Pages

Tuesday, July 14, 2020

புறநானூறு-281, 296: நோய் தீர தனிமைப்படுத்தல்(Quarantining in Sangam Period)

Image may contain: food


பேய்வேறு நோய்வேறு உண்டா? பேய் பிடிக்கிறதென்றால் தீமை தொற்றுகிறதென்று பொருள். ஆங்கிலத்திலே Infection என்று சொல்கிறோம். தீமை தொற்றினால், மனத்தை உடலை அல்லது இரண்டையும் பாதிக்கும்.


தங்கம், வெள்ளி, செப்பு போன்ற மாழைகளில்(metal) ஒன்றினால் செய்யப்பட்ட கழல், ஆண்மை மிக்க ஆடவரின் கால்களில் பேரழகாய்க் கிடக்கும். அந்தக் கழல்களில் பூக்களும், சின்னங்களும், கொடிகளும் அழகிய வேலைப்பாடுகளாய் செய்யப்பட்டிருக்கும். அப்படியான உயர்ந்த கழல்களை அணிந்திருக்கிறான் தலைவன்.

மண்ணைத் தீண்ட வந்த பகைவரை துரத்துகிற களமொன்றில், அரசனுக்கென்றே வந்த பெரும் வேல்களிலும் அம்புகளிலும் இருந்து தலைவன் அரசனைக் காப்பாற்றி விட்டான்.

உடல் முழுதும் வேற்புண்கள் என்றால் வேதனை எப்படி இருக்கும்? மாரில் உள்ள புண்ணுக்குள் இரண்டு கைகளையும் விட்டு உடலை பிளந்து மாளலாம் போல வீரர் எண்ணுதலுண்டு.

மாரில் பாய்ந்த வேலைப் பிடுங்கி பகைமேலேயே திருப்பி எறிவதற்கு, உடலிலும் மனத்திலும் திமிர் இருக்க வேண்டும். ஆயினும் போர் முடிந்த பின்னர் கொடுமையாக புண்பட்ட உடல் வாடி வருந்தத்தானே செய்யும்!

அரசனைக் காப்பாற்றிய தலைவன், வீட்டில், உடல் வருத்தம் போக்கும் மருத்துவத்தில் இருக்கிறான். அவனைக்காண, பாடலை எழுதிய பெரும்புலவர் அரிசில் கிழார் வருகிறார். அரசன் பார்த்து வரச்சொன்னானோ தெரியவில்லை.

தலைவனின் மனைவி, தனது இல்லத்தின் இன்னொரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருப்பது அவருக்குக் கேட்கிறது.

ஆழமான புண்கள். மருந்து போட்டிருக்கேன். ஆறவேண்டும்னா வெளியேயிருந்து தொற்று ஏதும் வந்துவிடக்கூடாது. நாமும் வெளியே போய் தொற்றிக் கொண்டு வரக்கூடாது.

வாசலின், இறவாணத்தில் வேப்ப இலைகளோடு, இரவந்தழைகளைச் செருகி வைக்கலாம். அவை வருவோருக்கு உள்ளே வரவேண்டாம் என்று செய்தியைச் சொல்லிவிடும். பேய் போன்ற வெருவிகள் (virus), பிறகிருமிகள் உள்ளே நுழையவும் விடாது.

மையென அரைத்த சாந்தினை வீட்டின் உள்ளே சுற்றி பூசிவிடுவோம். எறும்பு போன்றன ஊர்ந்து வந்து தலைவனின் புண்ணைத் தீண்டா.

தலைவனின் படுக்கையைச்சுற்றி வெண்கடுகை (ஐயவி) தூவி வைப்போம். அதைத்தாண்டி எந்தக் கிருமியும், பூச்சியும் பேயெனப் போக முடியாது.

இந்தப் பெரிய வீடு முழுதும், வெருவி போன்ற தொற்றுகளைக் (Infections) கடிந்து விரட்டுகிற/கொல்கின்ற மூலிகைப்பண்டங்களை இட்டு நறுமணப்புகை வீசச்செய்வோம் (கடிநறை).

இவை அவனின் உடலைக் காக்கும்.

கூடவே, பிள்ளைகளை விட்டு ஆம்பல் குழல்களை ஊதச்செய்வோம்! (அல்லிமலர்த் தண்டு, குழல் போல இருக்கும். அதை ஊதினால் ஓசை வரும்) பிள்ளைகள் ஊதும்போது வீடும் கலகலப்பாக இருக்கும், தலைவனின் மனதிற்கும் இதமாக இருக்கும்.

விரைவில் புண்கள் ஆறவேண்டும் என்றும், நோய்த்தொற்று புண்களைத் தீண்டி புரையோட விடக்கூடாது என்று வேண்டி, காஞ்சிப் பண் கூட்டிய பாடல்களைப் பாடுவோம்; ஒலிக்கும் மணியை அடிப்போம். பின்னர், ஆங்கு, கோட்டுயாழொடு பிற இசைக்கருவிகளையும் இசைத்து இனிமையான இசையால் இல்லத்தை நிறைப்போம்.

தலைவனின் உடலில் உள்ள புண்களை மருந்தால் ஆற்றுவோம். மனதிற்கு, பாடலும் இசையும் கலகலப்பும் மருந்தாகட்டும்.

என்று அனைத்து முறைகளையும், தன் இல்லப்பெண்டிர் ஒருத்தியிடம் தலைவி சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்ட புலவரான அரிசில் கிழார், "தலைவனின் வீட்டுக்குள் செல்ல வேண்டாம், சென்று மருத்துவத்திற்கு இடர் தரவேண்டாம்" என்று எண்ணி, திரும்பிப் போய்விட்டார்.

போனவர் தலைவி பேசிக்கொண்டிருந்ததை பாட்டாக எழுதி அரசனிடம் கொடுத்துவிட்டுப் போனாரோ என்னவோ! அரசக்குடி, அரசனின் உயிரைக் காத்த தலைவனைப் பற்றிய அந்தப்பாடலை வழிவழியாய்க் காப்பாற்றி, ஈராயிரம் ஆண்டுகளுக்குப்பின் நமக்கும் படிக்கத் தந்திருக்கிறது.

கொரொனா வெருவியால் உலகமே தனிப்பட்டுக் கிடக்கும் இந்த வேளையிலும், வேம்பைச் செருகி, வேம்புமஞ்சள் நீரில் கழுவி, நாற்புலன்களை கட்டி, வீட்டையும் பொருள்களையும் தம்மையும் தூய்மையாக்கிக் கொண்டு தனித்திருக்கும் இதே காட்சியை சங்க காலத்திலும் காணமுடிகிறது.

தனிமைப்படுத்தல் என்பதற்கு நமது தொன்மையான வாழ்வியலிலேயே இலக்கணம் உண்டு. அதைத்தான் புறம்-281ம், 296ம் சொல்கின்றன.

அதன் தொடர்ச்சியை அம்மை வார்த்த இல்லத்தில் இன்றைக்கும் தக்க வைத்திருக்கிறது தமிழ்க்குமுகம். வேம்பு, மஞ்சள், தூய்மை, கூழுணவு, மோர் போன்றவற்றோடு, மன வலுவிற்கு மாரியம்மன் தாலாட்டைப் பாடுவதுதான் தனிமைப்படுத்தப்பட்ட அம்மை மருத்துவம்.

வெண்கடுகை அகிலோடு கலந்து இல்லம் முழுதும் புகைக்க வைக்கும் பழக்கம் எங்கள் வீட்டிலேயே இன்றும் உண்டு.

காஞ்சித் திணையில், அரிசில் கிழாரின் 281ஆம் பாட்டு என்ன துறை தெரியுமா? தொடாக்காஞ்சி. தொடா என்றால் என்ன? பேய்/வெருவி ஒருத்தரை தொடாதிருக்க, தீண்டாதிருக்க, தனிமையில் இருக்க, Quarantine-ல் இருக்க ஒரு பாட்டுத்துறையே இருக்கிறதென்றால், தமிழ்க் குமுகத்தின் தொன்மத்தை அளக்க முடிந்தால் அளந்து கொள்ளுங்கள்!

புறம்-296ஐப் பற்றி விளக்கப்போவதில்லை. தொடர்பிருப்பதால், தொட்டுக்காட்டுகிறேன்.

வாகைத்திணையில் ஏறாண்முல்லைத்துறையில் பாடிய பாட்டில்,
"வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லா மனையும் கல்லென்று அவ்வே......"

"போரில் இருந்து திரும்பிய புண்பட்ட வீரர்களின் வீட்டிலெல்லாம் வேப்பந்தழையை பறிக்கவும், வெண்கடுகை இட்டு புகைக்கவும் (அகில்/சாம்பிரானி மாதிரி), காஞ்சிப்பண்னைப் பாடவுமாக இருக்கிறார்கள்; பேய்/நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க" என்பது அந்த மூன்று வரிகளின் பொருள்.

ஐயவி என்ற வெண்கடுகை, அகில் என்ற சாம்பிரானியுடன் (வேண்டுமானால் வேறு சில மூலிகைகளையும் சேர்த்து) வீட்டில் புகைப்பது கண்ணுக்குத் தெரியா வெருவிகள், கிருமிகள் போன்றவற்றிருந்து நமது உடலையும் மனதையும் பாதுகாக்கும் அருமருந்தென்று புறநானூறு சொல்லித்தருகிறது.

பாடல்: புறம்-281
பாடியவர்: அரிசில் கிழார் (காஞ்சித்திணை, தொடாக்காஞ்சித்துறை)
தீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழு திழுகி
ஐயவி சிதறி யாம்ப லூதி
இசைமணி யெறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்
காக்கம் வம்மோ காதலந் தோழி
வேந்துறு விழுமந் தாங்கிய
பூம்பொறிக் கழற்கா னெடுந்தகை புண்ணே.

பொருள்:
தீங்கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ = இனிமையான கனிகளைத் தரும் இரவமரத்தின் இலைகளோடு, வேப்பந் தழைகளையும் சேர்த்து வாசலில் இறவாணத்தில் செருகி.
யாங்கு மருப்பு யாழொடு பல்லியம் கறங்க = ஆங்கு, கோட்டு யாழொடு பிற இசைக்கருவிகளையும் இசைத்து.
ஐயவி = வெண்கடுகு
கைபய = மெதுவாக கையை பெயர்த்து
மையிழுது = மை போன்ற சாந்து
இசைமணி = பூசை செய்யும் போது அடிக்கின்ற மணி போன்றது
காஞ்சி பாடி = காஞ்சிப்பண் கூட்டிய பாட்டைப் பாடி
நெடுநகர் = பெரிய வீடு
கடிநறை = நோய்விரட்டும் நறுமண புகை தரும் பொருள்
காக்கம் வம்மோ = காப்பாற்றலாம் வாம்மா
வேந்து உறு விழுமம் தாங்கிய = அரசனுக்கு ஏற்பட்ட இன்னலைத் தாங்கிய
பூம்பொறிக்கழல் = உயர்ந்த பூவேலைப்பாடுகள் செய்யப்பட்ட கழல்
நெடுந்தகை = உயர்ந்த வீரன்

அன்புடன்
நாக.இளங்கோவன்
11/சூலை/2020

புறநானூறு-263: வண்டு மேம்படூஉம்

Image may contain: one or more people, sky and outdoor



ஊருக்கு அவன் தலைவன். அறத்திலும் மறத்திலும் சிறந்தவன் அப்பொழுதெல்லாம் தலைவனாக இருக்க முடிந்தது. ஊரையும், சான்றோர் பலரையும் சிறப்பாக பேணி, புரந்து, காத்து வந்ததால் அவன் தலைவன். முல்லை நிலத்து ஊர் என்றால் காடுகள் சுற்றியிருக்கத்தானே செய்யும்!




மேளம், தவில், உடுக்கு, பறை உள்ளிட்ட முழவுக்கருவிகளில் பறை மட்டும் ஒரு வகையில் மாறுபடும். பறைக்கு ஒருபக்கம் மட்டுமே கண் இருக்கும். மறுபக்கம் வெற்றாக இருக்கும். பெரிய களிற்றின், அதாவது பெரிய ஆண் யானை, தனது பாதத்தைப் பதித்தால் வட்டம் வருமே, அதுதான் அந்தப்பறையின் அளவு. "பெருங் களிற்று அடியில் தோன்றும் ஒருகண் இரும் பறை" என்று இந்தப்பாடலாசிரியர் பறைக்கு அளவு கூறுவது வியக்கத்தக்கது.

அந்த ஒரு கண் பறையை, ஏந்திக்கொண்டு ஒருவன், காட்டுவழியே தலைவனைக் காண நடந்து வருகிறான். அவன் பாணனாக இருக்கக்கூடும். இரவலன் அவன். இரவலன் என்றால் இரந்துண்ண வருபவன் என்பது மட்டும் பொருளல்ல. ஒன்றைக் கொடுத்து இன்னொன்றைக் கொள்பவனும் இரவலனே. காட்டு வழியே வருவதால், விலங்குகளை பறையை முழக்கி விரட்டுவதற்காக, பாதுகாப்பிற்காக அதை ஏந்தி வருகிறான்.

ஊரை நோக்கி அவன் வருகையில்ம் பசுமையிழ்ந்த அந்தக்காட்டின் பாதையில், ஊரை விட்டு வெளிப்போகும் சான்றோராகிய இந்தப் பாடலின் ஆசிரியர் வருகிறார். இருவரும் சந்திக்கிறார்.

பாணன் கேட்கிறான்; "தலைவன் இருக்கிறானா? பார்க்கப் போகிறேன்"

சான்றோர் சற்றே தயங்குகிறார். பின்பு கூறுகிறார்:

சின்னாள் முன்னர், ஊரின் கால்நடைகளை எல்லாம் அயலூரார் வெட்சிப்போர் செய்து கவர்ந்து போயினர். மக்களின் கவலை தீர்க்க, இழப்பை நீக்க, தலைவன் கரந்தைப் படை திரட்டி ஆநிரை மீட்கச் சென்றான். கடுமையாக போரிட்டு ஆனிரையை (பசு உள்ளிட்ட கால்நடைகள்) மீட்டும் விட்டது படை. மீட்ட ஆனிரையை ஓட்டிக்கொண்டு வருகையில், வெட்சிப்படையினர் மீண்டும் திரண்டு வந்து கடுமையாக தாக்கினர்.

ஆனிரையைக் காக்கும்பொருட்டு கூடவந்த மறவர்களை முன்னால் ஆனிரையை ஓட்டிச் செல்லவைத்து, அவர்களுக்கெல்லாம் காவலாய் தலைவன் மட்டும் வெட்சிப்படையோடு போரிட்டான்.

கடுமையான போர். அவன்மேல் விழுந்த அம்புமழையில் மூழ்கினான்.
ஆயினும் பகைவரால் அவனைத்தாண்டி மீண்டும் ஆனிரையை கைப்பற்ற முடியவில்லை. வீரரொடு ஆனிரை மீண்டு ஊர் சேர்ந்தது. தலைவன் மட்டும் போர்க்களத்திலேயே வீரமரணம் அடைந்தான்.

ஊரே துயரத்தில் மூழ்கியிருக்கிறது.

இன்றுதான், அவன் நினைவாக நடுகல் ஊன்றி, அதற்கு இறகுகள் சூட்டி, அவன் பெயர் பொறித்து, சான்றோரொடு ஊர்கூடி அவனை வழிபட்டு மரியாதை செய்துவிட்டு எனது ஊருக்குத் திரும்பிப் போய்க்கொண்டிருக்கிறேன்.

பாணனின் முகம் துயர் பட்டது.

கவனித்த சான்றோன், இதைக்கேட்ட பின்னும் நீ அவ்வூரைச் சென்று சேர்வாய் எனில், தலைவனுக்காய் சமைத்த நடுகல்லை வழிபடாமல் இருக்காதே. அவனை வழிபட்டால் இம்மண்ணில் வண்டு மேம்படும்!

சான்றோர் அறிவுரை கூறியதும் இருவரும் தம்வழியே சென்றனர்.

அது என்ன வண்டு மேம்படும்?

நடுகல்லாக நிற்கின்ற தலைவனை வழிபட்டால், இம்மண்ணில் மழை பெய்யும். மழைபெய்தால், பசுமை இழந்த இம்மண்ணில் செடி கொடி மரங்கள் துளிர்க்கும். துளிர்த்தவையெல்லாம் பூக்கும். மகரந்தங்களை தேனீக்கள் சேர்த்து வைக்கும். காடுகள் பசுமையாகி காய்க்கும், கனியும். மண்ணில் பூச்சி புழுக்கள் உயிர்பெறும். பயிர் வளம் செழிக்கும். பறவைகள் பெருகும். உணவுச்சங்கலி உயிர் பெறும். மக்களின் பசி தீரும்.

பூச்சி, புழு, தேனீ, வண்டு, பறவைகள் யாவையும் இங்கே வண்டு என்ற ஒற்றைச்சொல்லில் அடைபெற்றன. இவை மேம்படும் என்றால் நிலம் செழித்தது என்று பொருள்.

அட, இதைத்தானே நம்மாழ்வார் என்ற நமது கண்முன் வாழ்ந்த சான்றோரும் கூறினார்.

இரசாயன நஞ்சான உரம், பூச்சிக்கொல்லி, வளர்ச்சி ஊக்கி, உச்ச நஞ்சான களைக்கொல்லி என்ற இவற்றை மண்ணில் கொட்டியதால், மண் செத்தது. மண் செத்தது என்றால் நன்மை செய்யும் வண்டு, பூச்சி புழுக்கள் செத்தன என்று பொருள். பூச்சி புழுக்கள் செத்தன என்றால் காய், கனிகள் செத்தன என்று பொருள். காய், கனிகள் செத்தன என்றால் பறவைகள் செத்தன என்று பொருள். பறவைகள் செத்தன என்றால் உணவுச்சங்கிலி அறுந்தது என்று பொருள்.

நம்மாழ்வார் 30 ஆண்டுகளாக இந்த மண் முழுக்க அலைந்து திரிந்து சொன்னது எல்லாம், "வண்டு மேம்படூஉம்" என்று, 2000-2500 ஆண்டுக்கு முன்பே வாழ்ந்த தமிழ்க்குமுகத்தின், இயற்கை சார்ந்த வாழ்வியல் சிந்தனை மரபுதானே!

இப்பொழுது நம்மாழ்வாரின் இந்த விழியத்தை கேட்டுப்பாருங்கள்.

https://m.youtube.com/watch?v=xehvMPJfQ30

இந்தச் சான்றோரான நம்மாழ்வார்தான் சங்கச்சான்றோரா, அல்லது அந்தச் சான்றோர்தான் இந்த நம்மாழ்வாரா? வேறுபாடு தெரியவில்லை.

இந்த மண்ணின் இயற்கையை, சூழலை, வேளாண்மையைப் பேணுகின்ற தொன்மையான சிந்தனை மரபு, அறிவர் மரபு துளிகூட அற்றுப்போகவில்லை அல்லவா?

ஆனால் செயல் மரபு?

புறம்-263: பாடலாசிரியர்: தெரியவில்லை
திணை: கரந்தை, துறை: கையறுநிலை
மூலம்:
"பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண்
இரும்பறை யிரவல சேறி யாயிற்
றொழாதனை கழித லோம்புமதி வழாது
வண்டுமேம் படூஉமிவ் வறநிலை யாறே
பல்லாத் திரணிரை பெயர்தரப் பெயர்தந்து
கல்லா விளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனற் சிறையின் விலங்கியோன் கல்லே."

சீர்பிரித்து:
பெருங்களிற்று அடியில் தோன்றும் ஒருகண்
இரும்பறை இரவல! சேறி ஆயின்
தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது
வண்டுமேம் படூஉம் இவ் அறநிலை ஆறே
பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து
கல்லா இளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.

பொருள்:
"பெருங்களிற்று அடியில் தோன்றும் ஒரு கண் இரும் பறை" = பெரிய ஆண் யானையின் பாதச்சுவடளவுள்ள வட்டத்தை/கண்ணை உடைய பறை.
"இரவல சேறியாயின்" = இரவலனே, மேலும் நீ அவ்வூர் சென்று சேர்வாயெனில்
"தொழாதனை கழிதல் ஓம்புமதி" = தொழாமையைக் கழிதலை ஓம்புவாயாக (தொழுவாய் என்று சொன்னது).
"திரள் நிரை பெயர்தரப் பெயர்தந்து" = ஆனிரை கொள்ளை போக, அதனை மீட்டு வந்து.
"கல்லா விளையர் நீங்க நீங்கான்" = கூட வந்த போர்மறவர் நீங்கினும் தான் பின்னால் நின்று நீங்காமல் நின்று போரிட்டான்.
"வில் உமிழ் கடுங்கணை மூழ்க" = விற்கள் உமிழ்ந்த எண்ணற்ற அம்புகளில் மூழ்கினான்.
"கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே" = இன்று நடுகல்லாய் நிற்கும் தலைவன், போர்க்களத்திலே, பாய்ந்து வரும் வெள்ளம் போல வந்த பகையை தனியொருவனாய் அடைத்து நின்றான். வெற்றிக்கு காரணமானான்.

பாடலாசிரியரின் பெயரை அறியமுடியவில்லை என்றால், பாட்டின் ஓரிரு சொற்களைச் சேர்த்து பாடலாசிரியரின் பெயர்க்குறிப்பாக சொல்வர். என்னால், அப்படியொரு குறிப்பை இப்பாட்டுக்கு காணமுடியவில்லை.

வண்டு மேம்பாட்டினர் என்று சொன்னால் பொருத்தம்தானே!

அன்புடன்
நாக.இளங்கோவன்

புறநானூறு-243 - இளமை நிலையாமை

Image may contain: one or more people



நான் சிறுவனாக இருந்த அந்த இளமைக்காலம் மிக இனிமையானது. மண்ணெடுத்து நீர்சேர்த்து திண்ணியதாய்க் குழைத்து அழகழகான பெண் பொம்மைகள் செய்வேன். ஓடிப்போய் பூக்கொய்து, தொடுத்த சரமாயும், தனிப்பூவாயும் பாவைக்கு சூடி அழகு பார்ப்பேன். பாவையின் அழகு என்னை ஈர்க்கும். அது என்னோடு பேசியதும் புன்னகைத்ததும் எனக்கு மட்டுமே புரியும்.

நீராட, கூட்டமாகப் போவோம். எனது தோழச் சிறுமிகள் என்னோடு கைகோர்த்து, குளிர்ச்சியான குளத்தில் ஆடிய காலத்தில் எங்களுக்கு பால் வேறுபாடே தெரியாது. அன்பும் களிப்பும் மிகுந்து, தூய நீரைப்போல தூய்மையா யிருந்தது. அந்தச் சிறுமிகள் என்னைத் தழுவிய போது தழுவி, அவர்களோடு போட்ட ஆட்டமும் பாட்டமும், கத்தலும், கூவலும், தண்ணீரில் வீழ்ந்த போது ஒருவரோடு ஒருவர் வீழ்ந்து எழுந்த பூரிப்பும் அளவிட முடியாதது.

குளத்தங்கரையில் பழைய மருத மரம். அதன் கிளைகளில் ஒன்று குளத்து நீரை காதலித்தோ என்னவோ, குறுக்கே நீரை நோக்கி தாழ்ந்து நீண்டு திரண்டு கிடக்கும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் கள்ளத்தையே கல்லாத, அறியாத என்னொத்த அந்தச் சிறுவர்களுடன், அதில் ஏறி நடந்து ஆழமான இடத்திலே, பார்ப்பவர்கள் வியப்பாரென்று எண்ணி, தண்ணீர் தெறித்துச் சிதறுமாறு, பொத்தென்று குதித்து அடிச்சென்று மண்ணள்ளி வந்து மேலே காட்டும் போது அடைந்த களிப்பிற்கு இணையாய் ஒன்றைச் சொல்ல முடியவில்லை.

கள்ளமிலா நட்பும், மகிழ்ச்சியும், கல்வி கற்றிராத அந்த இளமையின் இயற்கை எனக்குத் தந்த கொடை; அஃது வாழ்வில் என்றைக்கும் திரும்பியதே இல்லை. தலைப்பகுதியில் அழகிய வேலைப்பாடு செய்த நீண்ட தண்டை ஊன்றி நடுங்கிக்கொண்டே நடக்கின்ற இந்த முதுமையில், அவ்வப்போது இருமல் வருகிறது. சிறிதே பேச முடிகின்றது. எனது முதுமையைக் கண்டு நானே இரங்குகிறேன். ஆயினும் அவரின் கண்களில் துயரம் இல்லை.

இளமை நிலையாமையை இளமையில் அறிந்தவர் யார்?

புறநானூறு-243, பாடியவர் பெயரில்லை.

இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி
மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்
கரையவர் மருளத், திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே, யாண்டுண்டு கொல்லோ?
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம் ஆகிய எமக்கே.

முதுமையின் இயலாமையில் சங்கப்புலவர் ஒருவர் பாடிய பாடல் இஃது. நிலையாமைத் தத்துவத்தை உணர்ந்த, உதிர்த்த புறநானூற்றுப் பாடல்வரிகள் இவை. இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை என்ற நிலையாமை தத்துவத்தை திருக்குறள், திருமந்திரம் போன்ற நூல்களிலே தேடும் நமக்கு புறப்பாடலிலும் படிக்க முடிவது ஆதித் தமிழுலகின் தத்துவ வாழ்விற்குச் சான்று. பொதுவியல் திணையில், கையறு நிலை துறைப்பாட்டு.

பாடியவர் பெயர் கிட்டவில்லை ஆதலால், இப்பாடலாசிரியரை, அவரின் பாடல்வரியில் உள்ள சொற்றொடரை வைத்து "தொடித்தலை விழுத்தண்டினார்" என்று குறிப்பிடுவது வழக்கம்.

பொருள்:
திணிமணல் செய்வுறு பாவை = மண்ணில் செய்யும் பாவை/பொம்மை
கொய்பூ = கொய்து வந்த மலர்கள்
தைஇ = தைத்து, கோர்த்து, தொடுத்து
தண்கயம் = குளிர்ச்சியான நீர் நிறைந்த குளம்
தழுவுவழித் தழீஇ = தழுவும்போது தழுவி
தூங்குவழித் தூங்கி = ஆடும்போது ஆடி
மறையெனல் அறியா = மறைத்துப் பேசுதல் அறியாத
மாயமில் ஆயம் = கள்ளமில்லாத சிறுவர் குழாம்
திரையகம் பிதிர = நீர் பிதுக்கிச் சிதறுவது
குட்டம் = நீரில் ஆழமான இடம்
தொடித்தலை விழுத்தண்டு = வளைந்து அழகிய வேலைப்பாடுகளை தலைப்பகுதியில் கொண்ட ஊன்றி நடக்கும் தண்டு/கோல்
மூதாளர் = முதியவர், அகவை முதிர்ந்தவர்

அன்புடன்
நாக.இளங்கோவன்

==============================================

Thursday, June 11, 2020

தமிழ் ற-கர, ழ-கர எழுத்துகளை தெலுங்கு ஒருங்குறியில் சேர்க்கக்கூடாது. ஏன்?




ஒருங்குறிச் சேர்த்தியத்தில் https://www.unicode.org/L2/L2020/20119-two-telugu-letters.pdf என்ற இந்தச்சுட்டியில், தமிழின் ற,ழ எழுத்துகளை தெலுங்கில் சேர்க்கக் கோரும் திரு.வினோதுராசனின் முன்னீட்டைக் (proposal) காணலாம். தமிழ் ஒருங்குறியைப் பற்றிய விதயம் என்பதால், தமிழிணைய கல்விக்கழகத்தின் ஒருங்குறி வல்லுநர் குழு 08-மே-2020 அன்று கூட்டப்பட்டு, மேற்கண்ட முன்னீடு ஆராயப்பட்டு, இம்முயற்சியை மறுக்க வேண்டும் என்று முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றின் சுருக்கமும், விளக்கமும் தொகுக்கப்பட்டு, ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு அனுப்பப்பட்டடது. அந்த ஆவணத்தின் செய்திகளை தமிழில் வழங்குவது இக்கட்டுரையின் நோக்கம்.

சுருக்கம், பரிந்துரை:

1) தமிழ் ற, ழ எழுத்துகளை தெலுங்கு ஒருங்குறியில் குறியேற்றம் செய்யக்கூடாது. மாறாக, ScriptExtensions.txt என்ற நுட்பத் தீர்வு இருக்கிறது. அவ்வழியில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2) தெலுங்கு -கரத்திற்கும் (ற-கரம் u+0C31) தமிழ் ற-கரத்திற்கும் ஒரே ஒலிப்புதான். இரண்டுக்கும் ஒலிப்பு/உச்சரிப்பு வேறுபாடு இருக்கிறது என்று சொல்லி, தமிழ் எழுத்து ற-வை தெலுங்குக்குள் குறியேற்றம் கோருவது அடிப்படை பிழையாகும். தெலுங்கு கல்வெட்டுகளில் வேற்றுவடிவங்கள் காணப்பட்டாலும், அவை ஒரே ஒலியனின் கீற்றுவேறிகளாக (graphic variants) அல்லது மாற்றொலிகளாக (allophones) கொளல் வேண்டும்.

3) “ற்ற” என்ற உச்சரிப்பு தமிழர்களிடையேயே வேறுபடும். ஈழத்தமிழர்கள் நேர்த்தியாகவும், தமிழ்நாட்டுத் தமிழர்கள் சற்று பிசகி, “ட்ர/ற” என்று அழுத்தியும் உச்சரிப்பது வழக்கு; இதை மொழியியலார்  ஒலியன் ஒட்டு (phoneme joint) என்பர். பிசகிய “ட்ர/ற” ஒலிப்பே “ற்ற்”-வின் ஒலிப்பு என்று கருதி,  அதற்காக தெலுங்கில் கொண்டுபோய் தமிழ்-றவை சேர்க்க வேண்டும் என்பது திரு.வினோதுராசனின் தமிழ் அறியாமையும் தவறும் ஆகும். ஆகவே அவர் வைத்துள்ள முன்னீட்டின் ஆதாரம் பிழையானதாகிறது.

4) இந்தியா பலமொழிகள் புழங்கும் பெரியநாடு. இந்திய மொழிகளுக்குள் பல ஒட்டுறவுகள் உண்டு. ஒவ்வொரு மொழியிலும் அண்டை மொழியின் எழுத்துகளைக் கொண்ட சாதாரண எழுத்துப் பெயர்ப்பு செய்யப்பட்ட உரைகள்/இலக்கியங்கள் உண்டு. இப்படியான மிகச்சிறிய தேவைக்கெல்லாம் ஒருமொழியின் எழுத்துகளைக் கொண்டுபோய் இன்னொரு மொழியின் ஒருங்குறி நெடுங்கணக்கில் சேர்த்தால், நாளடைவில், இந்திய மொழிகளுக்கான ஒருங்குறி கட்டமைப்பு சிதைந்துவிடும்.

விளக்கம்:

தெலுங்கு ற, ழ வரலாறு

தெலுங்கிலும் கன்னடத்திலும் ழ-கர எழுத்தே துவக்கத்தில் கிடையாது. முதன்முதலில் பொ.பி 5 ஆம் நூற்றாண்டில், சாலங்காயனரின் கல்வெட்டில்தான் தெலுங்கு ழ-கர எழுத்து வடிவம் தென்பட்டது. சாலங்காயனர்கள், தென்னிந்திய பல்லவப் பேரரசை ஒட்டி, நட்பு நாடாக, சிற்றரசாக இருந்து வந்தனர். தெலுங்கும் கன்னடமும் பொ.பி 5 ஆம் நூற்றாண்டில் ஒரே எழுத்துகளைப் பயன்படுத்தி வந்தன என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

இந்நிலையில், தெலுங்கு ழ-கரமானது, கீழைச்சாளுக்கிய வேங்கி நாட்டரசனும், பேரரசன் இராசராச சோழனின் பெயரனுமான இராசராச நரேந்திரன் ஆட்சிக்காலமான பொ.பி 11 ஆம் நூற்றாண்டுவரை தெலுங்குக் கல்வெட்டுகளில் இடம்பெற்றது. அந்தக் காலகட்டமானது, சோழர், மேலை கீழைச் சாளுக்கியர், பல்லவர் அரசுகளுக்கிடையே மிக அதிகமான தொடர்பாடல்கள் இருந்த காலமாகும். சோழர்களில், பேரரசுச் சோழர்கள் தமிழ் பேசுவோராகவும், இரேநாட்டுச் சோழர்கள் தமிழ், தெலுங்கு என்ற இரட்டை மொழி பேசுவோராகவும் இருந்தனர். இந்தத் தொடர்பாடல்களே தெலுங்கு மொழியில் ழ-கரப் பயன்பாட்டுக்குக் காரணமாயிருந்தன. ஆனால், தெலுங்கு-கன்னடப் பகுதிகளில் அவர்கள் பயன்படுத்திய வரிவடிவமும், தமிழ்ப் பகுதிகளில் இருந்த வரிவடிவமும் வெவ்வேறாகவே இருந்தன.

தெலுங்கு ற-கரத்தைப் பொறுத்தவரையில், தெலுங்கு-கன்னடப் பகுதிகளில் பொ.பி 5 ஆம் நூற்றாண்டு முதல் புழக்கத்தில் இருந்தது. ஆனால், தெலுங்குப் பகுதிகளில் பொ.பி 18 ஆம் நூற்றாண்டில் றகரப்புழக்கம் அற்றுப்போனது. ற-கரம் புழங்கிய காலத்திலும், ஒலிப்பு ஒன்றாக இருந்தாலும், தெலுங்கு-கன்னடப் பகுதிகளில் வரிவடிவம் வேறாகவும், தமிழ்ப்பகுதியில் வேறாகவும் இருந்தது வரலாறு.

தெலுங்கு ற-கர ழ-கர எழுத்துகள் கல்வெட்டில் காணப்பட்டாலும் தெலுங்கு இலக்கியங்களில் இந்த எழுத்துகளின் பயன்பாடு இல்லை. தெலுங்கின் முதல் இலக்கண நூல் உருவானதே பொ.பி 11 ஆம் நூற்றாண்டில்தான். தெலுங்கிற்கான இலக்கணம் எழுதப்பட்டது தெலுங்கு மொழியிலன்று. மாறாக சமற்கிருதத்தில் எழுதப்பட்டது. தெலுங்கில், புகழ்பெற்ற, “ஆந்திர மகாபாரதம்” என்ற நூலின் முதல் மண்டிலத்தையும் மூன்றாவது மண்டிலத்தையும் எழுதிய ஆதிகவி நன்னய பட்டாரகரே தெலுங்கு இலக்கண நூலையும் சமற்கிருதத்தில் எழுதினார். பொ.பி 11 ஆம் நூற்றாண்டில் எழுந்த அந்த இலக்கண நூலான “ஆந்திர சப்த சிந்தாமணி” யில் தெலுங்கு ற-கர, ழ-கரம் என்ற இரண்டு எழுத்துகளே இல்லை. இது தெலுங்கிற்கு ற-கர, ழ-கர எழுத்துகள் / ஒலிப்புகள் அயன்மையானவை என்பதையே காட்டுகிறது என்பர் அறிஞர். 
கன்னடத்தின் முதல் இலக்கண நூலான “கருநாடக பாசை பூசனா”,  பொ.பி 12 ஆம் நூற்றாண்டில், சமற்கிருதத்தில் எழுதப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

கன்னடத்திலும் ற-கர ழ-கரத்திற்கு தெலுங்கைப்போலவே முறையே ಱ, ೞ  என்ற குறியீடுகளைப் பயன்படுத்தினார்கள். அவை முறையே 12, 18ஆம் நூற்றாண்டில் அற்றுப்போன பின்னர் ರ, ಳ   என்ற இவ் வரிவடிவங்கள் கன்னடத்தில் புழங்கின.

தெலுங்கு இலக்கண நூலை யாத்த நன்னய பட்டாரகர், தெலுங்கு ஒலிப்புடன் அயல்மொழி ஒலிப்புகளையும் கருத்தில் வைத்து, 36 தாய்மொழி (தெலுங்கு) எழுத்துகளையும், 19 அயன்மொழி (சமற்கிருதம்) எழுத்துகளையும் கொண்ட எழுத்திலக்கணத்தை உருவாக்கினார். ஆனால், அந்த இலக்கண நூலிலேயே ழ, ற, ன என்ற மூன்று ஒலிப்புகளும்/எழுத்துகளும் இல்லை. ஆங்காங்கு இவ் ஒலிப்புகள் தெலுங்கில் புழங்கியிருந்தாலும், தெலுங்கு அறிஞர்கள் சமற்கிருதத்திற்கு முக்கியத்துவம் தரும்பொருட்டு இவ் எழுத்துகள் இலக்கண / இலக்கியங்களில் இல்லாததை பொருட்படுத்தவும் இல்லை போலும்.

பேராசிரியர் பத்திரிராசு கிருட்டிணமூர்த்தி எழுதிய “The Dravidian Languages” (Cambridge University Press. 2003, on page 81) நூலில், ற-கரத்தை ஏற்கும் அதே வேளையில் ழ-கரத்தை பொருட்படுத்த-வில்லை என்பது கவனிக்கத்தக்கது.

தெலுங்கு ஒருங்குறியின் வரலாறு

மேற்சொன்ன தெலுங்கு எழுத்துகளின் வரலாற்றின் அடிப்படையில், தெலுங்கு வரிவடிவத்தில் இருந்த ற-கர ழ-கரங்கள், கல்வெட்டு ஆவணங்களைப் படிக்க ஏதுவாக, தெலுங்கு ஒருங்குறியில் இடம்பெற வேண்டியது தேவையானது. ஆனாலும், தெலுங்கு இலக்கணத்திலேயே இல்லாததாலோ, அல்லது மக்கள் புழக்கத்தில் அதிகம் இல்லாததாலோ, தெலுங்கு வரிவடிவ ழ-கர எழுத்து மீண்டும் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டது. தெலுங்கு வரிவடிவ ற-கர ( RRA)  எழுத்து மட்டுமே 1991ல், உலகில் ஒருங்குறியின் முதல் வேற்றம் (version 1.0) வெளியானபோது, தெலுங்கு ஒருங்குறி நெடுங்கணக்கில் சேர்க்கப்பட்டது.

அதன்பின், ஏறத்தாழ 21 ஆண்டுகள் கழித்து, 2012ல்தான் தெலுங்கு வரிவடிவ ழ-கரம் ( LLLA) சேர்க்கப்பட வேண்டும் என்ற முன்னீடு அனுப்பப்பட்டது. இந்த முன்னீட்டை (L2/12-015) அனுப்பியவர்களுள் ஒருவர்தான் திரு.வினோதுராசன் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், தெலுங்கு வரிவடிவ ற-கரத்தைப் ( RRA) போன்றே மெல்லிய வேறுபாட்டுடன் ஒரு எழுத்து வடிவம் கல்வெட்டில் காணப்பட்டது . இதன் ஒலிப்பு இன்னெதென்றே அறியாத நிலையில், அதை எப்படி பயன்படுத்துவது என்றே தெரியாத நிலையில் தெலுங்கு-RRRA என்று பெயர் கொடுத்து அதையும் ஒருங்குறியில் சேர்க்க முன்னீடு (L2/12-016) அனுப்பி, அதுவும் தெலுங்கு நெடுங்கணக்கில் சேர்க்கப்பட்டது. அதிலும் திரு.வினோதுராசனின் பங்கு உண்டு. ஒருங்குறி அட்டவனையில் “TELUGU LETTER RRRA - letter for an alveolar consonant whose exact phonetic value is not known” என்று குறிப்பிட்டு, அஃதாவது RRRA (  ) என்ற இந்த எழுத்தை எப்படி ஒலிப்பது என்று தெரியவில்லை என்றே குறிப்பிட்டு தெலுங்கு ஒருங்குறியில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதை “மூன்று” என்ற சொல்லில் வரும் ற-கர ஒலிப்புக்கு இணையாகக் கருதலாம் என்று முன்னீட்டில் சொன்னாலும் குறியேற்ற அட்டவனையில் ஒலிப்பில்லா குறியீடாகவே இருக்கிறது.

இந்தக்குறியீடான  (RRRA), தெலுங்கில் ஏற்கனவே இருக்கும் RRA-கரத்தின் கீற்று வேறுபாடுதான் என்று தொல்லியல் அறிஞர் கூறுகின்றார். இக் குறியீட்டை தக்க தொல்லியல் அறிஞர்களிடம் கலந்தாலோசித்திருந்தால், குழப்பம் தவிர்க்கப்பட்டிருக்கக்கூடும் என்பது அறிஞர் கருத்து. ஆகவே தெலுங்கின் RRA ,  RRRA ஆகிய இரண்டும் தெலுங்கு ற-கரத்தின்  கீற்று வேறுபாடுதானே (glyphical difference) தவிர, அவற்றிற்கு எந்த ஒலிப்பு வேறுபாடும் கிடையாது (phonological difference).

 தமிழில் மூன்று, முற்றம், முறை என்ற மூன்று சொற்களில் வரும் ற-கரம், இருக்கும் இடத்திற்கேற்ப ஒலிப்பு மாற்றம் கொண்டிருக்கும் என்றாலும், அது ஒரே ஒலியன்தான். “மூன்று”-வில் வரும் ற-கரம் சற்றே அதிரொலியாக (voiced) ஒலிக்கும்;  “முற்றம்”-ல் வருவது சிறிது ஊதொலி (aspirate) ஆகவும், “முறை”-யில் சிறிது உரசொலி (fricative) ஆகவும் வரும். இவையாவும் ஒரே ஒலியனின் வெவ்வெறு சிறுமாறுபாடுகளே; தனி ஒலியனோ எழுத்தோ அல்ல. இதே ஒலிப்பு முறைதான் தெலுங்கிலும்.

ஆகையால், ஒவ்வொரு ஒலிப்புக்கும் ஒரு R எழுத்தை உருவாக்குவது அடிப்படைத்தவறாகும். கல்வெட்டுகளிலோ பிற ஆவணங்களிலோ கீற்று வேறுபாடு இருந்தாலும், அது ஒரே ஒலியனின் கீற்றுவேறி (graphic variant) என்றே கருதவேண்டும். அப்படியே கீற்றுவேறியைக் குறிப்பிட வேண்டுமாயினும் எழுத்துரு நுட்பத்தின் வழி தேடுவதே சரியாகும்.  அந்த வகையில், தெலுங்கு-RRRA குறியீட்டிற்கு 0C5A குறியெண்ணை தந்ததற்குப் பதிலாக, தெலுங்கு ற-கரத்தின் (RRA) கீற்றுவேறியாகக் கருதியிருக்க வேண்டும் என்றே தற்போதைய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

ஒருங்குறிச் சேர்த்தியத்தின் கோட்பாடு, அடிப்படையில், கீற்றை (glyph) குறியேற்றம் செய்வதுதான். எழுத்தை அல்ல. இவ்வாறு ஒவ்வொரு கீற்றையும் வெவ்வெறு எழுத்தாகக் கருதி குறியேற்றம் செய்வது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

2012ல் ஆந்திர அரசின் சார்பாக, AP Society for Knowledge Networks என்ற நிறுவனம், தெலுங்கு ழ-கரத்தை ( LLLA u+0C34) தெலுங்கு நெடுங்கணக்கில் சேர்ப்பதை வரவேற்று, பாராட்டியதோடு, ஏற்கனவே இதனை செய்திருக்க வேண்டும் என்றும், இனி தெலுங்கு ழ-கரத்தைக் குறிப்பிட தமிழ் எழுத்துகளையோ, மீக்குறிகளையோ (diacritics) பயன்படுத்தத் தேவையில்லை என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தது. (பார்க்க: https://www.unicode.org/L2/L2012/12076-llla-approval.pdf ).  தெலுங்கு வரிவடிவில் ழ-கரத்தை தெலுங்கில் சேர்ப்பதற்கு இந்திய அரசும் ஆதரவளித்தது. (பார்க்க: https://www.unicode.org/L2/L2012/12079-india-input.txt ). தெலுங்கு நெடுங்கணக்கில் தாய்வரிவடிவ எழுத்துகளே (native characters) தேவை என்றும் அயல்மொழியின் எழுத்துகள் தேவையில்லை என்ற ஆந்திர அரசின் அறிவுரையை, தமிழின் ற,ழ எழுத்துகளை தெலுங்கில் சேர்க்கக்கோரும் (L2/12-119) திரு.வினோதுராசன் தவறவிட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

மேலும், 2019ல், L2/19-401 என்ற முன்னீட்டின் வழியே உயிர்மெய்களுக்கு அடிப்புள்ளி (நுத்தா/nukta) இடும் தேவையொன்றும் ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அவர்களின் மொழித்தேவைக்காக உருவாக்கப்படும் நுத்தா எழுத்தைப்பற்றி நாம் கூற ஏதுமில்லை என்ற போதிலும், அந்த அடிப்புள்ளியிட்ட இன்னொரு தெலுங்கு ழ-கர 
எழுத்தும் () குறியேற்றம் பெறக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் ழ-கர பயன்பாடு குறைந்தது மூன்று வரிவடிவங்களில் காணப்படுகின்றன. 1) பழைய வரிவடிவமான ( u+0C34) 2) L2/19-401 வழியே முன்னிடப்பட்ட அடிப்புள்ளியிட்ட வரிவடிவம் ( u+0C3C à u+0C33) 3) பிற்கால கல்வெட்டுகளில் காணப்படும்  வரிவடிவம் (u+0C32 u+0C30).

இம்மூன்று வரிவடிவங்கள் தெலுங்கில் ழ-கரமாக பயன்படுகின்றன. இது போதாது என்று மேலும் தமிழின் வரிவடிவமான ழ வை அப்படியே தெலுங்கு எழுத்தாக தெலுங்கு நெடுங்கணக்கில்  சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை புதிராகவும் ஏற்க முடியாததாகவும் உள்ளது. முறையாக, பழமையான என்ற வரிவடிவத்தை புழக்கத்தில் கொண்டுவந்திருக்க வேண்டும். மக்களின் பயன்பாடு பெருகப்பெருகத்தான் ஒரு எழுத்து நிலைக்க முடியும். கல்வெட்டுக்கு ஒரு ழ-கரம், இறைப்பாடல்களுக்கு ஒரு ழ-கரம், இலக்கியத்துக்கு ஒரு ழ-கரம், மற்ற உரைகளுக்கு ஒரு ழ-கரம் என்றா ஒரு மொழியில் எழுத்துகளை உருவாக்குவார்கள்?

 திரு.வினோதுராசனின் ஆவணத்திற்காட்டப்பட்ட தமிழ்த் திருப்பாவையின் பாடல்கள் தெலுங்கில் சிலரால் எழுத்துப் பெயர்க்கப்பட்டு (Transliterated) தமிழெழுத்தான ற-கர ழகரத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாய் பயன்படுத்தி எழுதப்பட்டவை. இதை அப்படியே தெலுங்கு வைணவர்கள் எழுத, படிக்க வேண்டுமானால், இருவிதமான எழுத்துருக்களைப் பயன்படுத்தி எளிதாகச் செய்யலாம். காட்டாக, தமிழில், பழையவேண்டுமானால், அதற்கென தனி எழுத்துருவை நாம் பயன்படுத்துகிறோம். திரு.வினோதுராசனே அப்படியொரு எழுத்துருச் செயலியை உருவாக்கியவர். அது போல, தெலுங்கு எழுத்துகளுக்கிடையே தமிழ் எழுத்து வரவேண்டுமானால், அதை எழுத்துரு மாற்றும் நுட்பத்தில் எளிதாகச் செய்யமுடியும். அப்படியான நுட்பத்தீர்வினையே நாம் பரிந்துரைக்கிறோம்; குறியேற்றம் தீர்வல்ல.

இன்னொரு தீர்வாக, தெலுங்கு எழுத்துரு ஆக்குநர் தமிழ் அட்டவனையில் இருந்து ழ வை எடுத்து, அதற்கு உயிர்க்குறியீடுகளை இட்டு தெலுங்கு எழுத்துருவில் பயன்படுத்திக்கொள்ளலாம். எழுத்துப் பெயர்ப்புக்குள்ளான தமிழ் எழுத்துகளைக் கலந்த இலக்கியங்களை, இறைப்பாடல்களை நன்றாக எழுத படிக்க முடியும். எளிதான இந்த நுட்பியல் தீர்வுகளை நாம் மறுக்கவில்லை. ஆனால், தமிழின் எழுத்தை தெலுங்கின் எழுத்தாகவே ஒருங்குறி நெடுங்கணக்கில் நிலையாக குறியேற்றம் செய்வதைத்தான் மறுக்கிறோம்.

தெலுங்கு ற-கரமான (u+0C31), ஒலிப்பில், அப்படியே தமிழ் ற-கரத்திற்கு இணையானது. சிறிதும் வேறுபாடில்லை. அப்படியிருக்க, தெலுங்கில் “ற்ற” என்ற எழுத்தாட்சியின் ஒலிப்பும் உச்சரிப்பும், தெலுங்கு ற-கரமான வை பயன்படுத்தினால், தமிழ்-“ற்ற” வில் இருந்து மாறுபடும் என்பது மிகத்தவறான பார்வை. தமிழ்நாட்டுத் தமிழர்கள் “ற்ற”-வை சற்று அழுத்தி, “ட்ர/ட்ற” என்று ஒலிப்பார்கள். இதனை தவறான ஒலிப்பு வழக்கு என்பர் அறிஞர். ஆனால், ஈழத் தமிழர்கள் நேர்த்தியாக “ற்ற” என்றே ஒலிப்பார்கள். ஒலியளவி மூலம் ஒலிப்பை அளந்தால் இந்த வேறுபாடு நன்கு புலனாகும். (இந்த வழக்கு வேறுபாட்டை மொழியியலில் ஒலிப்பிணை (phoneme joint) என்று கூறுவார்கள்). “ற்ற”-வின் ஒலிப்பு தமிழர்களின் வழக்கிலேயே வேறுபட்டு இருக்கிறது. அதனால், தமிழர்கள் “ற்ற”-வை “ட்ர/ட்ற/ என ஒலிப்பது (தவறாக) போல தெலுங்கர்கள் “ற்ற”-வை ஒலிக்கவே, தெலுங்கு நெடுங்கணக்கில் தமிழ் வரிவடிவமான ற-வை சேர்க்க வேண்டும் என்பது தவறும் அறியாமையும் ஏரணமற்றதுமாகும்.

இது குறித்து எங்களில் சிலர், தெலுங்கு அறிஞர்களுடன் உரையாடிய போது, அப்படியே        “ற்ற”-வின் தவறான ஒலிப்பான “ட்ர/ட்ற”-வே வேண்டும் என்றால், தெலுங்கின்(ட்ற, u+0C1F u+0C31) என்ற தாய்வரிவடிவத்தை பயன்படுத்தலாமே, எதற்காக அயல்மொழியான தமிழின் ற-வை தெலுங்கில் சேர்க்க வேண்டும் என்று வினா எழுப்புகிறார்கள். ஒருங்குறிச் சேர்த்தியமும், திரு.வினோதுராசனும் தெலுங்கு அறிஞர்களைத் தவிர்க்காமல், இதுகுறித்து கலந்து ஆலோசிப்பது தேவையானதாகும்.

திரு.வினோதுராசன், தனது முன்னீட்டில் (L2/20-119), தெலுங்கில் எழுத்துப்பெயர்ப்பான (Transliterated Telugu), தமிழின் திருப்பாவைப் பாடலொன்றை மேற்கோள் காட்டி, தமிழ்-ற, ழ இவற்றை தெலுங்கில் சேர்க்க வேண்டும் என்கிறார். அந்த எடுத்துக்காட்டை படத்தில் காண்க.

ஆண்டாளின் தமிழ்ப்பாட்டை, யார் இப்படி  தெலுங்கில் எழுத்துகளைப் பெயர்த்து எழுதினார் என்று தெரியவில்லை.  அதில் தமிழ் ற-கரம் ழ-கரம் தென்படுவதைக் காண்க. இதே பாட்டை, இன்னொருவர் எப்படி தெலுங்கில் எழுதியிருக்கிறார் என்று கீழே உள்ள படத்தில் காண்க. (சான்று: https://www.youtube.com/watch?v=9ZGHDeEy_9I ). இதில் சிவப்பு வட்டமிட்ட எழுத்துகளில் முற்றிலும் மாறுபட்ட தெலுங்கு “ற்ற”-வை காணமுடிகிறது.

இப்படி, தாய்வரிவடிவத்தில் எழுத்துகள் இருக்கும்போது, அயல்மொழியான தமிழில் இருக்கும் எழுத்துகளை தெலுங்கில் சேர்க்க வேண்டும் என்பது தேவையற்றது.
மேலும், அடிப்படைக் குறியீட்டைப் பற்றிய புரிதல் இல்லாமல், ஆளுக்கு ஆள் தெலுங்கில் (அல்லது பிறமொழிகளில்) வெவ்வேறு விதமாக எழுதிவரும் எழுத்துப்பெயர்ப்புகளுக்கெல்லாம் குறியேற்றம் வேண்டும் என்று சொன்னால், குறியேற்றம் கேள்விக்குறியாகும் என்பதில் ஐயமில்லை.

தெலுங்கில் ற-கர பயன்பாடு 4 முறைகளில் ஏற்கனவே காணப்படுகின்றன. 1) பழைய வரிவடிவமான  (RRA, u+0C31) 2)(RRRA u+0C5A) என்ற -வின் கீற்றுவேறி 3) “ற்ற”-வை “ட்ற” என்று ஒலிப்பதற்காக பயன்பாட்டில் ஏற்கனவே இருக்கும்என்ற வரிவடிவம் 4) இன்னொரு “ட்ற” வரிவடிவமான  (ட்ற, u+0C1F u+0C31). இப்படி 4 வகையான தாய்வரிவடிவமான ற-கரப் பயன்பாடுகளை வைத்துக்கொண்டு, தமிழ் ற-வையும் தெலுங்கில் கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்பதில் ஏரணமோ, தேவையோ இல்லை அல்லவா?


மேலே காட்டிய சான்றும், பிற செய்திகளும், ஏன் தமிழ்-ற,ழ எழுத்துகளை தெலுங்கு நெடுங்கணக்கில் சேர்க்கக்கூடாது என்பதை விளக்குகின்றன. தமிழ் எழுத்துகளைக் கலந்த தெலுங்கு எழுத்துப்பெயர்ப்பில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது உண்மை ஆனாலும், அதற்கு, எழுத்துரு நுட்பவழி எளிதாக, தீர்வை அமைத்துக் கொள்ளமுடியும். ஆதலால் தமிழ்-ற,ழ எழுத்துகளை தெலுங்கு எழுத்துகளாகக் குறியேற்றம் செய்ய வேண்டியதில்லை. மாறாக, தெலுங்கு ஒருங்குறி அட்டவனையில் காலியாக உள்ள இடங்களை வேறு தெலுங்கு எழுத்துகளைச் சேர்க்க முயலவேண்டும்.

முன்னீட்டை அனுப்பிய திரு.வினோதுராசனே, அவரின் முன்னீட்டில், ScriptExtensions.txt என்ற ஒருங்குறி உத்தியின்படி தமிழெழுத்துகளை பயன்படுத்த முடியும் என்று சொல்லியிருக்கிறார். ஆகையால், அதனை இற்றித்து (update), கூடவே எழுத்துரு வழங்கிகளில் (rendering engine) தக்க மாற்றங்கள் செய்து, இது போன்ற பாடல்கள்/உரைகளை தெலுங்கில் பயன்படுத்த முன்வரவேண்டும். குறியேற்றத்தை கைவிடவேண்டும்.

மேலும், இந்தத் தேவையானது குறைவான பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது. (மேலே காட்டிய இரண்டு படங்களில் இருந்து ஒரே பாட்டை வெவ்வேறு எழுத்துகளில் படிக்கும் போக்கினை காட்டினோம்). அவர்களுக்காக தனியே எழுத்துரு செய்துகொள்வது எளிது. அதொடு, இந்தச் சிறிய பயன்பாட்டுக்காக, தெலுங்கு எழுத்துரு ஆக்குநர், பொதுப்பயன்பாட்டில் இருக்கும் தெலுங்கு எழுத்துருக்களை மாற்றம் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

ஆகவே, தமிழின் தாய்வரிவடிவ எழுத்துகளை, தெலுங்கில் கொண்டு போய் ஒருங்குறியில் குறியேற்றம் செய்யக்கூடாது. மாறாக, மேலே விளக்கியிருக்கும் நுட்பவரிதியான தீர்வுகளை கைக்கொள்ள வேண்டும்.

தொடர்புடைய பிற சான்றுகள்:


வல்லுநர் குழுவில் பங்குபெற்றவர்கள்: 1) பேராசிரியர்.பொன்னவைக்கோ 2) முனைவர் கிருட்டிணன் இராமசாமி (இராம.கி), 3) நாக.இளங்கோவன் 4) முனைவர் சு.இராசவேலு 5) முனைவர் சிரீரமணசர்மா 6) முனைவர் சேம்சு அந்தோணி.

……நிறைவு……

Friday, February 23, 2018

"அய்" தவிர்க்கப்படவேண்டும் - பகுதி-2: கய்-மய் செய்யும் தமிழ்ப்பேரழிவுகள்.

கமலகாசன் கட்சி தொடங்கியவுடன் கய்-மய்-தமிழில் கட்சிப்பெயர் வைத்து தமிழைத்தான் எடுத்தவுடன் படுகொலைசெய்துள்ளார். முகநூலில் எழுதும் முக்கால்வாசி அப்பாவித்தமிழ்மக்கள் அனைவரும் அந்தக்கேட்டை கண்டித்துவிட்டனர். ஆனாலும், தமிழக அரசு, தமிழக தமிழ்ச்சங்கங்கள், தனித்தமிழ் இயக்கங்கள், வெளிநாட்டு தமிழ்ச்சங்கங்கள், தமிழ்வளர்ச்சித்துறை, அரசியற்கட்சிகள் என்ற யாரும் இந்த தமிழ்க்கேட்டை கண்டுகொள்ளவில்லை. இவர்களுக்கும் தமிழுக்கும் எப்பொழுதும் தொடர்பிருந்ததில்லை என்பதாக காட்டிக்கொள்கிறார்கள்.


1) மய்யம் என்பது ஏன் பிழையாகிறது.?

அ) கொஞ்சம் அறியை என்ற சொல்லை காண்போம்.

"நீயே அறியை சாலவெம் பெரும" என்று 11-ஆம் திருமுறையில் நான்மணிமாலை சொல்லும் .

"நீ அறியையோ?" என்று ஏரக நவரத்தினமாலை சொல்லும். அழகான சொல்லாட்சி.

கய்-மய் தமிழில் எழுதினால் "நீ அறியய்யோ?" என்று வரும். மை = மய் என்றால், யை = யய் அல்லவா!

மணி + அழகு = மணியழகு. இகரமும் அகரமும் என இரண்டு உயிர் சேர்ந்து வருவதால், யகர உடம்படுமெய் பெற்று மணியழகு என்றாகிறது என்பர் புலவர்.

அதேபோல, அறி + அய்யோ = அறியய்யோ (யகர உடம்படுமெய்) என ஆகி
அடியோடு பொருள் மாறிவிடுவதை காண்க.

ஆ) அதேபோல, சாரியை என்ற சொல்லை அனைவரும் அறிவோம்.

சந்தியா சாரியையா? என்று பகுபத இலக்கணத்தில் கேள்விகள் எழும்.
அது "சந்தியா சாரியய்யா?" என்று ஆகி சொல், பொருள் என்ற இரண்டுமே சிதைந்து போவதை காண்க.

இ) கழுதையை அறியாதவர் உண்டோ?

இது கழுதையோ! என்று இனிமேல் வியக்க முடியாது. ஏன் தெரியுமா?
கய்-மய் தமிழின் கொடுமையால், கழுதையோ என்ற சொல், கழுதய்யோ என்று மாறி, கழுது + அய்யோ என்று பிரியும். சரி தெரிந்த கழுதைதானே என்று நினைக்காதீர்கள். கழுது என்றால் பேய் என்ற பொருளுண்டு. (கழுகொடு கழுதாட என்று அருணகிரிநாதர் முத்தைத்தரு.... .பாடலில் சொல்வார்).

கய்-மய் தமிழ் கழுதையை கழுதாக, பேயாக மாற்றிவிடுவது பொருட்சிதைவல்லவா?

ஈ) பத்தன், பத்தை (பக்தர், பக்தை) - "பத்தையா வந்தாள்?" என்று கேள்வி கேட்டுவிட முடியாது. பத்தையா = பத்தய்யா! பத்தய்யா வந்தாள்? பத்து அய்யாக்கள் வந்தாள் என்று ஆகி, பொருள், திணை என்ற எல்லாமே வழுவுகின்றன.

உ) அதேபோல. "கோழி வாங்கலையா! மீனையா வாங்கினாய்?" என்று எழுதிவிட முடியாது. மீனையா = மீனய்யா! "மீனய்யா வாங்கினாய்" என்று ஆகி எந்த மொழி என்றே தெரியாமல் போகும்.

ஊ) "இது உன் தங்கையா?" என்று கேட்க முடியாது. ஏனென்றால் கய்-மய்-தமிழ்,

"இது உன் தங்கய்யா?" என்று மாற்றிவிடும். தங்கச்சியை, தங்க அய்யாவாக மாற்றிவிடும் எண்னற்ற கொடுமைகள்தான் கய்-மய்-தமிழ். சொல், பொருள், தினை, தொடர், பகுபத உறுப்பிலக்கணம், மாத்திரை, யாப்பு என்ற அனைத்தையும் வகைதொகை இல்லாமல் சிதைக்கிற வழக்கை கண்டுகொள்ளாமல் கேலியும் கிண்டலுமாய் பொழுதுகள் கழிகின்றன.

2) மய்யம் என்ற சொல்லை தவறு என்று சொல்ல ஏன் நா தடுக்கவேண்டும்? அந்த தடுமாற்றத்தை மறைக்க மையம் என்ற சொல்லே தமிழ் இல்லை - அது வடமொழி என்று உதறித்தள்ளும் பொறுப்பற்ற தன்மையை என்ன சொல்ல?!

தன்மை, தண்மை, வன்மை, மென்மை என்று எத்தனை சொற்களில் மை விகுதியாக வருகிறது. மை என்பதே தனிச்சொல்தானே? மை + அம் என்று அம் விகுதி பெற்றுவிட்டால் உடனே அது வடமொழியாகிவிடுமா?
இருக்கும் தமிழ்ச்சொல்லை எல்லாம் வடமொழி வடமொழி என்று தள்ளிவிடுவது தமிழர்களா? அல்லது வடவரா? அச்சு + அம் = அச்சம் என்பது வடமொழியா? ஐயம் என்பது வடமொழியா? தமிழம் என்பது வடமொழியா?

சிந்திக்க வேண்டாமா? நமது பொறுப்பற்ற போக்குக்கு ஒரு வரம்பு வேண்டாமா?

3) மய்யம் என்று ஏதோ எழுதிவிட்டார். இதனால் என்ன இப்ப கெட்டுப்போயிடுச்சி! இதுக்கு போய் எல்லாரும் ஏன் தவிக்கிறீங்க? - இப்படிச்சிலர்.

அ) மய்யம் என்ற சொல்லை இன்று உலகில் உள்ள 8 கோடித்தமிழரும் படித்துவிட்டனர். இனி அந்தக்கட்சியை அப்படித்தான் எழுதுவர்.

ஆ) இருபது முப்பது ஏடுகளும் அப்படித்தான் நாடோறும் எழுதும். அவர்களை பொறுத்தவரை கமலகாசனால் நாலுபேர் அதிகமாக வாங்கிப்படித்தால் வரும்படி கூடும். அவ்வளவுதான்.

இ) இருபத்தைந்து தொலைக்காட்சிகளும் அப்படி எழுதியே படங்காட்டி விட்டனர். அவர்களுக்கும் நல்ல தமிழுக்கும் தொடர்பே இருந்ததில்லை.

ஈ) சட்டப்படி கட்சிப்பெயர் பதிவாகிவிட்டது. தவறான தமிழ் சட்டமாகி அதற்கு மக்களை வாக்குப்போடவைப்பதும் பேசவைப்பதும் வல்லாண்மையன்றி வேறென்ன? ஒரு தவறான செயல், தவறான தமிழை உருவாக்கி, ஒரு 8 கோடிப்பேர் கொண்ட குடியை பயன்படுத்த வைக்கிறது. நாம் வேடிக்கை பார்க்கிறோம்.

கமலகாசன் தமிழறிஞர் இல்லை. அவர் செய்த தவற்றினை சுட்டிக்காட்ட வேண்டியது தமிழ் அறிவுலகிலன் கடமையல்லவா?

4) ஐ-க்கு அய்-போலியா?

இதுபற்றிய நல்ல உரையாடலை http://www.wetamizh.com/archives/1752 என்ற பதிவில் எழிலன் எழுதியுள்ளார். அதைக்காண்க.

மேலும்:

"அகர இகர ஐகாரம் ஆகும்" -- தொல்காப்பியம், மொழிமரபு-21

ஐ-என்ற கூட்டெழுத்தின் (dypthong) தோற்றத்தை கூறுகிறார் தொல்காப்பியர். ஐகாரம் இப்படி உருவாவதொடு, தமிழுக்கு தனிச்சொல் உள்ளிட்ட பல்வேறு பண்புகளை தருவதை அறிவோம். (எனது முந்தைய மடலை காண்க). இங்கே ஐ-யை குறிலா நெடிலா என்ற ஒலி-வகைப்படுத்தாமை காணத்தக்கது. அஇ எனும் ஓசை முழு நெடிலாக எப்படி இருக்க முடியும்? ஒருவேளை ஐ குறுகியும் ஒலிக்கும் என்று சொல்ல வந்தாரா தொல்காப்பியர் என்பது தெரியவில்லை.

மய்யம் என்று எழுதிவிட்டு, மை-க்கு போலி மய் என்று சொன்னால் எப்படி?

தொல்காப்பியர் வழி பார்த்தால், மை = மஇ என்றோ, மை=மஇய் என்றுதானே இருக்கிறது. அப்படியென்றால், மையம் என்பதை மஇயம் என்றோ, மஇய்யம் என்றோதானே எழுதவேண்டும்?

மேலும்:

தமிழில் போலி இலக்கணம் என்ன சொல்கிறது?

5 வகையான போலிகளை சுட்டிக்காட்டுகிறது.

அ) முதற்போலி -- பசல் = பைசல் -- அகரம்(ப) ஐகாரமாக(பை) மாறுகிறது.
ஆ) இடைப்போலி -- அரயன் = அரையன் -- அகரம்(ர) ஐகாரமாக(ரை) மாறுகிறது.
இவற்றை நன்கு கவனிக்க. அகரம் என்பது ஐகாரமாக இருக்கலாம் என்று சொல்வதால், ஐகாரமும் அகரமாக மாறலாம் என்று சொல்லவில்லை. அகரத்திற்குதான் ஐகாரம் போலியாகிறது. காட்டாக, காலை மாலை என்பன, கால, மால என்று வந்துவிடுவதில்லை. கால என்பதும் மால என்பதும் பொருளிலேயே மாறுபடுகின்றன. கண்ணை மூடிக்கொண்டு போலிகளை போட்டால் பெரிய சிதைவுகள் ஏற்படுகின்றன.

அப்படியும் வலிந்து ஐகாரம் அகரமாகும் என்று சொல்வார்களெனில், போலி இலக்கணப்படி, அரையன், அரயன் ஆகத்தான் இலக்கணம் இருக்கிறதன்றி, அரய்யன் என்று ஆக இலக்கணம் இல்லை. மலையன், மலயன் ஆகத்தான் இலக்கணம் இருக்கிறதன்றி, மலய்யன் ஆக இலக்கணம் இல்லை.

இந்த இரண்டு போலிகளொடு, கடைப்போலி(பந்தல் = பந்தர்), முற்றுப்போலி (ஐந்து = அஞ்சு), முன்பின்னதாகத் தொக்க போலி (சதை = தசை) ஆகிய மூன்றுவகை போலிகள் வரும்.

இதில் முன்பின் தொக்க போலியை கூர்ந்து காண்போம்.

சதை = தசை - இங்கே பொருள் கெடாமல் ஐகாரம் எழுத்தில் மாறி அமர்ந்திருக்கிறது. அதுதான் போலி.

இதையே, கய்-மய் முறையில் எழுதினால், சதய், தசய் என ஆகிவருமல்லவா?

இப்பொழுது த-வுக்கு ச-வும், ச-வுக்கு த-வும் மாறுகின்றன. இங்கே போலி இலக்கணமே செத்துவிடுவது காண்க. த-வில் உள்ள அகரம், ச-வில் உள்ள அகரத்திற்கு எப்படி போலியாகும்?

இலக்கணத்தையே சிதைக்கிற முறை, ஆராய்ச்சியில்லாமல் மேலோட்டமாக சொல்லப்பட்ட கய்-மய் முறை.

போலி பற்றி பார்க்க: http://www.tamilvu.org/ta/courses-degree-c021-c0211-html-c0211334-15600
மேலும்:

போலி என்று சொல்லப்படுவது போலியே இல்லை என்றாலும் போலி, போலி என்று கூவிவிற்பவர்களுக்கு செஞ்சோற்றுக்கடன் என்று ஒன்று உள்ளதாக கருதி அவர்களுக்காக ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும், போலியே வாழ்வாக இருக்க முடியுமா? போலியே தமிழாக இருக்க முடியுமா? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

அண்மையில் நண்பர் சேக்முகமது உருபோலிப்போட்டி என்ற நல்ல சொல்லாட்சியை Fancy Dress Competition என்ற நீண்ட ஆங்கிலத்தொ டருக்கு இணையான சுருக்கமான தமிழாக தந்திருந்தார். உருபோலியைப்போலவே, எழுத்துப்போலியும் ஏதோ ஓர் இடத்தில் பகட்டு எழுத்தில் வரலாமே தவிர அதுவே மொழியாகி விடக்கூடாது. வாழ்க்கை முழுதும் பகட்டு உடுப்பு, மாறுவேச உடுப்பு அணியமுடியுமா?

ஆகவே இந்த வறட்டுப்போலிகளை மூட்டைப்பூச்சியை நசுக்குவது போல நசுக்கி வீசவேண்டும்.

5) ஓர் அச்சுக்கட்டை உடைந்து போனதற்காக, சிக்கன சீலரான பெரியார் தமிழ் எழுத்துகளையெல்லாம் மாற்ற வேண்டும் என்று அடித்து விட்டதையும், பேரறிவை பொதித்து வைத்திருக்கும் உலகின் தொன்மையான இலக்கண நூலை யாத்த தொல்காப்பியரையும் ஒப்பிட்டு பெரியாரை தொல்காப்பியர் மாதிரி பார்ப்பது தவறு. பெரியாரின்மேல் பாசத்தை காட்ட நிறைய வழிகள் இருக்கின்றன. அதைத்தேர்ந்து கொள்ளுங்கள். தமிழ்மொழி குறித்து அவர் சொன்னவற்றை, வெறும் ஆத்திர அவசரத்தில் எழுதியதாக கருதி கடந்து போவது நல்லது.

அன்புடன்
நாக.இளங்கோவன்
24/02/18

Wednesday, February 14, 2018

மன்னிப்பு என்பது தமிழ்ச்சொல்லே

மன்னிப்பு என்பது தமிழ்ச்சொல் அல்ல என்றும், அது உருதுச்சொல் என்றும் கேலியொன்று, முகநூலிலும் வாட்சப்பிலும் வேகமாக உலவுகின்றது.
மன், மன்னு, மன்பதை, மன்னன் போன்ற உயர்ந்த சொற்கள் மன் என்ற சொல்லிலிருந்து கிளைப்பதை எளிதில் புரிந்து கொள்ள முடியும். மன்றுதல், மன்றித்தல் என்ற சொற்களை ஊன்றிக்காண இருக்கிறது.
மன்றுதல் என்றால், கடுமையான தண்டனை தராமல், தண்டம் கட்டச்சொல்லி விடுதல்.
பார்க்க: http://dsalsrv02.uchicago.edu/cgi-…/philologic/getobject.pl…
"மன்றியுந் நின்ற மதிலரை மாய வகைகெடுக்கக்
கன்றியுந் நின்று கடுஞ்சிலை வாங்கிக் கனலம்பினால்......"
(திருமுறை-4, பூந்துருத்தி பதிகம் - 88)
மன்றியுந் நின்ற மதிலர் என்றால் "போய்த்தொலை என்று கண்டித்து விடப்பட்ட மதிலர் போகாமல் நின்றார்" என்று பொருள். அப்படி போய்த்தொலைக என்று விட்டும் போகாமல், மல்லுக்கட்டிய மதிலரை, மாய்த்தே விடவேண்டும் என்று சினந்து மாய்த்த சிவபெருமான்" .... என்பது இங்கு பொருளாகும்.
அதேபோல,
"கன்றித்தன் கண் சிவந்து கயிலை நன்மலையை யோடி
வென்றித்தன் கைத்தலத்தாலெடுத்தலும் வெருவ மங்கை
நன்றுத்தான் நக்கு நாதன் ஊன்றலும் நகழ வீழ்ந்தான்;
மன்றித்தான் ஊன்றினானேல் மறித்து நோக்கில்லை யன்றே"
(திருமுறை-4, கயிலாயம் - 47 - 5)
இராவணன், பேராசை கொண்டு கயிலை மலையை பெயர்க்க, உமை அஞ்ச,
சிவபெருமான் தண்டிக்கிறார். எப்படியென்றால், தனது கால் விரலால் இராவணனை
மெல்லியதாய் ஊன்றுகிறார். அதற்கே அவன் அலறி கதறுகிறான். அதோடு போய்த்தொலை என்று விட்டுவிடுகிறார் சிவன். அப்படியில்லாமல், கடுமையாக மன்றித்தே ஆகவேண்டும் என்று கருதியிருந்தால், இராவணன் பிழைத்தே இருக்கமாட்டான் என்பது பாடலின் பொருள். இங்கு கடுமையாக என்ற மறைவுப்பொருள், பதிகத்தின் பிற பாடல்களால் பெறப்படும்.
அதாவது, கடுமையாக வெறுத்து ஒதுக்காமல், அல்லது கடுமையான தண்டனையை தராமல், மன் (=பெருமையுடைய, வலிமை மிகுந்த) என்ற அந்த உயர்ந்த பண்புடைய பெரியோராய் நின்று குறைவான தண்டனை தருதல் என்பதற்கு மன்றுதல் என்று பொருள். "கடிது ஓச்சி, மெல்ல எறிக" என்ற வள்ளுவம் இங்கே ஒத்துப்பார்க்கத்தக்கது.
மன்றாடி கேட்டுக்கொள்ளுதல் என்றால், மன்றில் (மன்றத்தில்) பொதுவில் நின்று இறைஞ்சி கேட்டு மன்றி பெறுதல்.
10 ஆண்டு தண்டனை பெற்றவர்கள், 5 ஆண்டாக தண்டனை குறைக்கப்படுதலுக்கும்
மன்றிப்பு, அல்லது பொதுமன்றிப்பு என்றுதானே பெயர். 5 ஆண்டாக குறைக்கப்பட்டாலும் தண்டனை தண்டனைதானே. மன்னிப்பு கொடுத்தல் என்பது குற்றத்திற்கான குறைந்த தண்டனைதானே.
ஆகவே, மன்றிப்பு > மன்னிப்பு என திரிந்திருக்கிறது.
மன்றுதல் = மன்றித்தல் = மன்னித்தல்; மன்றிப்பு = மன்னிப்பு.
வழக்கில் றி-கரம் னி-கரமாக திரிவதுண்டு. காட்டாக பன்றி = பன்னி என்று பேச்சுவழக்கில் வருவதை சொல்லலாம். என்ன பன்றான் என்ற பேச்சு வழக்கு,
என்ன பன்னான் என்று வருவதை ற-கரம் ன-கரமாக திரிவதற்கு சொல்லலாம்.
ஆகவே மன்னிப்பு என்பது தமிழ்ச்சொல்லே.
மீண்டும், மன் என்று தொடங்கும் பல உயர்ந்த சொற்களை வைத்துக்கொண்டு, மன்னிப்பு அயற்சொல் என்று சொல்லவே முடியாது.
அன்புடன்
நாக.இளங்கோவன்

Monday, January 29, 2018

ஆண்டாள் - மடல் 3. வைரமுத்தின் 10 பிழைகள்.



"ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னுமுயிர்க்கு" என்பது வள்ளுவ மரபு.  "கடிது ஓச்சி,  மெல்ல எறிக; நெடிது ஆக்கம் நீங்காமை வேண்டுபவர் "  என்பது அரசனுக்கு புகட்டிய வள்ளுவமாயினும் இம்மரபு அறிவுலகத்திற்கு அதிகம் பொருந்தும் என்பதை சொல்லவும் வேண்டியதில்லை. "சுட்டபழம் வேண்டுமா, சுடாதபழம் வேண்டுமா", என்று கேட்டு தமிழ்ப்பெருங்கவியான ஔவையாரின் ஞானச்செருக்கை சோதித்தது இம்மண்ணின் முருகமரபு. "நீயே முக்கண் முதல்வனும் ஆகுக" - ஆனால் உன் பாட்டு பைசாவுக்கு தேறாது என்றது நக்கீர மரபு.

இந்த தமிழ்மரபுகளை ஒருங்கிணைத்தால் கிடைக்கின்ற அறிவுலகின் அழகை, இம்மண்ணைத்தாண்டி வேறெங்கு வரலாற்றின்பதிவாக காணமுடியும் என்று நான் அறிந்தேனில்லை. இவற்றை மனதில் தாங்கி, ஆண்டாளைப்பற்றி வைரமுத்து பொழிந்த பிழைகளை நோக்கிக்காண்பதற்கு, மூன்று வாரங்கள் பொறுத்திருந்தது தேவைதான்.

1) எந்த ஓர் ஆராய்ச்சிக்கட்டுரையும் புனைவு(fiction), வருணனை(commentary), மிகையான புகழ்ச்சி  ஆகியவற்றை கொண்டிராது. ஆய்வுக்கட்டுரைக்கென்று இலக்கணம் உண்டு. வைரமுத்தின் கட்டுரையில் வருணனையும், புனைவும் கவிதை இலக்கியத்தில் இருப்பது போன்றே மிகுந்து கிடக்கின்றன. ஆதலால் அது ஆராய்ச்சிக்கட்டுரையே அல்ல.

2) சிறந்த கவிஞர். தமிழாற்றல் கொண்டவர். நூல் கற்றவர் என்று, ஆண்டாளை புகழ்ந்து சொற்பொழிவாற்ற அழைத்த இடத்தில், தினமணியில் வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு எழுதிய கட்டுரையை அப்படியே படித்தது சொற்பொழிவும் அல்ல.

3) "சமண - பௌத்த மதங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு வைதிக மதம் தன் கட்டுக்களைச் சற்றே கழற்றத் தொடங்கியது.....மக்களை நோக்கி இறங்கி வந்தது."   ---வைரமுத்து.

இது அப்பட்டமான வரலாற்று திரிப்பு.

சமண-பௌத்த மதங்களின் வீழ்ச்சியே, தமிழ் ஆதிசைவ சமயத்தாலும், மாலிய சமயமான விண்ணவத்தாலும் ஏற்பட்டது. வைதீகம் என்பது, வடமொழி வேதங்களை வழிபட்டு, உயிர்ப்பலி வேள்விகளை செய்து சிறுபான்மையாக உலவி வந்தது. அதன் மரபை பத்தி இயக்கம் (பத்தி = பக்தி) தோன்றிய காலத்துக்கும் முன்னரே, மணிமேகலையில் ஆபுத்திரன் கதையில் நன்கறியலாம். வைதீகத்திற்கும் அன்றெழுந்த சைவ,வைணவத்திற்கும் எந்தத்தொடர்பும் இல்லை. இன்று தமிழ்அரசர்களின் ஆதரவின்மையால் சைவம் திரிவுகளுக்குள்ளாகி கிடக்கிறது. வைணவமோ வடக்கு வைதீகத்தை உள்வாங்கியது போல காட்சியளிக்கிறது. ஆனாலும், இன்றைக்கும் சைவமும், வைணவமும் தனித்தியங்குவது காண்க. வைரமுத்தின் கட்டுரை ஆதிசைவத்தையும், தொல்காப்பிய மாலியத்தையும் அப்படியே வைதீகமாக்கி வரலாற்றை திரிக்கிறது. இது சைவ,வைணவத்தின்பால் அவருக்கிருக்கும் அறியாமையை காட்டுகிறதா? அல்லது காழ்ப்பை காட்டுகிறதா? என்று அறியமுற்படுவது தேவையில்லாத வேலை என்றாலும், முக்கியமான வரலாற்றுத்திரிப்பு ஒன்று கட்டுரையில் நிகழ்கிறது என்பதும் அது வைரமுத்து கவனமாக களமிறக்கிய பிழை என்பதும் தெளிவு. (குறிப்பு: வைணவம் = விண்ணவம் = மாலியம்)

4) ஆண்டாளை "கண்டெடுக்கப்பட்ட கனகம்" என்று புகழ்ந்து, அடுத்த வரியிலேயே ஆண்டாளின் பெற்றோரையும் குலத்தையும் தேடுவது அறிவர் மரபன்று. இதை பலரும் எடுத்துக்காட்டி வெகுண்டார்கள் என்றால் அதில் மனிதமும் தெய்வமும் கலந்து நின்றன என்றுதான் சொல்ல வேண்டும். "அறியாக்குலம்" என்பது எப்படி இரங்கற்குரியதாய் ஒரு நூற்றாண்டு முன்புகூட வழக்கில் இருந்தது என்று பேராசிரியர் மறைமலை எடுத்துரைத்து வருந்தியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

5)  "பெண், வீட்டுப்பொருளாகவும் வீட்டுக்குள் ஒரு பூட்டுப்பொருளாகவும் கருதப்பட்ட 8ஆம் நூற்றாண்டில், பெருமாள் சந்நிதியின் பாட்டுப் பொருளாய் ஆண்டாள் என்றொருத்தி ஆக்கமுற்றதெப்படி? " ------ வைரமுத்து.

வீட்டுப்பொருள், பூட்டுப்பொருள், பாட்டுப்பொருள் என்பதெல்லாம் வெறும் அடுக்குமொழிகளன்றி வேறில்லை. கவிஞரல்லவா? அழகாக எழுதியிருக்கிறார்; ஆயினும், இவர் சொல்லும் 8ஆம் நூற்றாண்டு ஆண்டாளுக்கு முந்திய நூற்றாண்டில்,
மங்கையர்க்கரசியாரும், மாதினியம்மையாரும் மிகப்புகழ்பெற்ற பணிகளை செய்துவிடுகிறார்கள். அப்பரடிகளின் அக்கையார் திலகவதியாரே, அப்பரடிகளை சமணத்திலிருந்து மீட்டு சைவக்குரவராக்கி வரலாற்றில் நிலைபெறுகிறார். மங்கையர்க்கரசியாரோ தனது கணவனான அரசனை அயற்சமணத்திலிருந்து மீட்டு தமிழ்ச்சிவமாக்கிய பாண்டிமாதேவி. இவர்களுக்கும் இரண்டு நூறாண்டுகள் முந்திப்பார்த்தால், காரைக்காலம்மையார் நாகநாட்டிலிருந்து காட்சி தருகிறார். பெண்கள் சம அளவில் பொதுக்களத்தில் இருந்தார்கள் என்று சொல்லமுடியாவிட்டாலும், நான்கு நூற்றாண்டுகளிலேயே காரைக்காலம்மை, திலகவதியார், மங்கையர்க்கரசியார், ஆண்டாள் போன்று உயர்ந்த பெண்மணிகளை அப்போது காணமுடிகிறது. ஆனால், பிற்கால ஔவையாரைத்தவிர, ஆண்டாளுக்குப்பின், சிறந்த நிலைபெற்ற பெயரெடுத்தவர் என்று பார்த்தால் வீரமரபில் வேலுநாச்சியாரை மட்டுமே குறிப்பிட முடிகிறது. 400 ஆண்டுகளில் நான்கு பெண்மணிகளை பொதுக்களத்தில் உயர்ந்த இடத்தில் காணமுடிகிறது.1300 ஆண்டுகளில் இருவரை மட்டும் காணமுடிகிறது. அப்படியென்றால், இப்பொழுதைவிட அப்பொழுது பெண்களுக்கு சிறப்பானதாகவே இருந்திருக்க வேண்டும். ஆகையால் வீட்டு, பூட்டு, பாட்டு என்பதெல்லாம் எகனை மொகனை கூடிய முன்முடிவு. கோயில் விழாவில் தேவையில்லாதவற்றை பேசினால் இப்படித்தான் உறுதியற்ற செய்திகளில் போய்முடியும்.

6) "பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள்" --- வைரமுத்து

சிவன்மேல் பத்திகொண்ட புனிதவதியாரை, "அம்மையே" என்று அன்னை உறவை வைத்து இறைவன் அழைத்ததால் அவர் அம்மை என்கிற காரைக்கால் அம்மை ஆனார். அதேபோன்று தமிழ்வரலாற்றில் முதற்பெரும் சிவபத்தியுடைய பெண்மணியாக காட்சியளிப்பவர் இராவணன் மனைவியான வண்டோதரி (மண்டோதரி என்பது திரிவு). உத்திரகோசமங்கையில் வந்து வணங்கிநின்றபோது, அவர் கையில் குழந்தையாய் தவழ்ந்த சிவனை போற்றிப்பாடுவார் மாணிக்கவாசகர். அப்பன் நீ, அம்மை நீ என்று எல்லாமே நீ என்று இறைவனை பாடிக்கொண்டே வரும் அப்பரடிகள், ஒப்புடைய மாதரும் நீ என்பார். ஒப்புடைய மாதர் என்றால் மனைவி என்று பொருள். "தவளே இவளெங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்" என்று சத்தியை பாடி, அடுத்த வரியிலேயே, "அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினள்....." என்பார் அபிராமி பட்டர்.

சிவன் தன்னிடம் பத்திகாட்டிய ஒரு பெண்மணியை தனது அன்னையாக்கி கொள்கிறான். இன்னொரு பெண்ணுக்கு பிள்ளையாகிப்போகிறான்.
இன்னொரு பத்தருக்கு மனைவியும் இறைவனே என்ற பார்வையை தருகிறான். அப்படித்தான் திருமால் தன்னையே கணவனாக அடைய வேண்டுமென்று தவமிருந்த ஆண்டாளை தனக்கு இடப்புறத்திலே இறைவியாகவே வைத்துவிடுகிறார்.

இவை எல்லாமே கற்பனையாகவும் புனைவாகவுமே வைத்துக்கொண்டாலும், இதிலிருக்கிற பண்பாடும், இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நெருக்கமும் மிகச்சுவையானவை; இதமானவை.

ஓர் உயர்ந்த உறவை பேசவரும்போது இயல்பான வழக்கத்தில் பண்பாடு வாழ்கிறது. "பெருமாளுக்கென்றே முந்தி விரிக்கத் தலைப்பட்டவள்" என்று ஆண்டாளை வைரமுத்து குறிப்பிடும்போது பண்பாடு கரகரவென்று அறுக்கப்படுகிறது. யாராவது "என் தாய் என் தந்தைக்கு முந்தி விரித்தாள்" என்று பேசக்கேட்டிருக்கிறோமா? சாதாரண மாந்த வாழ்விலும் இருக்கும் பண்பாட்டை காற்றில் பறக்கவிட்டார் கவிப்பேரரசு வைரமுத்து.

7) "திருப்பாவையின் 19ஆம் பாட்டிலும் நாச்சியார் திருமொழியிலும் பெண்மைக்கென்று அந்நாளில் இட்டுவைத்த கொடுங்கோடுகளை ஆண்டாள் தாண்டியதெங்ஙனம்? கன்னி கழியாத ஒரு பெண்ணின் பாலியல் உரையாடலுக்கு எது அடிகோலியது?" --- வைரமுத்து

இதுதான் கட்டுரையில் மட்டமான இடம் என்றால் மிகையல்ல.

"பாலியல்" என்ற சொல்லே மிக அருவெறுப்பானது. மலிவான பார்வையில் வெளிவரும் சொற்களை விரித்து எழுதுவதே தவறு. வைரமுத்தின் பெரிய சொற்குற்றம் இது.

8) 19ஆம் பாட்டும் நாச்சியார் திருமொழியும்:

ஆண்டாளின் எம்பாவையும் (திருப்பாவை), மாணிக்கவாசகரின் எம்பாவையும் (திருவெம்பாவை) தன்மையில் ஒத்தவையாகும். இப்பாடல்களின் உட்பொருள், "ஒரு பக்குவம்பெற்ற ஆன்மா, இருளில் மாயையில் மூழ்கி உறங்கிக்கிடக்கும் பக்குவம் பெறாத ஆன்மாவிற்கு இறைவனின் சிறப்பை சொல்லி, தட்டி எழுப்பி நம்பிக்கையளித்து,  ஆற்றுப்படுத்த விடுக்கின்ற அழைப்பும் வழிகாட்டலுமாகும்." (ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களில் ஓர் ஆன்மா மூழ்கிக்கிடக்கும் அவலத்தை இருபா இருபஃது விவரிக்கும்). அறிவான சிவத்தோடு இணைய சத்தியை அழைப்பதாக சிவநெறி சொல்லும். இங்கே விண்ணவத்தில் தன்னையே இறைவியாக விதித்துக்கொண்ட ஆண்டாள் பிறரை இறையை நோக்கிஅழைக்கின்றார்.

இறையை வழிபட, ஒன்றாகக்கூட அழைக்கின்ற அழைப்பினை சிவ, விண்ணவ நெறிகளில் மட்டுமல்ல, வேறு சமயநெறிகளிலும் இன்றைக்கும் காணலாம். ஒரு குறிப்பிட்ட சமயநெறியினர் பலரை எழுப்பி /அழைத்து ஒன்றுகூடாமல் வழிபாடே செய்வதில்லை. வழிபாட்டை, நோன்பை கூடிச்செய்யும் மரபு தமிழ்க்குமுகத்தின் ஆணிவேர். அந்த ஆணிவேரை வருணமும், சாதி ஏற்றத்தாழ்வும் பிடுங்கி எறிந்தன பின்னாளில். ஆண்டாளும், மாணிக்கவாசகரும் விடும் அழைப்புகள் (Prayer Calls) மிக உயர்ந்த நெறியினதாகும். வெறும் பெண்டிரை நோன்புக்கு அழைக்கும் பதிகங்களை இருவரும் இயற்றவில்லை. அந்த அழைப்பு வெறும் விளையாட்டல்ல. குமுகத்தை (குமுகம் = சமூகம் = Society) கட்டியமைக்க அவர்கள் பட்ட பாடு. பத்திமரபு என்பது பொதுமரபு என்று எனது முதல்மடலில் சொல்லியிருப்பதை ஒத்துக்காண்க.

எம்பாவை பாடி இறைவனைக்கூட பக்குவம் பெறவேண்டிய ஆன்மாக்களை அழைத்த மாணிக்கவாசகர், ஆத்மநாதராகவே ஆவுடையார் கோயிலில் வீற்றிருக்கிறார். அதே பணியை விண்ணவத்தில் செய்த ஆண்டாள் இறைவியாக ஆகி, வில்லிப்புத்தூரில் வீற்றிருக்கிறார்.

இருவருமே உருகி உருகி இறைவனை காதலித்தவர்கள். இருவருமே, இறைவனிடம் முழுச்சரணகதி அடைந்தவர்கள். மாணிக்கவாசகர் இறைவனை குருவாகக் கருதி ஐக்கியமானார். ஆண்டாள் கணவனாகவே இறைவனை வரித்துக்கொண்டார்.

திருப்பாவையின் அந்த 19ஆம் பாட்டு சொல்வது இதுதான்:

"உன் கழலடைய, உன்னோடு கலக்க உன்னை கணவனாகவே வரித்து தவமிருக்கும் எனக்கு அருள் செய்யாதிருப்பது, உன் அடியார்களையும் மறக்குமளவிற்கு, நப்பின்னை பிராட்டியார் உன்னிடம் காட்டும் அன்பிலும் காதலிலும் கரைந்து போனதனாலோ? இது சரியா?". இதுதான் அதன் பொருள். அதை பாலியல் கொச்சையாக பேசினால் எப்படி?

"கூர்த்த மெய்ஞானத்தால் கொண்டுணர்வார் தங்கருத்தின் நோக்கரிய நோக்கே..." என்று சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் சொல்வது மெய்யியலை பேசும்போது மிகவும் பொருந்தும். ஆண்டாளின் இலக்கியத்தை உணர கூர்த்த மெய்நோக்கு தேவை.

திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் படிக்கும் கண்கள், தங்கள் ஆராய்ச்சிகளை தாறுமாறாக அவிழ்த்துவிடுகின்றன. வைரமுத்தும் அதையே செய்திருக்கிறார். ஆண்டாளுக்கும் மாணிக்கவாசகருக்கும் இறைவனோடு கலக்க வேண்டும் என்ற ஒரே தவிப்புதான். அந்தத்தவிப்பை புரிந்து கொள்ள வேண்டியவர்கள், ஆண்டாளை பருவமடைந்த பெண்னாக பார்ப்பதுதான் அவர்களின் கோளாறு.
நாச்சியார் திருமொழியில் 5ஆம் பதிகத்தில் குயிலோடு பேசும் ஆண்டாளை நன்கு புரிந்து கொள்ள வேண்டுமெனின், மாணிக்கவாசகரின் குயிற்பத்தை படிக்கவேண்டும். இருவரும் குயிலை வைத்து பேசுகின்ற பேச்சு, கெஞ்சல், மிரட்டல் என்ற பலஉணர்வுகளும் ஆன்மவிடுதலைக்கு அவர்களின் தவிப்பை சொல்லும் பேரரும் பதிகங்களாகும்.

நாச்சியார் திருமொழியின் 13ஆம் பதிகத்தில் 9 ஆம் பாட்டில் ஆண்டாள் இப்படி பாடுவார்.

"கொம்மை முலைகள் இடர்தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல்
இம்மைப்பிறவி செய்யாதே இனிப்போய் செய்யும் தவந்தானென்?
செம்மையுடைய திருமார்வில் சேர்த்தானேலும் ஒருஞான்று
மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி விடைதான் தருமேல் மிகநன்றே."

மானுடவாழ்வின் அல்லல்களில் இருந்து விட்டுவிடுதலையாகி முத்திபெற தவிக்கின்ற தவிப்புதான் ஆண்டாளின் தவம். இதையே, மாணிக்கவாசகர் எப்படிப்பாடுகிறார் பாருங்கள்!

"பொழிகின்ற துன்பப்புயல் வெள்ளத்தில் நின் கழல் புணை கொண்டு
இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்; யான் இடர்க்கடல்வாய்ச்
சுழிசென்று மாதர் திரைபொர காமச்சுறவு எறிய
அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே!"

காமம், வெகுளி, மயக்கம் போன்ற மானுட அல்லலில் இருந்து விடுபட தவமிருக்கும் மாணிக்கவாசகர், உன்னைப்பற்றி நின்ற அன்பர்கள் எல்லாம் வானேறிவிட, நான்மட்டும்
இங்கு சுறாமீன் போன்று தாக்குகின்ற காமத்தால் அழிந்துகொண்டிருக்கிறேனே என்று கதறுகிறார். இதைத்தான் ஆண்டாளும் "கொம்மை முலைகள் இடர்தீர" என்று குறிப்பிடுகிறார். இன்னொரு பாட்டில், "......என்னை கூவிடுவாய்! கும்பிக்கே இடுவாய்! நின் குறிப்பறியேன்" என்று அலறுவார்; இன்னொரு பாட்டில் "....நம்பி இனித்தான் நல்குதியே!' என்று அழுவார்.  அதைத்தான் ஆண்டாளும், "விடைதான் தருமேல் மிகநன்றே" என்று உருகுகிறார்.

ஆண்டாளை வெறும் தெய்வமாக புரிந்து கொண்டு போகின்ற போக்கில் கன்னத்தில் போட்டுக்கொள்பவர்கள்தான் பெரும்பான்மை. திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் மட்டும் படித்தவர்கள் கொஞ்சம் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆனால், நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அவர்கள் மாணிக்கவாசகரின், அடைக்கலப்பத்து, செத்திலாப்பத்து, வாழாப்பத்து, ஆனந்தமாலை, நீத்தல்விண்ணப்பம் ஆகியவற்றை கட்டாயம் படிக்க வேண்டும் என்பேன். அதையும் சித்பவானந்தாவின் உரையோடு சுருக்கிக்கொள்ளக்கூடாது. அவ்வுரையை தாண்டி நல்ல உரைகள் உண்டு. இவற்றோடு குறுந்தொகையையும், திருக்குறளின் இன்பத்துப்பாலையும்  ஒப்பிட்டு படிக்க வேண்டும்.  அகப்பாடல்களை படிக்க வேண்டிய முறையே இதுதான்.

நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் கனாக்காணும் வாரணமாயிரம் என்ற பதிகத்தை போன்ற ஒப்பற்ற மங்கல பதிகத்தை நான் எங்கும் படித்ததில்லை. அதில் "தமிழ் வெட்கமறுத்து விளையாடுகிறது" என்கிறார் வைரமுத்து. திருப்பித்திருப்பி படிக்கிறேன் அதில் வெட்கப்பட என்ன இருக்கிறது என்றே புரியவில்லை.

ஒட்டுமொத்தமாக அதன் 14 பதிகங்களை பார்த்தால் நாச்சியார் திருமொழி என்பது ஆண்டவனின் கழல்சேர, ஒன்றிப்போக, இம்மையின் அல்லல் நீங்கி "சும்மா இருக்கும் சுகம்" என்பாரே வள்ளலார் அதனை அடைய ஆண்டாள் என்ற 13/14 வயது மங்கையின் பரிதவிப்பு, வேண்டல், தவம், அலறல், கதறல் ஆகியவைதான் அவை.

"பிறவிப்பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார்" என்று வள்ளுவம் சொல்லவில்லையா? அவர் சொன்ன அந்த பிறவிப்பெருங்கடலின் அல்லல்களில் இருந்து தம்மை விடுதலை செய்ய வேண்டி நின்ற ஞானந்தான் ஆண்டாளின் தவம்.

ஆனால், இலக்கிய வித்துவான்களும் காலஞ்சென்ற ஞாநி உள்ளிட்ட தயார்-எழுத்தாளர்களும் (fast food writers) எங்கெங்கெல்லாம் முலை, கொங்கை, அல்குல் என்ற சொற்கள் வருகிறது என்று பார்த்து அந்த வரியை மட்டும் பிடித்துக்கொண்டு காமம், கொடூரம், கொக்கோகம் என்றெல்லாம் கருத்தெழுதி கொச்சைப்படுத்திய நாள்கள் தமிழ் அறிவுலகத்தின் அவமானமான காலம் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக ஞாநி 15 ஆண்டுக்கு முன்பு கண்ணகியை ஏளனப்படுத்தினார். பின்பு, மாணிக்க வாசகர்; அண்மையில் ஆண்டாளை கேலிசெய்தார்.

ஏன் இந்த எழுத்துலகிற்கும், அறிவுலகிற்கும் கொங்கை, முலை, அல்குல் என்ற மூன்று சொற்களை படித்தாலே கைகால் வியர்த்து நடுங்குகின்றன என்று எனக்கு புரியவில்லை.
இந்த முறை சற்று கூடுதலாகவே இதழ்களுக்கும் நடுங்கியிருக்கின்றன. இந்த நடுக்கம் தமிழ் வரலாற்றில் இருந்ததே இல்லை. இந்த நடுக்கம் வந்தபின்னர்தான் மருத்துவரிடம் கூட, ஆங்கிலத்தில் அதற்கான பெயர்களை சொல்லும் வழக்கம் வந்திருக்கிறது.

இயல்பான இம்மைவாழ்வின் அல்லல்களை நீங்கி ஆண்டவனை அடையவேண்டுமென்று தவமிருந்த ஆண்டாளம்மையை வைரமுத்து பார்த்தது பார்வைப்பிழை; அறிவின் குறை; ஆண்-அவம், புலமைச்செருக்கு என்ற மாயை.

அன்றைய சூழலில் பெண்களுக்கு கொடுங்கோடு என்ற ஒன்றெல்லாம் தென்படவேயில்லை.

9) "பாலியல் சொல் விடுதலை" - இந்தச்சொற்கள் வைரமுத்தின் வக்கிரத்தின் உச்சம். அதுவும் ஔவையார், வெள்ளிவீதியாரையெல்லாம் குறிப்பிட்டுவிட்டு இதைப்பேசுவது அறியாமையா?ஆணவமா? என்பது புரியவில்லை. இன்னும் எழுத எவ்வளவோ இருந்தாலும் நீளம் கருதி, பத்தோடு நிறுத்துகிறேன்.

10) தேவதாசி:

தனது முன்முடிவை நேரடியாக கூறாமல், வேறொருவரை மேற்கோள் காட்டி ஆண்டாளை அப்படி குறிப்பிடுகிறார். எத்தனை பெரிய தவறென்று தமிழ்நாடு அவருக்கு எடுத்துக்காட்டியது. பலர் கூறியவற்றை தவிர்த்து இரண்டை மட்டும் குறிப்பிடுகிறேன்.

அ) தேவதாசி மரபு அன்றைய சூழலில் உயர்வாக கருதப்பட்டது என்று சொன்னாலும், எத்தனை தேவதாசிகளை தமிழ்நாடு வணங்கிக்கொண்டிருக்கிறது? எண்ணிப்பார்க்க வேண்டாவா? இறைவியாகக்கூட இல்லை, பரிவார தேவதைகளாகவேனும் எத்தனை தேவதாசிகள் வழிபாடு பெறுகிறார்கள்? அப்படியென்றால் அன்றைய சூழலை இழுத்து குழப்புவது சமாளிப்புதானே?

ஆ) தேவதாசி யார்?: சமயநெறிகளுக்குட்பட்ட கோயில்கள், கோயில் மண்டிலங்களில் மானகை/மேலாண்மை (Management) இருக்கத்தானே செய்யும். தொழிற்சாலைகள், நிறுவனங்களுக்கு இருக்கிற மேலாண்மைக்கூறுகளை கோயில்களிலும் காணமுடியும். நிருவாகம் (Administration), அன்றாடப்பணிகள் (Operations), மனிதவளம் (HR), நிதி (Finance), விற்பனை/வணிகம் (Sales/Rental) போன்ற அடிப்படைத்துறைகளை இன்றைக்கும் பெரிய கோயில்களில் காணலாம்.

அதோடு, இந்தக்கோயிலுக்கு போய் வழிபட்டால் இன்ன குறை நீங்கும்; இன்னது கிடைக்கும் என்றெல்லாம் நாம் கேட்கிறோமே அதெல்லாம் கோயில்கள் சந்தைப்படுத்தப்பட்டதன் அடையாளங்கள். சூரிய பகவானை வழிபட இங்கே செல்க, சனிபகவானை வழிபட அங்கே செல்க, தலைவலி நீங்க இங்குமங்கும் செல்க என்றெல்லாம் இன்றும் நாம் நிறைய கேட்கிறோம். All these are nothing but Temple-Marketing-Network-Activities.  கோயில் புகழ்பெற செய்யப்பட்ட விளம்பர உத்திகளாகவே பெருமளவும் காட்சியளிக்கின்றன.

இதை ஏன் உறுதியாக சொல்கிறேன் என்று கேட்கலாம். திருநள்ளாறை எடுத்துக்கொள்வோம். அங்கே சனிபகவானை கும்பிட்டால் குறைகள் தீரும் என்பது நமது நம்பிக்கை. ஆனால், திருநள்ளாற்றின் பச்சைப்பதிகம் உள்ளிட்ட மூவர் பாடிய பாடல்களிலும் அப்படியொரு வழிபாட்டை தேவார முதலிகள் எழுதவேயில்லை.

மூவர் தேவாரமும் ஒவ்வொரு தலத்தின் இறைவனையும், அந்த ஊரின் இயற்கையையும் சிறப்பையும் பாடி, இந்தப்பாட்டை படி; போதும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். ஆழ்வார்களிடையேயும் நான் அப்படித்தான் காண்கிறேன்.

ஆனால், நிகழ்வு என்ன என்றால் அவர்கள் பாடிய பாட்டை கோயில் நிருவாகமே பாடுவதில்லை. மக்களுக்கு பல்வேறு நம்பிக்கைகளை வளர்த்துவிட்டு அதன்மூலம் வருமானத்தை அதிகரிக்கும் கார்ப்பரேட்டு உத்திகளைத்தான் கோயில்களில் காணமுடிகிறது.

அந்த சந்தை (Marketing) உத்திகளின் ஒருபகுதியாக கலைஞர்கள் தேவதாசியாக ஆக்கப்பட்டு Dedicated Event Performers ஆக ஆக்கப்பட்டார்கள். இது மனிதவள (HR) உத்தியாகவும் இருந்தது என்பதை சொல்லவேண்டியதில்லை. இந்த மனிதவளத்தின் மற்றொரு பகுதியாக Operations - அதாவது அன்றாடப்பணிகளுக்கு தேவைப்பட்ட ஆள்களை சொல்லலாம். வேலைகள் செய்ய தேவைப்பட்ட ஆள்களாகவும்(Labours) தேவதாசிகள் தேவைப்பட்டிருக்கின்றனர்.

ஆக, தேவதாசிகள் கலைஞர்கள் ஒருவகையாகவும், பணியாள்கள் ஒருவகையாகவும் இருந்திருக்கிறார்கள். (There existed both artists and labours as devadasis. As always marketing people are paid high in the industry it is possible the artist-devdasis could have been kept in better esteem/wealth) இப்படியிருக்கையில், இறைப்பணி என்று ஒரெ முத்திரையிட்டு தேவதாசிகளை பேசுவது சரியாயிருக்காது.

இதில், ஆண்டாளை ஏப்படி தேவதாசி என்று கூறமுடியும்? மாபெரும் பிழையல்லவா? கடுஞ்சினம் வருமா இல்லையா?

Temple Marketing என்பதைப்பற்றி இறுதியாக ஒரு குறிப்பை அனைவரின் சிந்தனைக்கு எழுதி நிறைவு செய்கிறேன்.

நேர்த்திக்கடன், வேண்டிக்கொள்வது, நோன்பு/விரதம் போன்றவை தொன்மமான நாட்டார் மரபுகளிலேயே உண்டு. முருக மரபில் உண்டு. ஆனால், எங்காவது, சின்ன கருப்பு கோயிலுக்கு போனால் சுக்கிர தோசம் போகும், சுடலை மாடன் கோயிலுக்கு போனால் செவ்வாய் தோசம் போகும் என்று கேள்விப்பட்டிருக்கிறோமா? இல்லை.

இடைக்காலத்தில் எழுந்த பத்தி இயக்கமும் அப்படி சொல்லவே இல்லை. சொல்லப்போனால், வழிபாட்டை மிக எளிமையாக்கியது. "சும்மா இந்த பதிகத்தை படித்துவிட்டு போப்பா" என்று படிக்கச்சொல்லியது. சான்றாக தேவாரத்தை சொல்வேன்.

ஆனால் பிற்காலந்தான் அப்படியான வழக்கங்களை உருவாக்கின. குறிப்பாக, நாயக்கர் காலத்திற்குப்பின்னர், தமிழ் கோயில்களை விட்டு அதிகம் வெளியாகி, இந்த வழக்கங்கள் உருவாகின.

இது தேவையா தேவையில்லையா என்பதெல்லாம் அவரவர் விருப்பு. ஆனால், Temple Marketing என்பது எல்லை மீறிப்போவது கவனிக்கத்தக்கது. இதை ஆழ்ந்து பார்க்காமல், எல்லா மரபு வழிபாடுகளையும் தூற்றிக்கொண்டு, ஆன்மீகம் தொடர்பான அனைத்தையும் கேலி பேசிக்கொண்டே இருந்து என்ன சாதிக்கப்போகிறோம்?
படிக்கச்சொல்லி நமக்குத்தந்த தூயதமிழ் இறைப்பாடல்களை படிக்க மறுத்து, ஆரியம் பூரியம் என்று தேவாரம் திருவாசகம் போன்றவைகளையும் தள்ளிவைத்துவிட்டு, காது, ஈயம் கதைகளை எத்தனை நாள் பேசிக்கொண்டிருப்போம்?

எனது முந்தைய மடலில் சுட்டிக்காட்டிய மரபின் திரிவுகளை ஒத்துப்பார்க்க வேண்டுகிறேன்.

வைரமுத்தின் அறமற்ற பத்துப்பிழைகளோடு நிறுத்திக்கொள்கிறேன்.
வேறுபிற செய்திகளோடு அடுத்த மடலில் நிறைவு செய்கிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
30/1/18
முந்தைய மடல்: http://nayanam.blogspot.in/2018/01/2.html