Pages

Friday, August 13, 2010

குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! - பகுதி-1

இன்றைக்கு இருக்கின்ற 247 தமிழ் எழுத்துக்களில்
239 எழுத்துக்களை மாற்றுவதற்கு நடக்கும்
பல்வேறு முயற்சிகளின் தொகுப்பு இக்கட்டுரை(தொடர்).

தமிழ் எழுத்து வடிவங்களை எப்படியாவது மாற்றி
உருக்குலைத்து விடவேண்டும் என்ற உறுதி
தமிழர்களிடையே தென்படுகிறது. தமிழுக்குப் பகை
தமிழரே என்ற உண்மையை வெளிச்சமிட்டுக்
காட்டுகிறது இந்தச் சீர்திருத்த முயற்சிகள்.

தமிழ்நாட்டில் எத்தனையோ குடிசைத் தொழில்கள்
உண்டு. தீப்பெட்டிக்கு பெயர் ஒட்டும் தொழில்,
தீக்குச்சிக்கு எரிமருந்து வைக்கும் தொழில்,
பீடி சுற்றும் தொழில், பேரீச்சம்பழத்தை எடை போட்டு
பொட்டலம் போடும் தொழில் என்று பலவுண்டு.

தமிழ் எழுத்துச் சீர்திருத்தமும் இத்தொழில் போன்று
உயிரெழுத்து மாற்றத் தொழில், உயிர்மெய்கள்
மாற்றத் தொழில், தமிழெழுத்து எண்ணிக்கை
குறைப்புத் தொழில் போன்று பல்வேறு கோணங்களில்
தமிழ் கூறும் மக்களிடையே புற்றீசல் போலத்
தோன்றியிருக்கிறது.

இன்றைய காலக் கட்டத்தில், தமிழ் எழுத பேசத்
தெரிந்தாலே எளிதில் தமிழ் அறிஞராகி
விடமுடிகின்ற சூழலும், எம்மெசு வேர்டு நிரலியில்
தமிழை எழுதவும் அட்டவணைகள் இடவும் தெரிந்து
விட்டால் அவர் கணிப்பேரறிஞராக
ஆகிவிட முடிகின்ற சூழலும் நிலவுவது இந்த
எழுத்துச் சீர்திருத்தத் தொழிலுக்கு மிகவும்
உதவியாக இருக்கிறது என்று சொன்னால்
மிகையல்ல.

என்ன இவன்? - எவ்வளவு பாடுபட்டுத் தமிழை
வளர்க்க முனைபவர்களின் செயலை
குடிசைத் தொழிலுக்கு ஒப்பிடுகிறானே என்று
எண்ணத் தோன்றும். 247 எழுத்துக்களில் 239
எழுத்துக்களை மாற்றத் துடிக்கின்ற பலரின்
கோணங்களையும் அவர்களின் ஆய்வுகளின்
அளவுகளையும் படிக்கும்போது குடிசைத்
தொழில்களுக்குத் தேவையான அடிப்படைச்
சிந்தனைகளைக் கூட எந்த ஒரு சீர்திருத்தத்
தாளும் கொண்டிருக்கவில்லை என்பதுவும்
வெற்று அட்டவணைகளால் நிரப்பப்பட்ட
இந்தத் தாள்களைச் செய்வதற்கும்
பீடி சுற்றுவதற்கும் பேரீச்சம்பழம் பொட்டலம்
கட்டுவதற்கும் செய்யும் வேலைக்கும்
எந்த வேறுபாடும் கிடையாது என்பதை
புரிந்து கொள்ள முடியும்.

(அதே வேளையில் எந்த ஒரு குடிசைத்
தொழிலையும் நான் இளக்காரம் செய்யவில்லை
என்பதனை வாசகர்களுக்குத் தெரிவித்துக்
கொள்கிறேன்.)

இதில் கொடுமை என்னெவென்றால் இவர்களின்
ஆராய்ச்சியற்ற எழுத்து வடிவ மாற்றங்களுக்குத்
தந்தை பெரியார் பெயரை, விளம்பரத்திற்குப்
பயன்படுத்துமாப் போல, பயன்படுத்துவதாகும்.

பெரியார் நேயர்களையும் சிந்தனையாளர்களையும்
பெரியார் பெயரைச் சொல்லி திசைதிருப்புவதே
இவர்களின் நோக்கமாக இருக்கின்றது. இதுபற்றி
விரிவாகப் பின்னர் காண்போம்.

தமிழ் எழுத்து வடிவத்தை ஏன் மாற்ற வேண்டும்,
அதற்கென்ன தேவை என்பதை வடிவமாற்ற
விரும்பிகள் ஒருவர் கூட நிறைவான
ஆராய்ச்சி செய்ததில்லை.

கற்பனைகளையும் கதைகளையும் சொல்கிறார்களே
தவிர இன்னது தேவை இன்னது சரவல்
இன்னது விளைவு இன்னது பயன் என்று
அறிவுசார் ஆராய்ச்சிகள் கொண்டாரில்லை.

இன்றைய நிலையில் தமிழ் உலகில் உலவுகின்ற
பல்வேறு வடிவ மாற்ற முனைவுகளின் தொகுப்பினை
இக்கட்டுரை (தொடர்) கொண்டுள்ளது.

இகர வரிசையில் செய்ய வேண்டிய வடிவ மாற்றத்தை எடுத்துரைக்கிறார் வா.செ.குழந்தைசாமி. மேலே படத்தில் இருப்பது போல வடிவ மாற்றம் செய்தால் குழந்தைகள் எளிதாகக் கல்வி கற்பர் என்கிறார். ஈகார வரிசைக்கும் இதே முறையில் வேறு ஒரு குறியை போட்டுவிடுகிறார் வா.செ.கு. கீழே காண்க.


என்ன இது? கி, கீ, நி, நீ எழுத்துக்களில் இருக்கும் துணைக் குறிகளை அப்படியே நகர்த்தி ஒரு மில்லி மீட்டர் தள்ளிப்போட்டுவிடுவது சீர்திருத்தமாகுமா? இதுதான் சீர்திருத்தம் என்றால் எவ்வளவோ செய்யலாமே,செய்து பெரியார் ஆகிவிடலாமே என்ற அவாவில் இன்றைக்குப் பலரும் இதனைத் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் வியப்பு ஏற்படுவது தவிர்க்க ஏலாதது.
உகர வரிசையில் உள்ள எழுத்துக்களை இப்படி உடைத்து இரண்டு குறிகளாக்கிப் போட்டால் ஆசிரியர்களுக்குப் பாடம் கற்பிக்க ஏதுவாக இருக்கும் என்று சொல்கிறார் வா.செ.கு.ஊகார வரிசையில் உள்ள எழுத்துக்களுக்கும் அதே போல வேறு ஒரு துணைக்குறியீட்டைப் போட்டு எழுதினால் காலத்திற்குத் தக்க மாற்றம் செய்த பெருமை நம்மிடம் இருக்கும். இல்லாவிடில் தமிழே இல்லாமல் போய்விடும் என்று சொல்கிறார் வா.செ.கு.

(வா.செ.கு போன்று பலர் செய்ய முனையும் மாற்றங்கள், சிதைவுகளை வரும் கட்டுரைகளில் தொடரும்)

அன்புடன்
நாக.இளங்கோவன்

No comments: