள், கண்டோ ரை அச்சுறுத்தும் சுடுகொள்ளி போன்ற கண்கள் பொருந்திய தம் வலிமையான
தலையைத் தம் கரங்களாலேயே அரிந்து, அரிந்த கரங்களினாலேயே அத்தலையை பலிபீடத்தில் வைக்க(பலிக்கொடை!!), அதை ஏற்றுக்கொண்ட பூதம் நடுக்கம் தருமளவிற்கு இடிமுழக்கம் போன்ற குரல் ஒலிக்க,
தலைதந்த வீரரோ/வீரர்களோ, தம் தலை அகன்றபின்னும் தங்கள் உடலோடு கட்டிச் சென்ற "மயிர்க்கண் முரசை" தம் கரங்களால் தட்டி ஒலி எழுப்புகின்றனர்:

"மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும்
பட்டின மருங்கின் படைகெழு மாக்களும்
முந்தச் சென்று முழுபலி பீடிகை
வெந்திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்கெனப்
பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பு ஆகென
கல்உமிழ் கவணினர் கழிப்பிணிக் கறைத்தோல்
பல்வேல் பரப்பினர் மெய்யுறத் தீண்டி
ஆர்த்துக் களம்கொண்டோ ர் ஆர்அமர் அழுவத்துச்
சூர்த்துக் கடைசிவந்த சுடுநோக்குக் கருந்தலை
வெற்றி வேந்தன் கொற்றம் கொள்கென
நற்பலி பீடிகை நலம்கொள வைத்துஆங்கு
உயிர்ப்பலி உண்ணும் உருமுக்குரல் முழக்கத்து
மயிர்க்கண் முரசொடு வான்பலி ஊட்டி; ".......

படிக்கும்போது, நினைத்துப் பார்க்கவே சிலிர்க்கச் செய்யும் காட்சி கண்முன் விரிவது, கட்டுப் படுத்த இயலாதது.

சிலம்பின் காலம் சுமார்1800 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். கரிகால் பெருவளத்தான் காலத்துக்குச் சற்றுப் பிந்தையது என்றும் அறிவோம். அதற்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முந்தையது தமிழர் இலக்கணமான தொல்காப்பியம்.

அதில் மருதநிலக் கடவுளாகக் குறிக்கப்படுபவன் இந்திரன். மருதநிலம் என்றால் வேளாண்மையும் வேளாண்மை சார்ந்த இடமும் என்று நாம் அறிவோம். விவசாயத்திற்குத் தேவை மழை. அந்த மழையை அளிப்பது மேகம். அந்த மேகங்களின் இயக்கம் கடவுளால் என்ற நம்பிக்கையில், அவற்றை இயக்கும் கடவுள் இந்திரன் என்று பெயரிடப்பட்டு வழிபட்டது, காவிரிப்பூம்பட்டினம் கடற்கரை நகரமென்ற போதும் வேளான்மையால் சிறந்த சோழநாட்டின் பகுதியென்பதால் இந்திரவிழா மிகப் பொருத்தமான ஒன்றுதான்.

ஆனால் "தேவர்கோமான்" எனப்படும் போது "வானில் வாழும் தேவர்களின் தலைவன்" என்ற ஆரியக் கொள்கையின் அடிப்படையில் பார்த்தால் தொல்காப்பியக் காலத்துக்கும் சிலம்பின் காலத்துக்கும் இடையில்
கொள்கைகள் மாறி வலுப்பெற்றுவிட்டன என்று கருத முடிகிறது.

சோழமன்னனைக் காக்க பூதத்தை இந்திரன் அனுப்பினான் என்ற
கருத்தையும், அந்த பூதம் முழங்கியது என்ற கருத்தையும் பார்த்தால் இந்திரவிழா என்பது மூடவிழாவாகத் தோன்றுவதைத் தடுக்க இயலாது!

வானுறையும் தேவர்கள் மற்றும் அவர்கள் தலைவன் இந்திரன் என்றால் சோழநாட்டைக் காக்க அனுப்பிய பூதம் போல் பாண்டி நாட்டையோ, சேர நாட்டையோ காக்க ஏதாவது பூதம் அனுப்பப் பட்டிருக்க஧
வண்டும்! ஏன், இதர நாடுகளுக்கும் அனுப்பப் பட்டிருக்க வேண்டும்! ஆனால் தமிழ் இலக்கியங்கள் வேறெங்கும் அவ்வாறு காட்டவில்லை!

ஆக, இந்திரன் என்பவன் தமிழர் கடவுளாகப் படைக்கப் பெற்றிருக்கிறான்; ஆனால் இடைக்காலத்தில் அவன் திரிக்கப் பட்டு தமிழரிடம் இருந்து தள்ளிப் போயிருக்கிறான் என்று கருத வாய்ப்பிருக்கிறது.

அடுத்து, தன் தலையைத் தான் அரிந்து தம் மன்னன் நலத்திற்காகப் "பலிக்கொடை" செய்வது என்பது வீரத்தின் உச்சமாகக் கருதப் படலாம்!

அச்செயலுக்கும், இற்றைய மன்னர்கள் அல்லது தலைவர்களுக்காகத் தமிழகத்தில் "தீயாடிச் சாதலுக்கும்" (தீக்குளிப்பு) யாதொரு வேறுபாடும் இல்லை!

மன்னர் அல்லது தலைவருக்காகத் தீயாடிச் சாதல் முட்டாள்தனமென்றால், அற்றைய நாளில் தலைஅரிந்து செத்ததும் முட்டாள்தனமே!

ஈராயிரம்/பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னாலும் இத்தமிழ்ச் சமுதாயம் உணர்வின் உந்தல்களிலும், வீரவழிபாட்டிலும் வாழ்ந்து வதங்கிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை!

ஒருபுறம் பகையின் கையில் கிட்டாதிருக்க விடமுண்டு சாகிறார் தமிழர்! தமிழினத்துக்காக சமுதாயத்துக்காக புறம் படைக்கிறார்!

அப்புறத்தை வாழ்த்தித் திரும்புகையில் இப்புறம் தனி மனிதருக்காக, அரைகுறை மனிதருக்காகத் தீயாடிச் சாகிறார் தமிழர்! இப்புறத்தை எண்ணி நாணுதல் வேண்டும்!!

மகளிரும் வழிபடுகிறார்; வீரரும் வழிபட்டு, பலிக்கொடை செய்கிறார்! எதற்காக என்று பார்த்தால் 'மன்னன் நலத்திற்காக' !

அக்காலமானது "மன்னவன் எவ்வழி; மன்னுயிர் அவ்வழி" என்று புறம் சொன்ன அறத்தை அடிப்படையைக் கொண்டது!

கடவுள், அரசு என்ற இரண்டும் தனித்தனியாக இயங்கின; மக்களைக் காப்பவன் அரசனாகவே இருந்தான்; அரசன் அறவழி நடப்பவனாக இருந்தான்; இக்கதையில் வரும் பாண்டியன் நெடுஞ்செழியனே எடுத்துக்காட்டு. அவன் அறவழி நடந்தால் குடிகளுக்குக் கவலையில்லை என்று மக்கள் நம்பினர். அதைத்தான்,

"நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்"

என்ற புறப்பாடல் அடிகளும் சொல்கிறது!

ஆதலால் குடிகளைக் காக்கும் அரசனைக் காக்க, குடிகள் தாம் நம்பிய கடவுளை வேண்டுகிறார்கள்; தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில்!

காக்கும் பொருளைவிட காக்கப்படும் பொருளே முதன்மை பெறுகிறது!

அரசனோ குடிகளையும் காத்து, பின்னர் பல நம்பிக்கைகளின் அடிப்படையில் ஏற்பட்ட கடவுள்களையும், மதங்களையும் போற்றிக் காக்கின்றான்!

தற்காலம் வேறு; இந்த மாண்புகள் மாறிவிட்டன!

மதமும், கடவுளரும் மனிதரை ஆட்டிவைக்க, மனிதர் பிரிந்து நின்று, முதலில் மதத்தையும் கடவுளையும் காக்க மன்னரை வேண்டி நிற்கின்றனர்! மதத்தைக் காக்கவே அரசுகள் நடக்கின்றன.

தன் மன்னனைக் காக்க வேண்டி தன்னைக் கொடுத்த தத்துவம் மாறி, தன் மதத்தைக் காக்க மக்களைப் பலிகொடுக்கும் பண்பாடு வளர்ந்து விட்டது!

தேவைகளை மாற்றிக் கொண்டு தேம்பி நிற்கிறதோ தற்போதைய
சமுதாயம்?


அன்புடன்
நாக.இளங்கோவன்
14-சூன்-1999

No comments: