Pages

Thursday, March 07, 2013

இரண்டாம் தமிழ்-ஒருங்குறி அழிப்பு!

தலைப்பில் "இரண்டாம்" என்ற சொல் வரும்போதே இதைப்போன்ற முதலாம் நிகழ்வு இருந்திருக்க வேண்டும் என்று யாவரும் எண்ணுவது சரியே. அது ஏறத்தாழ இரண்டாண்டுகள் பழைமையானது. முதலாம்  நிகழ்வைப் பற்றி விரிவாகப் பின்னர் காண்போம். தற்போதைய நிகழ்வைப் பதிவு செய்வதே நோக்கம்.

முதலாம் தமிழ்-ஒருங்குறி அழிப்பு முயற்சியில் 5 தமிழ் எழுத்துகளைக் கொண்டுபோய் கிரந்த-ஒருங்குறியிலும், முன்பின் பார்த்திராத 26 கிரந்த எழுத்துகளை தமிழ்-ஒருங்குறியிலும் கலந்து தமிழின் முகவரியை, அடையாளத்தைக் கணிப்பரப்பில் நீக்குவதற்காக தமிழ் அழிப்பாளர்கள் பெரும் போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது தமிழ்நாடு, தமிழ் கூறு நல்லுலகம் இவற்றொடு தமிழக அரசாங்கமும் திரண்டெழுந்து எதிர்த்ததால் தமிழ் அழிப்பாளர்கள் பின்வாங்கினார்கள்.

ஆயினும், விடாமுயற்சியாக, தற்போது, "ன, ழ" என்ற இரண்டு எழுத்துகளையாவது கிரந்த-ஒருங்குறியில் கொண்டுபோய்ச் சேர்த்து விட வேண்டும் என்று மீண்டும் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள் தமிழ்-அழிப்பாளர்கள். முதலில் இவ் இரண்டைச் சேர்த்து விட்டால் பின்னர் ஒவ்வொன்றாக மீதி மூன்றையும் சேர்த்து விடலாம் என்பது அவர்களின் திட்டமாக இருக்கக் கூடும்.

முதலாம் தமிழ்-ஒருங்குறி அழிப்பில் (த.ஒ.அ) முன்களத்தில் இருந்து செயற்பட்ட அதே திரு.நா.கணேசன் அவர்களே இம்முறையும் முன்களத்தில் இருக்கிறார். ஆனால், ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு அனுப்பியிருக்கும் முன்னீடு (proposal) ஒரு மேனாட்டவரிடம் இருந்து போகுமாறு ஏற்பாடாகியிருக்கிறது இம்முறை.

திரு.மைக்கேல் எவர்சன் என்ற மேனாட்டவர் இவ் இரு தமிழ்
எழுத்துகளையும் கிரந்த-ஒருங்குறியில் கலக்க வேண்டும் என்ற வேண்டுகோளை ஒருங்குறிச் சேர்த்தியத்திற்குக் கடந்த வருட இறுதியில் அனுப்பினார்.

அம் முன்னீட்டைப் பாராட்டி, ஆதரித்து, அக்கலப்பிற்குப் பரிந்துரையாக  திரு.நா.கணேசன் ஒரு மடலையும் சேர்த்தியத்திற்கு அனுப்பினார்.

முதலாம் த.ஒ.அ இற்கு ஆதரவு காட்டிய அறிஞர் பெருமக்கள் வரிசையில் இம்முறை திரு.மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களும் சேர்ந்தது மிகப்பெரும் அதிர்ச்சியாகவே தமிழுலகிற்கும் தமிழ்க் கணியிலகிற்கும்\
ஆகிப் போனது. மறவன்புலவாரும் இந்த "ன,ழ" எழுத்துகளை கிரந்த-ஒருங்குறியில் சேர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்து ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார் சேர்த்தியத்திற்கு. மிக வருந்தத் தக்க ஒன்றாகும்.

அதில் என்னதான் தேவை சொல்லப் பட்டிருக்கிறது என்று பார்க்கையில், நமக்கு வியப்பே மிகுகிறது. "தாய்லாந்து நாட்டில் உள்ள அரச வம்சத்தார் சிலருக்குத் தேவார திருவாசகத்தைக் கிரந்தத்தில் படிக்க ஆசையிருப்பதால்" தயவு செய்து கிரந்தத்தில் இவ் இரு எழுத்துகளையும் கலந்து விடுங்கள் என்று கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறது.

"எனது ஆங்கிலத்தில் "ழ" இல்லை. ஆனால் "ழ" வை வைத்துள்ள தமிழர்கள் தமிழைவிட ஆங்கிலத்தையே அதிகம் படிக்கிறார்கள். அதனால், ஆங்கில-ஒருங்குறியில் தமிழ்-ழ வைச் சேர்த்து விடுங்கள் என்று எந்த ஆங்கிலேயராவது சொல்வாரா?"

ஆனால் தமிழர் "அவர்களின் கிரந்தத்தில் இவ் எழுத்துகள் இல்லை - அதனால் எமது எழுத்துகளைக் கொண்டு போய் அங்கு சேருங்கள் - அங்கே இருக்கின்ற எழுத்துகளையெல்லாம் கொண்டு வந்து இங்கே வந்து சேருங்கள்" என்று சொல்கிறார்கள். தமது மொழியைச் சிதைக்கும் நுண்ணிய கூறுகளை தலைமேற் சுமந்து செய்கிறார்கள்.

முதலாம் த.ஒ.அவின் போது, திரு.நாகசாமி, திரு.செ.இராசு, திரு.இ.அண்ணாமலை ஆகிய அறிஞர்கள் திரு.கணேசனின் முன்னீட்டிற்குப் பின் ஆதரவு அளித்துச் சேர்த்தியத்திற்கு அனுப்பியிருந்தார்கள். திரு.கணேசன்
இம்முறை சேர்த்தியத்திற்கு எழுதிய கடிதத்தில் அவர்களை மறக்காமல் நினைவு கூர்ந்ததொடு திரு.சச்சிதானந்தன் அவர்களையும் பின் ஆதரவில் சேர்த்திருக்கிறார்.

இவர்களின் முன்னீடுகள், பரிந்துரைகளைப் பார்த்த தமிழுலகம் வருந்தத்தான் செய்தது. தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இயக்குநர் முனைவர் நக்கீரன் அவர்கள் இம்முயற்சியை எதிர்த்து சேர்த்தியத்திற்குக் கடிதம் எழுதினார்.
அமெரிக்கத் தமிழறிஞர் சு.பழனியப்பன் மிக வலுவான ஆய்வுக் கட்டுரை எழுதி, இவ் எழுத்துகளைக் கலப்பதற்கு எதிர்ப்பு கூறி சேர்த்தியத்திற்கு அனுப்பினார். கோவை தொல்லியல் துறையைச் சேர்ந்த முனைவர் சாந்தலிங்கம் மறுப்பினையம் பொருத்தமற்ற முன்னீடு என்பதையும் கூறி கடிதம் எழுதினார். இது எவ்வளவு தேவையற்ற விதயம் என்றும், இதனால் நலமில்லை என்றும் கூறி திரு.இரமணசர்மா சேர்த்தியத்திற்கு விளக்கி எழுதினார். திரு.நூ.த.உலோகசுந்தரம் அவர்களும் தனது மறுப்பினை மிக வலுவாக சேர்த்தியத்தில் பதிவு செய்தார். இவர்களின் எதிர்ப்பினால், சனவரி-பிப்ரவரியில் கூடிய சேர்த்தியம் இது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் தள்ளி வைத்திருக்கிறது. மீண்டும் சேர்த்தியம் கூடும்போது (ஓரிரு மாதங்களில்) இது குறித்து முடிவெடுக்கக் கூடும்.

இது இரண்டாம் தமிழ்-ஒருங்குறி அழிப்பின் தற்போதைய நிலை.

முதலாம் நிகழ்வின் போது எழுந்த அதே கேள்விகள் இன்றும் அப்படியே இருக்கின்றன.

1) பன்னாட்டு நிறுவனங்களால் நடத்தப்படும் ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு, உலகில் யார் வேண்டுமானாலும் தமிழ் எழுத்துகளை என்ன செய்ய வேண்டும் என்று எழுதி தமிழைக் குலைத்துவிட முடியும் என்ற நிலை இருக்கிறது.
அது தமிழர் என்ற பெயரில் இருக்கும் தனி மனிதரோ அல்லது ஓர் அமைப்போ
எதை வேண்டுமானாலும் மாற்றச் சொல்லி, திணிக்கச் சொல்லிக் கேட்கலாம்.
யாரும் மறுக்க வில்லை என்றால் சேர்த்தியமும் அதற்கு உடன்பட்டுப் போய்விடும். ஆர்வலர்கள் கொஞ்சம் தவறவிட்டாலும் தமிழ் தொடர்பான தவறான முன்னீடுகள் கணிமை, இணைய வரலாற்றில் நிரந்தரமாகச் சேர்ந்துவிடும். இந்த நிலையில், தமிழக அரசாங்கத்திற்குத் தெரியாமல் எந்த ஒரு தமிழ் சார்ந்த ஒருங்குறி முன்னீட்டையும் சேர்த்தியம் ஏற்கக் கூடாது என்று ஏன் நாம் இன்னும் நிலைப்பாடு எடுக்கவில்லை?

2) தமிழ் மக்களால் பயன்படுத்தப்படும் கணியில் யாரோ எங்கோ அமர்ந்து கொண்டு இதைத் தூக்கி அங்கே போடு, அதைத் தூக்கி இங்கே போடு என்று சொல்வதும் உடனே தமிழறிஞர்கள் அவர்களுக்கு மறுப்பு சொல்லியே காலம் கழிப்பதும் எத்தனை நாளைக்கு ஆகக்கூடும்?

தவறான முன்னீடுகளைச் செய்து தமது சொந்த நலத்திற்காக மட்டும் ஒரு தமிழர் தமிழ் மொழியின் நெடுங்கணக்கில் விளையாட முடியும் என்றால் இது எங்கே போய் முடியும்? இதற்கு முற்றுப் புள்ளியை யார் வைப்பது? எங்கு வைப்பது?

தமிழ் மொழியைச் சீரழிக்கும் போக்குக்கு உடன்போகிறவர்களை எப்படித் தமிழுலகம் தொடர்ந்து ஏற்றுக் கொள்கிறது?

தமிழக அரசாங்கத்தை விட, தமிழறிஞர்களை விட, பழுத்த தமிழ் மன்றங்களை விட, பல்வேறு தமிழக அரசின் தமிழ்த் துறைகளை விட சில தனியர்கள் எல்லாவற்றையும் அறிந்தவர்களா? அவர்களால் பல கோடி மக்களின் எழுத்துகளின் தலைஎழுத்து தீர்மானிக்கப் படுமா?

தொடர்ந்து வரும் இச்சரவலுக்குத் தீர்வென்ன? எத்தனை நாள் மாரடிக்கப் போகிறோம் இவற்றோடு?


நண்பர்களே, இது இன்றைய, இந்நேரத் தமிழழிப்பாகும். விழித்துக் கொள்ளுங்கள் - அறிவுக் கூர்மையுடன் செயல்படுங்கள் - இல்லாவிட்டால் அழிந்தே போங்கள்! என்று மட்டுமே விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்




14 comments:

வவ்வால் said...

தமிழ் இணையத்தில் படும் பாடு பற்றி நல்ல விழிப்புணர்வூட்டும் பதிவு.

இணையத்தில் மாற்றம் செய்யும் முன் தமிழக பல்கலைகள்,(இணைய தமிழ் பல்கலை, தமிழ் பல்கலைப்போல)அரசு கல்வித்துறை என அறிவித்து ஒப்புதல் பெற செய்ய வேண்டும், என ஒருங்குறி அமைப்பிடம் சொல்லி,அம்முறையை நிறந்தரமாக்க இயலாதா?

உங்கள் பதிவை அனைவரும் பகிர்ந்து ,இணையத்தில் விழிப்புணர்வு ஏற்பட செய்யலாம்.

இப்பதிவை எனது அடுத்தப்பதிவில் பகிர விரும்புகிறேன்.நன்றி!

nayanan said...

//இணையத்தில் மாற்றம் செய்யும் முன் தமிழக பல்கலைகள்,(இணைய தமிழ் பல்கலை, தமிழ் பல்கலைப்போல)அரசு கல்வித்துறை என அறிவித்து ஒப்புதல் பெற செய்ய வேண்டும், என ஒருங்குறி அமைப்பிடம் சொல்லி,அம்முறையை நிறந்தரமாக்க இயலாதா?//

நன்றி நண்பர் வவ்வால்.
மிகச்சரியாகச் சொன்னீர்கள். இதைத்தான் செய்யவேண்டும். ஏற்கனவே பெரும் சரவல் ஏற்பட்டும் தமிழ் உலகம் இம்மாதிரியான முறைமைகள், கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளாதது கவலை தரும் விதயமாகும். பலரும் கூடித்தான் இதனைச் செய்ய வேண்டும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

இரா.சுகுமாரன் said...

வணக்கம் ஐயா,
கடந்த முறை உங்கள் பதிவும் கருத்தும் தான் மிக விளக்கமாக இருந்தது. அந்த நிகழ்வை வெளியுலகிற்கு பெருமளவில் கொண்டு சென்றதற்கு உங்கள் கருத்துக்கள் பல வகையில் உதவியது.

இம்முறையும் நீங்கள் தான் செய்ய வேண்டும்.

முன்னெடுப்பதில் நீங்கள் முன்னின்றது போல மணி.மணிவண்ணன் அதை செயல்படுத்தலில் அவர் செய்த பணிகளை மறக்க இயலாது. இதுபோல பல்வேறு பட்டோரும் ஒன்றுபட்டு செயல்பட்டார்கள். அதற்காக நன்றி!

//இது இன்றைய, இந்நேரத் தமிழழிப்பாகும். விழித்துக் கொள்ளுங்கள் - அறிவுக் கூர்மையுடன் செயல்படுங்கள் - இல்லாவிட்டால் அழிந்தே போங்கள்! .//

என்று சொல்லி மூன்றாமவரிடம் ஒப்படைத்துவிட்டு விலகிக் கொள்ள முடியாது. இதனை எதிர்த்து நீங்கள் செயல்படுங்கள் உங்களுக்கு ஆதரவாக பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் திரளுவார்கள். நாங்களும்..

nayanan said...

அன்பின் சுகுமாரன் ஐயா,
வணக்கம். வருக.

கடந்த முறை திரு.மணிவண்ணன் எழுதிய அருமையான மறுப்பு கட்டுரை மிக உயர்ந்தது. அதற்கு அவர் ஆற்றிய களப்பணிகளையும் அறிவுப்பணிகளையும் நாம் நன்கறிவோம். அதேபோல முனைவர் இராம.கி ஆற்றிய பணிகள், தாங்கள், பேரா.செல்வா, நண்பர் ஆல்பர்ட்டு, அரசு ஐயா போன்றவர்கள் செயல்பட்ட விதமும் பணிகளும் தமிழறிஞர்களையும் பொதுமக்களையும் ஓரணியில் கொண்டு வந்து செயலாற்றியது. பல அறிஞர்களும் ஆங்காங்கு தங்கள் பணிகளைச் சிறப்புற செய்தனர். என்னால் ஆன கட்டுரைகள் எழுதி ஓரளவு பின்புல ஆதரவையும் பரப்புரையையும் செய்ய முடிந்தது.

என்ன கவலை என்றால் - அவ்வளவு கடினமான சூழலைக் கடந்து வந்தும் இன்னும் நாம் ஒரு நிலையான அரணை அமைத்துக் கொள்ளவில்லை என்பதுதான்.

இம்முறை நெடுநாள் நோக்கில் செயல்படவேண்டும். பலவற்றையும் கருத்தில் கொண்டு, மீண்டும் இவ்வாறு ஒரு முன்னீட்டை தான்தோன்றிகளாக யாரும் அனுப்பாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி நாம் செயல்பட வேண்டும் என்று கருதுகிறேன். விரைவில் ஏதாவது வழி பிறக்க வைக்க வேண்டும்.
அன்புடன்
நாக.இளங்கோவன்

தஞ்சை கோ.கண்ணன் said...

இரண்டாம் முறையும் தமிழ் அழிப்பு முயற்சி !
அமெரிக்காவில் ஒருங்கு குறி சேர்த்தியத்தில் மீண்டுமா ?

=================================

மறவன் புலவு அய்யா அவர்கட்கு கடும் கண்டனம் !

சென்ற முறை கமுக்கமாகச் செய்தார்கள். இம்முறையும் விடாமல் துரத்துகிறார்கள். இந்த துரோகச் செயலை அனைவர் பார்வைக்கும் கொண்டுசெல்லல் வேண்டும்.

"இழி செயல் செய்யத் துடிக்கும் கூட்டம் இன்னும் என்ன செய்து கொண்டு
இருக்கிறார்கள் ?" என்ற செய்தி நம் அப்பாவித் தமிழர் உள்ளிட்ட அனைவர்க்கும் போனால்தான் உட்பகை விளங்கும்.

அறிவாயுதம் ஏந்தி உடனே அமெர்க்காவில் உள்ள ஒருங்கு குறி சேர்த்தியத்திற்கு "தடைசெய் இச் சதி செயலை" எனவும் தமிழ் மொழி அழிக்கப் புகுந்த குடில புத்தி கொண்ட வீணர் என அவர்கட்குத் தெரிவிப்போம்.

அதற்கு முன்னர் தமிழாய்ந்த பெருமக்கள் நம் தமிழ்நாட்டரசின் பார்வைக்கு கொண்டு செல்லல் வேண்டும் . செயலர் தமிழ்வளர்ச்சித்துறை, இயக்குநரகம் த .வ. துறை ஆகியோருக்கு எழுத்து வழி "தடை செய் இழி செயலை" என வேண்டி முதல்வரை நேரில் பார்த்தும் முறையிடலாம்.
ஊடகங்கள் வாயிலாக செய்தி போக வேண்டும். நாலா பக்கமும் இனமும் மொழியும் தாக்கப்படுகிறது என நாம் அனை வரும் அறியும் படி செய்தல் வேம்ண்டும்.


nayanan said...

அன்பின் தஞ்சை கோ.கண்ணன் ஐயா,

தங்கள் கருத்துகள் ஊக்கமளிக்கின்றன.
தாங்கள் கூறியதுபோல இது அரசின் பல்வேறு துறைகளையும் சென்றடைய வேண்டும்.

ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு தமிழ் எழுத்துகள் சார்ந்த எந்த ஒரு முன்னீடாயினும், தமிழக அரசாங்கத்தின்
பார்வைக்கு வந்த பின்பே, அதன் ஏற்பு இருந்தால் மட்டுமே ஒருங்குறிச் சேர்த்தியம் செயலாற்ற வேண்டும் என்ற கட்டுப் பாட்டை அரசு வாயிலாக ஏற்படுத்த வேண்டும். அதோடு, இப்படித் தான்தோன்றியாகச் செயல்படும் சிலருக்கு தமிழ்த்துறையினர் தக்க முறையில் அறிவுரை கூறி தடுக்க வேண்டும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

தஞ்சை கோ.கண்ணன் said...

தனிப்பட்ட முறையில் எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியாரே பெரியவர் மறவன் புலவு அய்யா . எனது நம் மொழி சிதைக்கவும் , அழிக்கவும் கொல்லைப்புற வழியே கொடுஞ்செயல் வருமாயின் வினோதமாக அய்யா வழி வந்தாலும் அவர் ராசனாக இருப்பினும் அறச் சீற்றத்தை வெளிப்படுத்தா நிலையில் உடன் பட்ட குற்றத்திற்கு ஆளாவேன் என்பதால் பதிவு செய்கிறேன் என் எதிர்ப்பை.

பேராசிரியர் முனைவர் பா. இறையரசன் தன் அமெரிக்க வாழ் மாணவர் வழியே உறுப்பினராகி ஒருங்கு குறி சேர்த்தியத்தில் "எ, ஒ, ழ, ற, ன " ஐந்தெழுத்துத் திருட்டைக் கயவர் கூட்டத்தை எதிர் கொண்டவர்களில் நாங்களும் அடக்கம்.

எனவே எங்கள் அறச் சீற்றம்.

தஞ்சை கோ.கண்ணன் said...

நயனம் வழி நாம் ஓர் அன்பு வேண்டுகோளை மறவன்புலவு அய்யா முன் வைப்போம் ! ஏற்பார் ! நம்பிக்கை உண்டு ! பணிவன்புடன் வேண்டுவோம். அக்கடிதம் மீண்டும் அவரிடம் வர வேண்டும்.

இல்லை எனில் தனிப்பட்ட இன மொழி எதிரிகளும் முதல் ஒருங்குகுறிப் போரிலே காஞ்சி மட சீரமண சர்மா ஒருங்குகுறி சேர்த்தியத்திடம் "எ ,ஒ, ழ, ற, ன" தமிழ் எழுத்துகள் திருட முயன்றதைப் போல இப்போது ஈரெழுத்துப் போதும் "ழ, ன " பின்னர் ஐந்தெழுத்தும் திருடி நம் மொழியைப் பாடையாக மாற்றி , பாடை ஏற்ற
காத்திருப்பது அருள் கூர்ந்து சிவனடி வேண்டி அய்யா அவர்களிடம் தன் கடிதத்தை திரும்பப் பேற பணிவன்புடன் வேண்டுவோமே !

அய்யா நமக்கு அணியமானவர்தானே !

nayanan said...

//நயனம் வழி நாம் ஓர் அன்பு வேண்டுகோளை மறவன்புலவு அய்யா முன் வைப்போம் ! ஏற்பார் ! நம்பிக்கை உண்டு ! பணிவன்புடன் வேண்டுவோம். அக்கடிதம் மீண்டும் அவரிடம் வர வேண்டும்
//

அன்பின் கண்ணன் ஐயா,
அவசியம் செய்வோம். சச்சி ஐயா
மிகவும் நல்லவர். நானும் அவரைத் தனிப்பட்ட முறையில் நன்கறிவேன். அண்மையில் இருமுறை அவரைச் சந்தித்தபோது கூட தனது அன்பான வாழ்த்துகளை எனக்குக் கூறியவர் அவர். அக்கடிதம் சச்சி அவர்களைத் தவிர வேறு யார் எழுதியிருந்தாலும் என் எழுத்துகள் வேறு மாதிரி இருந்திருக்கும். நாம் அறிந்த சச்சி அவர்களா இப்படி எழுதிவிட்டார் என்ற வருத்தமே எனக்கு அதிகம். உண்மையில் சச்சி அவர்களைச் சிலர் தவறாகத் திசை திருப்பிவிட்டிருக்கிறார்கள். இணையத் தமிழ் அரசியலையும் தமிழ்க் கெடுப்பையும் கடந்த 17 ஆண்டுகளாகப் பார்த்தவன் என்ற வகையில் சிறிதேனும் அறிவேன். கணேசன் என்ற பெருங்கொள்ளிக் கட்டை தமிழைச் சுட்டழிக்க அலைகிறது. கணேசனால் எத்தனை பேர் இணையத்தில் கெட்டார்கள் என்ற பட்டியலே இருக்கிறது. கணேசன் திரு.சச்சி அவர்களைத் தவறாகத் திருப்பி விடக் கடந்த மூனரை ஆண்டுகளாக முயற்சி செய்ததை நான் நன்கறிவேன். ஆகவே, நமது அன்பிற்குரிய சச்சி அவர்களை நாம் கடிதத்தைத் திரும்பப் பெற வேண்டுகோள் எழுதலாம். அதே வேளையில் கணேசனைக் கண்டிக்க வேண்டும். அவரின் தமிழழிப்பு முயற்சிகளில் சச்சி போன்ற நல்ல்வர்கள் மேலும் வீழாதிருக்க முயற்சிகள் செய்ய வேண்டும். அதற்குத் தாங்களும் தங்களைப் போன்றோரும் முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தஞ்சை கோ.கண்ணன் said...

"பாதிக்கப்பட்ட நாம் எவ்வளவு எச்சரிக்கையாக சிந்தித்து எழுதுகிறோம். கணேசன் அவர்கள் "எ ஒ ழ ற ன " முதலாம் கிரந்தப்போரிலே முன்னணி வீரர்.

ஆனால் பெரும் பின்னணி உண்டிங்கே ! நம் கையை வைத்து நம் கண்ணைக் குத்தும் இழி செயல் நடைபெறுவதை நாம் என்றுதான் உணரப்போகிறோமோ ? நானும் ஒரு பெயரை வெளியிடுகிறேன் ! தாய்லாந்து நாட்டில் திருவெம்பாவைத் தொடர்பாக ஒரே நாளில் தாய்லாந்து நாட்டின் பேரரசகுரு அவர்களுக்கு வினோத்ராசன் அவர்கள் பெரும்பணியாற்றி அய்யா மறவன்புலவு அவர்கட்கு பாலி மொழி மட்டுமே அறிந்த அன்னார்க்கு படிக்க உதவினார். இதனை அய்யாவே நன்றியுடன் பதிவும் செய்தார் அப்போது. மதிப்பிற்குரிய வினோத்ராசன் அவர்கள்தான் சீர்மண சர்மா திருப்பணிக்குப் பின்புலமாக இருந்தவரா என்பதனை வினோத்ராசன்அவர்கள்தான் விளக்க வேண்டும். இத்தொடர்பு பற்றி தாங்கள் அறிந்தாலும் பொதுவில் வைக்கலாம். நீங்கள் குறிப்பிட்ட பெரும் அறிஞர் கணேசன் என்னன்னவெல்லாம் பணிபுரிந்தார் அவர்மட்டுமல்லாது காஞ்சி மட சீரமண சர்மா முனைவர் பட்ட ஆய்வறிக்கை ஒன்றுக்கு ஈடான அறிக்கையை ஒருங்கு குறி சேர்த்தியம் பதிவில் உள்ளது. தனி ஒரு கூட்டம் ஒரு பழம் பெரும் மொழியைக் கையில் எடுத்து சிதைக்க அழிக்க இயலும் என்றால்,...... நாமெல்லாம் எதற்கு ? செருப்புக்காக காலை வெட்டும் செயல் என்பதை அறிந்தே செய்கிறார்கள் என்பதுதான் வேதனை.

தாய்லாந்தில் திருவெம்பாவை வாழ என் தலையைக் கொடுக்கிறேன். ஆனால் நம் மொழியைச் சிதைத்துதான் எனில் என் பிணத்தின் மீதுதான் !

உலகில் எம்மொழிக்கும் நேராக் கேடு நம் மொழிக்கு . 13 - ஆம் நூற்றாண்டிலிருந்து 18 - ஆம் நூற்றாண்டு வரை இலத்தீன் மொழியால் ஆங்கில மொழி எவ்வாறு கேடுற்றதோ அதே நிலை இங்கே. ஆங்கே ஜான்சன் போன்றோர் கனென்றுழுந்து ஆங்கில மொழியின் இற்றை நிலைக்குக் காரணி ! அல்லது இலத்தின் மொழிக்கலப்பால் அம்மொழி வழி கலந்து ஆங்கிலம் பேசினால்தான் உயர்ந்தோர் அன்று ! ஆனால் இன்றும் கூட நம் மொழியில் கைவைப்பது ஒரு தொழிலா ? சீச்சீ கேவலமாய் இல்லை ! சமக்ருத மொழியில் நாம் கைவைக்கிறோமா ? என்ன ஒரு பிழைப்பு இது ?"

தமிழநம்பி said...

ஐயா, வணக்கம். மனந்தளரக் கூடாது. என்ன செய்யவேண்டும் என்று சிந்திப்போம்; செய்வோம். இதற்கு நிலையான ஒரு முடிவு கட்டியாக வேண்டும். மறவன்புலவு சச்சிதானந்தரின் போக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அவரை நேரில் கண்டு விளக்கினால் நல்லது என்று கருதுகிறேன். சென்றமுறை நயனம்தான் விளக்கமாகப் புரியும் வகை எழுதி விழிப்பூட்டியது. நயனம் முன்னணியில் நிறகவேண்டும்;நிற்கும் என்று நம்புகின்றேன்.

nayanan said...

