Pages

Saturday, January 29, 2011

தமிழ் இனப்படுகொலையைத் தொடர்ந்து நடக்கும் தமிழ் மொழிப்படுகொலை!

உலக வரலாற்றில், மனித இனம் மொத்தமும்
சுற்றி நின்று, நித்தம் பல்லாயிரம் தமிழர்கள்
கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்க,
தமிழ் இனப்படுகொலையைப் பற்றிய அக்கறையே
இல்லாமல் இருந்த தமிழ்க் குமுகம்,
நடந்து கொண்டிருக்கும் தமிழ்
மொழிப்படுகொலையையும்
அதைவிட நிதானமாக வேடிக்கை பார்த்துக்
கொண்டுதான் இருக்கிறது என்று சொல்ல
வேண்டும்.

இனப்படுகொலை முடிந்த கையோடு
ஒன்றன்பின் ஒன்றாகத் தமிழ் மொழியைச் சிதைக்க
நடக்கும் அடுத்தடுத்த முயற்சிகளை எண்ணுங்கால்,
"இனப்படுகொலைக்கே இந்தக்குமுகம்
தூங்கிக்கொண்டிருந்தது; மொழிக்காக எங்கே
எழப்போகிறது?" என்ற ஊக்கமே காரணமாக
இருக்கக் கூடும் என்று சொன்னால் மிகையல்ல.

5 அல்லது 6 நூறாண்டுகளாக வடமொழியை
நுழைத்து, தமிழைக் குற்றுயிரும் குலையுயிருமாய்
ஆக்கிச் சீரழித்து, அதற்கு "மணிப்பிரவாளம்"
என்று பெயர் கொடுத்து "மலையாளம்" போல
தமிழை ஆக்கியது 19ஆம் நூற்றாண்டின் இறுதியில்.

பின்னர் மறைமலையடிகளாரின் தனித்தமிழ்
இயக்கம் வீறுகொண்டு எழுந்து குற்றுயிராய்க்
கிடந்த தமிழுக்கு மருந்து போட்டு அதன்
சீரிளமையைத் தூக்கி நிறுத்தியது.

இந்த அழகில், "தமிழை யாராலும் அழிக்க முடியாது!"
என்ற வீரவசனத்திற்கு மட்டும் மேடைகளில்
குறைவேயிருக்காது.

20 ஆம் நூற்றாண்டின் முற்பாதியில்,
மணிப்பிரவாளத்தை முறித்துப் போட்டு, தனித்தமிழ்
இயக்கம் தந்த தாங்கலை வேரறுக்கத் தருணம் பார்த்தது
போலவே இருக்கிறது இந்தியாவை ஆளுகின்ற
காங்கிரசு அரசு இன்றைக்கு அதே மணிப்பிரவாளத்தை
உருவாக்கத் தமிழர்க்கெதிரான பேராயுதமாகக்
கையில் எடுத்திருப்பது.

வடமொழியை எழுத 68 கிரந்த எழுத்துக் குறியீடு போதும்
என்ற நிலையிலும், கிரந்த ஆவணங்களை அதைக் கொண்டு
படிக்க முடியும் என்ற போதிலும், வேண்டும் என்றே
கிரந்தத்தில் தமிழைக் கலந்த மணிப்பிரவாள-ஒருங்குறியை
உருவாக்க முனைகிறது காங்கிரசு அரசு.

கிரந்தம் படிப்பதற்காக, ஒருங்குறியில்
உருவாக்கப்பட ஒருங்குறிச் சேர்த்தியத்தில்
முன்வைக்கப்பட்ட தனி-கிரந்த-ஒருங்குறியீட்டை
கவிழ்த்து விட்டு, தமிழை அழிக்கு முகத்தான்
அந்தத் தனி-கிரந்த-ஒருங்குறியில் தமிழெழுத்துக்களைக்
கலந்து சமற்கிருதமும் மணிப்பிரவாளமும் உருவாக்க
வகைசெய்யும் தமிழ் கலந்த கிரந்தக் குறியீடு தருக
என்று ஒருங்குறிச் சேர்த்தியத்தை இந்தியாவின்
காங்கிரசு அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.

காங்கிரசு அரசின் முன்மொழிவில் குறிப்பிடப் பட்டிருப்பதைக் காண்க:

"The context of use for the proposed characters (type of use; common or rare)

Used for writing Sanskrit (including Vedic) both independently and as part of Tamil
Manipravalam.
"
தமிழ் இனப்படுகொலையைச் செய்த நாடுகள்
எப்படி ஈழக்கருணாவை உருவாக்கினார்களோ
அதே போல தமிழ் மொழிப்படுகொலைக்காக
கணேசன் என்பவர் உருவாக்கப் பட்டிருக்கிறார்.

கணேசன் என்பாரின் முன்மொழிவை அடியொற்றி,
காங்கிரசு அரசு இந்த மொழிப்படுகொலை
முன்மொழிவை ஏற்படுத்தியிருக்கிறது.
கணேசன் இதனை இணைய உலகு முழுதும்
பெருமையாக உறுதி செய்திருக்கிறார்.
ஒரு குழுவில் அவர் பின்வருமாறு எழுதுகிறார்:

"I am personally worried about safety of Grantha IT
followers including myself. Government of India and
UTC will implement my core design for Grantha Unicode,
so I don't have to write to draw attention."

இந்தியாவின் காங்கிரசு அரசின் பின்புலம்
இருக்கின்றதென்பதால் கணேசன்
இணையம் எங்கும் கிரந்தப் பரப்புரை செய்வதும்
தமிழை இழித்தும் பழித்தும் கீழறுப்பு வேலைகளைச் செய்தும்
வருகிறார் என்பதை இணைய மடற்குழுக்கள் பலவும் அறியும்.

இதற்கு எழும் எதிர்ப்புக்களை மங்கச் செய்யும்
வகையில், சிலர் "தமிழ் எழுத்துக்களை
பிற மொழிகள் எடுத்துக் கொள்வது தமிழுக்குப்
பெருமைதானே!", "நமது எழுத்துக்களைப்
பிற மொழிகள் கடன் வாங்குவது தமிழின்
பெருமையைத்தானே சொல்கிறது?" என்றெல்லாம்
திசை திருப்பி வரவிருக்கும் ஆபத்துகளை
எண்ணிப் பார்க்க விடாமல் பரப்புரை
செய்து வருகின்றனர்.

ஒரு புறம் கணி வல்லுநரும், தமிழ் வல்லுநரும்
இதனை எதிர்த்துக் குரல்தருகின்ற வேளையில்,
தமிழ்நாடெங்கும் உழவர் இயக்கங்களும்
இதனை எதிர்த்துப் புறப்பட்டிருக்கின்ற காட்சியைக்
காணமுடிகிறது.

மொழிப்படுகொலையை தி.மு.க அரசு தடுத்து நிறுத்துமா?

தி.மு.க அரசு அமைத்துள்ள உயர்மட்டக் குழு ஆழச்
சிந்தித்துத் தடுக்குமா? இல்லை காணாநெறியில் நிற்குமா?

காங்கிரசுக்கு ஏன் தமிழர்கள் மேல் இவ்வளவு வெறுப்பு?

1965ல் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்கப்
பலரைச் சுட்டுப் படுகொலை செய்தது காங்கிரசு அரசு.

இன்றைக்கு மணிப்பிரவாளத்தை மீண்டும்
திணிக்கிறது காங்கிரசு அரசு.

மணிப்பிரவாளத்தை எதிர்க்கப் போகும் தமிழ்நாட்டில்
என்ன செய்யக் காத்திருக்கிறது காங்கிரசு?

அன்புடன்
நாக.இளங்கோவன்