Pages

Sunday, August 22, 1999

சிலம்பு மடல் 16

பத்துடன் ஆறு!
பத்தைப் பெற்றெடுத்த அறுபதும் காமுறும் பதினாறு!

இளந்தென்றல் வீசும் இராக்காலம்;
மீதி நிலாவை மறைத்துவிட்டு,
பாதிநிலா பார்த்து இரசிக்க
கள்ளஒளி காட்டுகின்றது காதலர்பால்:.

ஒளியுமில்லை இருளுமில்லை முற்றத்தில்;

மறைவை மறந்தவரை மறக்கடிக்கும் நிலவொளி!
நிலாவின் கள்ள விழி!

புத்தம் புது மங்கை அவள்!
காதலைக் காதலனிடம் காட்டிவிடத் துடிக்கும் மனம்;
உடலோடு ஒன்றாகத் துடிக்கும் உள்ளம்;
உள்ளத்தின் வாசலிலே நாணத்தின் காவல்,
எட்டிப்போன கால்களைக் கட்டிப்போட,
நாணிநிற்கும் நங்கை!

நாணத்திற்குதான் எத்தனை வேலை!!
தூதுபோனது தலைவனுக்கு;
"தொட்டுத் தீண்ட மாட்டாயா? "
சொன்னது அவனிடம்!

தொட்டு விடப்போகின்றேன்!
தொட மட்டுமா வந்தேன்?

அவளில் நிலைகுத்தி நிற்கும் என் கண்களின்
கட்டளைக்கு நான் காத்து நிற்பது அவளுக்குத் தெரியவேண்டாம்!
தொட்டு விடும் தூரத்தில் அவளை அள்ளி விழுங்க என் கண்களுக்கு
இயலாது போகும்;

முகத்தின் ஒவ்வொரு இடமும் அசைவது
அவள் நாணத்தால்; நானறிவேன்;
அச்சுவையை நான் பருகிவிட்டுத்தான் பக்கம் போவேன்!

கால்கள் இடும் நாணக்கோலத்தில்
என்னை எழுதுகிறாளே;

என் உடலெங்கும் குறுகுறுக்கும் அந்த இன்பத்தில்
மெல்ல மெல்ல நனைகிறேன்;

அவள் கைவிரல்கள் ஒன்றையொன்று
கட்டிப் பிடிக்கின்றன; பார்க்கிறேன் நான்!

தொடவேண்டி நின்றதால் இருந்த இன்பம்
தொட்டுவிட்டால் எனக்குக் குறைந்திடுமோ ?
இந்த இன்பத்திலேயே இருந்துவிடலாமா?
முதலின்பம் காணப்போனவள் இன்பத்தின் எல்லை
அதுவென்றே நினைக்கிறாள்.

அவளின் மனதிற்குள்
அச்சம் தோன்றியதை அவனன்றி ஆரறிவார் ?

இன்பப் பிச்சைக் கேட்டுக் கரங்களை நீட்டினான்!
பற்றிக்கொள்ள கொம்பின்றி தத்தளித்தக் காமக் கொழுந்து,
கரங்களைப் பற்றி முழுமாரில் மறைத்துக் கொண்டது முகமதனை!

முகத்தின் வியர்வை அரும்புகள் மட்டுமே
இடைவெளி கொடுத்தன அவளுக்கும் அவனுக்கும்!

முதன்முதலில் தொட்டவுடன்
அவன் நெஞ்சிற்குப் பொட்டிட்டது அவள் நெற்றி!

அக்கணமே,
அழுந்தப் பதித்தும் இன்ப அசைவுகளால்
இழுத்துக் கொண்டன குங்குமக் கோடுகள்!

இன்பம்தான் அவனுக்கு!
நெற்றிச் சுட்டியும் அழுந்திப் பதிந்தபோது;

மங்கையின் பற்குறி படுமுன்னே அவள் சூடாமணிக்கு அவசரம்
அவனைத் தீண்டிவிட!

உற்றவனின் நெஞ்சத்தில் குறிவைத்த சுட்டிமேல்
பொறாமை கொண்டாள்!

உள்ளத்தில் தோன்றும் பொறாமையை மறைத்துச்
செயலாற்றி வெற்றி கொள்வதில்தான் பெண்மைக்கு ஈடு ஏது?

மெல்ல முகத்தைத் தூக்கி மன்னவனைப் பார்த்துக் கொண்டே
தன்னைப் புனைந்திருந்தவற்றில்
சுட்டியைக் கழற்றி எட்டிப் போட்டாள்!

அவள் அவிழ்த்த முதல் ஆடை அது.
அவனுக்கு என்ன புரிந்ததோ?

சுட்டியை நீக்கியதும் ஒற்றைக் கரும்பட்டு மயிரொன்று
தென்றலின் குறும்பால் காதலன் முகத்தில் முத்தமிட்டது;

மூக்கிலும், வாயிலும், குழிவிழுந்த கன்னத்திலும், கண்களிலும்
நெருடி விட்ட அவளின் ஒற்றை மயிர், அவன் காதுக்குள்ளும்
காமக் கதை சொன்னது!

தன் காதலனை தான் முத்தமிடுமுன் இந்த மயிரும்
முந்திக் கொண்டதே? சூடாமணியைத் தூர எறிந்தது
போல் இம்மயிரை எறிய முடியாதே!
சிறிதாக சிரித்துக் கொள்கிறாள்!

அந்த மென்மையில் மதிமயங்கியவன் முனகியதைத் தவிர
வேறென்ன செய்ய முடியும்.

ஒற்றை மயிரில் மயங்கியவன் அவளின் கால் வரை கரு நதியாய்
அலைபாயும் அவள் கூந்தலை முகர, கருமேகவிளிம்புக் கதிரவன்போல்
முல்லையும் மல்லியும் அடர்ந்து கிடந்தன அவள் தலையில்.

இதே மலர்களைக் கடவுளர் சூடின் ஒரு வாசமும்,
மங்கையர் சூடின் வேறு வாசமும் வருவதேன்?
கடவுளைக் கட்டிப் பிடித்தாலும்
இத்தனை இன்பம் கிடைக்குமா?

விடைகாண முடியவில்லை அவனால்!
மயிருக்கு வாசம் உண்டோ அறியான்; ஆனால்
பெண்மையின் வாசத்தை அவனால் மறுக்க முடியுமா?

பெண்மனம் அவனுள் புதைந்து கிடக்க,
பெண்மணத்தை முகர்வதில்தான் எத்தனை இன்பம்;

எவர்தான் அதை வெறுப்பார்! தூய பெண்ணில் காமம்
உண்டாகும் போது வரும் மணத்தை அல்லது நாற்றத்தை
எந்த ஆடவன் வெறுத்திருக்கக் கூடும்; அவ்வாசமும்
மலர்களின் வாசமும் இணைந்த காதல்மேடையொன்று
களியாட்டத்துக்கு காத்திருந்தது;

கூந்தலுக்குள் விரல்கள் துளையிட்டு பின்னங்கழுத்தை
வருடி விட, தலையை மேலும் நிமிர்த்தி,கண்கள் சொருகி,
நிறத்தில் செம்பருத்திப் பூவொத்த மென் பட்டு இதழ்களை
மெல்லப் பிரித்தாள் அவளையும் அறியாமல்; இதழ்கள்
பிளந்தது இதழுக்காகத்தான்;

சீச்சீ! இது என்ன வேதனை!
என் இதழ்கள் சுவைக்கவும் வேண்டும்!
சுவைக்கப் படுதலும் வேண்டும்;
எது எனக்கு முதலில் கிடைக்கும்? இது சொர்க்கமா? நரகமா?
இத்தனைச் சிக்கலா காம வேள்வியில்?;
வெப்பப் பெருமூச்சொன்று வெளியான விநாடி
'சிவபெருமானின் பிறையை ஒட்டியது உன் நெற்றியின் அழகு!'

"பெரியோன் தருக திருநுதல் ஆகஎன;"

என்று காதலன் சொல்ல, அணைக்க வேண்டிய இதழ்கள்
உதிர்த்தவையும் அவளை மயக்கத்தில் ஆழ்த்தியபடியே இருக்க
காதலன் அவள் இதழ்களில் ஓடிய வரிகளில் காம வெள்ளத்தை
பருகுதல் வேண்டி ஆங்கு இணைகிறான்; மென்மைக்கு
வன்மைதான் பிடிக்கும் போலும்;

இவனின் கீழுதடு அவளின் மேலுதட்டைப் பருக, அவளின்
கீழுதடு அவனின் கீழுதட்டுடன் ஏதெதோ செய்ய முயன்று
தோற்றுக் கொண்டு இருந்தது;

இவனை அவள் பருக அவனை இவள் பருக நாழிகைகள்
நகர்ந்து கொண்டிருக்க, குங்குமம் மெழுகிய கொங்கைகள்
வெண்பட்டுக் கச்சையிடம் கெஞ்சிக் கிடந்தன; விடுதலை வேண்டி!

வியர்வை மொட்டுக்களால் கொங்கை விலகிய குங்குமமும்
சந்தனமும் கச்சையை நனைத்து கொங்கையின் அசைவுக்கெல்லாம்
அழகு சேர்த்துக் கொண்டிருந்தது; இருப்பினும், கொங்கையின்
இச்சைக்கு, கச்சையின் இடைஞ்சலைக் கண்ட காதலன், உதவிக்கு
தன் கரங்களைக் கொடுத்தான்; கச்சை நகர்ந்ததும் தாங்கிப் பிடித்துக்
கொண்டான் தன் கைகளினாலே!

தாங்கிப் பிடித்த கைகள் நங்கை முலைமேல் படர்ந்திருந்த
ஒற்றை வட முத்து மாலையால் தடைகளை உணர, தவித்துப் போனான்.

"திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்
ஒருகாழ் முத்தமொடு உற்றதை எவன்கொல் ?"

திருமுலைகள் மேலே தொய்யில் எழுதியதோடல்லாமல்
இந்த மாலைகளையும் அணிவிப்பதுவும் ஏனோ என்று அலுத்துக்
கொள்கிறான்; என் கரங்கள் கொள்ளும் இனிமைக்கு இன்னல்
விளைவிக்கும் மாலைகளே அகன்று போங்கள் என்று அகற்றி விட்டு
முழு முலைகளிடை முகம் புதைத்தான்; கெஞ்சிய கொங்கைகள்
கொஞ்சின அவன் முகத்தோடு; கொங்கையின் கண்களும் அவனது
கண்களும் பார்த்துக் கொள்ளும் அவ்வப்போது; பார்த்தது தீர
அவனின் கண்கள் கொங்கையின் கண்களைப் பொத்தி விட்டு
விளையாடி மகிழ்ந்ததால் கொங்கைகளுக்குக் கொண்டாட்டம்!

இருகனிச்சுவையில் முக்கனிச்சுவையை இகழ்ந்து நகைத்தான்
இதயத்துள்: இருகரம் கொண்டு இருகனி மறைக்க முயன்று
தோற்றுத் துவண்டு போனான்;இருகரம் கொண்டு ஒருகனி
மறைக்கவும் இயலவில்லை அவனால்;வென்று விட்ட ஆணவம் அந்த
முலைகளுக்கு! வெற்றிக் களிப்பில் கொங்கைகள் கொஞ்சம்
இளகிவிட இருவரின் மூச்சின் வெப்பமும் வேகமும் இன்ப வேதனையின்
எல்லைகளை அகற்றிக்கொண்டே இருந்தன!

பற்களுக்கும் நகங்களுக்கும் பெருவிருந்து செய்தனர் இருவரும்;
அவள் நகங்கள் அவன் முதுகில் கோலம் போட்டபோதெல்லாம்
அவளின் வளையல்கள் இசையோடு ஆடி மகிழ்ந்தன;

மெல்லிடையாளின் இடை நோகாதிருத்தல் வேண்டி
சிரம் தூக்கி இதழோடு இதழ் பெய்து,
ஒருகரம் முலைதாங்க
மறுகரம் அவள் புறம் தீண்ட,
அரைச்சக்கரமாய் ஆகிப்போனாள் பின்னோக்கி வளைந்து;
மயிலின் முதுகைத் தடவியது போல அவளின் புறத்தை தடவியதும்
மறந்துபோயினர் அவர்களை அவர்கள்;

இடையோடு உறவாட உள்ளங்கைகள் முனைய
மேகலைதான் மெல்ல மறுத்துப் பார்த்தது:
புறத்தை பிடித்த கரம் சற்றே இறுகியதால் மேலும்
வளைந்தனள் மங்கை; மேகலையோ தெறித்துச் சிதறிட
மேகலை தாங்கிய ஆடைகளோ அகன்று போயின:
அகன்று கிடந்தாள் அகன்ற அல்குல் காட்டி!
சிரித்துக் கிடந்த பெண்மையை
வெறித்துப் பார்த்தது ஆண்மை!
வாழையொத்த தொடைகள் கொண்டாள்
வாரிவழங்கினாள் வஞ்சனையின்றி,
மாவின் சுவையையும், பலவின் சுவையையும், வாழின் சுவையையும்;
சின்னச் சின்ன அசைவுகளும் சிக்கலை ஏற்றிவிட
கால்களோடு கால்கள் பிணைந்தனர்;
கரங்களோடு கரங்கள் பிணைந்தனர்:
அப்படியே முதுகுகளிலும் கோலமிட்டன அந்த நான்கு கரங்கள்;
வியர்வை ஆறாகப் பெருகிட அதில் வழுக்கிய கரங்களும் கால்களும்
சீறிச்சினந்து பிணைந்து விழுந்தன; பிணையல் பாம்புகள் போல!!

நின்றுவிடப் போகுதுயிர், தின்று விடு இப்போதே!
கூனிவிடப் போகுமிளமைக்கு தீனியிடு இப்போதே!
வற்றிவிடும் செல்வத்தை வெட்டியெடு இப்போதே!
சுற்றிவரும் பூமி நின்று விடுமுன்னே, வற்றிவிடட்டும் காமம்!
என்றதோர் வேகம்!

அவளின் வளையின் ஓசையுடன்,
சிலம்பின் இசை சேர்ந்து,
இருவரின் முனகல் இராகத்தோடு,
இன்பத்தின் எல்லையை சிறிது சிறிதாக அடைந்து கொண்டிருந்தனர்
கோவலனும் கண்ணகியும்!

"தூமப் பணிகளொன்றித் தோய்ந்தால் எனஒருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து-நாமம்
தொலையாத இன்பமெல்லாம் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்போல் நின்று.

அன்புடன்
நாக.இளங்கோவன்
22-ஆகத்து-1999
பி.கு:
...........................................................................................................................................
( புகார்க்காண்டம் முடிவுற்ற வேளை,
கம்பரசம், காமரசம் பற்றி இணையத்தில் பேச்சுவர,
சிலம்பு ரசம் பற்றியும் கருத்தெழுந்தது!
அறிஞர் அண்ணாவின் கம்பரசத்தின் நோக்கம் வேறு;
இம்மடலில் காணும் சிலம்பு ரசம் வேறு!
சிலம்புரசமாக இம்மடலை எழுதத்தூண்டிய
இணைய நண்பர்களுக்காக,
புகாரை மீண்டும் ஒருமுறை நோக்கி இம்மடலை எழுதுகிறேன்: )

அதுமட்டுமல்ல, கண்ணகியையும் சிலப்பதிகாரத்தையும்
பற்றிப் பொய் புரட்டுகளை எழுதிப் பரப்பும் எழுத்தாளர்கள்
கண்ணகி கோவலனுடன் மனை வாழ்க்கை நடத்தவில்லை என்றும்
அதற்கு சான்றாக மாதவிக்குக் குழந்தை இருந்தது ஆனால் கண்ணகிக்கு
இல்லாததை அவர்களின் அடத்திற்கு சான்றாகக் கொள்கிறார்கள்.
சிலம்பிலேயே கண்ணகி, கோவலனின் இன்பவாழ்க்கையை
இளங்கோவடிகள் பாடியிருக்கிறார். அதில் ஒரு பாவிற்கான
விளக்கவுரைதான் இது.
..........................................................................................................................................

No comments: