Pages

Saturday, December 04, 2010

தமிழ்-யுனிக்கோடு: கிரந்த வியாபாரிகளிடம் தொடர்ந்து ஏமாறும் தமிழக அரசு - பகுதி-2/3

ஆக, சிறீரமணசர்மாவின் முன்மொழிவுகளில்
ஒன்றான கிரந்தத்தைத் தமிழில் கலக்கும் முன்மொழிவு
தள்ளுபடியாகிவிட்டது. இனி அடுத்த சரவலுக்கு வருவோம்.

கிரந்த எழுத்துக்களை தமிழ் எழுத்துக்களில்
கலப்பதை ஒருங்குறி சேர்த்தியம் புறந்தள்ளி விட்ட
போதும், தமிழ் எழுத்துக்களைக் கொண்டுபோய்
புதிதாக உருவாக்கப்படும் கிரந்தக் குறிகளில்
கலக்கும் முன்மொழிவை ஏற்கவிருந்த சூழலில்
தமிழக அரசு விரைந்து செயற்பட்டு, இது பற்றி
நன்கு கலந்தாலோசித்துக் கருத்துரைக்க
மேலும் ஏறத்தாழ மூன்றுமாத காலம் வேண்டும்
என்று நடுவணரசைக் கேட்டுத் தமிழ்
அறிஞர் உலகிற்குப் பெற்றுத் தந்தது.

அவசரப்பட்டு எதுவும் செய்யாமல்,
அந்தக் காலநீட்டில் தக்க அறிஞர்கள்
கொண்ட குழுவை நியமித்து ஆராய்ந்து
தெளிவான முடிவை எடுப்பதே அரசின் எண்ணம்.

ஆனால் கிரந்த வியாபாரிகள் இந்த
இடைவேளையில் படுசுறுசுறுப்பாக
இதிற்செயற்பட்டு அரசின் தடத்தினை
மாற்றிக் கொண்டுள்ளார்கள்.

அதற்கு ஏற்ற கூட்டணிகளை உருவாக்கியிருக்கிறார்கள்.
அவர்கள் இந்தக் கிரந்த மறுப்பு முயற்சி மழுங்கிப்போக
செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்.

சூழல் என்ன?

இதுவரை யுனிக்கோடுவில் கிரந்தக்
குறிகளுக்கென்று தனியான குறியேற்றம் கிடையாது.

பல மொழிகளும் குறிகளும் சின்னங்களும்
இடம்பெற்றுள்ள யுனிக்கோடுவில்
கிரந்தக் குறிகளுக்கும் இடம் வேண்டும்
என்று சிறீரமணசர்மா வேறொரு
முன்மொழிவை வைக்கிறார்.

யுனிக்கோடுவில், உலகில் இருக்கின்ற
மொழிகளுக்குள்ள எழுத்துகளுக்கெல்லாம்
அவற்றின் எண்ணிக்கையைப் பொறுத்துச்
சிறியதும் பெரியதுமான
தனித்தனிப் பாத்திகள்(blocks) உள்ளன.

தமிழ் அப்படியான பாத்தியொன்றில் இருக்கிறது.
மலையாளம், வங்காளம், அரபி, சீனம்
என்ற ஒவ்வொன்றும் அவற்றின் பாத்திகளில்
இருக்கின்றன.

இந்திய நடுவணரசு சர்மாவின் முன்மொழிவைக்
கையில் எடுக்கையில் நாசா விஞ்ஞானி
நா.கணேசனின் முன்மொழிவு
ஒன்று அவர்களை இடர்கிறது.

நாசா கணேசன் - "கிரந்தக் குறிகள்
உருவாக்குகிறபோது தமிழின்
7 எழுத்துக்களையும் கலந்து உருவாக்க
வேண்டும்" என்று போட்ட
முன்மொழிவே இதற்குக் காரணம்.

சர்மா கேட்டிருந்தது, பல மொழிகளிலும்
காணப்படுகிற சின்னங்கள்,
பழைய கால எழுத்துக்கள்,
தற்போது வழக்கில் இல்லாத குறிகள்,
குறைவாகப் பயன்படுகிற குறிகள்
ஆகியவையெல்லாம் யுனிகோடுவில்
வைக்கப்படுகின்ற பாத்திகள் வரிசையில்தான்.

ஆனால் கணேசன் சூழ்ச்சி முன்மொழிவோ,
"மொழியின் முகன்மை எழுத்துக்கள்
வைக்கப் படுகின்ற முகன்மைப் பாத்திகளில்
தமிழ் மொழிக்கு ஊறு நேருகின்ற விதமாகவும்,
கிரந்தக் குறிகளுக்குள் தமிழின் 7 எழுத்துக்களைக்
கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால் கிரந்தக்
குறியேற்றத்தை மட்டுமே பயன்படுத்தினால்
போதும் - தமிழ்க் குறியேற்றமே தேவையில்லை
என்று நாளடைவில் எண்ண வைக்கின்ற
இடத்தில் அல்லது பாத்தியில்
கிரந்தக் குறிகளை வைக்கச் சொல்கிறது".

"சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி"
என்பது போல கணேசனின் கிரந்தச் சேவை
அமைந்துவிட்டது.

தலையைப் பிய்த்துக் கொண்ட நடுவணரசு
சர்மாவின் கருத்துக்களில் சிலவற்றை
மட்டும் எடுத்துக் கொண்டு கணேசனின்
முன்மொழிவைப் பெருமளவும் உள்வாங்கி
தானே ஒரு தமிழ் கலந்த கிரந்த
முன்மொழிவை உருவாக்கி விட்டது.
இதுதான் இன்றைக்குப் பூதமாகியிருக்கிறது.

உலகில் உள்ள மொழிகளின் எழுத்துக்கள்,
பழங்காலக் குறிகள், சின்னங்களுக்கெல்லாம்
இடம் ஒதுக்கி பன்னாட்டு மொழிகள் ஒருங்கிய
குறியேற்றமாக இருக்கும் ஒருங்குறி என்கின்ற
யுனிக்கோடுவில் கிரந்தக் குறிகளுக்கென
ஒரு ஓரப் பாத்தி கட்டுவது யாருக்கும் இழப்பல்ல.

தமிழுக்கும் அது எந்தவிதத்திலும் நட்டமல்ல.
உலகின் ஆயிரக்கணக்கான எழுத்துக்களில் குறிகளில்
கிரந்தக் குறிகளே இருக்கக் கூடாது என்று
சொல்ல நாம் ஒன்றும் சட்டாம்பிள்ளை அல்ல.
நமக்கு அது தேவையுமில்லை. கவலையுமில்லை.
அது முறையுமில்லை. அப்படிச் சொன்னால்
அது முட்டாற்றனமும் கூட.

ஆனால், "வேலியிலே போகின்ற ஓணானை
வேட்டிக்குள் எடுத்து விடுவது போல",
கிரந்தக் குறியேற்றத்தை ஒரு ஓரப்பாத்தியில்
தனியே செய்யப் போந்த யுனிக்கோடு
சேர்த்தியத்தையும், நடுவணரசையும்,
இரமணசர்மாவையும் இடைமறித்து,
"தமிழ் விஞ்ஞானி நான் கூறுகின்றேன் -
7 தமிழெழுத்துக்களையும் எடுத்து
கிரந்தத்தோடு ஒட்ட வையுங்கள்" என்று
குழப்பி திசை திருப்பிய தமிழ்க்கேட்டைச்
செய்தவர் நாசா விஞ்ஞானியும்
இணையத்தில் தனது கிரந்தச் சேவைகளுக்காக
ஒரு கிரந்தக் குழுவினரிடம் இருந்து
"மரபுச் செல்வர்" என்ற பட்டத்தையும்
வாங்கிக் கொண்ட மாண்புமிகு நா.கணேசன் ஆவார்.

நா.கணேசனே நடுவணரசு இப்படியான
முன்மொழிவைச் செய்வதற்கு முழுக்காரணமுமாக,
பின்னணியுமாக இருந்தவர். இதனை அவரே பல
இணையக் குழுக்களிலும் எழுதிப் பெருமையும்
பெற்றுக்கொண்டவராவார்.

இப்படியான சூழலில் தமிழ்நாட்டரசு
பெற்றுத் தந்த காலநீட்டில் என்ன நடக்கிறது?

கணேசனைக் காப்பாற்ற தமிழ் எழுத்துக்களைக்
கிரந்தத்தில் கலக்கலாம் என்ற பரப்புரை
எப்படி நிகழ்கிறது என்பதை ஆழ்ந்து பார்த்தால்
கவலையளிக்கின்ற காட்சிகளே கிடைக்கின்றன.

(தொடரும்)

அன்புடன்
நாக.இளங்கோவன்

No comments: