Pages

Wednesday, November 04, 2015

நாயன்மார்களின் புடைப்புச்சிற்பங்கள் - மணற்கேணி ஆய்வுக்கட்டுரை

நாயன்மார்களின் சிற்பங்களில் உள்ள சித்திரிப்புகள்
பற்றிஅருமையானதோர் கட்டுரையை, கடந்த மணற்கேணி
இதழில் (ஆக/15) தேன்மொழி எழுதியிருக்கிறார்.
("வரலாற்றில் சைவ நாயன்மார்கள் புடைப்புச்சிற்ப சித்திரிப்புகள்:
ஒரு ஆய்வு" என்பது தலைப்பு.)

சைவம், நாயன்மார்கள், பெரியபுராணம் பற்றி பல்வேறு
கருத்துகளை சொல்லியிருந்தாலும், சித்திரிப்புகளின்
வேறுபாடுகளை  நுணுகிப்பார்த்திருக்கும் கட்டுரையாளரின் திறன்
பாராட்டுக்குரியது. பெரியபுராணத்தில் வைக்கப்பட்டிருக்கும்
நாயன்மார்களின் வரிசையிலேயே அமைக்கப்பட்ட
சித்திரிப்புகளை, பெரியபுராணத்தின் காலத்திற்கு
சற்றுமுன்னரும், பின்னருமாக உருவாகிய கோயில்களை
எடுத்துக்கொண்டு, அவர் ஆற்றியிருக்கும் ஆய்வு சிறப்பானது.
இதற்காகவே ஒருமுறை திருப்பனந்தாள், புரிசை, மேலக்கடம்பூர்,
தாராசுரம் ஆகிய நான்கு கோயில்களுக்கும் செல்லவேண்டும்
என்ற எண்ணத்தை கட்டுரை உருவாக்கியிருக்கிறது.
பெரியபுராணத்தின் காலம் பற்றிய கேள்விக்குறியும்
சிந்திக்கவைக்கிறது.

புடைப்புச்சிற்பங்களை ஆக்கிய சிற்பிகளின் திறனை
எடுத்துக்காட்டுகிறது கட்டுரை. வாய்வழியாகவும், திருத்தொண்டர்
தொகையின் வழியாகவும் நாயன்மார்களைப்பற்றி மக்கள்
அறிந்திருந்த செய்திகளை நன்குணர்ந்து, இலக்கிய அறிவுமிக்க
சிற்பிகள் சிற்பங்களை மிக நேர்த்தியாக வடிவமைத்திருப்பதை
கட்டுரை நுணுகிப்பார்த்து சொல்கிறது.

ஒவ்வொரு கோயிலிலுமுள்ள சிற்பங்கள் வெவ்வெறு காலத்தில்
வெவ்வெறு சிற்பிகளால் வடிவமைக்கப்பட்டிருக்கவேண்டும்
என்பதுதான் இயல்பு. அப்படிப்பார்க்கும்போது நாயன்மார்களின்
சிற்ப வடிவங்களுக்கு யாரோ  "முதன்மை வடிவம்" கொடுத்திருக்க
வேண்டும். அது யார்? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
இதற்கான விடையை கட்டுரையில் காணமுடியவில்லை.
எல்லா சிற்பிகளுக்கும் ஒரேமாதிரியான அடவு மனதில்
உருவாகியிருக்கும் என்று சொல்லமுடியாது. பெரும்பாலும்,
சித்திரிப்புகள் ஒன்றாக இருக்கையில், யாரோவொரு
சைவப்பெரியவரோ அல்லது மடமோ, ஒரு பெரிய சிற்பியை
வைத்து முதன்முதலில் நாயன்மார்கள் சிற்பங்களுக்கு வடிவம்
கொடுத்திருக்க வேண்டும் என்று கருத இருக்கிறது. சிற்பங்களை
ஆழ்ந்து ஆய்ந்திருக்கும் தேன்மொழி அவர்களிடம் "முதற்சிற்பி
யார்" என்பது பற்றிய கருத்துகள் இருப்பின் அறியவிழைகிறேன்.

அதேவேளையில், சிற்பங்களில் உள்ள காட்சிகளுக்கும்
பெரியபுராணம் சொல்லும் செய்திக்கும் உள்ள  முரண் பற்றியும்
இங்கே குறிப்பிடவேண்டும். கட்டுரையில், புரிசையில் உள்ள
எறிபத்த நாயனாரின் சிற்பக்காட்சியில் (படம் 10/3), இறைவன்
விடைவாகனராய் உமையோடு தெரிசனம் தருவதாக
அமைந்திருக்கிறது. ஆனால், பெரியபுராணத்தின்படி, எறிபத்த
நாயனார் புராணத்தில் "ஒளிவிசும்பில் எழுந்த ஒலியாக"
இறைவனின் காட்சி அல்லது அருள் அமைகிறது.

"கண்ணுதலருளால் வாக்குக்கிளரொளி விசும்பின்மேல்
 வந்தெழுந்தது பலருங்கேட்ப...." (47)
"இருவருமெழுந்து வானிலெழுந்தபேரொலியைப்போற்ற..." (50)
(இங்கு இருவரும் என்றது எறிபத்தரையும், புகழ்ச்சோழரையுமாம்)

பெரியபுராணத்தில் உமையொடும் விடைவாகனராய் இறுதியில்
தெரிசனந்தருவது அதிகமெனினும் மற்றும்பல வடிவங்களில்
இறைவன் எழுந்தருளுகிறான்.

ஆகவே, புரிசைச்சிற்பம், என்னுடைய சிற்றறிவுக்கு தவறான
சித்திரிப்பாகவே தென்படுகிறது. இது தவறா, சரியா என்பது
வேறுவிதயம். ஆனால், அது பெரியபுராணத்திற்கும் சிற்பங்களில்
நாயன்மார் சித்திரிப்புக்கும் உள்ள இடைவெளியை
தெளிவாகக்காட்டுகிறது.

அப்படியென்றால், பெரியபுராணத்திற்கு படிகள்/வேற்றங்கள்
(versions)உண்டா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
அன்றெனில், சித்திரிப்புகளில் சிற்பிகளின் புரிதல்கள், அல்லது
ஆலயமெழுப்பியவர்களின் புரிதல்களில் வேறுபாடு உண்டென
அறியமுடிகிறது.

சிவகாமியாண்டாரை பெண்மணியாக சில சித்திரிப்புகள்
காட்டுவதாக தேன்மொழி குறிப்பிடுவதொடு, மேற்சொன்ன
கருத்தையும் ஒட்டிப்பார்க்கவேண்டும். உண்மையில்,
கட்டுரைவாயிலாக, சிவகாமியாண்டாரை சித்திரித்தது பற்றி
அறிந்தது, மீண்டும் மீண்டும் சிவகாமியாண்டாரை
படிக்கத்தூண்டுகிறது.

"அரச ஆதரவு பெற்றிருந்த சைவமதத்தை மக்கள் ஆதரவு பெற்ற
மதமாக மாற்றும் முயற்சியில் இந்த நாயன்மார்கள்கதை
சித்திரிப்புகள் பங்காற்றியுள்ளன" என்ற கட்டுரையாளரின்
பார்வையும் எழுத்தும் சுருக்கமும் அழகும் நிறைந்தன. அதற்கு
அவர்  அளித்திருக்கும் சில விளக்கங்களும் ஏற்கத்தக்கவை.
குமுகத்தின் பலபிரிவுகளையும், வாழ்வியல் வேறுபாடுகளையும்
அரவனைத்தெழுந்ததாற்றான் அது  இயக்கம் எனப்பட்டது
எனக்கருதலாம். சைவத்தைப்பொறுத்தமட்டில், இந்தக்குமுக
அரவனைப்பு என்பது சேக்கிழார் காலத்திலோ, அல்லது பிற்கால
சோழ அரச ஆதரவிலோ மட்டும் நிகழ்ந்ததல்ல. சம்பந்தராலும்,
அப்பராலும் இடப்பட்டு அருமையான வித்துதான் அது.
சேக்கிழாருக்கு ஏறத்தாழ 600 ஆண்டுகளுக்கு முன்னரே
விதைக்கப்பட்ட குமுகக்கட்டியல் அது என்றால் மிகையல்ல.
இதைச்சரியாக புரிந்துகொள்ள, ஞானசம்பந்தரின்
திருவானைக்கா பதிகம் (வானைக்காவில் வெண்மதி),
நமச்சிவாய பதிகம், பவனமாய்ச்சோடையாய் என்று தொடங்கும்
திருவாரூர்ப்பதிகம்போன்றவை கூர்ந்து நோக்கத்தக்கன.
அப்பரடிகள், சுந்தரர் ஆகியோரின் பல பாடல்களும்
குமுகக்கட்டியல் நோக்கில் பார்க்கத்தக்கன, நீள எழுதத்தக்கன.
அருமையானதொரு கட்டுரைக்கு மீண்டும் பாராட்டுகளும்
வாழ்த்துகளும் தேன்மொழி அவர்களே.

அன்புடன்
நாக.இளங்கோவன்


No comments: