Pages

Thursday, February 08, 2007

முனைவர் இராம.கியும் தேவநேயப் பாவாணரும்.

முனைவர் இராம.கியும் தேவநேயப் பாவாணரும்.


வேர்ச்சொல், தமிழ்ச்சொல் என்றதுமே தமிழர்களின் மனதில் தோன்றுபவர் பேரறிஞர் தேவநேயப் பாவாணர். ஒலியின் பிறப்பில் இருந்து சொல்லின் பிறப்பைவிளக்கி, அதன் விரிவையும் பரப்பையும் அவர் எடுத்து எழுதிய ஒவ்வொரு கட்டுரையும்தமிழை மீட்டன; தமிழின் செறிவையும் தொன்மையையும் விரிவையும் பறைந்தன.


வரலாற்றில் தமிழை நேசிப்பவர்கள் அனைவரின் அன்பையும் பெற்ற பாவாணர்பன்மொழிப் புலவர். ஒரு சொல்லை விவரிக்க, அவர் காட்டும் பண்டை இலக்கியக்காட்டுகளும், அண்டை (மொழிகள்) இலக்கியக் காட்டுகளும் வியப்பை ஏற்படுத்திபடித்தவர்களை பெருமை கொள்ளச் செய்தன. ஆணியன அவ்வெழுத்துக்களால்,தமிழின் மேல் படிந்த தூசிகளும், பாசிகளும் எழுந்தோடின.

தமிழ் என்ற பாறையின் மேல் அமர்ந்த பதர்கள் எல்லாம் தாமே பெரிதென்று சொன்னால் பெரிதாகிவிடுமா? பாவாணரின் எழுத்துக்கள் அப்பதர்களைநாணி நடையைக் கட்ட வைத்தன!

இது எந்த சமயத்தில் என்றால், தமிழ்நாட்டில் பேச்சு எழுத்து இலக்கியம் என்றஎல்லாவற்றிலும் வடமொழிக் கலப்பு மிகுந்து பேசும் பேச்சுகளில் பெருமளவுபிறமொழியாகவே இருந்த கால கட்டம். அப்பொழுதும், பாவாணரை ஏசினவர்தமிழ்நாட்டில் நிறைய இருக்கவே செய்தனர். இன்றும் ஏசிக் கொண்டே இருப்பவர்களும்உண்டு. ஆயினும் அவர் ஆற்றிய அந்த அருந்தமிழ்ப்பணி இன்றைக்கெல்லாம் அழியாமல்மேலும் மேலும் பலரை ஆக்கிக் கொண்டே இருக்கிறது. அந்த அருந்தமிழ்ப்பணிக்குபாவாணர் செய்த உழைப்பு பெரும் உழைப்பு.

அந்த உழைப்பின் தொடர்ச்சியாக, அந்தப் பற்றின் தொடர்ச்சியாக, அந்த அறிவின்தொடர்ச்சியாக, முதிர்வின் தொடர்ச்சியாகத்தான் முனைவர் இராம.கி அவர்களின்தமிழ் ஆராய்ச்சிப் பணிகள் இருக்கின்றன.

ஏறத்தாழ 10 ஆண்டுகளாக அவரின் தமிழ்ச்சொற்பணிகளால் இணையம் நிறைகிறது.அலையெனவும், அருவியெனவும் அவரிடம் இருந்து பல சொற்கள் ஒரு கட்டுரையில் இருந்து நுகரக் கிடைக்கும்.

குறிப்பாக அவருடன் சில மடற்குழுக்களில் பங்கேற்றபோது அங்கு கொட்டியஅந்தத் தமிழருவிகளில் குளித்தது இன்பமானது.

தமிழ் அறிஞர், பேரறிஞர், தமிழ்ச் சொற்களின் தந்தை, அறிவியல் அப்பா, மொழியியல் தாத்தா என்றெல்லாம் பட்டங்களை தூக்க முடியாமற் சுமந்து கொண்டுதற்போதைய தமிழ் உலகங்களில் காணப்படும் தமிழர்களில் பெரும்பாலோனோர்தமிழ் என்றும் தமிழ்ச் சொல் என்றும் தருவது பெரும்பாலும் அரிசியை நீங்கிய உமியே.

ஏனெனில், அதற்கு ஒரு ஒழுக்கமான ஏரணம் இருக்காது."இதோ தமிழ், இந்தாத் தமிழ், இதான் தமிழ்" என்ற அவசரமும்,ஆணவமும் அவர்களின் தமிழ்ச் சொற்களில் விரவிக் கிடக்கும்.

(நான் அனைவரையும் சொல்லவிலை என்பதனைத் தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன்;பல நல்ல ஆர்வலர்கள் மற்றும் தமிழறிஞர்கள் இணையத்திலும் வெளியிலும் இருக்கவே செய்கிறார்கள்)

உமி என்று நான் சொல்வது மிகப் பொருத்தமானது என்றே கருதுகிறேன்.ஏனெனில் அது எளியதாக இருப்பதோடு காற்றடிக்கும் பக்கமெல்லாம்பறந்து கொண்டும் இருக்கும். அப்படித்தான் நமது தமிழ்ச்சொல் படைப்பாளர்கள்பலரிடம் இருந்து கொட்டும் சொற்கள். என்ன "கண்மணின்னு போட்டியா" ?இந்தா "பொன் மணின்னு போட்டுக்கோ" என்ற வகையில் தமிழ்ச்சொல் படைப்பவர்ஏராளம்.

மணி மணி என்று நிறைய பேர் வைச்சு புரைத்துப் போய், மாற்றம் வேண்டிஅதையே மாணி (மானி?) என்று வைத்துக் கொள்ளலாம்ப்பா என்ற போக்கில்பெயர் சூட்டு விழா நடத்துவதும் உண்டு. ஏனய்யா, "மாணி என்றால் ஒன்னுக்குப் போறசங்கதி ஆச்சே அதைப்போய் இதுக்கு வைத்தால்...." என்று கேட்டால் "நீ தமிழ் வெறியன்", மாணி என்று இப்ப யார் பேசுகிறார்கள்! இப்படிப் பேர் வைத்தாலாவதுமாணி என்ற சொல் நிற்கும் என்று சொல்லக் கூடிய சொல்-வேதாந்திகளும் உண்டு.

இப்படி தமிழ்ச் சொல் செய்வார்கள் அடிக்கும் கூத்துகள் சொல்லி மாளாது. நான் ஆர்வத்திலும் தேடலிலும் சொல் விளைவிக்கும் நல்லோரைச் சொல்லவில்லை. அன்னார், தவறாக சொல் படைக்கினும் அம்முயற்சியையும் அதனையும் வரவேற்பவன் நான்.

ஆனால் சொல் வணிகர்களையும், தரகர்களையும் கோமாளிகளாகத்தான்என்னால் பார்க்க முடிகிறது.

இவர்கள்,
1) வேர்ச் சொல் தேட மாட்டார்கள்
2) நுனிப்புல் மேய்வார்கள்
3) பல மொழிகளையும் குழப்பி அடிப்பார்கள்
4) மொழி அச்சம் இவர்களிடம் குடி கொண்டிருக்கும்; அந்த அச்சத்திலேயே தப்பான ஓசையிடுவார்கள்.
5) ஒரு சொல்லுக்கும் ஏரணம் இருக்காது
6) தமிழ் தவிர பிற மொழிப் புலமை இருக்காது; அல்லது குறைவாக இருக்கும்
7) தமிழ்த் துறை தவிர பிற துறைகளில் ஞானம் இருக்காது. அதனால் ஒவ்வொரு துறையிலும் புழங்கும் ஒன்றனுக்கு, துறைக்கு ஒரு பெயர் வைப்பார்கள்.
8) வளரும் துறைகள் என்றாலே காத தூரம் தள்ளி நிற்பார்கள்.

