Pages

Tuesday, July 14, 2020

புறநானூறு-281, 296: நோய் தீர தனிமைப்படுத்தல்(Quarantining in Sangam Period)

Image may contain: food


பேய்வேறு நோய்வேறு உண்டா? பேய் பிடிக்கிறதென்றால் தீமை தொற்றுகிறதென்று பொருள். ஆங்கிலத்திலே Infection என்று சொல்கிறோம். தீமை தொற்றினால், மனத்தை உடலை அல்லது இரண்டையும் பாதிக்கும்.


தங்கம், வெள்ளி, செப்பு போன்ற மாழைகளில்(metal) ஒன்றினால் செய்யப்பட்ட கழல், ஆண்மை மிக்க ஆடவரின் கால்களில் பேரழகாய்க் கிடக்கும். அந்தக் கழல்களில் பூக்களும், சின்னங்களும், கொடிகளும் அழகிய வேலைப்பாடுகளாய் செய்யப்பட்டிருக்கும். அப்படியான உயர்ந்த கழல்களை அணிந்திருக்கிறான் தலைவன்.

மண்ணைத் தீண்ட வந்த பகைவரை துரத்துகிற களமொன்றில், அரசனுக்கென்றே வந்த பெரும் வேல்களிலும் அம்புகளிலும் இருந்து தலைவன் அரசனைக் காப்பாற்றி விட்டான்.

உடல் முழுதும் வேற்புண்கள் என்றால் வேதனை எப்படி இருக்கும்? மாரில் உள்ள புண்ணுக்குள் இரண்டு கைகளையும் விட்டு உடலை பிளந்து மாளலாம் போல வீரர் எண்ணுதலுண்டு.

மாரில் பாய்ந்த வேலைப் பிடுங்கி பகைமேலேயே திருப்பி எறிவதற்கு, உடலிலும் மனத்திலும் திமிர் இருக்க வேண்டும். ஆயினும் போர் முடிந்த பின்னர் கொடுமையாக புண்பட்ட உடல் வாடி வருந்தத்தானே செய்யும்!

அரசனைக் காப்பாற்றிய தலைவன், வீட்டில், உடல் வருத்தம் போக்கும் மருத்துவத்தில் இருக்கிறான். அவனைக்காண, பாடலை எழுதிய பெரும்புலவர் அரிசில் கிழார் வருகிறார். அரசன் பார்த்து வரச்சொன்னானோ தெரியவில்லை.

தலைவனின் மனைவி, தனது இல்லத்தின் இன்னொரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருப்பது அவருக்குக் கேட்கிறது.

ஆழமான புண்கள். மருந்து போட்டிருக்கேன். ஆறவேண்டும்னா வெளியேயிருந்து தொற்று ஏதும் வந்துவிடக்கூடாது. நாமும் வெளியே போய் தொற்றிக் கொண்டு வரக்கூடாது.

வாசலின், இறவாணத்தில் வேப்ப இலைகளோடு, இரவந்தழைகளைச் செருகி வைக்கலாம். அவை வருவோருக்கு உள்ளே வரவேண்டாம் என்று செய்தியைச் சொல்லிவிடும். பேய் போன்ற வெருவிகள் (virus), பிறகிருமிகள் உள்ளே நுழையவும் விடாது.

மையென அரைத்த சாந்தினை வீட்டின் உள்ளே சுற்றி பூசிவிடுவோம். எறும்பு போன்றன ஊர்ந்து வந்து தலைவனின் புண்ணைத் தீண்டா.

தலைவனின் படுக்கையைச்சுற்றி வெண்கடுகை (ஐயவி) தூவி வைப்போம். அதைத்தாண்டி எந்தக் கிருமியும், பூச்சியும் பேயெனப் போக முடியாது.

இந்தப் பெரிய வீடு முழுதும், வெருவி போன்ற தொற்றுகளைக் (Infections) கடிந்து விரட்டுகிற/கொல்கின்ற மூலிகைப்பண்டங்களை இட்டு நறுமணப்புகை வீசச்செய்வோம் (கடிநறை).

இவை அவனின் உடலைக் காக்கும்.

கூடவே, பிள்ளைகளை விட்டு ஆம்பல் குழல்களை ஊதச்செய்வோம்! (அல்லிமலர்த் தண்டு, குழல் போல இருக்கும். அதை ஊதினால் ஓசை வரும்) பிள்ளைகள் ஊதும்போது வீடும் கலகலப்பாக இருக்கும், தலைவனின் மனதிற்கும் இதமாக இருக்கும்.

விரைவில் புண்கள் ஆறவேண்டும் என்றும், நோய்த்தொற்று புண்களைத் தீண்டி புரையோட விடக்கூடாது என்று வேண்டி, காஞ்சிப் பண் கூட்டிய பாடல்களைப் பாடுவோம்; ஒலிக்கும் மணியை அடிப்போம். பின்னர், ஆங்கு, கோட்டுயாழொடு பிற இசைக்கருவிகளையும் இசைத்து இனிமையான இசையால் இல்லத்தை நிறைப்போம்.

தலைவனின் உடலில் உள்ள புண்களை மருந்தால் ஆற்றுவோம். மனதிற்கு, பாடலும் இசையும் கலகலப்பும் மருந்தாகட்டும்.

என்று அனைத்து முறைகளையும், தன் இல்லப்பெண்டிர் ஒருத்தியிடம் தலைவி சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்ட புலவரான அரிசில் கிழார், "தலைவனின் வீட்டுக்குள் செல்ல வேண்டாம், சென்று மருத்துவத்திற்கு இடர் தரவேண்டாம்" என்று எண்ணி, திரும்பிப் போய்விட்டார்.

போனவர் தலைவி பேசிக்கொண்டிருந்ததை பாட்டாக எழுதி அரசனிடம் கொடுத்துவிட்டுப் போனாரோ என்னவோ! அரசக்குடி, அரசனின் உயிரைக் காத்த தலைவனைப் பற்றிய அந்தப்பாடலை வழிவழியாய்க் காப்பாற்றி, ஈராயிரம் ஆண்டுகளுக்குப்பின் நமக்கும் படிக்கத் தந்திருக்கிறது.

கொரொனா வெருவியால் உலகமே தனிப்பட்டுக் கிடக்கும் இந்த வேளையிலும், வேம்பைச் செருகி, வேம்புமஞ்சள் நீரில் கழுவி, நாற்புலன்களை கட்டி, வீட்டையும் பொருள்களையும் தம்மையும் தூய்மையாக்கிக் கொண்டு தனித்திருக்கும் இதே காட்சியை சங்க காலத்திலும் காணமுடிகிறது.

தனிமைப்படுத்தல் என்பதற்கு நமது தொன்மையான வாழ்வியலிலேயே இலக்கணம் உண்டு. அதைத்தான் புறம்-281ம், 296ம் சொல்கின்றன.

அதன் தொடர்ச்சியை அம்மை வார்த்த இல்லத்தில் இன்றைக்கும் தக்க வைத்திருக்கிறது தமிழ்க்குமுகம். வேம்பு, மஞ்சள், தூய்மை, கூழுணவு, மோர் போன்றவற்றோடு, மன வலுவிற்கு மாரியம்மன் தாலாட்டைப் பாடுவதுதான் தனிமைப்படுத்தப்பட்ட அம்மை மருத்துவம்.

வெண்கடுகை அகிலோடு கலந்து இல்லம் முழுதும் புகைக்க வைக்கும் பழக்கம் எங்கள் வீட்டிலேயே இன்றும் உண்டு.

காஞ்சித் திணையில், அரிசில் கிழாரின் 281ஆம் பாட்டு என்ன துறை தெரியுமா? தொடாக்காஞ்சி. தொடா என்றால் என்ன? பேய்/வெருவி ஒருத்தரை தொடாதிருக்க, தீண்டாதிருக்க, தனிமையில் இருக்க, Quarantine-ல் இருக்க ஒரு பாட்டுத்துறையே இருக்கிறதென்றால், தமிழ்க் குமுகத்தின் தொன்மத்தை அளக்க முடிந்தால் அளந்து கொள்ளுங்கள்!

புறம்-296ஐப் பற்றி விளக்கப்போவதில்லை. தொடர்பிருப்பதால், தொட்டுக்காட்டுகிறேன்.

வாகைத்திணையில் ஏறாண்முல்லைத்துறையில் பாடிய பாட்டில்,
"வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லா மனையும் கல்லென்று அவ்வே......"

"போரில் இருந்து திரும்பிய புண்பட்ட வீரர்களின் வீட்டிலெல்லாம் வேப்பந்தழையை பறிக்கவும், வெண்கடுகை இட்டு புகைக்கவும் (அகில்/சாம்பிரானி மாதிரி), காஞ்சிப்பண்னைப் பாடவுமாக இருக்கிறார்கள்; பேய்/நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்க" என்பது அந்த மூன்று வரிகளின் பொருள்.

ஐயவி என்ற வெண்கடுகை, அகில் என்ற சாம்பிரானியுடன் (வேண்டுமானால் வேறு சில மூலிகைகளையும் சேர்த்து) வீட்டில் புகைப்பது கண்ணுக்குத் தெரியா வெருவிகள், கிருமிகள் போன்றவற்றிருந்து நமது உடலையும் மனதையும் பாதுகாக்கும் அருமருந்தென்று புறநானூறு சொல்லித்தருகிறது.

பாடல்: புறம்-281
பாடியவர்: அரிசில் கிழார் (காஞ்சித்திணை, தொடாக்காஞ்சித்துறை)
தீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக்
கைபயப் பெயர்த்து மையிழு திழுகி
ஐயவி சிதறி யாம்ப லூதி
இசைமணி யெறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்
காக்கம் வம்மோ காதலந் தோழி
வேந்துறு விழுமந் தாங்கிய
பூம்பொறிக் கழற்கா னெடுந்தகை புண்ணே.

பொருள்:
தீங்கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ = இனிமையான கனிகளைத் தரும் இரவமரத்தின் இலைகளோடு, வேப்பந் தழைகளையும் சேர்த்து வாசலில் இறவாணத்தில் செருகி.
யாங்கு மருப்பு யாழொடு பல்லியம் கறங்க = ஆங்கு, கோட்டு யாழொடு பிற இசைக்கருவிகளையும் இசைத்து.
ஐயவி = வெண்கடுகு
கைபய = மெதுவாக கையை பெயர்த்து
மையிழுது = மை போன்ற சாந்து
இசைமணி = பூசை செய்யும் போது அடிக்கின்ற மணி போன்றது
காஞ்சி பாடி = காஞ்சிப்பண் கூட்டிய பாட்டைப் பாடி
நெடுநகர் = பெரிய வீடு
கடிநறை = நோய்விரட்டும் நறுமண புகை தரும் பொருள்
காக்கம் வம்மோ = காப்பாற்றலாம் வாம்மா
வேந்து உறு விழுமம் தாங்கிய = அரசனுக்கு ஏற்பட்ட இன்னலைத் தாங்கிய
பூம்பொறிக்கழல் = உயர்ந்த பூவேலைப்பாடுகள் செய்யப்பட்ட கழல்
நெடுந்தகை = உயர்ந்த வீரன்

அன்புடன்
நாக.இளங்கோவன்
11/சூலை/2020

புறநானூறு-263: வண்டு மேம்படூஉம்

Image may contain: one or more people, sky and outdoor



ஊருக்கு அவன் தலைவன். அறத்திலும் மறத்திலும் சிறந்தவன் அப்பொழுதெல்லாம் தலைவனாக இருக்க முடிந்தது. ஊரையும், சான்றோர் பலரையும் சிறப்பாக பேணி, புரந்து, காத்து வந்ததால் அவன் தலைவன். முல்லை நிலத்து ஊர் என்றால் காடுகள் சுற்றியிருக்கத்தானே செய்யும்!




மேளம், தவில், உடுக்கு, பறை உள்ளிட்ட முழவுக்கருவிகளில் பறை மட்டும் ஒரு வகையில் மாறுபடும். பறைக்கு ஒருபக்கம் மட்டுமே கண் இருக்கும். மறுபக்கம் வெற்றாக இருக்கும். பெரிய களிற்றின், அதாவது பெரிய ஆண் யானை, தனது பாதத்தைப் பதித்தால் வட்டம் வருமே, அதுதான் அந்தப்பறையின் அளவு. "பெருங் களிற்று அடியில் தோன்றும் ஒருகண் இரும் பறை" என்று இந்தப்பாடலாசிரியர் பறைக்கு அளவு கூறுவது வியக்கத்தக்கது.

அந்த ஒரு கண் பறையை, ஏந்திக்கொண்டு ஒருவன், காட்டுவழியே தலைவனைக் காண நடந்து வருகிறான். அவன் பாணனாக இருக்கக்கூடும். இரவலன் அவன். இரவலன் என்றால் இரந்துண்ண வருபவன் என்பது மட்டும் பொருளல்ல. ஒன்றைக் கொடுத்து இன்னொன்றைக் கொள்பவனும் இரவலனே. காட்டு வழியே வருவதால், விலங்குகளை பறையை முழக்கி விரட்டுவதற்காக, பாதுகாப்பிற்காக அதை ஏந்தி வருகிறான்.

ஊரை நோக்கி அவன் வருகையில்ம் பசுமையிழ்ந்த அந்தக்காட்டின் பாதையில், ஊரை விட்டு வெளிப்போகும் சான்றோராகிய இந்தப் பாடலின் ஆசிரியர் வருகிறார். இருவரும் சந்திக்கிறார்.

பாணன் கேட்கிறான்; "தலைவன் இருக்கிறானா? பார்க்கப் போகிறேன்"

சான்றோர் சற்றே தயங்குகிறார். பின்பு கூறுகிறார்:

சின்னாள் முன்னர், ஊரின் கால்நடைகளை எல்லாம் அயலூரார் வெட்சிப்போர் செய்து கவர்ந்து போயினர். மக்களின் கவலை தீர்க்க, இழப்பை நீக்க, தலைவன் கரந்தைப் படை திரட்டி ஆநிரை மீட்கச் சென்றான். கடுமையாக போரிட்டு ஆனிரையை (பசு உள்ளிட்ட கால்நடைகள்) மீட்டும் விட்டது படை. மீட்ட ஆனிரையை ஓட்டிக்கொண்டு வருகையில், வெட்சிப்படையினர் மீண்டும் திரண்டு வந்து கடுமையாக தாக்கினர்.

ஆனிரையைக் காக்கும்பொருட்டு கூடவந்த மறவர்களை முன்னால் ஆனிரையை ஓட்டிச் செல்லவைத்து, அவர்களுக்கெல்லாம் காவலாய் தலைவன் மட்டும் வெட்சிப்படையோடு போரிட்டான்.

கடுமையான போர். அவன்மேல் விழுந்த அம்புமழையில் மூழ்கினான்.
ஆயினும் பகைவரால் அவனைத்தாண்டி மீண்டும் ஆனிரையை கைப்பற்ற முடியவில்லை. வீரரொடு ஆனிரை மீண்டு ஊர் சேர்ந்தது. தலைவன் மட்டும் போர்க்களத்திலேயே வீரமரணம் அடைந்தான்.

ஊரே துயரத்தில் மூழ்கியிருக்கிறது.

இன்றுதான், அவன் நினைவாக நடுகல் ஊன்றி, அதற்கு இறகுகள் சூட்டி, அவன் பெயர் பொறித்து, சான்றோரொடு ஊர்கூடி அவனை வழிபட்டு மரியாதை செய்துவிட்டு எனது ஊருக்குத் திரும்பிப் போய்க்கொண்டிருக்கிறேன்.

பாணனின் முகம் துயர் பட்டது.

கவனித்த சான்றோன், இதைக்கேட்ட பின்னும் நீ அவ்வூரைச் சென்று சேர்வாய் எனில், தலைவனுக்காய் சமைத்த நடுகல்லை வழிபடாமல் இருக்காதே. அவனை வழிபட்டால் இம்மண்ணில் வண்டு மேம்படும்!

சான்றோர் அறிவுரை கூறியதும் இருவரும் தம்வழியே சென்றனர்.

அது என்ன வண்டு மேம்படும்?

நடுகல்லாக நிற்கின்ற தலைவனை வழிபட்டால், இம்மண்ணில் மழை பெய்யும். மழைபெய்தால், பசுமை இழந்த இம்மண்ணில் செடி கொடி மரங்கள் துளிர்க்கும். துளிர்த்தவையெல்லாம் பூக்கும். மகரந்தங்களை தேனீக்கள் சேர்த்து வைக்கும். காடுகள் பசுமையாகி காய்க்கும், கனியும். மண்ணில் பூச்சி புழுக்கள் உயிர்பெறும். பயிர் வளம் செழிக்கும். பறவைகள் பெருகும். உணவுச்சங்கலி உயிர் பெறும். மக்களின் பசி தீரும்.

பூச்சி, புழு, தேனீ, வண்டு, பறவைகள் யாவையும் இங்கே வண்டு என்ற ஒற்றைச்சொல்லில் அடைபெற்றன. இவை மேம்படும் என்றால் நிலம் செழித்தது என்று பொருள்.

அட, இதைத்தானே நம்மாழ்வார் என்ற நமது கண்முன் வாழ்ந்த சான்றோரும் கூறினார்.

இரசாயன நஞ்சான உரம், பூச்சிக்கொல்லி, வளர்ச்சி ஊக்கி, உச்ச நஞ்சான களைக்கொல்லி என்ற இவற்றை மண்ணில் கொட்டியதால், மண் செத்தது. மண் செத்தது என்றால் நன்மை செய்யும் வண்டு, பூச்சி புழுக்கள் செத்தன என்று பொருள். பூச்சி புழுக்கள் செத்தன என்றால் காய், கனிகள் செத்தன என்று பொருள். காய், கனிகள் செத்தன என்றால் பறவைகள் செத்தன என்று பொருள். பறவைகள் செத்தன என்றால் உணவுச்சங்கிலி அறுந்தது என்று பொருள்.

நம்மாழ்வார் 30 ஆண்டுகளாக இந்த மண் முழுக்க அலைந்து திரிந்து சொன்னது எல்லாம், "வண்டு மேம்படூஉம்" என்று, 2000-2500 ஆண்டுக்கு முன்பே வாழ்ந்த தமிழ்க்குமுகத்தின், இயற்கை சார்ந்த வாழ்வியல் சிந்தனை மரபுதானே!

இப்பொழுது நம்மாழ்வாரின் இந்த விழியத்தை கேட்டுப்பாருங்கள்.

https://m.youtube.com/watch?v=xehvMPJfQ30

இந்தச் சான்றோரான நம்மாழ்வார்தான் சங்கச்சான்றோரா, அல்லது அந்தச் சான்றோர்தான் இந்த நம்மாழ்வாரா? வேறுபாடு தெரியவில்லை.

இந்த மண்ணின் இயற்கையை, சூழலை, வேளாண்மையைப் பேணுகின்ற தொன்மையான சிந்தனை மரபு, அறிவர் மரபு துளிகூட அற்றுப்போகவில்லை அல்லவா?

ஆனால் செயல் மரபு?

புறம்-263: பாடலாசிரியர்: தெரியவில்லை
திணை: கரந்தை, துறை: கையறுநிலை
மூலம்:
"பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண்
இரும்பறை யிரவல சேறி யாயிற்
றொழாதனை கழித லோம்புமதி வழாது
வண்டுமேம் படூஉமிவ் வறநிலை யாறே
பல்லாத் திரணிரை பெயர்தரப் பெயர்தந்து
கல்லா விளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனற் சிறையின் விலங்கியோன் கல்லே."

சீர்பிரித்து:
பெருங்களிற்று அடியில் தோன்றும் ஒருகண்
இரும்பறை இரவல! சேறி ஆயின்
தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது
வண்டுமேம் படூஉம் இவ் அறநிலை ஆறே
பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து
கல்லா இளையர் நீங்க நீங்கான்
வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.

பொருள்:
"பெருங்களிற்று அடியில் தோன்றும் ஒரு கண் இரும் பறை" = பெரிய ஆண் யானையின் பாதச்சுவடளவுள்ள வட்டத்தை/கண்ணை உடைய பறை.
"இரவல சேறியாயின்" = இரவலனே, மேலும் நீ அவ்வூர் சென்று சேர்வாயெனில்
"தொழாதனை கழிதல் ஓம்புமதி" = தொழாமையைக் கழிதலை ஓம்புவாயாக (தொழுவாய் என்று சொன்னது).
"திரள் நிரை பெயர்தரப் பெயர்தந்து" = ஆனிரை கொள்ளை போக, அதனை மீட்டு வந்து.
"கல்லா விளையர் நீங்க நீங்கான்" = கூட வந்த போர்மறவர் நீங்கினும் தான் பின்னால் நின்று நீங்காமல் நின்று போரிட்டான்.
"வில் உமிழ் கடுங்கணை மூழ்க" = விற்கள் உமிழ்ந்த எண்ணற்ற அம்புகளில் மூழ்கினான்.
"கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே" = இன்று நடுகல்லாய் நிற்கும் தலைவன், போர்க்களத்திலே, பாய்ந்து வரும் வெள்ளம் போல வந்த பகையை தனியொருவனாய் அடைத்து நின்றான். வெற்றிக்கு காரணமானான்.

பாடலாசிரியரின் பெயரை அறியமுடியவில்லை என்றால், பாட்டின் ஓரிரு சொற்களைச் சேர்த்து பாடலாசிரியரின் பெயர்க்குறிப்பாக சொல்வர். என்னால், அப்படியொரு குறிப்பை இப்பாட்டுக்கு காணமுடியவில்லை.

வண்டு மேம்பாட்டினர் என்று சொன்னால் பொருத்தம்தானே!

அன்புடன்
நாக.இளங்கோவன்

புறநானூறு-243 - இளமை நிலையாமை

Image may contain: one or more people



நான் சிறுவனாக இருந்த அந்த இளமைக்காலம் மிக இனிமையானது. மண்ணெடுத்து நீர்சேர்த்து திண்ணியதாய்க் குழைத்து அழகழகான பெண் பொம்மைகள் செய்வேன். ஓடிப்போய் பூக்கொய்து, தொடுத்த சரமாயும், தனிப்பூவாயும் பாவைக்கு சூடி அழகு பார்ப்பேன். பாவையின் அழகு என்னை ஈர்க்கும். அது என்னோடு பேசியதும் புன்னகைத்ததும் எனக்கு மட்டுமே புரியும்.

நீராட, கூட்டமாகப் போவோம். எனது தோழச் சிறுமிகள் என்னோடு கைகோர்த்து, குளிர்ச்சியான குளத்தில் ஆடிய காலத்தில் எங்களுக்கு பால் வேறுபாடே தெரியாது. அன்பும் களிப்பும் மிகுந்து, தூய நீரைப்போல தூய்மையா யிருந்தது. அந்தச் சிறுமிகள் என்னைத் தழுவிய போது தழுவி, அவர்களோடு போட்ட ஆட்டமும் பாட்டமும், கத்தலும், கூவலும், தண்ணீரில் வீழ்ந்த போது ஒருவரோடு ஒருவர் வீழ்ந்து எழுந்த பூரிப்பும் அளவிட முடியாதது.

குளத்தங்கரையில் பழைய மருத மரம். அதன் கிளைகளில் ஒன்று குளத்து நீரை காதலித்தோ என்னவோ, குறுக்கே நீரை நோக்கி தாழ்ந்து நீண்டு திரண்டு கிடக்கும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் கள்ளத்தையே கல்லாத, அறியாத என்னொத்த அந்தச் சிறுவர்களுடன், அதில் ஏறி நடந்து ஆழமான இடத்திலே, பார்ப்பவர்கள் வியப்பாரென்று எண்ணி, தண்ணீர் தெறித்துச் சிதறுமாறு, பொத்தென்று குதித்து அடிச்சென்று மண்ணள்ளி வந்து மேலே காட்டும் போது அடைந்த களிப்பிற்கு இணையாய் ஒன்றைச் சொல்ல முடியவில்லை.

கள்ளமிலா நட்பும், மகிழ்ச்சியும், கல்வி கற்றிராத அந்த இளமையின் இயற்கை எனக்குத் தந்த கொடை; அஃது வாழ்வில் என்றைக்கும் திரும்பியதே இல்லை. தலைப்பகுதியில் அழகிய வேலைப்பாடு செய்த நீண்ட தண்டை ஊன்றி நடுங்கிக்கொண்டே நடக்கின்ற இந்த முதுமையில், அவ்வப்போது இருமல் வருகிறது. சிறிதே பேச முடிகின்றது. எனது முதுமையைக் கண்டு நானே இரங்குகிறேன். ஆயினும் அவரின் கண்களில் துயரம் இல்லை.

இளமை நிலையாமையை இளமையில் அறிந்தவர் யார்?

புறநானூறு-243, பாடியவர் பெயரில்லை.

இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல்
செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்
தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து
தழுவுவழித் தழீஇத், தூங்குவழித் தூங்கி
மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு
உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
நீர்நணிப் படிகோடு ஏறிச், சீர்மிகக்
கரையவர் மருளத், திரையகம் பிதிர
நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
அளிதோ தானே, யாண்டுண்டு கொல்லோ?
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெருமூ தாளரோம் ஆகிய எமக்கே.

முதுமையின் இயலாமையில் சங்கப்புலவர் ஒருவர் பாடிய பாடல் இஃது. நிலையாமைத் தத்துவத்தை உணர்ந்த, உதிர்த்த புறநானூற்றுப் பாடல்வரிகள் இவை. இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை என்ற நிலையாமை தத்துவத்தை திருக்குறள், திருமந்திரம் போன்ற நூல்களிலே தேடும் நமக்கு புறப்பாடலிலும் படிக்க முடிவது ஆதித் தமிழுலகின் தத்துவ வாழ்விற்குச் சான்று. பொதுவியல் திணையில், கையறு நிலை துறைப்பாட்டு.

பாடியவர் பெயர் கிட்டவில்லை ஆதலால், இப்பாடலாசிரியரை, அவரின் பாடல்வரியில் உள்ள சொற்றொடரை வைத்து "தொடித்தலை விழுத்தண்டினார்" என்று குறிப்பிடுவது வழக்கம்.

பொருள்:
திணிமணல் செய்வுறு பாவை = மண்ணில் செய்யும் பாவை/பொம்மை
கொய்பூ = கொய்து வந்த மலர்கள்
தைஇ = தைத்து, கோர்த்து, தொடுத்து
தண்கயம் = குளிர்ச்சியான நீர் நிறைந்த குளம்
தழுவுவழித் தழீஇ = தழுவும்போது தழுவி
தூங்குவழித் தூங்கி = ஆடும்போது ஆடி
மறையெனல் அறியா = மறைத்துப் பேசுதல் அறியாத
மாயமில் ஆயம் = கள்ளமில்லாத சிறுவர் குழாம்
திரையகம் பிதிர = நீர் பிதுக்கிச் சிதறுவது
குட்டம் = நீரில் ஆழமான இடம்
தொடித்தலை விழுத்தண்டு = வளைந்து அழகிய வேலைப்பாடுகளை தலைப்பகுதியில் கொண்ட ஊன்றி நடக்கும் தண்டு/கோல்
மூதாளர் = முதியவர், அகவை முதிர்ந்தவர்

அன்புடன்
நாக.இளங்கோவன்

==============================================