Pages

Sunday, February 28, 2010

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-5

2.5. முன்னை மாற்றங்கள்
2.5.1 கி..பி 6 ஆம் நூற்றாண்டு

பேராசிரியர் வா.செ.கு அவர்கள் “தமிழ் எழுத்துச் சீரமைப்பு”(2) என்ற கட்டுரையில் அட்டவணை-6ல் கி.மு.3 ஆம் நூற்றாண்டு முதல் அணிமைக் காலம் வரையிலான எழுத்து வடிவ மாற்றங்களைக் காட்டியிருக்கிறார்,




படம்-6: பண்டைய காலத்தில் இருந்து தமிழி எழுத்துக்களின் இயல்பான மாற்றங்கள்

மேலே உள்ள படத்தைப் பார்த்தால் கி.பி 6 ஆம் நூற்றாண்டில் தமிழ் எழுத்து வடிவில் ஒரு மாற்றம் ஏற்பட்டது தெரிகிறது. ஆனால் அதற்கு அப்புறம், இதுகாறும் தமிழ் எழுத்துக்கள் அடிப்படை வடிவத்தை அடியோடு இழக்காமல் மென்மையான வளைவுகள் கூடிய மாற்றமே அடைந்திருப்பதைக் காணமுடிகிறது. இவை வலிந்த சீர்திருத்தமோ அன்றி அரசானையால் ஏற்படுத்தப் பட்டதாகவோ அல்லாமல் இயல்பான கையெழுத்துப் பழக்கத்தால் ஏற்பட்ட மெல்லிய மாற்றமாகவே இருக்கின்றன.

2.5.2. கி.பி 18 ஆம் நூற்றாண்டு

6-ஆம் நூற்றாண்டிற்குப் பின் அடுத்த மாற்றம் 18 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டிருக்கிறது. ஓலையில் இருந்து மாறி, தாளும் அச்சும் தமிழகம் நுழைந்த காலத்தில் இத்தாலிய வீரமாமுனிவர் எகர ஒகர உயிரிலும், உயிர்மெய்களிலும் இருந்த புள்ளியை எடுத்து இரட்டைக் கொம்பை உருவாக்கியிருக்கிறார். அம்மாற்றம் தமிழின் மொத்த சொற்களிலும் விழுக்காட்டளவில் பெரிய மாற்றங்களைச் செய்யவில்லை. ஏனெனில் அது அடிப்படை வடிவத்தைப் பெரிதும் மாற்றவில்லை. கீழே படத்தில் காணுவது போல எகர ஒகர குறிலில் இருந்து புள்ளி எடுக்கப் பட்டது. “ஏ” ஒரு சாய்கோட்டைச் சேர்த்துக் கொண்டது.
இவ்வுயிர்களில் துவங்கும் சொற்கள் மொத்தமே 2908. இவ்வெண்ணிக்கை மொத்தச் சொற்களில் 1% அளவே இருக்கக் கூடும். ஏகார ஓகார உயிர்மெய்களுக்கு இரட்டைக் கொம்பு ஆக்கினர் என்பதால் அவ்வெழுத்துக்களை நமது அட்டவனை-3ல் அளந்து பார்த்தால் தாக்கம் பெற்ற சொற்கள் 15887 மட்டுமே. அதாவது வீரமாமுனிவர் உயிர்மெய்களில் செய்த மாற்றத்தினால் ஏற்பட்ட தாக்கம் வெறும் 6.25% மட்டுமே. அது மெல்லிய மாற்றமாய் இருந்ததால் தமிழுலகம் நாளடைவில் பழகிக் கொண்டது.



படம்-7: வீரமாமுனிவர் செய்த எழுத்துச் சீர்மை (9)
(http://www.tamilvu.org/courses/diploma/d051/d0511/html/d0511665.htm)


2.5.3. கி.பி 20 ஆம் நூற்றாண்டு


பதினெட்டாம் நூற்றாண்டிற்குப் பின்னால், 20 ஆம் நூற்றாண்டில், அச்சில் தமிழ் பெருகிய காலத்தில் அடுத்த மாற்றம் நிகழ்ந்தது. சில அறிஞர்களும் தந்தை பெரியாரும் ”13 தமிழ் எழுத்துகளின் வடிவ மாற்றம் தமிழின் அச்சு வடிவிற்குப் பயனளிக்கும்” என்று கருதி மற்றவரும் ஏற்குமாறு பரிந்துரைத்தனர். ஏறத்தாழ 40-50 ஆண்டுகள் இந்தக் கருத்து தமிழ் உலகில் அலசப்பட்டு, ஆங்காங்கே வெள்ளோட்டம் விடப்பட்டு, முடிவில் 1978 - இல் தமிழக அரசின் முன்முனைப்பால் அரசாணை மூலம் நடைமுறைப் பட்டது. இஃது பெரியார் சீர்திருத்தம் என்று சொல்லப் படுகிறது. பெரியார் சீர்திருத்தத்திற்கு உள்ளான உயிர்மெய்கள் பங்கு பெறும் தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.



அட்டவணை- 4: பெரியார் சீர்மையின் உயிர்மெய்கள் பங்களிக்கும் சொற்களின் எண்ணிக்கை
படம்-8: பெரியார் சீர்மையின் மெல்லிய பரவல்

தமிழிப் பரப்பில் பெரியார் சீர்திருத்தம் கிட்டத்தட்ட 4% அளவே தாக்கம் செய்ததாலும், 1960/1970களில் கற்றோர் எண்ணிக்கை தற்போதைக்கும் குறைவாய் இருந்ததாலும், மிடையங்கள்(media) இதழ்களின் எண்ணிக்கைகள் பன்மடங்கு குறைவாய் இருந்ததாலும், இந்த வடிவமாற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தாமல் புழக்கத்துக்கு வந்தது. ஓரிரு எதிர்ப்பாளர்களும் நாளடைவில் இம்மாற்றத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

2.5.4 முன்னை சீர்திருத்தங்கள் எழுப்பும் சிந்தனைகள்

18 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட எழுத்துமாற்றத்தை இன்றைக்கு முன்வைக்கப்படும் எழுத்துமாற்றத்தோடு ஒப்பிட்டால் ஓரிரண்டு சொல்லலாம். 6.25% சொற்களில் மட்டுமே தாக்கம் செய்த வீரமாமுனிவரின் சீர்மை பெரிய சிக்கலை ஏற்படுத்தவில்லை. அதே போல, மொழிப் புழக்கத்தில் 4% மட்டும் தாக்கம் செய்த பெரியார் சீர்மையாலும் கூடப் பெருஞ்சிக்கல் எழவில்லை. 4% விழுக்காடு மாற்றத்திற்கு முன்னர், 18 ஆம் நூற்றாண்டில் இருந்து இருபதாம் நூற்றாண்டு வரை ஏறத்தாழ 250 ஆண்டுகள் ஓடியிருக்கின்றன. இப்பொழுதோ, பெரியார் சீர்திருத்தம் முடிந்த 40 ஆண்டுகளிலேயே, இகர, ஈகார, உகர, ஊகாரச் சீர்மையால் தமிழ் மொழி/எழுத்துத் தோற்றத்தில் 59% மாற்றத்தினைச் சீர்மையாளர் ஏற்படுத்த முனைகிறார்கள். 59% தாக்கம் ஏற்படுத்தும் வடிவ மாற்றத்திற்கு, மிகச்சிறிய அளவில் மாற்றம் ஏற்படுத்திய வீரமாமுனிவரின் மாற்றமும், தந்தை பெரியாரின் மாற்றமும் ஒருபோதும் வழிகாட்டியாக இருக்கமுடியாது.

இதே 20 ஆம் நூற்றாண்டில் அண்டை மாநிலமான கேரளத்தில் 1969 இல் திரு. அச்சுதமேனன் அமைச்சரவையால் மலையாள எழுத்துச் சீர்திருத்தம் அரசாணை மூலம் கொண்டு வரப்பட்டு, ஏற்கப்பட்டது. இந்த மாற்றத்துள் உகர, ஊகாரச் சீர்திருத்தமும் இருந்தது. இன்றைக்குத் தமிழில் உகர, ஊகாரச் சீர்திருத்தம் வேண்டுவோர், மலையாளத்துச் சீர்திருத்தத்தை முன்மாதிரியாய்க் காட்டுவர். ஆனால் மலையாளச் சீர்திருத்தம் வந்த போது, கணிவழி எழுத்துக்களை உள்ளிடும் முறை கிடையாது. வெறும் அச்செழுத்து உள்ளீடே இருந்தது. இன்றோ, தமிழியில் கணிவழி உள்ளீடு பரவலாகிப் போனது. எழுதுவது குறைந்து கொண்டே வரும் நிலையில், உகர, ஊகாரச் சீர்திருத்தம் தேவையா என்னும் கேள்வி முற்றிலும் புதிய பார்வையைக் கொடுக்கும். ஒரு காலத்தில் சரியென்று தென்பட்டது எல்லாக் காலத்தும் அப்படியே இருக்கத் தேவையில்லை. இடம், பொருள், ஏவல் பார்த்து ஒன்றை முடிவு செய்யவேண்டியது இன்றியமையாதது அல்லவா?

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:
பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html
பகுதி-2:।com/2010/02/3।html"> http://nayanam.blogspot.com/2010/02/blog-post.html

பகுதி-३: http://nayanam.blogspot.com/2010/02/3.html


பகுதி-4: http://nayanam.blogspot.com/2010/02/4.html


அன்புடன்
நாக.இளங்கோவன்

1 comment:

Indian said...

//இன்றோ, தமிழியில் கணிவழி உள்ளீடு பரவலாகிப் போனது. எழுதுவது குறைந்து கொண்டே வரும் நிலையில், உகர, ஊகாரச் சீர்திருத்தம் தேவையா என்னும் கேள்வி முற்றிலும் புதிய பார்வையைக் கொடுக்கும்.//

முக்கியமான கருத்து ஐயா.
எதிர்காலத்தில் தாளில் எழுதும் வழக்கமே முற்றிலும் மறைந்துவிடுமோ என்ற ஐயம் எனக்குண்டு.