நான் அவர்களுக்கு பல துறைகளும் தெரியாததைக் குறையாகக் கொள்ளவில்லை. ஆனால்,அது தெரியாமலேயே, அதன் அடிப்படையே புரியாமலேயே, அத்துறைக்குள் புகுந்துஏகப்பட்ட பெயர்களை அள்ளித் தெளித்து விடுவதோடு "இதுதான் சரி" என்றுவாதிடும்போது எரிச்சல் வரத்தான் செய்கிறது.

ஏரணம் இல்லாமலும், ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் பரப்பியும்பல அகராதிகள் வந்துவிடுகிறதைப் பார்க்கும்போது மனம் பதைக்கவே செய்கின்றது.

படைப்பவர்கள் இப்படியென்றால், அதனைத் துய்ப்பவர்கள் அவர்களை விடப் பெரியவர்கள்.

அவர்களுக்கு, Mouse என்பதனை மூசி என்று சொல்லச் சொன்னால் எளிமையாக இல்லையேஎன்பார்கள். மவுசு என்றே அப்படியே சொல்லுங்களேன் என்றால் மிகவும் மகிழ்வார்கள்.இல்லை என்றால், "எலி'' என்றால்தான் சரி என்று வாதிடுவார்கள். சரி போய்த்தொலையுங்கள்,எலி என்றே வைத்துக் கொள்ளுங்கள் என்று விட்டதும் ''மூசிக வாகனனே....'' என்றுபாட ஆரம்பித்து விடுவார்கள்.

"முப்பழம் நுகரும் மூசிக வாகன
இப்பொழுது எனக்கு மவுசு தந்தாய்"

என்று பாட அவர்களுக்கு நாணமும் இருக்காது; இரண்டனுக்கும் உள்ள தொடர்புஎன்ன என்ற ஞானமும் இருக்காது.

இந்த மாதிரியான மந்திகள் தமிழ்ப்பணிகளின் குறுக்கே வந்து நடனம் ஆடிவிட்டுப்போவதை காலகாலமாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
தேவநேயப்பாவாணர், மறைமலை அடிகளார், திரு.வி.க, பெருஞ்சித்திரனார், பாரதிதாசன்போன்றோர் வரிசையில் நிற்குமளவு தமிழும், திறனும், பல்துறை பல்மொழிப் புலமையும்கொண்டவர் முனைவர் இராம.கி அவர்கள் என்பதில் யாருக்கும் அய்யமிருக்க முடியாது.

அவர் சொற்களில் ஆழ்ந்த ஏரணம் உண்டு! பாவாணரைப்போலவே!அதற்குப்பின்புலமாக அவரின் அயராது உழைப்பு உண்டு! பாவாணரைப் போலவே!அதே போல காணும் சொற்களுக்கு மேலும் வண்ணம் தீட்டுவதுபோலஅதனின் திருத்தங்களை அவரின் மேலதிக ஆய்வுகள் கொண்டு வரும். பாவாணரையும் விடநன்றெனவே எனக்குப் பட்டதுண்டு.அதைவிட மாற்றுச் சொற்கள் வருமெனின் அதனை காய்தல் உவத்தல் இன்றிஏற்றுக் கொள்ளும் பண்பு உண்டு.

விரிந்து பரந்து கிடக்கும் விஞ்ஞானவியலின் பல கூறுகளையும் பற்றிப் பிடிப்பதில்பாவாணரையும் பல இடத்தில் மிஞ்சுகிறார் என்று எனக்குத் தோன்றிய கணங்கள் அதிகம்.

ஏரணம் சார் வேர்ச்சொல் ஒன்றனைக் கொண்டு பல சொற்களைபயனர் ஆக்கிக் கொள்ள முடியும்;

ஒட்டுக் கோவணம் போல அங்கொன்று இங்கொன்று என்று பெயர் சூட்டாமல், குழுசார், துறைசார் சொற்களுக்கு இணையும் இயையும் சொற்களாக பட்டுச்சீலையாய் அவர் நெய்யும் சொற்கள் பயன் மிகுந்தன என்பதனைநானும் பலரும் பயன்படுத்தி மகிழ்ந்திருக்கிறோம்.

இதை நான் முகத்துதிக்காகவோ வாதத்திற்கோ சொல்லவில்லை. ஆனால், சொல்லவேண்டியதை சொல்லித்தான் ஆகவேண்டும்.

ஏனெனில் தமிழனிடம் ஒரு பழக்கம் உண்டு. கண் முன்னால் ஒரு இரத்தினக் குவியலைக்காட்டினால், அதைப் பார்த்து அது இரத்தினக் குவியல் என்று ஒப்புக் கொள்வதற்குள்நாணி, கோணி, நெளிந்து, பதுங்கி, மேலே கீழே பார்த்து, நேரகாலம் பார்த்து, தமிழ்சாராத பத்துப்பேர் வந்து சொன்னதற்குப் பிறகுதான் ஆகா ஓகோ என்று குதிப்பான்.

ஆனால் கண்ணாடிச் சில்லுகளைக் காட்டினால் அதைப் பொறுக்கிப் பொறுக்கியே பூரித்துப் போவான்.

இன்னொரு இரகம் உண்டு!
வணக்கம் என்று சொன்னாலே வாந்தி எடுக்கும் வம்பாளர்கள்.அது அவர்களுக்கு தமிழ் வெறியாகத் தெரியுமாம்.அல்லது எகத்தாளமாகப் பார்ப்பார்களாம். அ-னா ஆ-வன்னாவிலும் பெரியாரையும்கருணாநிதியையும் தேடிக் கொண்டு கிடக்கும் இவர்களின் நிலை பரிதாபத்துக்குரியது.

எளிமை எளிமை என்று கூவிக் கொண்டு திரியும் இலக்கணமில்லாதவர்களையும்,
அரசியல், மதம் என்பவற்றை தமிழ் மொழியோடு பார்க்கும் அக்கறையில்லாதவர்களையும்புறந்தள்ளி விட்டுத்தான் அக்காலத்தில் தேவநேயப்பாவாணரும் தற்காலத்தில்அவரொத்த அறிஞராகிய முனைவர் இராம.கி அவர்களும் சாதிக்க வேண்டியதிருக்கிறது.

முனைவர் இராம.கி அவர்களின் தமிழ்ச் செறிவுள்ள பாக்களாகட்டும், வேர்ச்சொல் கட்டுரைகளாகட்டும், வரலாற்று, ஆன்மீக, இலக்கிய கட்டுரைகளாகட்டும்,அல்லது நாராயணனை வழுத்தும் அவரின் பாசுரங்களாகட்டும் அனைத்திலும்புதுச்சொற்களும் அவர் மீட்டெடுக்கும் சொற்களும் மிடுக்குடன் அணிவகுத்து நிற்கும்.
அவற்றைப் பிட்டு அடிப்பதில் எனக்கு நிகர் நானே என்று சொல்லுமளவுக்கு, 'என் உள்ளங் கவர் சொல்லன்(ர்)' முனைவர் இராம.கி அவர்கள்.
அவற்றைப் படிப்பவர்கள் நேரும்போதெல்லாம் சொற்களைப் பயன்படுத்தி விடவேண்டும். வெறுமே பாராட்டிக் கொண்டு மட்டும் இருக்கக் கூடாது,
செறிவான அவரின் சொற்களுக்கு முன்னால் ''எளியதுகள் வெறும் திருட்டிக்காய்கள்''.

அன்புடன்
நாக.இளங்கோவன்

8 comments:

சுந்தரவடிவேல் said...

Thank you for this post.

Anonymous said...

அருமையான பதிவு :) நன்றி நயனம் அவர்களே!

தேவநேயப்பாவாணர் அவர்களின் சொல்லாராய்ச்சி உலகப் பெரும்புகழுக்கு உரிய அரிய முயற்சி. அவருடைய Linguistic Archaeology (மொழிவழித் தொன்மவியல்?) என்பதை அடிப்படியாகக் கொண்ட கருதுகோள் மிகச் சிறந்த ஒன்றூ.

இன்றைக்கு மாபெரும் இந்தியவியலாளர்(Indologists)-களான மைக்கெல் விட்சல், ஸ்டீவ் ஃபார்மர், அஸ்கோ பார்ப்போலா போன்றோரும் - நம்முடைய ஐராவதம் மகாதேவன் அவர்களும் கூட இந்த மொழிவழித் தொன்மவியல்தான் - தொல்லியல் ஆராய்ச்சியின் முக்கியமான கூறாக இனி விளங்கும் என கூறுகிறார்கள்.

இதை அரை நூற்றாண்டுக்கு முன்பே முன்னெடுத்த நம் பாவாணர் மாபெரும் அறிஞர். வணக்கத்துக்குரியவர்.

இன்னும் ஒரு 100 ஆண்டுகள் கழித்து பெரியாருக்கு இணையான ஒரு தமிழினச் சின்னமாக பாவாணர் ஆராதிக்கப்படுவார் என்றே எனக்குத் தோன்றுகிறது.

அய்யா இராம.கி அவர்கள் நம் தமிழ் இணையத்தின் பாவாணராக விளங்குபவர். பெருமைசால் பெரியாரான இராம.கி அய்யா இங்கே எழுதுவது நமக்கெல்லாம் ஒரு நற்பேறு என்றே சொல்ல வேண்டும் :)

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

நாக.இளங்கோவன்,

அருமையான பதிவு!

நன்றி!!

- மதி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தகுந்த நேரத்தில் நீங்கள் இதை எழுதியுள்ளீர்கள்; அவரும் "என் கடன் பணி செய்து கிடப்பதே" என எழுதியபோது; இது வந்திருப்பது மிக நன்று.
அவர் ஆய்வுகள்; தரவுகள் வலுவானவை; தேவையானதும் கூட.
மிக்க நன்றி
யோகன் பாரிஸ்

nayanan said...

அன்பின் சுந்தரவடிவேல், நியோ, மதி, யோகன்:

தங்கள் வருகைக்கும் இடுகைக்கும் மிக்க நன்றி. மகிழ்ச்சி.
அன்புடன்
நாக.இளங்கோவன்

ஞானவெட்டியான் said...

"உப்புக்கல்லை வைரமென்று சொன்னால் நம்பி ஒப்புக்கொள்ளும் மூடருக்கு முன்னால், கதறி என்ன? சொல்லி என்ன?
ஒன்றுமே நடக்கவில்லை தம்பி! ரொம்ப நாளா!!
(பட்டுக்கோட்டை வாசனை வீசவில்லை?)

nayanan said...

அன்பின் ஞா.வெ அய்யா,
வணக்கம்.

தங்களின் ஆதங்கம் எனக்குப் புரிகிறது.
பழையவைகள் பலவும் நினைவில் ஓடுகின்றன,
நாள்கள் நிறைய ஓடிவிட்டன.
புதுமுயற்சிகள் எடுத்துப் பார்ப்போம்.

தங்களின் வருகைக்கும் இடுகைக்கும் மிக்க நன்றி.

அன்புடன்'
நாக.இளங்கோவன்

Anonymous said...

நல்ல பதிவு.

முனைவர். இராம கி, தேவநேயரைப் போல் நூல்களை விட்டுச் செல்ல வேண்டும். இணையதள வசதிகள் இல்லாதோர் பல பேர். மேலும் என் போன்றோருக்கு இணைய அணுகல் நேரம் மிகவும் குறைவு.

நன்றி
கதிரவன்