அன்பின் திரு.தமிழநம்பி ஐயா,
வணக்கம்.

இல்லை ஐயா, நான் மனம் தளரவில்லை. ஆனால், ஒரு நிரந்தரத் தீர்வை நோக்கிப் போகவேண்டும் என்ற கவலை இருக்கிறது. கணேசன் போன்றவர்கள் தொடர்ந்து இம்மாதிரி இயங்கி வந்தாலும், தமிழுலகம் கண்டு கொள்ளாமல் இருக்கிறது என்பது கவலை தரும் விதயம். சச்சி போன்றவர்கள் கணேசனால் திரிபடைகிறார்கள் என்றால் எந்தளவு தமிழரண் நலிவாக இருக்கிறது என்பதை ஓர்ந்து பார்க்க வேண்டும். அரசுப் பாதுகாப்பும், தனியர் கட்டுப்பாடும் ஏற்பட வேண்டும். முன்பு போன்றே நாம் சேர்ந்து இதனை அடையப் போராடுவோம். கனிவிற்கு மிக்க நன்றி.

தஞ்சை கோ.கண்ணன் said...

தமிழ்த்திரு நாக இளங்கோவன் அவர்களே அன்பு வணக்கம் ! கிளர்ந்து எழுந்தொமே அன்றி மனமொரு போதும் தளர்ந்தோமில்லை! இல்லவே இல்லை ! செயல் துவக்கத்தின் அறிகுறியே நாமெல்லாம் இணைந்து பணி புரிவது.
முதலாம் ஒருங்குகுறிப் போரிலே எங்களக்கு கருத்தூட்டமும் தெளிவும் நாக இளங்கோவன் அவர்களின் பின்னூட்டத்தின் அடிப்படையே என்றால் மிகையன்று!எங்கள் நன்றி! எனில் இரண்டாம் ஒருங்குகுறிப் போரிலும் அடித்தளம் நீங்கள் அமைத்ததே ! கவலுறல் செயலைத்தடுக்கும் ! ஆழ்ந்த தேர்ந்த உட்பகை நம்மிடம் ! வரலாறும் நமக்குச் சொல்லும் பாடமே ! மைக்கேல் எவர்சன்கள் ( அவர் தாய் மொழியில் புகுந்து விளையாடட்டும்) கணேசர்கள்,அன்னாரது செல்வ வளமிக்கப் பெரியாரின் துணை , காசி மட சீரமணாக்கள் அவர் பின்புலத்தில் யார் என்பதும் நாமறிவோம். இதில் நம்மவர் மறவன்புலவு அய்யா ! இவர்கட்கு நன்றி கூறி தூங்கும் தமிழினத்தைத் தட்டி எழுப்பும் சான்றோரே இவர்கள் என பாராட்டவும் செய்து இவ்விரு எழுத்துக் களவாடலைத் தடுப்போம். மறைமலையடிகள், தந்தை பெரியார், பாவாணர், பாவலரேறு, இன்னும் பல தமிழ்ப் போராளிகளை இவர்கள் தான் உருவாக்கம் செய்தார்கள்.
ஆயின் உறுதியான கடும் நிலைப்பாடு எடுத்து வீணர்களின் தமிழெழுத்துக் களவாடல்களைத் தடுப்போம் உறுதியாக !"நம் சூளுரை:உறங்கோம் பணி முடியும் வரை" !

nayanan said...

//ஆயின் உறுதியான கடும் நிலைப்பாடு எடுத்து வீணர்களின் தமிழெழுத்துக் களவாடல்களைத் தடுப்போம் உறுதியாக !"//

அன்பின் கண்ணன் ஐயா,
தங்களின் கருத்துகளுக்கும், கனிவிற்கும் நனி நன்றி.
விரைவில் சந்திப்போம். விரிவாக உரையாடுவோம். நல்லதொரு செயல்திட்டம் உருவாக்க என்னாலான பங்களிப்பைத் தங்களுடனும் தங்களைப் போன்றவர்களுடனும் இணைந்து செய்வேன்.
அன்புடன்
நாக.இளங்கோவன்