Pages

Saturday, August 14, 2010

குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! - பகுதி-2


இக்கட்டுரையின் முந்தைய பகுதி:
http://nayanam.blogspot.com/2010/08/1.html

வா.செ.குழந்தைசாமி இப்படிச் சொல்கிறார் என்றால்,
காலஞ்சென்ற முனைவர் கொடுமுடி சண்முகனார்
ஒரு குறியீட்டை உகர ஊகார வரிசைகட்குச்
சூட்டி விடுகிறார். இது வட்மொழி அடியொற்றியது.

மேற்கண்ட செய்யுளில் உள்ளது போல உகர ஊகார
உயிர்மெய் எழுத்துக்களை மாற்றி விட்டால்
கணிக்கு ஏற்றது போல தமிழை மாற்றிவிடலாம்
என்று பரிந்துரைக்கிறார் கொடுமுடியார். கணிக்கு
என்ன குறை அல்லது கணியில் தமிழுக்கு என்ன குறை
என்பதை மட்டும் வசதியாக எல்லோரும் தவிர்த்து
விடுவது வியப்புக்களில் ஒன்று.

உயிர்மெய் எழுத்துக்களில் 72 எழுத்துக்களை
இப்படி மாற்றிவிடலாம் என்று சிலர் கிளம்புகையில்
இன்னுஞ் சிலர் உயிரெழுத்துக்களை
எப்படியெல்லாம் மாற்றலாம் என்று சொல்கிறார்கள்
என்று கவனிப்பது மேலும் நமது தமிழறிவை
வளர்த்துவிடும் என்று நம்பலாம். இதோ பாருங்கள்,
தமிழ் உலகில் உலவுகின்ற உயிரெழுத்துக்களின்
மாற்ற வடிவங்களில் ஒன்றனை.


கா, ஙா, சா விற்கு மட்டும் கால் வாங்குவிங்களா?
உயிர் நெடில்களுக்கு வாங்க மாட்டிங்களா?
என்று வினவும் உயிரெழுத்து நெடில் மாற்ற விரும்பிகள்
மேலெ படத்தில் சொல்வது ஒருபுறமிருக்க,
இது என்ன பெரிய சீர்திருத்தம்? கால் வாங்குவதென்ன -
இ-னா ஈயன்னாவையே எப்படி மாற்றலாம் தெரியுமா?
என்றவாறு இ, ஈ எழுத்தின் வடிவத்தையே
முற்றாக மாற்றிவிடுகின்றனர் சிலர்.

மேலே படத்தில் உள்ளன தமிழின் உயிர்களான இ, ஈ என்ற
எழுத்துக்களுக்குப் பரிந்துரைக்கப் படுகிற
மாற்று வடிவங்கள். இப்படிப் பரிந்துரைப்பவர்களிடம்
போய் ஏன் மாற்றவேண்டும்?, இப்படி மாற்றினால்
என்ன பயன்? என்று கேட்டால், உடனே கேட்பவரை
“பழமைவாதிகள்” என்று சொல்லிவிட
நன்கு பயின்றிருக்கிறார்கள். இ-ஈ இப்படி என்றால்
உயிர்கள் உ, ஊ எப்படி இருக்கும்? இதோ கீழே
இருப்பதைப் போலத்தான்.

இ, ஈக்கு புது உருவம் கொடுத்தது போல
உ, ஊக்கும் புதுவடிவம் கொடுத்து இந்த
வரிவடிவச் சீரமைப்பு அவசியம் என்று
வலியுறுத்துகிறார் பொறிஞர் செ.குமார்.
இவை மட்டுமா உயிரெழுத்து வடிவ மாற்றங்கள்?
இதோ கீழே இருப்பவை பிற உயிரெழுத்துக்களின்
வடிவ மாற்றங்கள்.

இது எந்த எழுத்துக்களுக்கான புதிய வரிவடிவம்
என்று இக்கட்டுரையை படிப்பவர்கள்
கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும்
என்று தாழ்மையுடன் கேட்டுக் கொண்டு,
சொல்லாமல் விட்டுவிடுகிறேன்.

ஒ, ஓ, ஒள ஆகியன கீழ்க்கண்டவாறு
காட்சியளிக்க வேண்டும். இப்படி இல்லாவிடில்
செம்மொழியான தமிழ்மொழி தமிழர்களின்
நாவில் இருந்தும் கைகளில் இருந்து
காணாது போய்விடும் என்ற அச்சத்தை
இம்முன்வைப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

”ஐ” என்ற எழுத்துதான் கீழுள்ளவாறு மாற்றப்பட
வேண்டிய ஒன்றாகிறதாம்.

இவை மட்டுமா மாற்றத் துடிப்பவர்களின் மனவோட்டங்கள்?

தமிழ் மொழியில் ந, ன, ண என்று எதற்கு
மூன்று வகையான ஒலிகள்? ழ, ல, ள என்று
மூன்று ஒலிகள் எதற்கு? ர, ற என்ற இரு ஒலிகள் எதற்கு?
என்று ஆழ்ந்த புலமையோடு கேட்பதாய் எண்ணி
பலர் இவற்றைச் சீர்திருத்த வேண்டும் என்று சொல்கிறார்கள்.
அவர்கள், இப்படிக் குறைத்தால் 5 x 12 = 60
எழுத்துக்களைத் தமிழில் இருந்து குறைத்து
சீர்திருத்தம் செய்யவேண்டும் என்று பரிந்துரைக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, ஐ = அய், ஒள = அவ்
அதனால் ஐயும் ஒளவும் தமிழி நெடுங்கணக்கில்
இருந்து நீக்கப்பட வேண்டியவை என்றும்
ஃ என்ற அஃகானை யாரும் அதிகமாகப்
பயன்படுத்துவதில்லை எனவே
கொசுறாக அதனையும் நீக்க வேண்டும்
எனவும் கொடிபிடிக்கின்ற மேதைகள் தமிழ் உலகில்
இன்று நிறைந்திருக்கிறார்கள்.

உகர ஊகார வரிசைகளுக்கு வா.செ.கு, கொடுமுடியார்
போன்றோர் சொல்வது போல புதுக்குறிகள்
போடக்கூடாது என்று, மிகுந்து போன தமிழ்ப்பற்றின்
காரணத்தால் தமிழெழுத்தான ”உ” என்ற எழுத்தையே
பயன்படுத்த வேண்டும் என்று எழுதுகிறது
மக்களோசை என்ற மலேசிய ஏடு.
அதன் கட்டுரையாளர் பரிந்துரைக்கும்
ஒரு எடுத்துக்காட்டு!

எடுத்துக்காட்டு என்ற சொல்லை இப்படி எழுத வேண்டும்.
கூண்டு என்ற சொல்லை இப்படி எழுதவேண்டும். கூ என்ற
நெடிலுக்கு மறக்காம நெடில் ஊ போட்டுவிடுவது அவரின்
சீர்மையின் சிறப்பு.
உங்களுக்கு அறிவியல் தமிழில் பற்றிருந்தால்
சீதோண்ணத்திற்குப் போடும் திகிரி உருண்டையை
ஒட்ட வைத்துக் கொள்ளலாம் என்று அறிவியல் தமிழ்
வளர்க்கச் சொல்கிறார். அறிவியல் தமிழ் எப்படியெல்லாம்
வளர்க்கலாம் என்று அவரவர் வேறு இடம் கிடைக்காமல்
தங்கள் அறிவியல் திறனை தமிழ் எழுத்துக்களில்
பாய்ச்சுகிறார்கள் இன்று
இதுவரை வந்த எழுத்து வடிவ மாற்ற முன்வைப்புக்களில் மெய்யெழுத்துக்கள் 18, ஆய்த எழுத்து 1 என்ற
19 எழுத்துக்களை ஏனோ தெரியவில்லை விட்டுவிட்டார்கள்
என்று வருந்தியோருக்கு ஆறுதலாக உகர ஊகார
உயிர்மெய்கள் எழுதுவதற்குக் குறியீடாக அந்த ஆய்தத்தையே போட்டுவிடலாம் என்பது அவர் முடிபு.

கீழே இரண்டு ஆய்தங்களைப் போட்டு நான்
எழுதியிருக்கிறேன். ஆனால் அவரின் முன்வைப்போ
தலைகீழாகப் போட்ட ஆய்தம். அதாவது தலைகீழாக
ஆய்தம் போட்டால் அது ஊகாரம். அப்படியே
நேராகப் போட்டால் அது உகரம்.

தலைகீழாக எப்படி ஆய்தத்தை எழுதுவது
என்று எனக்குத் தெரியாததால் நான்
இரண்டைப் போட்டிருக்கிறேன் என்றறிக


(மேலும் ஒரு பகுதி வரும்)

அன்புடன்
நாக.இளங்கோவன்

2 comments:

Anonymous said...

வணக்கம் இளங்கோவன், தமிழ்பேப்பரில் வந்திருக்கும் மனுக்குறள் என்ற கட்டுரையைப் படித்தீர்களா? உங்களைப் போன்ற தமிழறிஞர்கள் இதற்குத் தக்க பதில் தரவேண்டும் அய்யா.
-இவண்,
சிவசண்முகம்

nayanan said...

அன்புடையீர்,
செய்திக்கு மிக்க நன்றி.
அவசியம் படிக்கிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்