Pages

Tuesday, April 03, 2007

தொட்டாற் சினுங்கித் தோட்டத்தில்...

தொட்டாற் சினுங்கித் தோட்டத்தில்...

குன்றி ரண்டு குறுகி மெல்ல
ஒன்றை ஒன்று ஒத்திக் கொள்ளும்
கொல்லி வனத்துக் கூட்டைச் சுற்றி
மல்லி நிறமா லையிடுமீ ரருவி!
தென்றலொடு சந்தமிடும் சாதித் தேக்கமரம்
கொன்றையொடு கைகுலுக்கிக் கூடவரும் மூங்கிலுடன்
சந்தனத்தை முத்தமிட தவமியற்றும் மருதமரம்,
எந்தவத்தோர் இளைப்பாறும் முக்கனிபெய் முதுமரங்கள்!
இத்துனையும் காவலென் கொந்தமலர்த் தோட்டத்தில்;
அத்துனையும் அசைந்தாடும், அவளோடு நான்வந்தால்!
வகிடிட்ட வாடாமல்லி வரப்பிட்டே னவள்நடக்க,
முகிலையும் வாவென்பே னவளுக்குக் குடைபிடிக்க!;
சுற்றிநின்ற சூரியகாந்தி சூரியனை வேவுபார்க்க,
முற்றிவிட்ட மல்லிகையோ முத்தமிடு மவளுக்கு!
பச்சைஇக் கிளிகளையேப் பயிரிட்டு, அவர்மேல்
இச்சைகொள சேர்த்தனவோ வெள்ளைநிறக் கொண்டைகள்?,
மெச்சிஎனைக் கொண்டாள் கண்டாள் தூய
துச்சமது இல்லாதத் தும்பைச் செடிகளைத்தான்!
மெல்லிடைதான் காட்டி மெல்லவேக் குனிந்தனள்
சொல்லியதால், தும்பைகள் சிந்தினவே தூமலர்கள்!
சின்னஞ்சி றுமலர்கள் சிந்தலையேத் தங்கிய
சின்னவ ளங்கைதான் சிவந்ததையே நானறியேன்!
ஒருதும்பை ஓட்டைக்குள் மறுதும்பை செருகியவள்
இருதும்பை மாலைகளை ஒருநாழியில் கோர்த்திட்டு
ஒருதும்பை மாலைதனை என்றனுக்கு சூட்டிவிட்டு
மறுதும்பை மாலைக்கென் மங்கையவள் குனிந்தாளே!
மங்கையை மணந்ததால் கோவித்த கொழுஞ்சிப்பூ
எங்கையை இழுத்திட்டு இருநொடிகள் தானழுக,
தன்கையை தவளவிட்டு அதனழுகை வடியவிட்டாள்
அங்கையை பற்றுதற் காசையுடன் நானெருங்க,
துள்ளியோடி னளேதொட்டாற் சினுங்கித் தோட்டத்துள்!
இருகாணி மொத்தத்தில் என்சினுங்கித் தோட்டம்!
ஒருமானின் வெருக்கனவே ஓடினாள் குறுக்காக
ஒருகையில் பாவாடை, மறுகையில் மாராப்பு,
வருவேனா வெனப்பார்க்கும் கெண்டைகளின் பரபரப்பு!
"விண்நீலம் மறைத்திடவே விரைகின்ற மேகம்போல்
என்தோட்டம் சினுங்கியதே அவள்சென்ற பாதையெலாம்!!"
என்னவொரு காட்சியிது என்றேநான் களித்திருக்க,
சின்னவளின் சீறடியில் கோவிக்கும் கொலுசோசை!!
இதுகாறும் கேட்கலையே இப்பொழுது எப்படியே,
அதுதேடி நானெருங்கி அப்படியே திகைத்தேன்!
விரைந்தோடிப் போகையிலும் ஒலிக்காத மெல்லியலாள்
"சினுங்கிகள் சினுங்கையிலே சீண்டினவா மவள்கொலுசை!!"

Monday, February 12, 2007

கல்யாண் என்ற இனிய மனிதரின் மறைவு!

மனிதர்களை மரணம் தழுவிய தருணங்கள் அதிர்வைத் தருவனவாக பல நேரங்களில் அமைந்துவிடுகின்றன.

என் நெஞ்சில் என்றும் இனிக்கும் அருமை நண்பர் கல்யாண்மறைவும் பேரதிர்வைத் தந்துவிட்டது.

2005 ஆம் ஆண்டின் இறுதியில் அர்ரியாத் மாநகரில்அவருடன் ஏற்பட்ட நட்பு மிக இனிமையானது.

நட்பிற்கும் பண்பிற்கும் காட்டாக அர்ரியாத் மாநகரில்தமிழர் மத்தியில் மிகவும் அறியப்பட்ட கல்யாணின் மறைவை இன்னும் கூட என்னால் நம்பமுடியவில்லை.

அவரிடம் நான் கண்டவைகளில் முக்கியமானவை பண்பும், மனிதமும்.

கடந்த ஆண்டு திசம்பரில் சென்னையிலும்,தற்போது கடந்த
சில வாரங்களாக அர்ரியாத்திலும் அவரை மீண்டும் சந்தித்து உரையாடியது என் சிந்தையை விட்டுஅகலாது.

எழுத்துக்கூடம் என்ற மடற்குழுவையும், அதன் சார்பாகமாதம் இருமுறை இலக்கியக் கூட்டத்தையும் சிறப்புடன்நடத்தி இந்த மாநகரில் அருமையான தமிழ்ப் பணி ஆற்றிவந்தவர் கல்யாண். இக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு சிலதடவைகள் அமைந்தது.

இவரின் செயல்பாடுகளும் பண்பும் என்னை மிகவும் கவர்ந்தவை.

வெளிப்படையான பேச்சு, எதார்த்தமான சிந்தனை,தனிப்பட்ட மற்றும் பொது உரையாடல்களில் மாற்றுப் பேச்சுக்களை கூர்ந்து கவனித்து சரியெனப் படுவதைத்தயங்காது ஏற்றுக் கொள்வதிலும் மறுப்பதிலும் உறுதி,தேனீ போன்ற சுறுசுறுப்பு என்ற பல நற்குணங்களைக்கொண்டிருந்தவர் கல்யாண்.

கடந்த 10 ஆண்டுகளாக இணையத்தின் போக்கு,தமிழர்கள் செய்யவேண்டியவை, தற்போதைய இணையப்போக்கு போன்றவற்றை ஆர்வத்தோடும், மகிழ்ச்சியோடும்,கவலையோடும் பல நேரங்களில் என்னோடும் நண்பர்களோடும்பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இணையத்தில் தமிழ்க் கலைச்சொற்கள், அவற்றின் முறை,தேவை, செயல்படுத்தல் குறித்த நீண்ட உரையாடல்களை பல தடவை நாங்கள் செய்திருக்கிறோம்.

கடந்த 6/7 ஆண்டுகளாக யாவா (Java) நிரலராக இருந்த ஆர்வமும் அறிவும் மிக்க இவரின் அனுபவம் தமிழ் இணைய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சொவ்வறை நுட்பவியலுக்கும் பெரிதும் பயன்பட்டிருக்க வேண்டியகாலகட்டத்தில் இவர் மறைந்தது தமிழ்ச் சொவ்வறை நுட்பவியலுக்கு பேரிழப்பு என்பதை என்னால்மிக உறுதியாகச் சொல்லவியலும்.

நேற்று மாலையில் இவரின் மறைவுச் செய்தி அறிந்ததில் இருந்து அவரின் இல்லத்தார் படும்துயரம், பெருந்திரளான நண்பர்கள் படும் துயரம்,சவுதியில் இருந்து அவரின் உடலை சென்னைகொண்டு செல்வதற்கு தமிழர்கள் சங்கத்தின் சார்பில்கண்ணீருடன் அவர்கள் எடுத்து வரும் பெரும் முயற்சிகள் என்றிவற்றையெல்லாம் நேரில் கண்டுஎன் மனம் கலங்கிப் போய் உள்ளது.

அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவரின் மனைவியார், குழந்தை வர்ணிகா மற்றும் அவர்தம்பெற்றோர்களுக்கும் மன திடத்தையும் கனிவையும் இறைவன்அருளவேண்டும் என்று வேண்டுகிறேன்.

துயருடன்
நாக.இளங்கோவன்

கல்யாண் என்ற இனிய மனிதரின் மறைவு!

மனிதர்களை மரணம் தழுவிய தருணங்கள் அதிர்வைத் தருவனவாக பல நேரங்களில் அமைந்துவிடுகின்றன.

என் நெஞ்சில் என்றும் இனிக்கும் அருமை நண்பர் கல்யாண்மறைவும் பேரதிர்வைத் தந்துவிட்டது.

2005 ஆம் ஆண்டின் இறுதியில் அர்ரியாத் மாநகரில்அவருடன் ஏற்பட்ட நட்பு மிக இனிமையானது.

நட்பிற்கும் பண்பிற்கும் காட்டாக அர்ரியாத் மாநகரில்தமிழர் மத்தியில் மிகவும் அறியப்பட்ட கல்யாணின் மறைவை இன்னும் கூட என்னால் நம்பமுடியவில்லை.

அவரிடம் நான் கண்டவைகளில் முக்கியமானவை பண்பும், மனிதமும்.

கடந்த ஆண்டு திசம்பரில் சென்னையிலும்,தற்போது கடந்த
சில வாரங்களாக அர்ரியாத்திலும் அவரை மீண்டும் சந்தித்து உரையாடியது என் சிந்தையை விட்டுஅகலாது.

எழுத்துக்கூடம் என்ற மடற்குழுவையும், அதன் சார்பாகமாதம் இருமுறை இலக்கியக் கூட்டத்தையும் சிறப்புடன்நடத்தி இந்த மாநகரில் அருமையான தமிழ்ப் பணி ஆற்றிவந்தவர் கல்யாண். இக்கூட்டங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு சிலதடவைகள் அமைந்தது.

இவரின் செயல்பாடுகளும் பண்பும் என்னை மிகவும் கவர்ந்தவை.

வெளிப்படையான பேச்சு, எதார்த்தமான சிந்தனை,தனிப்பட்ட மற்றும் பொது உரையாடல்களில் மாற்றுப் பேச்சுக்களை கூர்ந்து கவனித்து சரியெனப் படுவதைத்தயங்காது ஏற்றுக் கொள்வதிலும் மறுப்பதிலும் உறுதி,தேனீ போன்ற சுறுசுறுப்பு என்ற பல நற்குணங்களைக்கொண்டிருந்தவர் கல்யாண்.

கடந்த 10 ஆண்டுகளாக இணையத்தின் போக்கு,தமிழர்கள் செய்யவேண்டியவை, தற்போதைய இணையப்போக்கு போன்றவற்றை ஆர்வத்தோடும், மகிழ்ச்சியோடும்,கவலையோடும் பல நேரங்களில் என்னோடும் நண்பர்களோடும்பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இணையத்தில் தமிழ்க் கலைச்சொற்கள், அவற்றின் முறை,தேவை, செயல்படுத்தல் குறித்த நீண்ட உரையாடல்களை பல தடவை நாங்கள் செய்திருக்கிறோம்.

கடந்த 6/7 ஆண்டுகளாக யாவா (Java) நிரலராக இருந்த ஆர்வமும் அறிவும் மிக்க இவரின் அனுபவம் தமிழ் இணைய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சொவ்வறை நுட்பவியலுக்கும் பெரிதும் பயன்பட்டிருக்க வேண்டியகாலகட்டத்தில் இவர் மறைந்தது தமிழ்ச் சொவ்வறை நுட்பவியலுக்கு பேரிழப்பு என்பதை என்னால்மிக உறுதியாகச் சொல்லவியலும்.

நேற்று மாலையில் இவரின் மறைவுச் செய்தி அறிந்ததில் இருந்து அவரின் இல்லத்தார் படும்துயரம், பெருந்திரளான நண்பர்கள் படும் துயரம்,சவுதியில் இருந்து அவரின் உடலை சென்னைகொண்டு செல்வதற்கு தமிழர்கள் சங்கத்தின் சார்பில்கண்ணீருடன் அவர்கள் எடுத்து வரும் பெரும் முயற்சிகள் என்றிவற்றையெல்லாம் நேரில் கண்டுஎன் மனம் கலங்கிப் போய் உள்ளது.

அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவரின் மனைவியார், குழந்தை வர்ணிகா மற்றும் அவர்தம்பெற்றோர்களுக்கும் மன திடத்தையும் கனிவையும் இறைவன்அருளவேண்டும் என்று வேண்டுகிறேன்.

துயருடன்
நாக.இளங்கோவன்

Thursday, February 08, 2007

முனைவர் இராம.கியும் தேவநேயப் பாவாணரும்.

முனைவர் இராம.கியும் தேவநேயப் பாவாணரும்.


வேர்ச்சொல், தமிழ்ச்சொல் என்றதுமே தமிழர்களின் மனதில் தோன்றுபவர் பேரறிஞர் தேவநேயப் பாவாணர். ஒலியின் பிறப்பில் இருந்து சொல்லின் பிறப்பைவிளக்கி, அதன் விரிவையும் பரப்பையும் அவர் எடுத்து எழுதிய ஒவ்வொரு கட்டுரையும்தமிழை மீட்டன; தமிழின் செறிவையும் தொன்மையையும் விரிவையும் பறைந்தன.


வரலாற்றில் தமிழை நேசிப்பவர்கள் அனைவரின் அன்பையும் பெற்ற பாவாணர்பன்மொழிப் புலவர். ஒரு சொல்லை விவரிக்க, அவர் காட்டும் பண்டை இலக்கியக்காட்டுகளும், அண்டை (மொழிகள்) இலக்கியக் காட்டுகளும் வியப்பை ஏற்படுத்திபடித்தவர்களை பெருமை கொள்ளச் செய்தன. ஆணியன அவ்வெழுத்துக்களால்,தமிழின் மேல் படிந்த தூசிகளும், பாசிகளும் எழுந்தோடின.

தமிழ் என்ற பாறையின் மேல் அமர்ந்த பதர்கள் எல்லாம் தாமே பெரிதென்று சொன்னால் பெரிதாகிவிடுமா? பாவாணரின் எழுத்துக்கள் அப்பதர்களைநாணி நடையைக் கட்ட வைத்தன!

இது எந்த சமயத்தில் என்றால், தமிழ்நாட்டில் பேச்சு எழுத்து இலக்கியம் என்றஎல்லாவற்றிலும் வடமொழிக் கலப்பு மிகுந்து பேசும் பேச்சுகளில் பெருமளவுபிறமொழியாகவே இருந்த கால கட்டம். அப்பொழுதும், பாவாணரை ஏசினவர்தமிழ்நாட்டில் நிறைய இருக்கவே செய்தனர். இன்றும் ஏசிக் கொண்டே இருப்பவர்களும்உண்டு. ஆயினும் அவர் ஆற்றிய அந்த அருந்தமிழ்ப்பணி இன்றைக்கெல்லாம் அழியாமல்மேலும் மேலும் பலரை ஆக்கிக் கொண்டே இருக்கிறது. அந்த அருந்தமிழ்ப்பணிக்குபாவாணர் செய்த உழைப்பு பெரும் உழைப்பு.

அந்த உழைப்பின் தொடர்ச்சியாக, அந்தப் பற்றின் தொடர்ச்சியாக, அந்த அறிவின்தொடர்ச்சியாக, முதிர்வின் தொடர்ச்சியாகத்தான் முனைவர் இராம.கி அவர்களின்தமிழ் ஆராய்ச்சிப் பணிகள் இருக்கின்றன.

ஏறத்தாழ 10 ஆண்டுகளாக அவரின் தமிழ்ச்சொற்பணிகளால் இணையம் நிறைகிறது.அலையெனவும், அருவியெனவும் அவரிடம் இருந்து பல சொற்கள் ஒரு கட்டுரையில் இருந்து நுகரக் கிடைக்கும்.

குறிப்பாக அவருடன் சில மடற்குழுக்களில் பங்கேற்றபோது அங்கு கொட்டியஅந்தத் தமிழருவிகளில் குளித்தது இன்பமானது.

தமிழ் அறிஞர், பேரறிஞர், தமிழ்ச் சொற்களின் தந்தை, அறிவியல் அப்பா, மொழியியல் தாத்தா என்றெல்லாம் பட்டங்களை தூக்க முடியாமற் சுமந்து கொண்டுதற்போதைய தமிழ் உலகங்களில் காணப்படும் தமிழர்களில் பெரும்பாலோனோர்தமிழ் என்றும் தமிழ்ச் சொல் என்றும் தருவது பெரும்பாலும் அரிசியை நீங்கிய உமியே.

ஏனெனில், அதற்கு ஒரு ஒழுக்கமான ஏரணம் இருக்காது."இதோ தமிழ், இந்தாத் தமிழ், இதான் தமிழ்" என்ற அவசரமும்,ஆணவமும் அவர்களின் தமிழ்ச் சொற்களில் விரவிக் கிடக்கும்.

(நான் அனைவரையும் சொல்லவிலை என்பதனைத் தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன்;பல நல்ல ஆர்வலர்கள் மற்றும் தமிழறிஞர்கள் இணையத்திலும் வெளியிலும் இருக்கவே செய்கிறார்கள்)

உமி என்று நான் சொல்வது மிகப் பொருத்தமானது என்றே கருதுகிறேன்.ஏனெனில் அது எளியதாக இருப்பதோடு காற்றடிக்கும் பக்கமெல்லாம்பறந்து கொண்டும் இருக்கும். அப்படித்தான் நமது தமிழ்ச்சொல் படைப்பாளர்கள்பலரிடம் இருந்து கொட்டும் சொற்கள். என்ன "கண்மணின்னு போட்டியா" ?இந்தா "பொன் மணின்னு போட்டுக்கோ" என்ற வகையில் தமிழ்ச்சொல் படைப்பவர்ஏராளம்.

மணி மணி என்று நிறைய பேர் வைச்சு புரைத்துப் போய், மாற்றம் வேண்டிஅதையே மாணி (மானி?) என்று வைத்துக் கொள்ளலாம்ப்பா என்ற போக்கில்பெயர் சூட்டு விழா நடத்துவதும் உண்டு. ஏனய்யா, "மாணி என்றால் ஒன்னுக்குப் போறசங்கதி ஆச்சே அதைப்போய் இதுக்கு வைத்தால்...." என்று கேட்டால் "நீ தமிழ் வெறியன்", மாணி என்று இப்ப யார் பேசுகிறார்கள்! இப்படிப் பேர் வைத்தாலாவதுமாணி என்ற சொல் நிற்கும் என்று சொல்லக் கூடிய சொல்-வேதாந்திகளும் உண்டு.

இப்படி தமிழ்ச் சொல் செய்வார்கள் அடிக்கும் கூத்துகள் சொல்லி மாளாது. நான் ஆர்வத்திலும் தேடலிலும் சொல் விளைவிக்கும் நல்லோரைச் சொல்லவில்லை. அன்னார், தவறாக சொல் படைக்கினும் அம்முயற்சியையும் அதனையும் வரவேற்பவன் நான்.

ஆனால் சொல் வணிகர்களையும், தரகர்களையும் கோமாளிகளாகத்தான்என்னால் பார்க்க முடிகிறது.

இவர்கள்,
1) வேர்ச் சொல் தேட மாட்டார்கள்
2) நுனிப்புல் மேய்வார்கள்
3) பல மொழிகளையும் குழப்பி அடிப்பார்கள்
4) மொழி அச்சம் இவர்களிடம் குடி கொண்டிருக்கும்; அந்த அச்சத்திலேயே தப்பான ஓசையிடுவார்கள்.
5) ஒரு சொல்லுக்கும் ஏரணம் இருக்காது
6) தமிழ் தவிர பிற மொழிப் புலமை இருக்காது; அல்லது குறைவாக இருக்கும்
7) தமிழ்த் துறை தவிர பிற துறைகளில் ஞானம் இருக்காது. அதனால் ஒவ்வொரு துறையிலும் புழங்கும் ஒன்றனுக்கு, துறைக்கு ஒரு பெயர் வைப்பார்கள்.
8) வளரும் துறைகள் என்றாலே காத தூரம் தள்ளி நிற்பார்கள்.

நான் அவர்களுக்கு பல துறைகளும் தெரியாததைக் குறையாகக் கொள்ளவில்லை. ஆனால்,அது தெரியாமலேயே, அதன் அடிப்படையே புரியாமலேயே, அத்துறைக்குள் புகுந்துஏகப்பட்ட பெயர்களை அள்ளித் தெளித்து விடுவதோடு "இதுதான் சரி" என்றுவாதிடும்போது எரிச்சல் வரத்தான் செய்கிறது.

ஏரணம் இல்லாமலும், ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் பரப்பியும்பல அகராதிகள் வந்துவிடுகிறதைப் பார்க்கும்போது மனம் பதைக்கவே செய்கின்றது.

படைப்பவர்கள் இப்படியென்றால், அதனைத் துய்ப்பவர்கள் அவர்களை விடப் பெரியவர்கள்.

அவர்களுக்கு, Mouse என்பதனை மூசி என்று சொல்லச் சொன்னால் எளிமையாக இல்லையேஎன்பார்கள். மவுசு என்றே அப்படியே சொல்லுங்களேன் என்றால் மிகவும் மகிழ்வார்கள்.இல்லை என்றால், "எலி'' என்றால்தான் சரி என்று வாதிடுவார்கள். சரி போய்த்தொலையுங்கள்,எலி என்றே வைத்துக் கொள்ளுங்கள் என்று விட்டதும் ''மூசிக வாகனனே....'' என்றுபாட ஆரம்பித்து விடுவார்கள்.

"முப்பழம் நுகரும் மூசிக வாகன
இப்பொழுது எனக்கு மவுசு தந்தாய்"

என்று பாட அவர்களுக்கு நாணமும் இருக்காது; இரண்டனுக்கும் உள்ள தொடர்புஎன்ன என்ற ஞானமும் இருக்காது.

இந்த மாதிரியான மந்திகள் தமிழ்ப்பணிகளின் குறுக்கே வந்து நடனம் ஆடிவிட்டுப்போவதை காலகாலமாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
தேவநேயப்பாவாணர், மறைமலை அடிகளார், திரு.வி.க, பெருஞ்சித்திரனார், பாரதிதாசன்போன்றோர் வரிசையில் நிற்குமளவு தமிழும், திறனும், பல்துறை பல்மொழிப் புலமையும்கொண்டவர் முனைவர் இராம.கி அவர்கள் என்பதில் யாருக்கும் அய்யமிருக்க முடியாது.

அவர் சொற்களில் ஆழ்ந்த ஏரணம் உண்டு! பாவாணரைப்போலவே!அதற்குப்பின்புலமாக அவரின் அயராது உழைப்பு உண்டு! பாவாணரைப் போலவே!அதே போல காணும் சொற்களுக்கு மேலும் வண்ணம் தீட்டுவதுபோலஅதனின் திருத்தங்களை அவரின் மேலதிக ஆய்வுகள் கொண்டு வரும். பாவாணரையும் விடநன்றெனவே எனக்குப் பட்டதுண்டு.அதைவிட மாற்றுச் சொற்கள் வருமெனின் அதனை காய்தல் உவத்தல் இன்றிஏற்றுக் கொள்ளும் பண்பு உண்டு.

விரிந்து பரந்து கிடக்கும் விஞ்ஞானவியலின் பல கூறுகளையும் பற்றிப் பிடிப்பதில்பாவாணரையும் பல இடத்தில் மிஞ்சுகிறார் என்று எனக்குத் தோன்றிய கணங்கள் அதிகம்.

ஏரணம் சார் வேர்ச்சொல் ஒன்றனைக் கொண்டு பல சொற்களைபயனர் ஆக்கிக் கொள்ள முடியும்;

ஒட்டுக் கோவணம் போல அங்கொன்று இங்கொன்று என்று பெயர் சூட்டாமல், குழுசார், துறைசார் சொற்களுக்கு இணையும் இயையும் சொற்களாக பட்டுச்சீலையாய் அவர் நெய்யும் சொற்கள் பயன் மிகுந்தன என்பதனைநானும் பலரும் பயன்படுத்தி மகிழ்ந்திருக்கிறோம்.

இதை நான் முகத்துதிக்காகவோ வாதத்திற்கோ சொல்லவில்லை. ஆனால், சொல்லவேண்டியதை சொல்லித்தான் ஆகவேண்டும்.

ஏனெனில் தமிழனிடம் ஒரு பழக்கம் உண்டு. கண் முன்னால் ஒரு இரத்தினக் குவியலைக்காட்டினால், அதைப் பார்த்து அது இரத்தினக் குவியல் என்று ஒப்புக் கொள்வதற்குள்நாணி, கோணி, நெளிந்து, பதுங்கி, மேலே கீழே பார்த்து, நேரகாலம் பார்த்து, தமிழ்சாராத பத்துப்பேர் வந்து சொன்னதற்குப் பிறகுதான் ஆகா ஓகோ என்று குதிப்பான்.

ஆனால் கண்ணாடிச் சில்லுகளைக் காட்டினால் அதைப் பொறுக்கிப் பொறுக்கியே பூரித்துப் போவான்.

இன்னொரு இரகம் உண்டு!
வணக்கம் என்று சொன்னாலே வாந்தி எடுக்கும் வம்பாளர்கள்.அது அவர்களுக்கு தமிழ் வெறியாகத் தெரியுமாம்.அல்லது எகத்தாளமாகப் பார்ப்பார்களாம். அ-னா ஆ-வன்னாவிலும் பெரியாரையும்கருணாநிதியையும் தேடிக் கொண்டு கிடக்கும் இவர்களின் நிலை பரிதாபத்துக்குரியது.

எளிமை எளிமை என்று கூவிக் கொண்டு திரியும் இலக்கணமில்லாதவர்களையும்,
அரசியல், மதம் என்பவற்றை தமிழ் மொழியோடு பார்க்கும் அக்கறையில்லாதவர்களையும்புறந்தள்ளி விட்டுத்தான் அக்காலத்தில் தேவநேயப்பாவாணரும் தற்காலத்தில்அவரொத்த அறிஞராகிய முனைவர் இராம.கி அவர்களும் சாதிக்க வேண்டியதிருக்கிறது.

முனைவர் இராம.கி அவர்களின் தமிழ்ச் செறிவுள்ள பாக்களாகட்டும், வேர்ச்சொல் கட்டுரைகளாகட்டும், வரலாற்று, ஆன்மீக, இலக்கிய கட்டுரைகளாகட்டும்,அல்லது நாராயணனை வழுத்தும் அவரின் பாசுரங்களாகட்டும் அனைத்திலும்புதுச்சொற்களும் அவர் மீட்டெடுக்கும் சொற்களும் மிடுக்குடன் அணிவகுத்து நிற்கும்.
அவற்றைப் பிட்டு அடிப்பதில் எனக்கு நிகர் நானே என்று சொல்லுமளவுக்கு, 'என் உள்ளங் கவர் சொல்லன்(ர்)' முனைவர் இராம.கி அவர்கள்.
அவற்றைப் படிப்பவர்கள் நேரும்போதெல்லாம் சொற்களைப் பயன்படுத்தி விடவேண்டும். வெறுமே பாராட்டிக் கொண்டு மட்டும் இருக்கக் கூடாது,
செறிவான அவரின் சொற்களுக்கு முன்னால் ''எளியதுகள் வெறும் திருட்டிக்காய்கள்''.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, December 15, 2006

பாலசிங்கம் அவர்களின் மறைவுக்கு இரங்கல்

பேராசிரியர் முனைவர் அண்டன் பாலசிங்கம் அவர்களின் மறைவு
உலகவாழ் தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்.

உலக அரங்கில் "தமிழ் " என்ற சொல்லுக்கு முகவரியாய்
வாழ்ந்தவர் பாலசிங்கம்.

இவரின் இழப்பு ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்லாது
தமிழகவாழ் தமிழர்களுக்கும் உலக வாழ் தமிழர்களுக்கும்
வேதனையைத் தந்துள்ளது.

தற்காலத் தமிழ் உலக அரங்கில் இருக்கக் கூடிய
பெரும் தலைவர்களில் பாலசிங்கம் அவர்களும் ஒருவர்.

பாலா அண்ணனை இழந்து வாடும் ஈழத்தமிழர்களின்
துயரத்தில் பங்கு கொள்கிறேன்.

அன்னாரின் ஆன்மா சாந்தி பெறவும், தமிழர்களுக்காக
அவர் ஆற்றிய பெரும் பங்களிப்பு ஆல் போல் தழைத்து
தமிழ் மக்களைக் காத்திட வேண்டும் என்று இறைவனை
வேண்டுகிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Sunday, November 12, 2006

இளையராசாவின் ஆன்மீகமும், பெரியார் பட இசையும்!

இளையராசாவின் ஆன்மீகமும், பெரியார் பட இசையும்!

இசைஞானி இளையராசா, பெரியார் பற்றிய திரைப்படத்திற்கு இசை அமைக்க
மறுத்தது, அவர் சொன்ன காரணத்தினால் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிக விவரங்களை நண்பர் சிவபாலன் அவர்களின் பதிவில் காணலாம்.
http://sivabalanblog.blogspot.com/2006/11/blog-post_09.html

1) தொழில்வாரியாக அவருக்கு இசையமைக்கவும் மறுக்கவும் முழு உரிமை உண்டு.

2) அதை அனைவரும் ஒப்புக் கொள்ளும் அதேவேளையில், ஒரு தனி மனிதனாக,
தனது சிந்தனைகளின் அடிப்படையில் அதனை அவர் மறுக்கவும் உரிமை உண்டு என்பதனையும்
ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் தந்தை பெரியாரும் தனிமனித உரிமைக்காக
போராடியவர். இளையராசாவின் கருத்தை ஏற்காவிடில் அது பெரியார் கருத்தியல்களைச் சரியாக
உணரவில்லையோ என்று எண்ணம் வரக்கூடும்.

3) தமிழ் ஏடுகளில் வந்துள்ள செய்திகளைப் பார்க்கும் போது, இளையராசா தனது மறுப்பை
இன்னும் கொஞ்சம் பக்குவமாக சொல்லியிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆயினும் அவர் சொல்ல வந்ததை மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார். பெரியாரும்
தனக்குத் தோன்றுவதை பட்டென்று சொல்லக் கூடியவர். ஆதலால் இளையராசா சொன்னதை
மிகப் பிழையாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

4) இளையராசா தனது கருத்தினை உள்ள சுத்தியோடு சொல்லியிருக்கிறார் என்றே கருதமுடிகிறது.
காழ்ப்புடன் சொன்னதாகத் தெரியவில்லை. ஆழமாக ஆன்மீக இலக்கியங்களைப் படிக்கும் போது,
சில பல கருத்துத் தெளிவுகள் ஏற்பட்டிருக்கக்கூடும் அவருக்கு. அந்தவகையில் அவர் அண்மையில் இசைத்த
திருவாசகப் (ஓரோ இசையில்) பதிகங்களில் ஒரு பதிகம் அச்சப் பத்து. அதனை ஆழ்ந்து படித்தவர்கள்
இளையராசாவின் கருத்தையும் அவர் பக்க ஞாயத்தையும் ஒத்துக் கொள்வர். (அதனை எழுதினால் விரியும்)
படித்ததோடு அல்லாமல் அதன்பால் நிற்க முனைகிறார் இளையராசா என்றுதான் எண்ணவேண்டியிருக்கிறது.

5) பெரியார் ஒரு மாபெரும் சக்தி. இளையராசாவின் இசை மறுப்பினால் பெரியாரின் புகழ் கடுகளவும்
குறையாது. அதேபோல, இளையராசாவின் ஆன்ம சுத்தியையும் பாராட்டத்தான் வேண்டும்.
பெரியார் படத்தில் அவரின் பலதரப்பட்ட பணிகளையும் 3 மணிநேரத்தில் காட்டிவிடப்போகிறார்கள்.
அவரின் கடவுள் மறுப்புக் கொள்கையைப் பற்றிய உரையாடல்கள் அல்லது காட்சி அமைப்புகள் இருக்கும்.
அதற்கும் இளையராசா பின்னணி இசையோ அல்லது பாடல் இசையோ செய்ய வேண்டியிருக்கும்.
நெற்றியில் நீறு பூசி விடுவதை மட்டுமே ஆன்மீகத் தகுதியாகக் கொண்ட நிலையில் உள்ளவராக அல்லாமல்
ஆழமான கருத்தியல்களை உணர்ந்தவராக இளையராசா தெரிவதால், அந்தச் சூழல்களுக்கு இசையமைக்க
அவர் மனம் ஒப்பவில்லை போலும். இந்த இடத்தில் என்னை இளையராசா கவரத்தான் செய்கிறார்.

6) பாரதிய சனதாக் கட்சிக்காரர் என்றாலே ஏதோ ஆன்மீகத்துக்கு குத்தகைக்காரர் போன்ற
மிதப்பில் இல.கணேசன் வெளியிட்டுள்ள கருத்து அருத்தம் பொதிந்ததாகத் தெரிகிறது. அதில்
பெரியாரை இழிவு படுத்தும் தொனி தெரிகிறது. பாரதியாரைப் பெருமைப் படுத்தியதாக
அவர் சொல்வதில் விசமத்தனம் மறைந்துள்ளதாகப் படுகிறது. பா.ச.க+இரா.சு.ச காரர்களுக்கும்
ஆன்மீகம் என்பதற்கும் இடைவெளி மிக அதிகம்.

இளையராசாவின் கருத்தியல் நிலை இல.கணேசனின் சிந்தனைக்கு எட்டாததாகவே எனக்குப் படுகிறது.
எனவே இல.கணேசனின் கருத்துக்கள் வளரக்கூடாதவை.

7) தந்தை பெரியார் இந்த நாட்டிற்கு ஆற்றியிருக்கும் தொண்டுகளைக் கருத்தில் கொண்டு
தமிழ் மக்கள் சற்று உணர்ச்சி வசப்படுதல் கண்கூடு. ஆயினும், பெரியார் எவ்வளவு முக்கியமோ
அவ்வளவு முக்கியம் இளையராசாவின் தனி மனித உரிமை என்பதும், அதிலும் ஒரு அழகான
ஞாயம் இருக்கிறது என்பதும். இதனை உணந்து கொண்டு இவ்விதயத்தைப்
பெரிதாக்காமல் இருக்க வேண்டும். இல்லாவிடில் இது ஒரு தரமற்ற வாதத்திற்கே இட்டுச் செல்லும்.


கடவுள் என்ற பெயரில் எல்லா நிலைகளிலும் விரவிக் கிடந்த (இப்போதும் நிறைய கிடக்கும்)
அட்டூழியங்களை வெறுத்து கடவுளே கருப்பு சட்டையைப் போட்டுக் கொண்டு வந்திருப்பார் என்று
எண்ணக் கூடிய கால கட்டத்தில் பெரியார் ஆற்றிய பணி காலத்தால் அழிக்க முடியாதது.
அதற்கு யாராலும் கறை ஏற்ற முடியாது. இன்றைக்கு இளையராசாவால் இவ்வளவு துணிவாக
ஒரு கருத்தைக் கூற முடிகிறதென்றால் அதற்குப் பெரியாரின் பணிகளும் ஒரு சிறிய பங்கேனும்
வகிக்கும். ஆகவே பெரியாரை மதிக்கிறோம் என்றால் இளையராசாவின் நிலைப்பாட்டையும்
மதிக்க வேண்டும்.

தனிப்பட்ட முறையில் இளையராசாவின் இந்த நிலைப்பாட்டை என்னால் வெகுவாகப் புரிந்து கொள்ள
முடிகிறது. அவரைப் பாராட்டவும் முடிகிறது. அதனை அவ்வளவு எளிதில் சொற்களால் எழுதி விடமுடியாது.
இது பெரியாரை இழிவுபடுத்துவது இல்லை. அவர் செய்த பணிகளுக்கு குறை சேர்ப்பதும் இல்லை.

அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, November 10, 2006

வாகரைப் படுகொலைகள்

தமிழ் ஈழத்தில், வாகரையில் மீண்டும் அப்பாவி அகதி மக்களின் மீது
சிங்களம் இனவெறித் தாக்குதலைத் தொடுத்து
கொத்துக் கொத்தாகக் கொலை செய்திருக்கிறது.

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரையும்
அலற விட்டிருக்கிறார்கள் சிங்களவர்.

தமிழகமக்கள் வழக்கம் போல மவுனமாகவே.