Pages

Saturday, December 15, 2001

இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்கு..!

Saturday December 15, 2001

'கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம் ' - ஒரு கடிதம்

நாக.இளங்கோவன்

அன்பின் முனைவர் இந்திரா பார்த்தசாரதி அவர்களுக்கு வணக்கம்.

'கண்ணகி என்ற ஒரு கற்பு இயந்திரம் ' என்ற தங்களின் கட்டுரையை திண்ணையில் கண்ணுற நேர்ந்தது. அது குறித்தே இம்மடல்.

கே.கே.சா போன்றோரைக் காட்டும் இக்கட்டுரை நீண்ட காலத்திற்கு முன்னெழுதியதன் மறுபதிப்போ ?

இருப்பினும் சில கருத்துகளை நான் எழுத விளைகிறேன்.

அடிப்படையில் ஒவ்வொருவரின் பார்வையும் வேறு பட்டதாயிருக்கும். பல கருத்துகள் வரும்; வர வேண்டும்; அதில் எனக்கு அணுவளவும் அய்யமில்லை. ஆனாலும் தங்களின் இந்தக் கட்டுரையில் கருத்துகள் பல இடறுகின்றன. அவை மாற்றுப் பார்வை என்பதை விட காற்றுப் பார்வை என்பதாய் எனக்குப் படுகின்றன.

1) 'மழலைப் பருவத்திலேயே தமிழ்ப் பண்பாம் கற்பு நெறி உணர்ந்த பொற்பின் செல்வி ' என்று யாரோ எழுத, அதைக் கண்டு நீங்கள் 'சிறு குழந்தையிலே கற்பைக் காப்பாற்றிக் கொள்ள என்ன 24 மணி நேரமும் சட்டியைக் கழட்டாமல் இருக்கலாம் ' என்றவாறு எழுதியிருப்பது, கற்புநெறி என்ற உளநெறியை உடல்நெறியாய்க் கருதி எழுதியதாகத் தெரிவது அழகாக இல்லை. நீங்கள் இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம் என்பது என் கருத்து.

2) கண்ணகியும் கோவலனும் காதல் செய்து மணம் கொள்ளாமல் பெற்றோர் செய்து வைக்கும் மணம் என்பதால் என்ன தவறு இருக்கமுடியும் ? இது எப்படி 'கண்ணகிக்கு காதல் செய்து திருமணம் செய்து கொள்ளத் தகுதியில்லை ' என்பதுவாகும் என்று விளங்கவேயில்லை.

3) முதல் இரவிலேயே கோவலனுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுவிடுகிறது என்று கூறுகிறீர்கள். அதோடு கொலைக்களக் காதை வரை கண்ணகி கோவலனுடன் நெருங்கி அளவளாவியதே இல்லை என்று கருத்துரைத்திருக்கிறீர்கள்!

மதுரைக்காண்டத்தை மிகவும் விரும்பி சிலம்பின் புகார்க்காண்டத்தைப் படிக்காமல் விட்டுவிட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது :-)

புகாரில், மனையறம்படுத்த காதையின் இறுதியிலே, கோவல கண்ணகியரின் சில ஆண்டு இன்பவாழ்வை ஒரே செய்யுளில் அழகுற ஆசிரியர் எடுத்துரைக்கிறார்.

'தூமப் பணிகளொன்றித் தோய்ந்தால் எனஒருவார்

காமர் மனைவியெனக் கைகலந்து-நாமம்

தொலையாத இன்பமெல்லாம் துன்னினார் மண்மேல்

நிலையாமை கண்டவர்போல் நின்று.

இப்பா ஒப்பற்ற விளக்கங்கள் கொண்டது.

இதை நீங்கள் எப்படித் தவற விட்டார்கள் என்று தெரியவில்லை.

கண்ணகியின் மேல் இன்பமில்லை, அவளால் முடியவில்லை, அதனால் எல்லாம் முடிந்த மாதவியிடம் அவன் போகிறான் என்றவாறு நீங்கள் எழுதியுள்ளது தவறு.

அப்படியே ஒரு பெண்ணிடம் குறை இருந்திருந்தால், அதையே காரணமாய் வைத்து ஆடவன் பிற பெண்டிர் தேடுவதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா ? சிந்து பைரவி சிந்துவைப் பார்த்தவர்கள் கூட எளிமையாகப் புரிந்து கொள்வதை சங்க இலக்கியத்தில் பார்த்து விட்டு நீங்கள் சற்று சரியாகப் புரிந்து கொள்ளவில்லையென்றே கருதுகிறேன்.

4) சோமகுண்டம், சூரிய குண்டம் இவைகளில் மூழ்குவது 'பீடன்று ' என்று கண்ணகி சொன்னது அருமையான இடம். அங்குதான் அவள் பெரியாரை விட பெருந்தாயாகத் தெரிகிறாள். ஆனால் நீங்கள் அவ்வாறு அவள் மூழ்கி எழாதது 'எங்கே மூழ்கி எழுந்ததும் கோவலன் வந்து விட்டால், தன் கற்பு நெறியை உலகுக்குக் காட்டமுடியாமல் போய் விடுமோ என்று கண்ணகி அஞ்சியதாகத் தெரிகிறது ' என்று நீங்கள் விளக்கியிருப்பது, 'கற்பு ' என்று நீங்கள் எதை நினைக்கிறீர்கள் என்பதை முதலில் தெளிவாக எங்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்று கேட்கத் தூண்டுகிறது. 'கற்பு ' என்பது நீங்கள் கூறியது மாதிரி சட்டி போட்டு மறைக்கும் பொருளா ? உடல் நெறியா ? உள நெறியா ? கண்ணகியே, தான் தெய்வம் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி எல்லாம் நடந்து கொண்டாள் என்ற தங்களின் கூற்றுக்கு ஆதார வலு இல்லை என்றே கருத ஏலுகிறது.

5) கோவலனின் சலன உள்ளம் பற்றி நீங்கள் எழுதியுள்ளது பாராட்டத்தக்கது. அவன் உளநிலையை நன்கு படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள். அருமை.

குறை கூறல் என் நோக்கமல்ல. விளக்கம் அறியும் ஆவலே நோக்கமாகும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

திண்ணையில் எழுதியது்

No comments: