Pages

Saturday, February 27, 2010

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி-3

2.2 இ, ஈ, உ, ஊ வரிசைகளுள் 72 வகை குறியீடுகள் இருக்கின்றனவா?

பேரா. வா.செ.கு தன் ”தமிழ் வரிவடிவச் சீரமைப்பு”(1) என்ற கட்டுரையில் அட்டவனை-1 -இல், இகர, ஈகார, உகர, ஊகார வரிசையில் வரும் 72 உயிர்மெய் எழுத்துக்களையும் 72 குறியீடுகள் என்று சொல்லி, அவற்றை 4 குறியீடுகளாய்க் குறைப்பதே எழுத்துச் சீரமைப்பு என்று நுவல்வார். அக்கட்டுரையைப் படிக்கும் நாமும் ”72 குறியீடுகளா?” என்று துணுக்குறுவோம்.



அட்டவணை-1 இல் உள்ள எழுத்துத் தரவுகளை வகைபிரித்து, கீழே அட்டவணை 2 இல் உள்ளது போல் பட்டியலிட்டால், இகர ஈகார உகர ஊகாரங்களை 72 குறியீடுகள் என்று சொல்வது மிகைப்படுத்தல் என்பது புரியும். உண்மையில் 9 குறியீடுகளையும், அடிப்படை அகரவடிவங்களையும் வைத்தே இந்த 72 உயிர்மெய் எழுத்துக்கள் உருவாக்கப் படுகின்றன. அட்டவணை-2 என்பது “இ, ஈ, உ, ஊ” உயிர்மெய் வரிசைகளில் இருக்கும் குறியீடுகளை வடிவங்களின் அடிப்படையில் வகைப்படுத்துகிறது.



2.2.1 அட்டவணை-2 இன் விளக்கம்


கொக்கியும், சுழிக்கொக்கியும் இகர ஈகார உயிர்மெய்களில் அகர வடிவின் தலை அல்லது முடிப்பில் இருந்து தொங்கவோ, உயரவோ செய்கின்றன.

சுற்று, விழுது, இருக்கை என்பவை உகரக் குறியீட்டையும் கூட்டு, சுழிச்சுற்று, இருக்கைக்கால், கொண்டை என்பவை ஊகாரக் குறியீட்டையும் குறிக்கின்றன.

சுற்றுக் குறியீடு அகர உயிர்மெய்யைச் சுற்றித் தழுவி உகரம் காட்டும் குறியீடாகும். இந்த வகை எழுத்துக்கள் வடிவிலும் பயனிலும் ஒத்திருப்பது காணத்தக்கது. விழுதுக் குறியீடு அகர உயிர்மெய்யின் இறுதியில் கீழ்நோக்கி வீழும் சிறு கோடாகும். இக்கோடு அளவிலும் திசையிலும் ஒத்து இருப்பது காணத்தக்கது. இருக்கைக் குறியீடு அகர உயிர்மெய்யின் அடியில் இருக்கை போல் அமைத்து உகரம் ஆகிறது.

கூட்டுக் குறியீடானது அகர உயிர்மெய்யின் முடிவில் உகரவடிவம் ஒட்டியவாறு தனித்தன்மையுடன் விளங்குகிறது. சுழிச்சுற்று என்பது முன்னே சுற்றில் வந்தது போல் அகர உயிர்மெய்யின் நிறைகோட்டு அடிப்பகுதியில் தொடங்கிச் சுற்றிப் பின் சுழித்து முடிகிறது. இருக்கைக்கால் என்பது இருக்கையும் காலும் சேர்ந்து, இருக்கைக் குறியீட்டிற்கு நெடிலாய் அமைந்து ஊகாரம் தந்தது. கொண்டை சுழிச்சுற்றைப் போலவே தோற்றி, ஆனால் தலைப்பக்கம் சுற்றிக் கொண்டை போல அமைந்து, சுற்றுகரங்கள் சிலவற்றின் நெடிலாகி ஊகாரம் தந்தது.

அட்டவணை-2 இன் படி, இ-ஈ-உ-ஊ வரிசை உயிர்மெய்களை உருவாக்க 9 துணைக் குறியீடுகள் தான் இன்று பயன்படுகின்றன। 18 அகர உயிர்மெய்களும், 9 குறியீடுகளும் பெருக்கி 72 எழுத்துக்கள் உருவாகின்றன. இந்நிலையில், பேரா.வா.செ.குவின் கட்டுரை ”72 குறியீடுகள்” இருப்பதாய்ச் சொல்லுவது எங்ஙனம் சரியாகும்?


२.3: மாற்றம் என்பது 14 குறியீடுகளில் இருந்து 9 குறியீடுகளா? 72 இல் இருந்து 9 ஆ?


இன்றைய நிலையில் அகர உயிர்மெய் தவிர்த்த உயிர்மெய் எழுத்துக்களை நாம் தமிழியில் எழுதும் போது, அந்தந்த அகர உயிர்மெய் வடிவோடு,

• 9 துணைக் குறியீடுகள் சேர்த்து இகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய்களையும், • கால், ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு, ஐகாரக் கொம்பு ஆகிய 4 குறியீடுகள் சேர்த்து ஆகார, எகர, ஏகார, ஐகார உயிர்மெய்களையும்,
• புதுக் குறியீடுகள் இன்றிக் மேற்சொன்ன குறியீடுகளால் ஒகர, ஓகார உயிர்மெய்களையும்,
• ஒற்றைக் கொம்போடு சிறகுக் குறியீட்டைச் சேர்த்து ஔகார உயிர்மெய்களையும்,

எழுதுகிறோம். மொத்தத்தில் (9+4+1=) 14 குறியீடுகளை, அகர உயிர்மெய் வடிவோடு சேர்த்தெழுதி எல்லா உயிர்மெய்களையும் உருவாக்குகிறோம்; இவற்றையே சிறாருக்கும் சொல்லிக் கொடுக்கிறோம்।



[தமிழில் 247 எழுத்துக்கள் என்பது அடிப்படையான உயிர், மெய்யெழுத்துக்களோடு, புடைப்பு எழுத்துக்களான உயிர்மெய்களையும் சேர்த்துச் சொல்வதாகும்.]

தற்போது, பேரா. வா.செ.கு.வும் அவர் கருத்தாரும் 4 குறியீடுகளில் இ-ஈ-உ-ஊ உயிர்மெய்களை எழுதலாம் என்பாராயின், கால், கொம்பு, இரட்டைக் கொம்பு, ஐகாரக் கொம்பு, சிறகு ஆகிய 5 குறியீடுகளுடன் புதிய 4 ஐச் சேர்ந்து 9 குறியீடுகளில் எல்லா உயிர்மெய்களையும் எழுதலாம் என்று சொல்வதாய்ப் பொருள்படும். அதாவது 14 குறியீடுகளை இவர்கள் 9 குறியீடுகள் ஆக்கமுற்படுகிறார்கள் என்றே பொருள் கொள்ள முடியும். இதை விடுத்து, (72+5) குறியீடுகளை 9 குறியீடுகள் ஆக்குவதாய் நவில்வது எங்ஙனம் சரியாகும்?


மொத்தமாகப் பார்த்தால்,


முதன்மைக் குறியீடுகள் = 12+18+1 (ஆய்தம்) = 31 ம்,
உயிர்மெய்க் குறியீடுகள் = 14 ம்,
சேர்த்து, தமிழில் உள்ள குறியீடுகள் 45 என்றாகும் போது, இவற்றை 107 என்று பேரா. வா.செ.கு கட்டுரை (அட்டவனை-1: தமிழ் வரிவடிவச் சீரமைப்பு) விளம்புவது ”ஈரைப் பேனாக்கிப் பேனைப் பெருமாளாக்குவதாகவே” இருக்கிறது.

(தொடரும்)

முந்தைய பகுதிகள்:

பகுதி-1: http://nayanam.blogspot.com/2010/02/1.html
பகுதி-2: http://nayanam.blogspot.com/2010/02/blog-post.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, February 26, 2010

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 2

எழுத்துச் சீர்மை முன்வைப்புகளில்
மறுக்கப்பட்டப் பார்வைகள்

--நாக.இளங்கோவன்

1 அறிமுகம்
1.1 எழுத்துச் சீர்மை முன்வைப்புகள்

• “ஒரு சில தமிழி எழுத்துக்களின் நிகழ்வடிவுகளை மாற்றுதலே எழுத்துச் சீர்மை” என்று பலராலும் சொல்லப்படுகிறது. [தமிழி என்ற பழஞ்சொல் இக்கட்டுரையெங்கும் தமிழெழுத்தைக் குறிக்கப் பயன்படுகிறது.] தமிழ் வரிவடிவச் சீரமைப்பு(1), தமிழ் எழுத்துச் சீரமைப்பு(2) என்னும் தலைப்புக்களில் சென்ற 2000, 2003 ஆம் ஆண்டு தமிழ் இணைய மாநாடுகளில் படிக்கப் பெற்ற பேராசிரியர் வா.செ.குழந்தைசாமியின் கட்டுரைகள் இகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய் வடிவங்களை மாற்றுவதையே, சீர்மையாக முன்வைக்கின்றன.(1,2)

• அதே கருத்தை ஒத்து ”தமிழ் எழுத்து வடிவ மாற்றங்கள்” என்ற தலைப்பில் முனைவர் கொடுமுடி சண்முகனின் முகன்மையான கட்டுரையும்(3) வெளிவந்தது.

• எழுத்துச் சீர்மையைப் பரிந்துரைக்கும் பலரும் இக்கட்டுரைகளை முன்வைத்தே பரப்புரை நிகழ்த்துகிறார்கள்.

இம் மூன்று கட்டுரை முடிபுகளையும், ஏரணங்களையும், இற்றைச் சூழலில் அலசிப் பார்த்து, ”எழுத்து வடிவ மாற்றங்கள் இனியும் தமிழி எழுத்துக்குத் தேவையா?” என்று மறுபார்வைக்குத் தூண்டுதலே இக்கட்டுரையின் குறிக்கோளாகும்.

2 சீர்மைக்காகச் சொல்லப்படும் ஏரணங்களும், அவற்றின் மறுபக்கங்களும்
2.1. எழுத்தின் உயரம்:

பேரா. வா.செ.குவின் கட்டுரைகளில், எழுத்துச் சீரமைப்பின் அடவுக் கோட்பாடாய் (design objective) இன்றையத் தமிழி எழுத்துகளின் உயரம் முன்வைக்கப் படுகிறது.

இளமையில் நாம் எல்லோரும் தமிழியை எழுதக் கற்கும் போது, எழுத்துப் பயிற்சிப் பொத்தகங்களில் ஒவ்வோர் எழுத்தையும், 4 கோட்டொழுங்கில், 3 பட்டைகளுக்குள், எழுதப் பழகியிருப்போம். [ஓலைகளில் கீறிய அறதப் பழங்காலத்தை இன்று எண்ண வேண்டாம்.] இந்தப் பொத்தகங்களில், எழுத்துக்களின் உடல் இரண்டு, மூன்றாம் கோடுகளுக்குள்ளும், தலைப்பகுதி முதல், இரண்டாம் கோடுகளுக்குள்ளும், அடிப்பகுதி மூன்று, நாலாம் கோடுகளுக்குள்ளும் அமையும். பொதுவாய், தமிழி எழுத்துக்கள் இரண்டு, மூன்றாம் கோடுகளுக்குள் மட்டுமே அமைவதில்லை. தங்கள் உயரங்களில் மாறுபட்டு, நாலு கோடுகளுக்கும் பரவுவது உண்டு. பேரா. வா.செ.கு அப்படிப் பரவும் எழுத்துகளைத் தனது கட்டுரையில் கீழ்க்காணும் படத்தினூடே (படம் 1) எடுத்துக் காட்டுகிறார்.


படம்-1, தமிழ் வரிவடிவச் சீரமைப்பு-வா।செ.கு


இது போன்ற ”கி,கு,ணூ” போன்ற எழுத்துக்கள் 4 கோட்டொழுங்கில் (3 பட்டைகளுக்குள்) வாராமல், 2 கோட்டொழுங்கிலேயே (ஒரு பட்டைக்குள்ளேயே) அமைந்து, கையெழுத்திலும், அச்செழுத்திலும் ஒருங்கே அமையவேண்டும் என்ற விழைவைச் சுட்டிக்காட்டி, சீர்மை வடிவுகளுக்கு பேரா.வா.செ.கு ஓர் அடவுக் கோட்பாட்டை (design objective) முன்வைப்பார்.

அதே பொழுது, இத்தகைய கோட்பாட்டை மற்ற எழுத்து மரபுகள் பின்பற்றுகின்றனவா என்று பார்த்தால் இல்லை என்றே தோன்றுகிறது। உலகில் பெரிதும் பயன்படுவதும், சிறப்பித்துக் கூறப்படுவதுமான உரோமன் எழுத்துக்களும் இரு கோட்டொழுங்கில் அமைவதில்லை. உரோமன் கையெழுத்து வடிவங்களைக் கீழே காணும் படம்-2 ல் காணலாம். ஒரே உயரம் கொள்ளாது,
· நடுவாய் இரு கோட்டுள் பொருந்தும் எழுத்துக்கள் (காட்டு: a,c,e),
· நடுவிருந்து உயர்ந்து முக்கோட்டுள் பொருந்தும் எழுத்துக்கள் (காட்டு: b,d,t),
· நடுவிருந்து கீழ்ந்து முக்கோட்டுள் பொருந்தும் எழுத்துக்கள் (காட்டு: g,j,p),
· நடு,மேல்,கீழ் என முப்பட்டைகளில் (அதாவது 4 கோடுகளில்) பொருந்தும் எழுத்துக்கள் (காட்டு: f)

என ஒரு கலவையாய் உரோமன் எழுத்துக்கள் இருப்பதைக் காணலாம்। அதோடு, உரோமன் எழுத்துக்களில், கையால் கோர்த்தெழுதும் முறை, அச்செழுத்து முறை என இரு வடிவங்கள் உண்டு. இதை படங்கள் - 2, 3 என்பவற்றால் ஒப்பிட்டு அறியலாம். குறிப்பாக உரோமன் எழுத்துக்கள் ‘f’,’z’ ஆகியவை இருவேறாய் மாறுபட்டு எழுதப் படுவதைக் காணலாம்.




படம்-2: உரோமன் எழுத்துக்களைக் கோர்த்தெழுதும் முறையின் உயர வேறுபாடு(5)(http://www.writingwizard.longcountdown.com/files/worksheet2006422446846.html)



படம்-3: உரோமன் எழுத்துக்களை அச்சு முறையின் உயர வேறுபாடு(5)
(http://www.writingwizard.longcountdown.com/files/worksheet20064224421232.html

இவ்வாறு இரு கோடுகளுக்கும் மேற்பட்ட ஒழுங்கில், இயல்பான எழுத்துயர வேறுபாட்டில் எழுதுவது உரோமனில் மட்டுமல்லாது, மற்ற மரபுகளிலும் உண்டு. காட்டாக, அரபி எழுத்துகளின் வேறுபாடுகளைக் கீழே படம் - 4 இல் காணலாம்.



இப்படிப் பல்வேறு மரபுகளில் எழுத்துயர வேறுபாடுகள் இயல்பாய் ஏற்கப்படுகையில், தமிழி எழுத்து உயர வேறுபாடுகளைப் பெருங்குறையாய்ச் சொல்லி, புதிய அடவுக் கோட்பாட்டை முன்வைத்து, அதைச் சீரமைப்பு என்பது எங்ஙனம் சரியாகும்? எழுத்தின் உயரத்தை நறுக்குதல் எழுத்துச் சீர்மை ஆகுமோ?

(தொடரும்)

முந்தைய பகுதி : http://nayanam.blogspot.com/2010/02/1.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

எழுத்துச் சீர்திருத்தத்தின் மறுபக்கங்கள் - பகுதி 1

தமிழ் நெடுங்கணக்கின் எழுத்து வடிவங்களை,
குறிப்பாக இகர, ஈகார, உகர, ஊகார உயிர்மெய்
எழுத்துக்களின் வடிவங்களை மாற்ற வேண்டும்
என்ற முன்வைப்புக்கள் 2000மாம் ஆண்டில் இருந்து
இணையத்தில் காணப்படுகின்றன.

தமிழ் இணைய மாநாடு என்று உத்தமம் அமைப்பு
(http://infitt.org) கடந்த பல வருடங்களாக
நடத்தி வருகின்ற மாநாடுகள், எழுத்துச் சீர்திருத்தச்
சார்பு கொண்ட பொருண்மை அல்லது கருத்தியல்
கொண்ட கட்டுரைகள் பலவற்றைப் படைக்க வாய்ப்பு
ஏற்படுத்திக் கொடுத்ததன் மூலம், இந்தக் கருத்தியல்
தமிழ் இணைய உலகில் அறியப்பட்டது.

தமிழ் இணைய மாநாடுகளில் படைக்கப் பட்ட
எழுத்துச் சீர்திருத்த முன்வைப்புக் கட்டுரைகளுள்
குறிப்பிடத்தக்கன இவை:

கி.பி 2000:

1. பேராசிரியர் முனைவர் வா.செ.குழந்தைசாமி,
2. முனைவர் கொடுமுடி சண்முகன்,
3. திரு.வீ.கே.ஏரம்பமூர்த்தி,
4. திரு.ச.ஆ.கோபாலமூர்த்தி ஆகிய நால்வரின் கட்டுரைகளும்
(http://infitt.org/ti2000/papers/paperlist.pdf)
எழுத்துச் சீர்மையை முன்வைக்கின்றன.

கி.பி 2002:
திரு.சின்னத்துரை சிறீவாசு ஆக்கிய சீர்மை
முன்வைப்புக் கட்டுரை
(http://www.infitt.org/ti2002/papers/70SRIVAS.PDF)

கி.பி 2003:

1. பேராசிரியர் முனைவர் வா.செ.குழந்தைசாமி அவர்களின்
மற்றுமொரு கட்டுரை:
http://www.infitt.org/ti2003/papers/54_vckulan.pdf

2. முனைவர் கொடுமுடி சண்முகன் அவர்களின் முன்வைப்பு:
http://www.infitt.org/ti2003/papers/53_kodumu.pdf

3. திரு.சின்னத்துரை சிறீவாசு அவர்களின் கட்டுரை:
http://www.infitt.org/ti2003/papers/56_ssrivas.pdf

சீர்மையை முன்வைக்கும் இக்கட்டுரைகளைக்
கடந்த 2009ன் சூலை ஆகத்து மாதங்களில் ஆய்வு
செய்தபோது எழுத்துச் சீர்திருத்த முன்வைப்புகளில்
இருக்கின்ற "மறுக்கப்பட்ட பார்வைகள்" அணிவகுத்து
நிற்பது புலனாயின.

எழுத்துச் சீர்திருத்த முன்வைப்புகளில் இருக்கும்
மறுக்கப்பட்ட பார்வைகளையும், இம்முன்வைப்புகள்
செயலாக்கப்பட்டால் தமிழ்மொழி சந்திக்கக்கூடிய
பேரழிவினையும் இயன்றவரை அளவிட்டு, தொகுக்க
அஃது "எழுத்துச் சீர்மையின் மறுபக்கங்கள்" என்ற
கட்டுரையாய் ஆகியது.

கடந்த 19-செபுதெம்பர்-2009 அன்று, திருச்சிராப்பள்ளி
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்,
"தமிழ் மேம்பாடு, கற்பித்தலில் எளிமை, சீர்மை, விரைவு"
என்ற தலைப்பில், பாரதிதாசன் பல்கலைக்கழகமும்,
தமிழ் இணையப் பல்கலைக் கழகமும் இணைந்து நடத்திய
கருத்தரங்கில் பங்குகொண்டு இக்கட்டுரையை அங்கு
படைக்க வாய்ப்பமைந்தது.

அங்கு பேராசிரியர்களும், துணைவேந்தர்களும்,
மாணவர்களும் இருந்த மன்றத்தில்
தமிழ் எழுத்துக்களைச் சீர்திருத்தம் செய்யவேண்டும்
என்ற கருத்தினை மீள்பார்வை பார்க்கச் செய்வதாய்
இக்கட்டுரை அமைந்தது.

அந்தக் கட்டுரையை இங்கே அப்படியே பதிகிறேன்.
தமிழ் இணைய உலகினர்க்கு எழுத்துச் சீர்திருத்தம்
பற்றிய கருத்தியலை மீள்பார்வை பார்க்கவும்
மறுக்கவும் இது உதவுமாயின் பெரிதும் மகிழ்வேன்.

இக்கட்டுரை தொடர்பதிவாக,
சிலபகுதிகளாகத் தொடரும்.

இது தொடர்பில் படிக்க வேண்டிய பிறரின் கட்டுரைகள்:

திரு.பெரி.சந்திரசேகரன் அவர்களின் கட்டுரை
http://perichandra.wordpress.com/2010/01/05/tamil-script-reform-its-vacuity-next-to-the-chinese-script/

முனைவர் மு.இளங்கோவன் அவர்களின் கட்டுரை:
http://muelangovan.blogspot.com/2010/01/blog-post_31.html

பேராசிரியர் செல்வா அவர்களின் கட்டுரை:
http://tamilveli.blogspot.com/2008/12/blog-post.html

இனி கட்டுரை அடுத்த பகுதியில்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

சோதிப்பு - பிப்பிரவரி 2010

வெறுஞ் சோதனைதான் - கொஞ்சகாலம் பதிவு எழுதாமல் விட்டால் திருப்பி எழுதும்போது எல்லாம் புதிதாகத் தெரிகிறது.

Tuesday, December 30, 2008

புலம்பெயர்வு இலக்கியங்களில் சிங்கையில் தோன்றிய காப்பியம் 'சங்கமம்'.

சொல் நேர்மை, பொருள் நேர்மை,
மொழி நேர்மை, குமுக நேர்மை,
என்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல்,
இழிவான படைப்புகளை எழுதித் தள்ளும்
எழுத்தாளர்களே அதிகமாக இருக்கின்ற
தமிழ்ச் சூழலிலே, பிறமொழி முக்கால்
தமிழ் மொழி கால் என்ற அளவிலே
அருவெறுக்கத்தக்க நடையில் வெளிவரும்
படைப்புகளுக்கு இடையே,
சிறந்த பாக்களால் சிங்கைக் கவிஞர்
பாத்தென்றல் முருகடியான்
(pathenralmurugadiyan.blogspot.com)
அவர்களால் யாக்கப்பட்ட
செந்தமிழ்க் காப்பியமான சங்கமத்தைப்
படித்த போது எல்லையில்லா
மகிழ்ச்சி அடைந்தேன்.

புலம்பெயர் தமிழரின் இலக்கியங்களில்
ஒரு சிறந்த காப்பியம் உருவாகியிருப்பது
தமிழ்க் குமுகத்திற்கு
நம்பிக்கையையும் உணர்வையும்
அளிப்பதாக இருக்கிறது.

தமிழ்க்குடியின் புலம்பெயர் வாழ்வு
பல்வகையது; அதிலே சிங்கப்பூருக்குப்
புலம்பெயர்ந்த தமிழ்க்குடிகளின்
அமைவை, ஒரு எளிய தமிழனின்
இன்னல் மிகுந்த
வாழ்வை கருவாகக் கொண்டு
காப்பியமாக யாத்திருக்கிறார் பாத்தென்றல்.

சிங்கப்பூரில் தமிழர் வாழ்வியலை அறிய வேண்டுமா?
"இந்தாப்பிடி சங்கமம் என்ற இந்த நூலை" என்று
தமிழ் படிக்கத் தெரிந்த எந்தத் தமிழரிடமும் எடுத்துக்
கொடுத்து விடலாம். வரலாறு, அரசியல், வாழ்வியல்
என்று கோர்க்கப் பட்ட இந்த நூல் சிங்கைத் தமிழர்
வளர்த்த தமிழுக்கு மணிமகுடம்.

மாபெரும் தமிழ்க்காப்பியமான சிலப்பதிகாரம்
எங்கு தொடங்கியதோ அங்கேயே சங்கமமும் தொடங்கி,
மதுரைப் பக்கம் போகாமல் மலாயா சிங்கப்பூர் பக்கம்
வந்துவிடுகிறது. ஆம் - புகாரில் தொடங்கி, சிங்கையை
நடுவமாக வைத்து மலாயாவையும் அணைத்து எழுதப்
பட்டிருக்கிறது.

செல்வமும் கல்வியும் சிறிதாகவேக் கொண்டு ஆனால்
உணர்வுகளிலும் பழைமைகளிலும் ஊறிய பெற்றோரையும்
உற்றாரையும் கொண்ட எளியனின் பிழைப்பு தேடிப் புலம்
பெயர்ந்த வாழ்வில் களிப்பும் துயரும் மாறி மாறி வந்து
இறுதியில் படிப்பவரை ஆழ்ந்த சிந்தனைக்கும் புரிதலுக்கும்
தள்ளிவிடுவது இக்காப்பியத்தின் வெற்றி!

எளிய மனிதனின் வாழ்க்கையைப் பற்றிய காப்பியம்
என்பதால் பல முறை காப்பிய ஆசிரியரைப்
பாராட்டத் தோன்றுகிறது. எளியரைப் பாடும்
இந்நூலால் பெருவாரியான
மக்களின் வாழ்வியலை எளிதாகப் புரிய வைக்க முடிகிறது.
புலம் பெயர்ந்த குமுகத்தின் போக்கைப் பெரிதும்
புரிந்து கொள்ள முடிகிறது.

சிறந்த தமிழ் தேனருவியாக காப்பியம் முழுமையும்
பல்வேறு பாக்களாக பல்வேறு பாவகைகளாக சீராக
ஓடி இன்பம் சேர்க்கிறது. கவிஞரின் ஆழ்ந்த நெடுங்கால
பாப்புலமையை எண்ணி வியக்க வைக்கிறது ஒவ்வொரு
பாட்டும்.

சிங்கை வரலாறு, புகார் சிறப்பு, மலாயாக் குறிப்புகள்,
சிங்கை அரசியல், தமிழ் நாட்டின் குமுக மாற்றங்கள்,
சிங்கையில் தமிழர்கள் குமுகமாக ஆகித் தமிழ்
வளர்த்தது, தமிழ் விழாக்கள் செய்தது,
சிங்கைத் தமிழரின் ஒற்றுமை வேற்றுமைகள்,
பிற இன மக்களோடு ஒப்புவித்து
தம் மக்கள் பெற வேண்டிய திறன்கள்,
சீன மலாய் மக்களின்
பழக்க வழக்கங்கள், சிங்கை வளர்ச்சியில்
தமிழர்களின் பங்களிப்பு, அளித்த பங்கிற்கேற்ப அளித்த
தமிழர்கள் பெற்றதன் அளவீடு, சிங்கையில்
தமிழ் வளர்த்த பெரியார்களின் அரும்பணிகள்,
சிங்கையைக் கட்டி வளர்த்த பெரியார்கள்,
அவர்தம் சீரிய தொண்டு,
சிங்கையின் சமய நல்லிணக்கமும்,
சட்ட/காவற் சிறப்பு, தமிழ் மொழியின்
ஏற்றமும் தாழ்வும், தத்துவம், ஆன்மீகம்,
தமிழ்ச் சமய நெறிகள், என்ற இவற்றோடு
தமிழனாய்ப் பிறந்து தமிழனாகவே வாழ்ந்த
ஒரு தமிழனின் தனிமனித வாழ்க்கையையும் அவன்
தமிழ்க் குமுகத்தோடு ஆற்றிய பணிகளையும், அடைந்த
சரவல்களையும் வாழ்க்கையாக கதையாகக் குழைத்துக்
கொடுத்துள்ள பாங்கு மிகப் பாராட்டத் தக்கது.

தமிழவேள் கோ.சாரங்கபாணியார் தமிழ் மக்களை
அரவணைத்து ஆற்றிய தமிழ்த் தொண்டோடு
அவர் ஆற்றிய பாங்கு, புலம் பெயர்ந்த தமிழ் மக்கள்
ஊன்றிக் கற்க வேண்டிய ஒன்று.
அதற்கு இந்நூல் பெரும்
உதவியாக இருக்கும். அது தமிழ்ச் சங்கங்கள்
என்ற பெயரில் தமிழ்ப்பணிகள் செய்ய முனையும்
புலம் பெயர்ந்து வாழ்வோர்க்கு கூடுதல்
கல்வியாக இருக்கும்.

காப்பியத்தின் பகுதி-4 பகுதி-5 (இயற்கும்மி, ஒயிற்கும்மி)
சிங்கையில் தமிழையும் குமுகத்தையும்
வளர்த்த பாங்கினை அழகுறச் சொல்கிறது.
பிற பகுதிகளும் இயம்புகின்றன.
பாக்களின் சந்தங்கள் மதி மயக்க வைக்கின்றன.

"அள்ளிக் கொடுத்தனர் பள்ளிக்கென மக்கள்,
ஆர்வம் மிகுந்தது கல்விக்கென
அமுதத் தமிழ் அறிவைப் பெற
குமுகக் குரல் குரவையிடத்
துள்ளிக் குதித்தனர் தொல்தமிழால்"

தமிழரைப் பிடித்த பெருஞ்சழக்கான
சாதீயமும் புலம் பெயர்ந்த சான்றுகளும் நூலில்
மிகச்சரியாகப் பதிந்திருக்கிறது. கீழே ஒரு சான்று:

"பாழை விளைத்திட்ட சாதியைப் பாய்மரக் கப்பலேற்றிக்
கீழை திசைக்கெலாம் கொண்டுவந்தாரந்தக் கீழ்மையாலே
வாழை மரத்துக்குத் தாரீன்ற காய்களே கூற்றமாப் போல்
மோழை மனங்களும் ஏழை நிறங்களும் மூண்டதிங்கே!
"
(பகுதி-9)

சுவையான காதல் பாட்டுகள், வாழ்க்கை பாட்டுகளுக்கிடையே
தமிழுக்கு ஏற்பட்ட சோதனைகளை அடுக்கடுக்காய்
செருகிய பாங்கு கவிஞரின் ஆழ்ந்த புலமைக்கு
எடுத்துக் காட்டு மட்டுமல்ல, கல்வி கற்ற நேர்மையான
தமிழருக்கு இருக்கும் நேர்மையான எதிர்காலக் கவலையும்
அக்கறையும் ஆம்.

"தென் புலத்தாரைப் பெண்கள்
திருடராய்க் குரங்காய்த் தீய
வன்புலனரக்கர் போன்ற..."

"மறைகளை ஆற்றில் போட்டோம்
மண்டிய சாதித் தீயின்
குறைகளைக் களைய மாட்டோம்
*குலத்தையே குலத்தார் வெட்டும்*
பறைகளைத் தட்டிக் கொட்டிப்
பார்ப்பனர் வேதங் கேட்டோம்
உறைகளில் வைத்த வாள் போல்
உறங்கினோம் தமிழா மீட்டோம்?"

ஆழ்ந்த குமுக அக்கறையில் காப்பியத்தின்
வரிகளில் பாத்தென்றல் புயலை எழுப்புகிறார்.

"சீனரின் கோவில் சென்றால்
சீனமே வழிபாட்டோசை
ஆனதோ அரபி மண்ணில்
அதுகேட்கும் பள்ளிவாசல்
ஊனமுற்றழிந்த பாடைக்கு
உயிர்தர உழைக்குஞ் சூதர்
ஆணையில் அடங்கும் நம்மை
அடிமையாய் நினைக்கின்றாரே!.."

பகுதி-17ல் கவிஞர் புயலாகச் சுழல்கிறார். தெறிக்கிறது
அவரின் வேதனைகள்.

தமிழ்நாட்டிலே கோயில்களில் தமிழ் இல்லை;
அதற்குக் காரணமாக திராவிட தமிழ் இயக்கங்கள்
எத்தனைக் காரணங்கள் சொன்னாலும், அத்தனைக்
காரணங்களையும் தமிழ் மக்கள்
புலம் பெயர்ந்து போகையிலும் கட்டித் தூக்கிப்
போகவேண்டியதில்லையே? என்ற வினாவை இவர்தம்
கவிதை எழுப்புகிறது.

ஆம் - சிங்கையிலே 1824ல் சுமார் 500, 600 தமிழர்களே
இருந்துள்ளனர் நூலின் படி. 1860ல் சுமார் 10000 தமிழர்களே
இருந்துள்ளனர்.

இவர்கள்தான் பெருகி இன்றைக்கு
சில இலக்கங்கள் அளவில் இருக்கிறார்கள்.
தமிழ்ப் பள்ளிகளும் கோவில்களும் சமைத்த
இவர்கள் ஏன் சாதிக்குள் அமிழ வேண்டும்?

இவர்கள் வேர்வை சிந்தி உழைத்து ஏன்
நஞ்சான சமற்கிருதத்தைக் கோயிலுக்குள்
கூட்டிப் போக வேண்டும்?

ஒரு புதுக் குமுகத்தைக் கட்டி எழுப்பிய தமிழர்களின்
உழைப்போடும் வேர்வையோடும் முக்கியமான மடமையும்
சேர்ந்து கொண்டதைக் காப்பியம் பண்புடன் விளக்குகிறது.
இதற்கு முற்றும் தமிழ் மக்களே காரணம் என்று தெள்ளென
விளங்க வைக்கிறது.

இப்படிக் கட்டப்படும் புதுத் தமிழ்க் குமுகங்கள் எப்படி
எதிர்காலத்தில் சரவல் படும் என்பதனையும் சிங்கையில்
தமிழர் வரலாறு கூறுகிறது.

தமிழர் விழாக்களுக்கான விடுமுறைகள் என்றால்
அது தீபாவளிக்கு ஒருநாளும் விசாக நாள் என்ற நாளுக்கும்
ஆகிப் போனதை காப்பியம் காட்டுகிறது. விசாக நாள்
என்றால் தமிழர் விழாவா என்பதனை தமிழர்கள்தான்
சிந்தித்து விடை காண வேண்டும்!

"பாதகந் தமிழுக்கென்றால் பல்லிளித்து இருந்திடாதே!
நீ தவம் செய்க நாளை நிமிர்ந்தெழும் தமிழர் வாழ்வே!"

என்ற இவ்வரிகளும் இன்ன பிற வரிகளிலும் பாவேந்தரே
நிமிர்ந்து நிற்கிறார்!

"உலவுந்தன் மதத்தை மட்டும் உயிராக நினைப்பாருண்டு
கலகத்தார் இவரே தங்கள் கட்சிக்கே மேன்மை செய்வார்"
என்ற இவ்வடிகள்,

"அவரவர் தத்தம் மதங்களே அமைவதாக
அரற்றி மலைந்தனர்..." என்று
மாணிக்கவாசகப் பெருமான் அருளிய
அடிகளை ஒட்டி வருகின்றன.

காப்பியத்தில் காதலைப் பாடும்போதும்,
கவலையைப் பாடும் போதும், துயரைப் பாடும் போதும்,
ஏற்றத்தைப் பாடும் போதும்,
தெருவீதியைப் பாடும் போதும் எங்கும் பாத்தென்றலொடு
தமிழர் கவலையும் அவர்தம் மொழிக் கவலையும்
சூறாவளியாய் சுழன்று கொண்டே இருக்கின்றன.

தமிழ் மொழிபால் தூய அக்கறை கொண்ட
தூய தமிழ்ச் சிந்தை பாத்தென்றலுடையது.

"தெருப்பக்கம் குரைக்கின்ற நாயாகப் பேயாக
திரிகிறோம் எச்சில் உண்டு!
தென்னாட்டுச் சிவன் தந்த தென்மொழி வழிபாடு
திருக்கோவில் வாழவிலையே!"

"தேய்பிறையாக்குவார் தேன்மொழியை - மொழித்
திருடர்கள் மாற்றிடார் தம் வழியை"

"சாதிக் கலப்பை வெறுப்பவர்கள் - மொழி
பாதிக்குப் பாதிக் கலப்பவர்கள்..."

தென்றலா கவிஞர்? என என்னையே கேட்டுக் கொள்கிறேன்.

மறைமலையாரும் நீலாம்பிகை அம்மையாரும்
தேவநேயரும் சித்திரனாரும் பாவேந்தரும் பாரதியாரும்
அண்ணாவும் திரு.வி.கவும், பிற பெரியார்களும்
நீங்காமல் நிறைந்திருக்கிறார்கள் இந்நூலில்.
நாயன்மார்களும் அறவோர்களும் தமிழ்நெறியும்
சிறப்பிடம் பெருகிறது நூலில்.

"அருட்கவி அருணகிரியார்
அருந்தமிழ்க் குமர குருபரர்
மருட்புவி மயக்கந் தீர்த்த
மாமுனி தாயுமானார்...."

பகுதி-40ல் கற்றுணை பூட்டிய பெருமான்
கடலில் மிதந்ததை ஏத்தி செய்திருக்கும் வாதம் அருமை.

சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோ அடிகளார்
ஒரு சமணர் என்று விளம்பரம் செய்வோரை
கண்டிக்கிறார் சங்கமக் காப்பிய
ஆசிரியர். இதற்காகவே அவரைப் பல முறை
பாராட்ட வேண்டும்.

"சிலப்பதி காரத் துக்குள்
சென்றவர் பலபேர்! அந்த
அளப்பரும் அமுதம் உண்ட
அறிஞரோ சில பேர்! இன்னும்
களப்பிரர் பின்னே செல்லும்
கயமைகள் கண்கள் மூடிக்
குழப்புவார் அதையே நம்பிக்
குலக்குணம் விட்டார் கோடி!"

காப்பியமெங்கும் தமிழர்களிலே இருக்கும்
சிறுமதியாளர் வளைந்து நெளிந்து நத்திப் பிழைத்து,
எப்படித் தமிழுக்கும் இனத்திற்கும்
தீங்கு விளைவிக்கிறார்கள் என்பதனை ஆங்காங்கு
பல காட்டுகளோடு விவரிக்கிறார்.
எல்லா தமிழ் நிலங்களுக்கும் இது மிகப் பொருந்தும்.

"நல்ல தமிழில் பெயரிருந்தாலும்
கொல்ல நினைப்பது உன் குலத்தானே"

"அன்று வந்தவர் அருந்தமிழ் காத்தனர்
இன்று வந்து அவர் இனம் மொழி கொல்கின்றனர்"

"சீனர்களின் கடை முகப்பில் செழுந்தமிழும் எழுதுகிறார்
மானமில்லாத் தமிழர் பலர் மருந்தளவும் தமிழ் எழுதார்"

காப்பிய நாயகனான செந்தில் என்ற தமிழுணர்வு குன்றாத
ஒரு எளிய தமிழனின் வாழ்வு இன்னல் மேல் இன்னலுறும்;
வளர்ச்சியும் தளர்ச்சியும் காணும்; அவன் சிங்கை வருவது
முதல் மகிழ்ச்சிகளையும் துயரங்களையும் காட்டிக் காட்டிக்
கடைசியில் கண்ணையும் மூடிவைக்கும் காப்பியத்தில் தொட்ட
இடமெல்லாம் தென்றலும் புயலுமாய் தமிழ் நடம் புரிகிறது.

மொழிப்பற்று உடையவருக்குத்தான் சிறந்த நாட்டுப்பற்று
இருக்கும். தமிழ் மொழிப் பற்றோடு சிங்கப்பூர் என்ற தனது
தாய்நாட்டின் மீதும், தாய்த்தமிழ் நாட்டின் மீதும் கவிஞர்
பேரன்பு பொழிந்து உறவுகள், காதல், மணம், படிப்பு,
வேலை, மகிழ்ச்சி, துயர், தொண்டு, அறம்,
தத்துவம், இறை, தமிழ், அரசு, நாடு, இனம்,
சட்டம் என்ற பலவற்றையும் பாடி, கீழ்பட்டிருக்கும்
உலக வாழ் தமிழ்க் குமுகத்தை நோக்கி அடிப்படை
வினாக்களை வைத்துக் குமுறுகிறார் இறுதியில்.

"சீரிலங்கை நாட்டில் எங்கள்
செந்தமிழர் கொல்லப் பட்டால்
ஓரிரங்கல் உரை ஏன் இல்லை?...."

"ஒரு பத்துக் கோடி மக்கள்
உலகத்தில் இருந்தும் கூட
ஒரு பற்றும் இல்லார் போன்றும்
உணர்வற்றும் எழுச்சியற்றும்
மறுவுற்ற மந்தையாக மாய்வதுமேன்...?"

தமிழறியாரும், தரங்கெட்ட தமிழரும் குமுகத்தின்
முன்னணியில் இருந்தால் அந்தக் குமுகத்தின்
மொழியுணர்வும், இனவுணர்வும் நீர்த்துப் போகும்;
அதுவே தமிழ்க்குடிகளுக்கு உலகெங்கும் நடந்து
வருகிறது. காப்பிய நாயகனோடு கவலையோடும்
இந்தக் கவலையோடும் காப்பியம் நிறைவுறுகிறது.

ஒவ்வொரு தமிழரும் இந்த உயர்ந்த படைப்பினைப்
படிக்க வேண்டும்; தமிழ் உணர்வூட்டும் இந்நூலை
பலருக்கும் அளிக்கவும் வேண்டும். புலம் பெயர்ந்த
மக்களின் நூலகங்கள் இதனை ஏற்றி வைக்க வேண்டும்.

பொத்தகத்தில் காணும் நூல் கிடைக்குமிடங்கள்:
தென்றல் பதிப்பகம், சிங்கப்பூர். தொ.பேசி 68996319
தமிழ்நிலம், சென்னை. தொ.பேசி 94444 40449
திரு.அருகோ, சென்னை. தொ.பேசி 2472 1009

அன்புடன்
நாக.இளங்கோவன்

Sunday, November 23, 2008

இந்திய விடுதலைக்கு முன்னரும் விடுதலைக்குப் பின்னரும் தமிழின் நிலை - பகுதி #3/3)

நாம் செய்ய வேண்டியதென்ன?

நாமெல்லாம் எழுந்து போய் இரயில் மறியல்
செய்யப் போகிறோமா?
நாமெல்லாம் பட்டினிப் போராட்டம்
செய்ய வேண்டுமா?
நாமெல்லாம் தார்ச்சட்டியைத் தூக்கிக் கொண்டு
தெருத்தெருவாகச் சென்று தமிழ் அல்லாதவைகளை
அழிக்க வேண்டுமா?

அதெல்லாம் எதுவும் தேவையில்லை.

1) பிழைப்பிற்காக கற்ற கல்வி ஆங்கிலம்.
பிழைப்பதும் ஆங்கிலத்தால்தான்.
ஆனால் அந்த ஆங்கிலத்தை அலுவலகத்தோடு
வைத்துக் கொள்ள நம்மால் முடியாதா?

2) அலுவகம் சார்ந்த பணிகளில் தமிழுக்கு
எதிர்காலத்தில் இடம் முழுக்க இருக்கும் என்றாலும்,
தற்காலத்திலே முடியாத சூழல் தனியார் துறைகளிலும்
வெளிநாடுகளிலும் இருந்தாலும் தனிப்பட்ட
எழுத்துக்களை தமிழில் எழுத முடியாதா?

3) நமது நண்பர்கள், உறவுகளிடம்
தமிழில் பேச முடியாதா?

4) நம்மால் செய்ய முடிந்த இவற்றை நாம்
செய்யாததற்கு அரசியல்வாதிகளைத் திட்டித்
தீர்க்க வேண்டுமா? நமக்கு நேர்மை வேண்டாமா?

5) மிடையங்கள் தமிழைக் கொலை செய்கின்றன
என்பதால் நாமும் கொலை செய்ய வேண்டுமா?

6) எந்தத் தொலைக்காட்சிகளோ கேடு கெட்ட
தமிழைப் பேசினால் நமக்கென்ன?
நாம் என்ன அந்தத் தொலைக்காட்சியோடு
திரும்பப் பேசுகிறோமா? இல்லையே!!
அப்புறம் ஏன் அதைத் தடைக்கல்லாக
எடுத்துக் கொள்ள வேண்டும்?

7) எழுத்தாளர்கள் எல்லாம் செய்யும்
கலப்புத் தவறுகளை, கவிஞர்கள் செய்யும் தவறுகளை
நாமும் செய்ய வேண்டிய அவசியமில்லை.

8) தமிழ் பேச சில பேருக்கு நாணமாக இருக்கிறது
இன்றையச் சூழலில். அந்த நாணத்தை அவர்கள் போக்கிக் கொள்வது எளிது.

9) கலப்புத் தமிழுக்கு ஞாயம்
கற்பிக்கிற ஆள்களையும்,
ஆங்கிலம் சரளமாகப் பேசுபவர்களையும்
நாம் பார்க்கத்தான் செய்கிறோம்.

அவர்களிடம் சேக்சுபியரைக் கொண்டு கொடுங்கள்.
தாகூரைக் கொண்டுபோய்க் கொடுங்கள்.
தவிப்பார்கள் படிப்பதற்கே!

அவ்வளவு ஏன் கணித்துறையிலே இருக்கிற
சில பகட்டுப் பேர்வழிகளிடம் கொண்டு போய்
சி.யே.டேட் நூலைக் கொடுங்கள்!
பூச்சின் நூலைக் கொடுங்கள்!
எத்தனை பேரால் வேகமாகப் படிக்க முடிகிறது
பாருங்கள்? வேடிக்கையாக இருக்கும்.

ஆங்கிலத்திலும் அடிப்படைப் புலமை இல்லாமல்,
தமிழிலும் அடிப்படை இல்லாமல்
ஒரு வித பித்துக்குளித்தனத்தில்
இந்தக் குமுகம் போய்க் கொண்டிருக்கிறது.

நாம் மாறுவதற்கும், உணருவதற்கும்
தக்க வேளை தற்காலமே!

அதைத்தான் போரற்ற குமுக நிலையும்,
முன்னேறிய கல்வி நிலையும் காட்டுகின்றன.

"தமிழ் என்ன செய்தது என்று கேட்காதே!
தமிழுக்கு என்ன செய்தோம்? என்று எண்ணிப்பார்"!

விடையாக, நல்ல தமிழ் எழுதினேன்
என்று உள்ளம் சொல்லுமானால்
அதுவே உயர்ந்த தமிழ்ப்பணி.
அதுவே தேவையான பணியும் கூட.

நிறைவு.
நன்றி: பண்புடன் விழாக்குழுவினர் மற்றும் நண்பர் ஆசிப்

அன்புடன்
நாக.இளங்கோவன்

Saturday, November 22, 2008

இந்திய விடுதலைக்கு முன்னரும் விடுதலைக்குப் பின்னரும் தமிழின் நிலை - பகுதி # 2


2) அடுத்ததாக விடுதலைக்கு முன்னரும் பின்னரும் கல்வியின் நிலையைக் காண்போம். கல்வி என்ற வகையிலே, கோணத்திலே பார்த்தோமானால், 1906-07ன் கணக்குப் படி இந்தியாவில் படித்தவர்கள் 2.2% பேர். ஆதாரம் நீயூயார்க் டைம்சு நாளேடு.

http://query.nytimes.com/gst/abstract.html?res=9506E1DD1030E132A2575BC2A9629C946097D6CF

http://query.nytimes.com/mem/archive-free/pdf?_r=1&res=9506E1DD1030E132A2575BC2A9629C946097D6CF&oref=slogin

இந்திய சராசரி புள்ளி விவரத்தையே தமிழகத்துக்கும் ஒப்புக்கொள்ளலாம்.

2001ல் எடுக்கப் பட்ட புள்ளிக் கணக்குப் படி தமிழகத்திலே 76% பேர்.
அது தற்போதைக்கு 80% ஆகியிருக்கும்.

ஆக சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்னால் 2.2% ஆகவும்
தற்போது 80+ விழு. ஆகவும் இருக்கும் இந்த நிலை மிகவும்
வியத்தகு நிலை. (படம் - 2).


மொத்தம் படித்தவர்களில் 1900த்தில் 3%தான் பெண்கள். ஆனால்
இன்றைக்கெல்லாம் பள்ளித் தேர்வுகளில் பெண்களே அதிகம் தேர்வாகிறார்கள்.

1300க்கும் 1947க்கும் இடைப்பட்ட 650 ஆண்டு காலம்
மிகக் கொடுமையானது.

8 அயல்நாடுகள் அயல்மொழிகள் நம்மைத் தாக்கியிருக்கின்றன.
இப்படி அமைதியில்லா அந்தக் காலங்களில்தான்
நிலப் பண்னைத்துவம் என்று சொல்லப் படுகின்ற கிழாரியம் (feudalism),
வருணப் பிரிவினை செய்யும் சாதீயம் என்ற இரண்டும் இராகுவும் கேதுவுமாக தமிழ் நிலத்தையும் தமிழையும் இழி நிலைக்குத் தள்ளின.

ஆகவே, அந்த 2.2% விழுக்காடு கல்வி என்பது,
சாதிச் செழிப்பின், செல்வச் செழிப்பின்
கல்விச் செழிப்புதானே ஒழிய
குமுகச் செழிப்பின் வெளிப்பாடு அல்ல.

தற்போது பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டு விட்டபோதிலும்,
பல குமுகத் தடைகள் உடைபட்டுப் போய், பீறிட்டுக் கிளம்பும்
மனித சக்தியின் வெளிப்பாடாய்த்தான் இன்றைய 80+% கல்வி நிலை
நமக்குத் தெரிகிறது.

2.2% படித்தவர்கள் இருந்த சூழலை விட, 80+% படித்தவர்கள்
இருக்கையில் மொழி வளம் என்பது சிறப்புற்றிருக்கத்தானே
வேண்டும்! படிப்பிற்கு தகுதி அதுவாகத்தானே இருக்க முடியும்?
படித்த குமுகாயத்திற்கு தாய்மொழியை செழிக்கச் செய்வதில்தான்
மதிப்பும், பெருமையும் கிடைக்கும், நிலைக்கும்.
(2.2% இருந்த பொழுதே நாம் 30-40 விழுக்காடு கலந்தோம்; இப்பொழுது
80% இருக்கையில் எங்களால் அதை விட அதிகமாகக் கலக்க முடியும் என்ற நிலை இருக்கிறதா? அல்லது தற்போது நிறைய பேர் பண்பட்டிருக்கிறோம்; ஆகையால் கலப்பில் இருந்து மீண்டு விட்டோம் என்ற நிலை இருக்கிறதா என்பதை உங்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன்.

3) மூன்றாவதாக, விடுதலைக்கு முன்னரும் பின்னரும்
மொழி நிலையைக் காண்போம்.

1714ல் அச்சில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் நூல் எனப்படும்
கிறித்துவ வேத நூல் இப்படித்தான் ஆரம்பிக்கிறது:

"சுதனாகிய சறுவேசுரனாயிருக்கிற ஏசுக்கிறீஷ்த்து
நாதரானவர் இந்தப் பூலோகத்திலே மனுஷனாய்ப் பிறந்த
விசேஷங்களையும் போதிவிச்ச ஞான உபதேசங்களையும்
செய்த அற்புதங்களையும் மனுஷருக்கு வேண்டி பாடுபட்டு
எல்லாரையும் மூண்டு ரெஷ்சித்தவத்த வானங்களையும்
உயிரோடே எழுந்திருந்து பரலோகத்திலே மகிமையாக
ஏறினத்தையும் அவருடைய சீஷர்களாகிற அப்போஷ்த்தல மார்கள் லோகமெங்கும்போய் இப்படிக்கொத்தச் சுவிவிசேஷங்களைச் சகலச்சனங்களுக்கும் பிறசங்கம் பண்ணினதையும் வெளிப்படுத்துகிறபுது
ஏற்பாட்டினுடைய முதலாம் வகுப்பாகிற அஞ்சுவேதபொஷ்தகம்
"
(இந்தப் பக்கத்தை வெளியிட்டிருக்கும் திரு.பொள்ளாச்சி நசன் - thamizham.net அவர்களுக்கு நன்றி)

இதில் 10 வரிகளிலே 13 கலப்புச் சொற்கள்.
13/42 சொற்கள் கலப்பு: அதாவது 30%

1924ல் எழுதப்பட்ட வேதாந்த தீபிகை என்ற நூலிலே ஒரு
16வரிகளில் 31 கலப்புச் சொற்கள் இருக்கின்றன.
அதாவது, 32/72 சொற்கள் கலப்பு. இது 44.5% கலப்பு ஆகும்.

(இந்தப் பக்கத்தை வெளியிட்டிருக்கும் திரு.பொள்ளாச்சி நசன் - thamizham.net அவர்களுக்கு நன்றி)

இந்த நூல்கள் மணிப் பிரவாளத்திலே எழுதப் பட்ட நூல்கள் அல்ல.
தமிழிலே எழுதப் பட்ட நூல்கள். மணிப்பிரவாள நூல்கள் என்றால்
இன்னும் கொடுமை - ஏறத்தாழ 70 விழுக்காடு கலப்பு.

தமிழும் சமற்கிருதமும் கலந்து எழுதுவதே உயர்ந்த செயல்
என்ற போக்கு அந்தக் கொடுங்காலத்தில் ஏற்பட்டது.
சமற்கிருத இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு
தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளை எல்லாம்
சமற்கிருதம் கலந்து எழுதுவதே உயர்ந்த படிப்புக்கு அடையாளம்
என்ற நிலை ஏற்பட்டிருந்தது. அதில் முன்னோடியாக இருந்தவர்கள்
நம்பூதிரிகள். அவர்களின் இந்தத் தீச்செயலுக்கு இரையானதுதான்
அன்றைய தமிழ் நாட்டின் மூன்றில் ஒரு பகுதியான சேரநாடென்ற
இன்றைய கேரளம்.

மொழிக் கலப்பால் தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும்
ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக ஆகப்பெரிய இழப்பாக
வரலாறு வரைந்து வைத்திருப்பதெல்லாம் இந்த மலைநாடு
அந்நியமாகப் போய், ஏறத்தாழ எதிரியாகவும் போனதைத்தான்.

1440ல்தான் அவர்களின் முதல் இலக்கிய நூலான இலீலா திலகம்
வெளிவந்தது.

குறிப்பாக 1800களில் 1900களில் தமிழில் பேசுவது
நாகரிகக் குறைவாகவும், கீழ்ச்சாதியினரின் பேச்சாகவும்
கல்லாதவரின் மொழியாகவும் ஆக்கப் பட்டது.

சங்ககாலத்திலே கலப்பற்ற தூயதமிழ் இருந்த நாட்டிலே,
அதேமொழி கீழ்மொழியாக ஆக்கப் பட்ட கொடுமையை
நாம் உணர்ந்து கொள்ள நிறையவே இருக்கிறது.


மொழி மாறினால் முகவரி மாறிவிடும்! என்பதற்கு
கண்ணுக்கு முன்னே அங்கை நெல்லியாக கேரளம்
இருந்து கொண்டிருக்கையிலே, நாம் மேலும் மொழிக்கலப்பைச்
செய்வது படித்தவர்களின் செயலாக இருக்க முடியாது.

கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 80+% ஆகியிருக்கையில்
எழுத்தின் நிலை எப்படியுள்ளது. படித்தவர்கள் நேசிக்கும்
எழுத்தாளர் சுசாதாவின் எழுத்தில் மொழிக்கலப்பு எப்பொழுதும்
விரவியிருக்கும்.

1976ல் சுசாதாவின் கட்டுரை ஒன்றில் கமலகாசன் பற்றிய அவரின் எழுத்தைப் படித்த போது அதில் 24% விழுக்காடு ஆங்கில, சமக்கக் கலப்பு இருக்கிறதையும் காணமுடிகிறது. இதை விட அவரின் சில கதைகளில் ஆங்கிலம் கரை புரண்டு கலக்கும்.

விடுதலைக்கு முந்தைய விவிலிய, வேதாந்த நூல்களில் இரண்டு
மொழிகள் கலந்து கிடந்தன என்றால் விடுதலைக்குப் பின்னரான
தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்களில் மும்மொழிக் கலப்பு
இருக்கிறது. தமிழ் எழுத்துக்களோடு, ஆங்கிலத்தை ஆங்கிலமாகவும்
வடமொழியை வடமொழியாகவும் கலக்கிற பாங்கினை அவர்
கடை பிடித்தார்.

இரு மொழிக் கலப்பு மும்மொழிக் கலப்பாக விடுதலைக்குப் பின்னர்
ஆகியிருக்கிறது என்பது உண்மை.


(சுசாதாவின் 76ஆம் ஆண்டு எழுத்து. ஆங்கிலமும், வடமொழியும்,
தமிழும் கலக்கப்படுவதைக் காண்க. சுசாதா மட்டுமல்ல
பலரும் இப்படித்தான்)

எழுத்தை ஆளும் எழுத்தாளர்கள், எழுத்தை ஆளாமல்
கருத்தை மற்றும் ஆண்டால் போதும் என்ற மாயையில்
விழுந்ததோடு அவர்களை வாசிக்கும் மற்றும் நேசிக்கும்
மக்களையும் அந்த மாயையில் சிக்க வைத்தது ஒரு
வருத்தமான உண்மை.

விடுதலைக்கு முன்னரும் பின்னருமான தமிழ்ச் சூழலை
குமுக அமைதி, கல்வி நிலை, மொழி நிலை என்ற மூன்று
தளங்களில் பார்க்கின்ற போது நமக்குக் காண கிடைப்பதெல்லாம்
"2300 ஆண்டுகள் வரலாற்றில் தமிழகம் சிறந்திருந்த காலத்தில்
இருந்ததைப் போன்ற ஒரு குமுக அமைதியை தற்போது
தமிழ்க் குமுகம் பெற்றிருக்கிறது. கல்வி நிலையில் மிகுந்த
ஏற்றம் பெற்றிருக்கிறது. கட்டற்ற கல்வி மற்றும் எழுத்து
சுதந்திரத்தை நாம் பெற்றிருக்கிறோம். ஆனால், மொழிச்
செழுமை, வளமை, தூய்மை ஆகியவற்றை இன்னும் தேடிக்
கொண்டே இருக்கிறோம்; சில நேரங்களில் அவற்றை
சாடிக் கொண்டிருக்கிறோமோ என்று எண்ணும்படியாகவும்
சில அறிவுசீவர்களின் கருத்துக்கள் அமைகின்றன."

நாம் செய்ய வேண்டியதென்ன?

(தொடரும்)