Pages

Tuesday, April 03, 2007

தொட்டாற் சினுங்கித் தோட்டத்தில்...

தொட்டாற் சினுங்கித் தோட்டத்தில்...

குன்றி ரண்டு குறுகி மெல்ல
ஒன்றை ஒன்று ஒத்திக் கொள்ளும்
கொல்லி வனத்துக் கூட்டைச் சுற்றி
மல்லி நிறமா லையிடுமீ ரருவி!
தென்றலொடு சந்தமிடும் சாதித் தேக்கமரம்
கொன்றையொடு கைகுலுக்கிக் கூடவரும் மூங்கிலுடன்
சந்தனத்தை முத்தமிட தவமியற்றும் மருதமரம்,
எந்தவத்தோர் இளைப்பாறும் முக்கனிபெய் முதுமரங்கள்!
இத்துனையும் காவலென் கொந்தமலர்த் தோட்டத்தில்;
அத்துனையும் அசைந்தாடும், அவளோடு நான்வந்தால்!
வகிடிட்ட வாடாமல்லி வரப்பிட்டே னவள்நடக்க,
முகிலையும் வாவென்பே னவளுக்குக் குடைபிடிக்க!;
சுற்றிநின்ற சூரியகாந்தி சூரியனை வேவுபார்க்க,
முற்றிவிட்ட மல்லிகையோ முத்தமிடு மவளுக்கு!
பச்சைஇக் கிளிகளையேப் பயிரிட்டு, அவர்மேல்
இச்சைகொள சேர்த்தனவோ வெள்ளைநிறக் கொண்டைகள்?,
மெச்சிஎனைக் கொண்டாள் கண்டாள் தூய
துச்சமது இல்லாதத் தும்பைச் செடிகளைத்தான்!
மெல்லிடைதான் காட்டி மெல்லவேக் குனிந்தனள்
சொல்லியதால், தும்பைகள் சிந்தினவே தூமலர்கள்!
சின்னஞ்சி றுமலர்கள் சிந்தலையேத் தங்கிய
சின்னவ ளங்கைதான் சிவந்ததையே நானறியேன்!
ஒருதும்பை ஓட்டைக்குள் மறுதும்பை செருகியவள்
இருதும்பை மாலைகளை ஒருநாழியில் கோர்த்திட்டு
ஒருதும்பை மாலைதனை என்றனுக்கு சூட்டிவிட்டு
மறுதும்பை மாலைக்கென் மங்கையவள் குனிந்தாளே!
மங்கையை மணந்ததால் கோவித்த கொழுஞ்சிப்பூ
எங்கையை இழுத்திட்டு இருநொடிகள் தானழுக,
தன்கையை தவளவிட்டு அதனழுகை வடியவிட்டாள்
அங்கையை பற்றுதற் காசையுடன் நானெருங்க,
துள்ளியோடி னளேதொட்டாற் சினுங்கித் தோட்டத்துள்!
இருகாணி மொத்தத்தில் என்சினுங்கித் தோட்டம்!
ஒருமானின் வெருக்கனவே ஓடினாள் குறுக்காக
ஒருகையில் பாவாடை, மறுகையில் மாராப்பு,
வருவேனா வெனப்பார்க்கும் கெண்டைகளின் பரபரப்பு!
"விண்நீலம் மறைத்திடவே விரைகின்ற மேகம்போல்
என்தோட்டம் சினுங்கியதே அவள்சென்ற பாதையெலாம்!!"
என்னவொரு காட்சியிது என்றேநான் களித்திருக்க,
சின்னவளின் சீறடியில் கோவிக்கும் கொலுசோசை!!
இதுகாறும் கேட்கலையே இப்பொழுது எப்படியே,
அதுதேடி நானெருங்கி அப்படியே திகைத்தேன்!
விரைந்தோடிப் போகையிலும் ஒலிக்காத மெல்லியலாள்
"சினுங்கிகள் சினுங்கையிலே சீண்டினவா மவள்கொலுசை!!"

No comments: