சிலம்பு மடல் - 19 மாதவியைப் புரிதல்! சுற்றம் உணர்தல்!
மதுரை:
புறஞ்சேரி இறுத்த காதை:
வேட்டுவக் குமரியின் கொற்றவைக் கோலம் நீங்கிய பின்னர் மதுரைசேர் நடையைத் தொடர்ந்தனர் கோவல-கண்ணகி-காவுந்தி அய்யை. கதிரவன் கடுமை அதிகம் ஆதலால் இரவின் மென்மையைக் கண்ணகியின் காலடிகளுக்குக் கொடுக்கும் பொருட்டு, கடந்தனர் காதங்களை இரவுகளில்; ஒரு காலை, சேர்ந்தனர் முப்புரிநூலோர் மட்டும் வாழ்ந்த ஊர்தனை.
பாதுகாப்பான இடமொன்றில் பெண்மணிகளை இருத்தி நீர் பெற்றுத் திரும்பச் செல்கிறான் கோவலன்! கண்டனன் தன்னைத் தேடித் திரிந்த கோசிகன் என்பானை!
கோசிகன் சொல்வான் கோவலனிடம்;
கோவல!
அரிய மாணிக்கத்தை இழந்து விட்ட பெரிய நாகம் சுருங்கிப்போய் கிடப்பது போல, உன் பெருஞ்செல்வத் தந்தையும் தாயும் முடங்கிப் போய்விட்டனர் உன்னைக் காணாமல்; அறிவாய்!
"இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும்
அருமணி இழந்த நாகம் போன்றதும்...."
உயிர் பிரிந்த உடலென்றாகிப்போயினர் உன் சுற்றத்தார்; உணர்வாய்!
"இன்உயிர் இழந்த யாக்கை என்னத்
துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும்...."
இராமனைப் பிரிந்து வாடிய அயோத்தி மக்களைப் போல புகார்வாழ் மக்கள் யாவரும் நின் பிரிவால் வருத்தமுற்றிருக்கின்றனர்;
"அரசே தஞ்சம்என்று அருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும்....."
தான்தந்த திருமுகத்தை நீ வாங்கவும் மறுத்ததால் வாடிக்கிடக்கிறாள் மாதவி; வெறுத்தாளில்லை!
"என் கண்ணின் கருமணியான கோவலற்குக்" காட்டென மீண்டும் ஒரு முடங்கலை என்னிடம் கொடுத்தனுப்பியிருக்கிறாள்!
"கண்மணி அணையாற்குக் காட்டுக என்றே
மண்உடை முடங்கல் மாதவி ஈந்ததும்....."
என்று சொல்லி கோவலனிடம் மாதவியின் மடல்தனைத் தருகிறான் கோசிகன்!
மாதவிபால் அளவுகடந்த அன்பு வைத்திருந்த கோவலனுக்கு அவளின் சிறு துளி வார்த்தைகளில் ஏற்பட்ட ஏமாற்றத்தால், சந்தேகத்தால் ஏற்பட்ட விளைவுகளினால்,
கோவலனைச் சுற்றிய தாய், தந்தை, காதலி, சுற்றம், மக்கள் என அனைவருக்கும் கோவலன் பால் இருந்த அன்பினால், அவன் பிரிவினால் ஏமாற்றமும் துன்பமும் நிகழ்ந்து விட்டிருக்கிறது.
அன்பிருந்தால்தானே ஒருவரின் பிரிவின்பால் பிறருக்குத் துன்பம் தரும்! அது இல்லாவிடில் பிரியும்வரை வாழ்ந்த வாழ்க்கை வண்டிப்பயண நட்புபோன்றதுதானே!
கண்ணகியைப் பிரிந்த, மாதவியையும் பிரிந்த இரு குற்றத்தை இவன் செய்தான். ஆனால் காதலியர் இருவரையும் சேர்த்து அவனை அறிந்தோர் யாவரும் அவன் பால் அன்பு காட்டுமளவிற்கு பண்பாளன்தான் கோவலன்!
பிரிந்து போன போழ்தும் பழைய தொடர்பை நினைத்துப் பேணுதல் நல்ல சுற்றத்தார் பண்பு என்பதைத்தான் வள்ளுவரும் சொல்கிறார்.
"பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள"
--குறள்
அந்த நல்ல சுற்றத்தைப் பெற்ற கோவலன் நல்ல பண்பாளனாகத்தான் இருந்திருக்கிறான்.
பொருள் கொடுத்து உதவல், இனியவை கூறல் என்று வள்ளுவப் பெருந்தகை சொன்ன இலக்கணத்தின்படி கோவலன் வாழ்ந்துதான் இருந்திருக்க வேண்டும்!
"கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின், அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்,"
-- குறள்
இல்லையேல் அவன் பிரிவால் பெருஞ்சுற்றம் முழுமையும் ஏன் துயருற வேண்டும் ?
பெருஞ்செல்வப் பெற்றோர்கள் மற்றும் அன்பு காட்ட அடுக்கிய சுற்றத்தார் ஆயிரம் இருந்தும், தான் நொடித்துப் போனதும் உடுத்த உடுக்கையுடன் பொருள்தேட பிற நாடு சென்ற தன்மானம் படைத்தவன் கோவலன்!
பிறர் பொருள் நாடா பேராண்மையான்!
கோவலனின் மனம் இளகுகிறது! மாதவியின் மடலைப் படிக்குமளவிற்கு அவன் உறுதி தளர்கிறது!
தாம் ஏமாந்துவிட்டோ ம், பொருளிழந்து விட்டோ ம் என்று தாழ்வடைந்திருந்த மனத்திற்கு, தன் சுற்றம் பற்றி கோசிகன் சொன்னது இதமாக இருந்திருக்க வேண்டும்!
உறவுகளின் ஏக்கங்கள் உணர்வுகளை ஆட்கொள்கிறது! ஆறுதல் தருகிறது! ஆறுதல்கள் மனித வாழ்வின் தேவைகள்தானே!
ஆறுதல்கள் அவன் மனத்தில் தெளிவுகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும்! தன் தவறால் குறையாத உறவுகளின் அன்பு அவன் மனதில் அமைதியை ஏற்படுத்தியிருக்க வேண்டும்!
மாதவி அனுப்பிய மடலில் மண்ணால் இலச்சினை வைத்திருந்தாள்! அதில் அவள் ஒற்றைக் கரு மயிர் ஒன்றையும் ஒட்டி வைத்திருந்தாள்! அதைத் தொட்டுப்பார்த்த போது, காற்றிலே அது அசைந்து அவன் கைகளிலே பட்டபோது, அவளே அவன் மேல் அன்பினாற் பரவினாற்போன்ற இன்பம்!
அம்மயிரில் மணந்த புனுகு அவனை மாதவியோடு இருந்த இன்ப காலத்திற்கு இழுத்துச் சென்று மடலைப் படிக்க விடாமல் பழைய நினைவுகளில் உறையச் செய்தது!
மடலுள் இருந்தது மாதவியின் குரல்! தான் தவறேதும் செய்யாதபோது தனைப்பிரிந்த அன்பரிடம் காரணத்தை அறிந்து கொள்ளத்துடிக்கும் நல்லன்புள்ளத்தின் தவிப்பே அது!
கேட்கிறாள் துடித்துப்போய்!
"நும் தந்தை தாயும் அறியாமல், அவர்களுக்குப் பணிவிடைசெய்யாமல், உயர்குடிப்பிறந்த கண்ணகியோடு இரவோடு இரவாக ஊரை விட்டே செல்லுமளவிற்கு நான் செய்த தீங்கென்ன என் உயிரே ?"
"அடிகள்! முன்னர் யான்அடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்;
குரவர்பணி அன்றியும் குலப்பிறப்பு ஆட்டியோடு
இரவிடைக் கழிதற்கு என்பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்;
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி....."
அன்பால் கட்டுண்டவளின் கெஞ்சு மொழி அந்த மடலில்!
அன்பும், உறவும், காதலும், காதலியின் மடலும் அவன் மனத்தில் ஆழ்ந்த அமைதியையும் சிந்தனையையும் ஏற்படுத்தியிருக்க வேண்டும்!
மாதவியின் மடலுக்குள் நேர்மையைக் காண்கிறான்!
தழும்பும் குடத்திற்குள் தண்ணீர் ஊற்றி நிறைத்தாற்போன்ற நிலையில் அவன் மனம்!
தான் செய்த இரண்டாவது தவறையும் உணர்கிறான்!
மாதவியிடம் இருந்து பிரிந்ததும் 'தன் குற்றமே' என்று தெளிகிறான் கோவலன்;
பரத்தையர் குலத்தில் சித்திராபதி என்ற பெரும்பரத்தைக்கு மகளாகப் பிறந்த மாதவி, கோவலன் பிரிந்ததும் மாற்றானுடன் போகவில்லை! கோவலன் மட்டுமே அவளின் காதலன்! அந்த உண்மையான நட்பும் அன்பும் அவளைக் குற்றமற்றவள் என்று கோவலனை உணரச் செய்து விட்டது.
பரத்தையர் குலம் என்பது பரிதாபத்துக்குரிய குலம்; மணிமேகலையில் சாத்தனார் "வருணக் காவலும் இல்லா பரத்தையர் குலம்" என்று அதை விவரிக்கும் போது கண்கள் கசியத்தான் செய்கிறது;
யார் இவர்கள்? அனைத்து வருணத்திற்கும் வடிகாலான பரத்தையர்கள் வருணத்துக்குள்ளேயே சேர்க்கப்படாத அளவிற்குத் தள்ளிவைக்கப்பட்டவர்கள்;
ஆனால் வருணம் என்ற கழிநீரில் சேராததால் இந்த வடிகால் உயர்ந்தது என்பேன் நான்!
அந்த குலத்தில் பிறந்த மாதவி தன் நேர்மையைக் கோவலனுக்கு
உணரவைத்துவிட்டது பெரிய வெற்றியல்லவா ?
தன் பிரிவால் நடுக்குற்றிருக்கும் அனைவரின் துயர் களைய, விரைந்து செல்லச் சொல்கிறான் கோசிகனை! மாதவியின் மடலையும் தன் பெற்றோரிடம் சேர்க்க சொல்கிறான்!
பின்னர் நடையைத் தொடர்ந்து வைகை நதியின் வடகரையைச் சேர்கின்றனர் அனைவரும்.
கன்னியும் பொன்னியும் கோவலனை மாதவியிடம் இருந்து பிரிக்க, கண்ணகி சேர்ந்து, வைகை அடைந்த, இவர்களைப் பார்த்து இவர்களுக்கு நேர இருக்கும் துன்பத்தை முன்னரே உணர்ந்தவள் போல் வையை அழுதாளாம்! எப்படியென்றால், வைநயை நதியின் இருகரை வளர்ந்த நறுமலர் மரங்களும் சோலைகளும் கணக்கிலடங்கா தங்கள் பூக்களை வையை ஆற்றில் உதிர்த்து விட, கோவல-கண்ணகிக்கு ஏற்படப் போகும் தீங்கை ஏற்கனவே அறிந்ததால், அம்மலர்களை ஆடையாக்கி, ஓடும் கண்ணீரை (தண்ணீரை) முழுதாக மறைத்துக் கொண்டு உள்ளுக்குள் அழுதாளாம் வையை நதி!
கோவல-கண்ணகியோ இது நீரோடும் ஆறல்ல பூவோடும் ஆறு என்று புகழ்ந்துரைத்துக் கொண்டே மரத்தெப்பமொன்றில் ஏறி தென்கரை சேர்ந்தனர்!
"புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி
தையற்கு உறுவது தான்அறிந் தனள்போல்
புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்
கண்நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப்
புனல்யாறு அன்றுஇது பூம்புனல் யாறுஎன...."
அன்புடன்
நாக.இளங்கோவன்
15-திசம்பர்-1999
No comments:
Post a Comment