Pages

Saturday, December 29, 2012

எனது "தமிழ் அறிதியியல்" சொவ்வறைக்கு அனந்தகிருட்டிணன் விருது!


அன்புடையீர், நேற்று (29/12/12), சிதம்பரம்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், உத்தமம், அண்ணாமலை பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய 11வது உலகத்தமிழ்
இணைய மாநாட்டில், "An Introduction to Thamizh Informatics and Thamizh Intelligence" என்ற கட்டுரையொடு, "தமிழ் அறிதியியல்" அடிப்படையிலான எனது சொவ்வறையைப்(software) பரத்தீடு செய்யும் வாய்ப்பு அமைந்தது.

நிகழ்ச்சியின் நிறைவு விழாவில், இன்ப அதிர்ச்சியாக
இக்கட்டுரையொடு கூடிய சொவ்வறைக்கு பேரா.மு.அனந்தகிருட்டிணன்
விருது அளித்து உத்தமம் அமைப்பு பாராட்டியது பேரா.பொன்னவைக்கோ விருதளித்துப் பாராட்டினார்.

உத்தமம் அமைப்பிற்கு எனது அன்பார்ந்த நன்றிகள்.
http://www.ti2012.infitt.org/


அன்புடன்
நாக.இளங்கோவன்
30/12/12 சிதம்பரம்

Sunday, December 16, 2012

கணி(னி)த் தமிழ் வளர்ச்சி மாநாடு - 16-திச-2012

இலயோலா கல்லூரியில் நிகழ்ந்த இந்த ஒருநாள்
மாநாடு கணித்தமிழ் வளர்ச்சிக்குத் தேவையான
சிறந்த வெற்றிகளைப் பெறத்துவங்கியிருக்கிறது.
கணி ஊழியில் தமிழ் வளர்ச்சி என்பதும் கணித்தமிழ்
வளர்ச்சி என்பதும் வேறு வேறு அல்ல. கணித்தமிழ்
வளர்ச்சியே தமிழ்வளர்ச்சி, தமிழ்வளர்ச்சி என்பதே
கணித்தமிழ் வளர்ச்சி என்பதைத் தமிழ்க்குமுகம்
நன்கு புரிந்து கொண்டு செயல்பட்ட காட்சியே
இம்மாநாடாகும்.

மக்கள், மாணவர், தமிழறிஞர், கணிநுட்பியலர்,
பிற துறை நுட்பியலர், ஊடகத்தினர், ஆர்வலர்
என்ற பல்வேறு தரப்போடு, தமிழ்நாட்டரசின்
தமிழுக்குப் பொறுப்பான அத்தனை அதிகாரிகளும்
பங்குகொண்டு நம்பிக்கையளிக்கும் செயல்திட்டங்களை
நடைமுறைப் படுத்த அணியமாக இருந்ததைக்
காணமுடிந்தது.

கணித்தமிழ் வளர்ச்சி என்பது வெறும் நுட்பியல்
பயன்பாடுகளால் மட்டுமே வளர்த்துவிடமுடியாது.
அதேபோல மொழியின் மேன்மை மட்டும்
வளர்த்துவிடமுடியாது. இரண்டும் சேர்ந்தாலும் கூட
குமுக விழிப்புணர்வும், அரசாங்கத்தின் முன்னெடுப்பும்
கைகூடும்போதுதான் உண்மையான வளர்ச்சியை
எட்டமுடியும்.

அந்த வகையில், நுட்பம், தமிழ்மொழி, குமுகம்,
அரசாங்கம் ஆகிய நான்கு நிலைகளையும்
நன்கு ஒருங்கிணைக்கும் கூரிய செயல்திட்டத்தை வைத்து
இம்மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தி, அது ஆற்ற
எண்ணிய பணியைத் திறம்படச் செய்ய வைத்ததற்காக
மதிப்பிற்குரிய பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களை
மனமாரப் பாராட்டவேண்டும்.

பேரா.தெய்வசுந்தரத்தின் வரவேற்புரையையடுத்து
தமிழ்நாட்டரசின் தமிழ் வளர்ச்சித்துறைச் செயலர்,
முனைவர் மூ.இராசாராம் அவர்கள் மாநாட்டைத்
துவக்கி வைத்து கணித்தமிழுக்கு ஊக்கமளிக்கும்
உரையாற்றினார்.

தொடர்ந்து தொடக்கவிழாவில்,
மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் முனைவர்
அருள் நடராசன் அவர்களின் செறிவான உரை
மாநாட்டின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியது.
தொடக்கவிழாவைத் தொடர்ந்து மின்னணுக்
கருவிகளில் தமிழ்ப்பயன்பாடு என்ற தலைப்பில்
கருத்தரங்கு நடைபெற்றது. முனைவர் இராம.கி
அவர்களின் தலைமையில் பல்வேறு துறையினர்,
பல்வேறு கோணங்களில் கணித்தமிழ் வளர்ச்சி
பற்றி எடுத்துரைத்தனர்.
மதிய உணவு முடித்து நடந்த அமர்வு
பல்கலைக்கழகங்களின் படையெடுப்பாகவே
நடந்தது. பேரா.பொன்னவைக்கோ அவர்களின்
தலைமையில் இவ்வமர்வு சிறப்புற நிகழ்ந்தது.

நிறைவு விழாவில் சிறப்புரையாற்றிய
தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநர் கா.மு.சேகர்
அவர்களின் உரையும், உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர்
கோ.விசயராகவனின் உரையும், தமிழ்நாட்டரசு செய்ய
எண்ணியிருக்கும் கணித்தமிழ் வளர்ச்சித்திட்டங்களை
எடுத்துரைப்பதாகவும், அரசின் தொலைநோக்கு
எண்ணங்களைப் பகிர்வதாகவும் இருந்தது.
அவர்களின் உறுதி மிகுந்த உரை பல்வேறு
திட்டங்களைக் கணித்தமிழ் வளர்ச்சிக்குக் கொண்டு
வரும் என்ற நம்பிக்கையை மேலும் ஊட்டியது.

அமர்வுகளில் மேடையில் பங்குபற்றிய அனைத்து
அறிஞர்கள், ஆர்வலர்கள் ஒவ்வொருவரும் தங்கள்
கருத்துகளை மிகச்சுருக்கமாக, பல்வேறு கோணங்களில்
எடுத்து வைத்தயாவையும் மிக வலுவானவை.
தொலைநோக்குடையவை. தனியே எழுதினால் நீளும்.

எந்தத்துறையினர் பங்குபெறவில்லை?
எந்த அமைப்பினர் பங்குபெறவில்லை?
என்று தேடித்தான் பார்க்கவேன்டும் என்றளவிற்கு
மாநாடு திட்டமிடப்பட்டிருந்தது எனலாம்.

இந்த மாநாடு ஆகத்து மாதத்தில் இருந்து
திட்டமிடப்பட்டது. ஆக-26 அன்று பேரா.தெய்வசுந்தரம்
எழுதிய அஞ்சலில் இதற்கான பணிகள் தொடங்கின.
செபுதெம்பர் 23 அன்று சென்னையில் கருத்துரை
கேட்புக் கூட்டம் நிகழ்ந்தது.

3 மாதங்களுக்கும் மேலாக  ஏறத்தாழ 10 நாள்களுக்கு
ஒருமுறை நடந்த கலந்தாய்வுக்  கூட்டங்கள்
ஒவ்வொன்றையும் நுண்ணியமாகத்
திட்டமிட்டன.

திச-5 அன்று புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
கணித்தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்கம் நடத்தியது
தஞ்சையில் திரு.கோ.திருநாவுக்கரசு அவர்கள்
ஏற்பாடு செய்த விழிப்புணர்வு கருத்தரங்கம்,
புலவர் இறைக்குருவனார் அவர்களின்
மறைவின் துயரால் நடைபெறவில்லை.

கணித்தமிழ் வளர்ச்சிக்கு மறுமலர்ச்சி ஏற்படுத்தும்
நோக்கத்தில் பேரா.தெய்வசுந்தரம் கடுமையாக
உழைத்து, பல துறையினரையும் திரட்டி
நன்கு கட்டமைத்திருக்கிறார். அவரோடு
தோள்நின்ற திரு.மா.பூங்குன்றன் அவர்களும்
முனைவர் மு.கண்ணன் அவர்களும் மிகுந்த
பாராட்டுக்குரியவர்கள்.

நுட்பியல், தமிழியல், மக்கள்,
மக்களின் அரசாங்கம் என்ற
நான்கும் இணைந்தாற்றான்
வெற்றியடைய முடியும்
என்பதற்கு இம்மாநாடு சான்று,

கணித்தமிழ் வளர்ச்சியைப்
பார்வையாளராக பல ஆண்டுகளாகப்
பார்த்துவரும் எனக்கு இம்மாநாடு
சென்றிருக்கும் தொலைவைப் பார்க்கும்போது
இதனை நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொண்டு
மேலும் எடுத்துச் செல்ல, தமிழ் வளர்ச்சியில்
அக்கறை கொண்ட அனைவரும் தோள்தரவேண்டும்
என்று சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

தமிழ் வளர்ச்சி = கணித்தமிழ் வளர்ச்சி
என்று நிறுவிய இம்மாநாடு
கணி(னி)த் தமிழ் வளர்ச்சிப் பேரவையாக
தொடர்ந்து தமிழ்நாடு முழுக்கச் செயல்படும் என்பது
மேலும் மகிழ்ச்சியான செய்தி.

வருகின்ற ஆண்டு கணித்தமிழ் மறுமலர்ச்சி
ஆண்டாக மலரும் என்பது
கணித்தமிழ் வளர்ச்சிப் பேரவையின் சார்பாக
சொல்லப்பட்டிருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

அன்புடன்
நாக.இளங்கோவன்

Sunday, November 25, 2012

நெஞ்சினீங்கான் பிறந்ததுவே!


மறம்வளர் மறையே மறைவளர் மறமே

   மறைமறம் வளர்தரு மதியே!
அறம்வளர் அருளே அருள்வளர் அறமே
   அருளறம் வளர்தரு அரசே!
திறம்வளர் திசையே திசைவளர் திறமே
   திறத்திசை நடங்கிளர் திருவே!
சிறவளர் தமிழே தமிழ்வளர் சிறவே
   தமிழ்ச்சிற வொளிரரும் பிறவே!!!

அன்புடன்
நாக.இளங்கோவன்
26/11/2012

Saturday, November 24, 2012

மணற்கேணி நடத்திய 50 ஆண்டுகளின் தமிழ்த் தொல்லியல் வரலாற்று ஆய்வரங்கம்!


தமிழ்நாட்டில் வெளிவரும் சிறந்த தமிழாய்விதழ்களில்
ஒன்றான மணற்கேணி நேற்று (24-11-2012)
புதுச்சேரியில் நடத்திய ஆய்வரங்கத்தில் கலந்து
கொள்ளும் வாய்ப்பமைந்தது.

சுமார் 125-150 பேர் கலந்துகொண்ட நல்ல
அரங்கமாக அது அமைந்திருந்தது.

1952ல் திரு.டி.என்.இராமச்சந்திரன் அவர்களால் துவக்கப்பட்டு,
பின்னர் திரு.நாகசாமி, திரு.நடனகாசிநாதன், தற்போது
திருவாட்டி வசந்தி ஆகியோரின் தலைமைகளில்
தொடரும் தமிழகத் தொல்லியல் ஆய்வுகளின் பரப்பு,
ஆழம், சாதனைகள், சோதனைகள் என்ற பல்வேறு
கோணங்களை ஒரே நேரத்தில் அறியத்தரும் அரங்கமாக
சிறப்புற அமைந்திருந்தது.

கல்வெட்டாய்வு, நாணயவாய்வு, அகழ்வாய்வு என்ற
மூன்று ஆய்வுகளும் அரங்கில் முகன்மை பெற்று
இருந்தது மிகப்பயனாக இருந்தது.

ஏடுகளிலும், இதழ்களிலும் படித்திருந்த தொல்லியல்
கண்டுபிடிப்புகளை மேலும் ஆழமாக, அந்த
ஆய்வுகளைச் செய்த அறிஞர்களாலேயே
விளக்கப்பெறுமாறு அமைந்திருந்தது சிறப்பு.

கி.மு 2000 என்று கருதப்படுகிற, சிந்துவெளி எழுத்துகள்
தாங்கிய செம்பியன் கண்டியன் கல்வெட்டு,
கி.மு 1000 என்றளவில் மட்டும் பேசப்பட்டு,
ஆனால் கி.மு 2000ஐக்கும் முன்னால் செல்லும்
என்று எதிர்பார்க்கப்படுகிற ஆதிச்சநல்லூர்
அகழ்வாய்வுகள், கி.மு 490 காலத்திய
பொருந்தல் கல்வெட்டு, கி.மு 330க்கு சற்றும்
குறையாத ஆனால் வருங்கால ஆய்வுகளால்
இன்னும் முற்காலம் என்று சொல்ல
வாய்ப்பிருக்கிற கொடுமணல் அகழ்வாய்வு,
இரண்டு எழுத்துமுறைகளைக் (தமிழி+சிந்துவெளி)
கொண்ட கி.மு400-300 காலத்திய
திசமகரம (தென்னீழம்) கல்வெட்டு
ஆகியவற்றை உள்ளிட்ட நடனகாசிநாதனின்
பரத்தீடு (presentation) சிந்தைக்கு விருந்தாக இருந்தது.

தொன்மங்களாக அறியப்பட்டவற்றைப் பேணுகின்ற
பணியில் இந்திய அளவிலே உயர்நிலையில், உயர்ந்த
புகழுடன் விளங்கும் திரு.தயாளன், தாசுமகாலை
அரசியலிடம் இருந்தும் துரு, கிருமிகள் போன்றவற்றிடம்
இருந்தும் காப்பாற்றிய செய்திகளை மிக விளக்கமாகப்
பேசியதும், எல்லோரா ஓவியங்கள், சிற்பங்கள்
ஆகியவற்றைப் பேணுகின்ற, சிதைவில் இருந்து
காக்கின்ற முறைகளை படங்கள் வழியே விளக்கியதும்
நல்ல பாடமாக அமைந்தது. அவரிடம், சிதைந்து
கொண்டிருக்கும் சித்தன்னவாசலைக்
காக்க வேண்டும் என்ற வேண்டுகோளை
நிகழ்ச்சியை அமைத்த திரு.இரவிக்குமார் மேடையில்
வைத்தது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

அழகர்குளம், மாங்குடி தொல்லியல் ஆய்வுகளுடன்,
சுமார் 50-60 ஆண்டுகள் தொல்லியற்றுறை வரலாற்றினூடே
இருந்திருக்கின்ற சிக்கல்களைப் பற்றி விளக்கிய
திரு.வேதாச்சலம் நிறையவே சிந்திக்க வைத்தது.
கடிகைக்கோ என்று அறியப்பட்ட சொல்லில் இருந்து
விளைந்தது, இளையான்புத்தூர் பிரமதேயச் செப்பேடு சொல்வது
உள்ளிட்டவற்றை அவர் விளக்கிய போது, அதில் இருந்த
செய்திகள் "எல்லை அரசியல்", "உரிமை அரசியல்/போர்",
"ஆதிக்க அரசியல்" ஆகியவற்றை உணர்த்துவதாய்,
தொல்லியல் ஆய்வுகளின் பிறகோணங்களை விளக்குவதாய்
அமைந்தது.

மதுரையை அதிமுக்கிய தொன்மமாகக் கருதுகிற
தமிழகத்தில், "மதுரையில் தொல்லியல் ஆய்வுகள் செய்ய
இடமே இல்லை, அவ்விடங்கள் எல்லாம் மக்களால்
நிறைந்துவிட்டது" என்ற செய்தி அதிர்வை
ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும்.
வளர்ச்சி என்பது தொன்மங்களை மூடுகின்ற
சூழல் ஏற்பட்டிருப்பதையும், இது தொடரும்
என்பதால் தொன்மங்களின் முக்கியத்துவம்
காக்கப்படவேண்டிய அவசரத்தை
விளங்கிக் கொள்ள முடிந்தது.

தொல்லியல் ஆய்வுகள் முன்னேற்றங்களைக்
கண்டிருப்பினும், செய்திருப்பவை நூற்றில் ஒருபங்குதான்
என்றும், செய்யவேண்டியவை மலையன குவிந்துகிடக்கும்
காட்சிகளையும் விவரிப்பதாய் ஆய்வரங்கின் பல்வேறு
உரைகளும் உணர்த்தின.

கொடுமணல் அகாழய்வின் தலைவர் க.இராசன் அவர்களின்
ஆய்வுகளை அவர் உரையால் கேட்கும் வாய்ப்பு மகிழ்ச்சி
அளித்தது. கொடுமணல் பற்றி படித்திருந்தவர்களுக்கும்
அவரின் நேரடி உரை, இராசனின் அயராத உழைப்பையும்,
திறத்தையும் உணர்த்தியது. இதற்காக 15 ஆண்டுகள்
உழைத்திருக்கிறார். கொடுமணல் போன்று ஏறத்தாழ
3000 அகழாய்வு செய்ய வேண்டிய இடங்கள்
தமிழகத்தில் இருக்கின்றன என்பதை அவர் சொன்னபோது
தமிழகம் செயல்படவேண்டிய வேகம், திறன் கண்ணில்
ஆடியது.

"இலக்கியங்களுக்கும் தொல்லியற் செய்திகளுக்கும்
இருக்கவேண்டிய ஒருங்கிணைப்பு" பற்றி அவர்
பேசியது "அடிப்படையிலேயே இருக்க வேண்டிய
ஒன்று இன்னும் இல்லாதிருக்கிறதே" என்ற கவலை
ஏற்பட்டது.

கொடுமணல் அகழாய்வு அல்ல - அது தமிழ்நாட்டிற்குக்
கிடைத்த புதையல்.

வீ.செல்வக்குமார் அவர்களின் பழங்கற்கால ஆய்வுகள்
மற்றொரு பரிமாணத்தைக் காட்டின. தமிழகத்தில்
15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் நிலை
பெற்று விட்டனர் என்று ஐயம் திரிபற நிறுவிய
அதிராம்பாக்க ஆய்வுகளில் இவரும் பங்கேற்று
ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவையாய் மனதை
ஈர்த்தன.

தொல்லியற் களப்பணிகளில் இன்றைக்கு
ஏற்பட்டிருக்கூடிய தொய்வு,
தொல்லியற்றுறையின் சுருங்கிவிட்ட நிலை,
தொன்மங்களைக் காப்பதில் தமிழ்க் குமுகத்திற்கு
இருக்கக்கூடிய அறிதல், ஆவணப்படுத்தலில்
சுணங்கிய நிலை, இழந்து போன தொல்பொருள்கள்,
களவு போன தொல்பொருள்கள், களவு போய்
கடினமாக உழைத்து மீட்டவைகளை தமிழகம்
பாதுகாக்கும் நிலை போன்றவற்றை
பரந்து பட்ட பார்வைகளில் திரு.விசய வேணுகோபால்
விளக்கிய விதமும் அது ஏற்படுத்திய சிந்தனைத்
தாக்கமும் முக முக்கியமானவை.

தொன்மங்களைப் பண்பாட்டுச் செல்வங்களாக
உலகம் போற்றிக்கொண்டிருப்பதை விளக்குவதாக
வீ.செல்வக்குமார் உரை அமைய, அப்படிக் கருதாமல்
தமிழகம் எவ்வளவு தள்ளியிருக்கிறது என்பதைச்
சொல்வதாய் விசயவேணுகோபாலின் உரை
அமைந்திருந்தது.

இவ்வறிஞர்களின் உரைகள் பல்வேறு செய்திகளைச்
சிந்திக்கக் கொடுக்குமாறு ஆய்வரங்கத்தினை
அமைத்திருந்த மணற்கேணி ஆய்விதழின் ஆசிரியர்,
பல இலக்கிய நூல்களின் ஆசிரியர் திரு.இரவிக்குமார்,
தொன்மங்களைக் காக்கவேண்டிய அவசியத்தையும்
அதற்காகக் கடந்து செல்லவேண்டிய இடர்களையும்
உருவாக்க வேண்டிய கருத்தியக்கத்தையும்

இவ்வரங்கின் மூலம் மிக அமைதியாக,
தொழிலியத் (Professional) தன்மையுடன்
உணர்த்தியிருக்கிறார். இந்த முன்முயற்சிக்காக
இரவிக்குமார் மனதாரப் பாராட்டப்பட வேண்டியவர்.

இரவிக்குமாருக்கும், மணற்கேணி இதழுக்கும்,
இவ்வரங்கினைப் பயனுள்ளதாக அமைத்த
அறிஞர்களுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும்
உரித்தாகுக.

முனைவர் இராம.கி, பேரா.செல்வா,
கடலாய்வு வல்லுநர் ஒரிசா பாலு,
முனைவர் தமிழநம்பி, திரு.இராச சுகுமாரன்,
முனைவர் மு.இளங்கோவன், திரு.இரவிக்குமார்
உள்ளிட்டஇணையவழி நண்பர்கள், அறிஞர்கள்
பலரைச் சந்திக்கும் வாய்ப்பாக ஆய்வரங்கம்
இருந்தது கூடுதல் மகிழ்ச்சியாக எனக்கு
அமைந்தது.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, September 21, 2012

மனநிறைவான "மென்தமிழ்" என்ற சொவ்வறை வெளியீடு!


1980களின் பிற்பகுதியில் மெல்லத் தலையைக் காட்டி,
90களின் துவக்கத்தில் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதியான
சொவ்வறைகள்/சொவ்வறைச் சேவைகள் சுமார் 3,4 கோடி
உரூவாய்கள் மட்டுமே. இன்று சுமார் 30,000 கோடிக்குச்
சேவைகள் ஏற்றுமதியாகின்றன. உள்ளூர்ப் பயன்பாடும்
இருக்கலாம்.

தமிழ்ச் சந்தை என்பது மிகக் குறுகிய வட்டத்தில், அளவில்
அன்றும் இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.

80களின் இறுதியில் வொர்டுசார், வொர்டுபெர்பெக்டு என்ற
எழுதிகள் புகழ்வாய்ந்தன. ஆங்கிலத்தில் மட்டும் எழுதமுடியும்.
இன்றும் சட்டத்துறையில் வொர்டுசார்/வொர்டுபெர்பெக்ட்
செயலிகளை விடாது வழக்குரைஞர்கள் பயன்படுத்துவது எனக்கு
வியப்பையே ஏற்படுத்துகிறது.

எழுதிகள் சந்தையை மைக்குரோசாவ்ட்டு நிறுவனம் மெல்ல
மெல்ல முழுதாக விழுங்கியது. இன்றுவரை அதன் அலுவப்
புதுக்குகள் உலகில் ஆட்சி செலுத்திவருகின்றன.

90/91/92 காலங்களில் மைக்குரோசாவ்ட்டுவின்
விண்டோசுடன் (3.0?) எம்மெசு வொர்டு செயலியைப்
பயன்படுத்தத் துவங்கியதாக என் நினவு. அப்போது
அதில் எழுத்துப் பிழை, இலக்கணத் திருத்திகள்
இணைக்கப் படவில்லை என்பதே எனது நினைவு.
விண்டோசு 95க்குப்பின்னர் அவ்வசதிகளைப்
பயன்படுத்திய நினைவு இருக்கிறது.

89-90ல் தொடங்கி 22 ஆண்டுகளாக எம்மெசு அலுவப்
புதுக்குகள் சக்கைபோடு போட்டுவருகின்றதென்றாலும்,
கவனிக்க வேண்டிய விதயம், அதுவும் உலக அரங்கில்
தத்தித் தத்தி, கட்டம் கட்டமாகவே வளர்ந்துள்ளது.

1971ல் ஆங்கில எழுத்துப்பிழை திருத்திகள்
கண்டுபிடிக்கப்பட்டுப் பெருஞ்சட்டக் கணிகளில்
பயனுக்கு வந்திருக்கின்றன. அந்தக் காலக்கட்டத்தில்
எழுத்துப் பிழை திருத்திகள் ஆங்கிலப் பயனர்களுக்கு
நம்பிக்கையளித்ததில்லை. ஏனெனில் மனிதக்
கண்ணுக்கு மிகச்சாதாரணமாகத்
தென்படும் பிழைகளைக் கூட ஆரம்பக்காலத்
திருத்திகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

தொடர் ஆய்வு, முயற்சி, உழைப்பு, வளர்ப்பு,
கணித்துறை வளர்ச்சி ஆகியவையே பிழை,
இலக்கணத் திருத்திகளை ஆங்கில உலகுக்கு
வ\ளர்த்துத் தந்திருக்கிறது.

இன்றைய மைக்ரோசாவ்ட்டு வொர்டுடன் பிற
புதுக்குகளிலும், ஆங்கிலப் பிழை திருத்திகள்
இருக்கின்றனவெனில், அவை 40க்கும் மேற்பட்ட
ஆண்டுகளின் தொடர் வளர்ப்பின் முதிர்ச்சியே
ஆகும்.

இதனை எண்ணிப் பார்க்கும்போது மென்தமிழ்
என்ற சொல்லெழுதியின் ஒற்றுப் பிழை,
சந்திப்பிழை, மொழிப்பிழை திருத்தியொடு,
எம்மெசு வொர்டுவில் உள்ள பல/அனைத்து
வசதிகளையும் முதல் மூச்சிலேயே பெற்றுள்ள
மென்தமிழ் என்ற செயலி மிகவும் பாராட்டப்பட
வேண்டிய ஒன்று. எனது தமிழ்ச் சிற்றறிவோடு
சிறிது நான் சோதித்துப் பார்த்தவரை எனக்கு இந்தத்
திருத்திகளில் பிழைகள் தென்படவில்லை.

20+ ஆண்டுகளாக இந்தியாவில் வளர்ந்து வரும்
கணித்துறை வெற்றுக் கூலிச்சேவைத் துறையாகவே
வளர்க்கப் பட்டிருக்கிறது. வளர்ந்துவிட்ட
பெருங்கணி நிறுவனங்களான இன்போசிசு,
அடாட்டா கன்சல்ட்டன்சி, எச்சிஎல்,
காக்னிசண்ட்டு, விப்ரோ போன்ற நிறுவனங்கள்கூட
தனது வருமானங்களை கூலி வேலைகளில் ஈட்டுகிறதே
தவிர அவற்றிடம் உலகளாவிய புதுக்குகள் பெயர்
சொல்லும் அளவிற்கு இல்லை.

இந்தக் கூலித்துறையை வைத்துத்தான் இந்தியா
ஒரு "கணி வல்லரசு" என்ற தேசியகீதங்கள்
பாடப்படுவதுண்டு.

படைக்கும் திறனற்ற நாடாக, படைப்புகளில்
கவனம் செலுத்தாத நாடாக, அப்படியே
படைத்தாலும் தேறாத புதுக்குகளைப் படைக்கின்ற
போக்கினையே இந்தியக் கணித்துறை பழக்கிக்
கொண்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து ஒரு
சொவ்வறைப் புதுக்கு, உலகளாவிய வசதிகள்
கொண்டு தமிழில் வெளிவருகிறது என்பது
மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்கது. இதைச்
சொல்லும் அதே வேளையில், இது போன்று,
திருத்திகள் இல்லாது இதற்கு முன் வெளிவந்த
பதமி போன்ற புதுக்குகளையும் அந்தப்
படைப்பு முயற்சிக்காக மனமாரப் பாராட்டவே
செய்கிறேன். கூலிச்சேவை என்பதை விட
படைப்பு என்பதே வலிமையின் சான்று.

மென்தமிழ் என்ற எழுதியில் சேர்க்கப்பட்டிருக்கும்
தமிழ்க்கூறுகள் தமிழ்க் கணிமை வரலாற்றில்
ஒரு மைல்கல்.

தமிழறிஞர்களும், கணிஞர்களும் ஒருங்கிணைந்தால்
இதனையொத்த சொவ்வறைகள் தமிழில் பல்கிப் பெருகும்.

பயனர் சந்தை என்று பார்க்கும்போது, தமிழக அரசு
நிறுவனங்கள், பதிப்புலகம், மிடையங்கள்/ஊடகங்கள்,
எழுத்துலகம் ஆகியவற்றிற்கு இது மிகப்பெரிதும் உதவி
செய்யும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் தமிழ்ப்பிழைகள்
மண்டிக்கிடக்கின்றன, விளம்பர உலகிலும் தமிழ்ப் பிழைகளே
பெரிதும் இருக்கின்றன. அவர்களுக்கெல்லாம் இது
மிக உதவியாக இருக்கும்.

இது தில்லிக் கணியுலகமோ, ஆங்கிலக் கணியுலகமோ
செய்த படைத்து நமது தலையில் திணித்ததல்ல.
தமிழ்நாட்டொருவரின் தனித்தமிழ்ப்படைப்பு.
கூகுளோ, மைக்குரோசாவ்ட்டுவோ செய்து, தமிழ்
வளர்ந்துவிட்டது என்று நாம் பெசிக்கொள்ளுமுன்னர்
தமிழர் ஒருவரின் தமிழ்நாட்டுத் தமிழ்ப் படைப்பு
என்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது.

இதனைச் செய்தமைக்காக பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்
அவர்களையும் அவரின் கணிஞர்களையும்
பாராட்டிப் பெருமையடைகிறேன். எசாரெம் பல்கலைக்கழகம்
இதனை ஆதரித்து உலகத்தரம் வாய்ந்த வெளியீட்டு விழா
செய்திருந்தது மிக உகப்பாகவும் நம்பிக்கையளிப்பதாகவும் இருந்தது.

தமிழின் கணிநுட்பப் படைப்பான இது தமிழ்நாட்டுக்குள்

மட்டுமல்லாது, கூகிள், மைக்ரோசாவ்ட்டு, ஆரக்கிள்
போன்ற நிறுவனங்களுடனும், வடநாட்டு மொழிசார்
நிறுவனங்களுடனும் கூட்டுறவு கொண்டு மிக
அகண்ட தமிழ்ச் சந்தையை உருவாக்குதற்கும்
வழிகாட்டியாக அமைந்து, மிகப்பெரிய வெற்றிகளை
ஈட்டவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

தமிழர்கள் தங்களுக்கும், குறிப்பாகத் தங்களின் பிள்ளைகளுக்கும் வாங்கவேண்டிய சொவ்வறை! http://www.lingsoftsolutions.com/ என்ற தளத்தில் இச்சொவ்வறை
இருக்கிறது.


அன்புடன்
நாக.இளங்கோவன்
























Friday, April 20, 2012

பாரதிதாசன் வாரம் 2012

பாரதிதாசன் நினைவுநாள் கவிதை


எங்கெங்குக் காணினும் துரோகமடா - தம்பி
திராவிடம் அதன் மூலமடா - இங்கு
மங்கும் அறிவிடை கோடிகளை - அந்த
நாயின் களியொடெடுத்து ஆடுதடா! - தமிழ்
நாட்டினில் நாலு திராவிடமும் - வந்து
தமிழரெனச் சொல்லக் கேட்டதுண்டோ? - எனில்
கன்னித் தமிழுக்கு இழிவெனலாம் - அவள்
வன்னியில் வெம்பியது அதனாலடா!


அன்புடன்
நாக.இளங்கோவன்
21/04/2012

திராவிடத்தால் அழிந்தோம்! இனியாவது மீள்வோம்.

Wednesday, November 16, 2011

கூடங்குளத்தில் கூடாத உலை! - பகுதி3

பகுதி-3 கூடங்குளமும் சேதுக்கால்வாயும்

நான்கு அல்லது ஐந்தாண்டுகளுக்கு
முன்னர் சேதுக்கால்வாய் வெட்டி அதன்வழியே
கப்பல் போக்குவரத்தைப் பெருக்க அன்றைய
தமிழக அரசு முனைந்தது.

அதனை ஏற்றவர் உண்டு. ஏற்காதவரும் உண்டு.
ஏற்றவர்கள் தமிழ்நாட்டின் வளம் பெருகும் அதனாற்
செய்யலாம் என்றனர். எனக்குக் கூட ஆரம்பத்தில்
அத்திட்டத்தின்பால் ஈர்ப்பு இருந்தது; விரைவில் மறைந்தது.

ஏற்காதவர்களிடம் இரண்டு விதமான முக்கிய
காரணங்கள் இருந்தன. ஒன்று, ஈழத்திற்கும்
தமிழகத்திற்கும் குறுக்கே இராமர் கட்டியதாக
நம்பப்படுகிற பாலத்தின் ஒரு பகுதி,
இத்திட்டத்தினால் உடைபடும் என்பதால்,
சமய நம்பிக்கை அடிப்படையில் மறுப்பாளர்கள்
எழுந்தனர்.

இன்னொன்று, சுற்றுப்புறச் சூழல் கெட்டுப்
போய்விடும் என்றும், மீனவர்களின்
வாழ்வாதரம் கெடும் என்றும்,
அரணப் பாதுகாப்பு பெரிய சரவலாகி விடும்
என்றும் எழுந்தனர் பலர்.

சேதுக்கால்வாய்த் திட்டத்தினால், சூழற்சமன்
கெட்டுவிடும் என்று எழுந்தவர்கள்
என்ன சொன்னார்கள்?

அப்பகுதியில் வளரும் பவளக்கொடிகள்(Coral reef)
அழிந்து விடும்; அவை அழியலாமா? என்று
வருந்தினர்.

அரியவகை மீன்கள் அழிந்துவிடும்; அதொடு
மீன்வளம் அருகிக் குறைந்துவிடும். அது
மீனவர்களின் நலனைப் பாதிக்கும் என்று
கவலைப்பட்டனர்.

அங்கே வாழும் கடற்குதிரைகள் (Seahorses)
இல்லாமல் போய்விடும் என்றனர்.
குதிரைகளோடு கடற்பசுக்களும் காணாமற்
போய்விடும் என்று உருகினர்.

இவற்றொடு, இக்கால்வாய் வெட்டப்பட்டால்
இந்தியாவின் எதிரிக் கப்பல்கள் எளிதாக உள்ளே
வந்துவிடத் தோதாகும் என்றும், அதற்கு இடம்
கொடுக்கலாமா? தேசக்காவற்கு ஆபத்தான
விதயத்தை நாம் தொடலாமா? நமக்கு தேசப்பற்று
வேண்டாமா? என்று தேசியகீதம் பாடினர்.

சேதுக்கால்வாயை மறுத்துப் பேசிய அதே
வாய்கள் இன்று கூடங்குளத்தை ஆதரித்துப்
பேசுகின்றன என்பது அதிர்ச்சியான ஒன்றாகும்.

தற்போது கூடங்குளத்தில் அணு உலை
மறுப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்த உலை இயங்கினால் அப்பகுதியில்
உள்ள கடற்புறச் சூழல், கதிர்வீச்சு, பாதுகாப்பு
ஏற்பாடுகள், போக்குவரத்து
உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்
பாதிக்கப்பட்டு மீன்வளம் கெட்டு,
மீனவர் வாழ்வாதாரத்தைக் கெடுத்துவிடும்
என்கின்றனர்.

சேதுக்கால்வாயால் மீன்வளம் கெட்டு
மீனவர் வாழ்வாதாரம் கெடும் என்றவர்கள்
கூடங்குளத்தால் மீனவர் வாழ்வாதாரம்
கெடும் என்பதை ஏன் ஏற்கமறுக்கிறார்கள்?

கூடங்குள, கல்பாக்கம் உலைகள்
எதிரிநாடுகளால் தாக்கப்படக்கூடும்
என்ற அச்சத்தில் அவற்றிற்கு அதிகப்படியான
அரணச் செலவும் காப்பு ஏற்பாடுகளும்
செய்யப்படுகின்றன.

சேதுக்கால்வாய் வெட்டினால் அது
எதிரிக்கப்பல்களை எளிதில் ஈர்க்கும்
என்று கவலைப்பட்டவர்கள், இவ்விரு
உலைகளும் எதிரிகளின் இலக்காக
ஆகிவிடுமே என்று ஏன் கவலைப்படுவதில்லை?
அப்படி இலக்கானால் எதிரியால்
மட்டுமல்லாமல் உலையாலும்
தமிழ் மக்கள் பாதிக்கப்படுவார்களே என்று
ஏன் அவர்கள் கவலைப்படவில்லை?

பரந்து விரிந்த அரபிக்கடல், வங்கத்திலிருந்து
விரியும் வங்கக் கடல் எல்லைகள் கடந்த
இந்தியப் பெருங்கடல் வழியாகவெல்லாம்
எதிரிகள் வருவதை விட, இந்தச் சிறிய
கால்வாய் வழியாக வந்துவிட்டால் என்ன
செய்வது என்று கவலைப்பட்ட தேசப்பற்றாளர்கள்
கூடங்குள உலையின் அரண முக்கியத்துவத்தை
ஏன் கண்டு கொள்ள மாட்டேன்கிறார்கள்?

பவளப்பாறைகள், பவளக்கொடிகள் என்று
கடலுக்குள் இருக்கின்ற சூழலுக்கும் கண்ணீர்
விட்டவர்கள் கதிரியக்கத்தால் மக்களுக்கு
வழிவழியாகப் பெரும் நோய்கள் ஏற்படும்
என்பதை ஏன் காதுகொடுத்தும் கேட்பதில்லை?

கடலுக்குள் வாழும் பவள சாதிக்குப் பரிந்து
வந்தவர்கள், தமிழ் நாட்டில் வாழும்
மனித சாதிக்கு ஏன் பவளக் கண்களைக்
காட்டுகிறார்கள்?

கடல்மீன்களுக்கும் வருந்தியவர்களின்
நல்லிதயங்கள் மனித உயிர்கள் என்று
வரும்போது அதை விட அதிகமாகவல்லவா
வருந்தியிருக்க வேண்டும்?

கடற்குதிரைகள், கடற்பசுக்கள்
போன்றவற்றிற்கு உருகிய நெஞ்சங்கள்
கூடங்குள மக்களுக்கு மட்டும்
கல்லாக இறுகிப் போன காரணம் என்ன?

கடலடிச் சூழற்கும் வருந்தியவர்கள்
நிலத்தின் மேலும் வாழ்கின்ற மக்களை
நீண்டகாலமும் பாதிக்கக் கூடிய
அணுசக்தியை ஏன் ஆதரிக்க வேண்டும்?

ஆமை, நண்டு, நத்தை, மீன், பவளம்,
புழு, பூச்சிகளுக்கும் உருகியவர்களுக்கு,
மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அவலங்களை
எண்ணி உருகமுடியவில்லை.

அப்படியென்றால் அவர்களின் மனதும்
நெஞ்சும் எந்திரப் பொறிதானா?
தேவைப்படும்போது பொத்தானை
அமுக்கினால் நெஞ்சு ஈரமாகி மாந்தநேயம்
பெற்று உருகுவார்கள் போல!

அன்புடன்
நாக.இளங்கோவன்