Pages

Thursday, April 24, 2008

தனித்தமிழ் - ஊடாடு வினாக்கள் - பகுதி 1 (FAQs part 1)

இணைய/வலைப்பதிவுலகில் தமிழின் குறைகள் பற்றி
நிறைய பேசப்படுவது உந்துதல் அளிப்பதாக இருக்கிறது,
அதே நேரத்தில் ஆங்காங்கு சவலையான
மொழியில் எழுதப் படுகின்ற பதிவுகளைப் பார்க்கும்
போது கவலையும் பிறக்கிறது. தனித்தமிழ் பற்றிய புரிதலுக்காகவே இத்தொடர்.

1) தனித்தமிழ் என்றால் என்ன?

பிறமொழிக்கலப்பு தமிழ் மொழியில் ஏற்பட்டு
மொழியும் பேச்சும் சிதைந்து போகின்ற சூழல்
ஏற்பட்டுவிடாமல், மொழியின் தனித்தன்மை
குன்றாது தமது எழுத்தைக் காத்துக்
கொள்ளும் பண்புகள் தமிழுக்கு உண்டு. பிறமொழி துணயின்றி தனித்தியங்கும் வல்லமை உள்ள நமது தமிழ்மொழியை தனித்தமிழ்  என்று சிறப்பித்து கூறுகின்றனர்.


2) தமிழ் என்பதும் தனித்தமிழ் என்பதும் வேறு வேறா?

இல்லை. தனித்தமிழே தமிழ். தமிழ் என்றால் அது பிறமொழிக்கலப்பில்லா தமிழையே குறிக்கும். பிறமொழி, எழுத்துகள் கலந்திருப்பின் அவை தமிழ் ஆகா.

3) தமிழின் தனித்தன்மை குன்றினால் என்ன ஆகும்?


அ) செந்தமிழ்க்காப்பியம் தோன்றிய சேரநாட்டில்,
தொல்காப்பியம் தோன்றியசேரநாட்டில்,
திருக்குறள் தோன்றிய நாஞ்சில்நாட்டருகே உள்ள
சேரநாட்டில், பிறமொழிக் கலப்பு கங்கு கரையின்றி
ஏற்பட்டதாலும், அதைத் தடுத்து நிறுத்த
அப்போதைக்கு ஏலாததாலும், அரசியல்
மீது ஏறிப் பிறமொழி நுழைந்ததாலும்
தமிழின் தனித்தன்மை சேரநாட்டில் குன்றியது,
அதன்விளைவு மலையாளம் என்ற மொழி
தோன்றியது 1100 ஆண்டுகளுக்கு
முன்னர். அது தனி நாடாகவும்
ஆகிப்போனது ஏறத்தாழ கி.பி 1300க்குப்
பின்னர். இந்த வரலாற்றை அறிந்திருந்தும்
அறியாததுபோல வாழ்ந்தால்
பிழை நம்மதுதானே?


ஆ) தனித்தன்மை குன்றினால் எந்த ஒன்றிற்கும்
பிற மொழிகளைச் சார்ந்தே வாழ வேண்டி இருக்கும்.
மனிதனுக்கு அடிமை புத்தி வருவதற்கு மூலமே இதுதான். காட்டாக, விபத்தில் சிக்கி கை கால் ஊனமுற்றவர்கள் வாழ்க்கை முழுதும் சரவல் பட்டு சார்ந்து வாழ்வதைப்போல, மொழியைக் குன்ற விட்ட குமுகமும் ஆகிவிடும். மூச்சு இருக்கும் வரை வாழ்விருக்கும்தான்.
ஆனால் ஊனத்துடன் வாழ்வது எவ்வளவு பேருக்கு இன்பம்?
4) தனித்தமிழ் என்றால் அகராதியில் இருக்கும்
சொற்களைப் பார்த்துப் பார்த்து,
வேர்ச் சொல் ஆய்ந்து ஆய்ந்து,
கலைச்சொல் கண்டு பிடித்துக்
கண்டு பிடித்து எழுதுவதா?

இல்லை.

அ) எளிமையாக இருக்கும் தமிழை எல்லோரும் அறிந்த
தமிழை நேர்த்தியாக எழுதுவதுதான் அடிப்படை.

ஆ) ஆங்கிலம், சமற்கிருதம் போன்ற அயல் மொழிகள்,
மற்றும் தெலுங்கு, மலையாளம் போன்ற, தமிழ்கெட்டு பிறவாக கிளைத்த கிளை மொழிகள் போன்றவற்றின் சொல்லும், எழுத்துக்களும்
தமிழில் பாவாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுதெல்லாம் ஆங்கிலம் சமற்கிருதம்
போன்றவை செய்யும் தீங்கு போதாதென்று,
மலையாளம், தெலுங்கு போன்றவற்றை அறிந்த
எழுத்தாளர்கள் அதனையும் சேர்த்துக்
குழப்பியடித்துத் தீங்கு செய்கிறார்கள்.


5) மலையாளம் தோன்றிய பின்னர் தமிழ்நாட்டில் பாதிப்பேதும் இல்லையே; பிறகு ஏன் கவலைப்படவேண்டும்?

மலையாளம் தோன்ற ஆரம்பித்துப்
பின்னர் நாடாக, தமிழ்த் தொடர்பை
அறுத்துக் கொண்ட 1300/1400க்கு
பின்னரான கால கட்டத்தில்
குறிப்பாக 16 ஆம் நூற்றாண்டிற்கும்
20 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட
காலத்தில் மலையாளத்தைப் பின்பற்றி
தமிழகத்தில் மணிப்பிரவாளம்
என்ற மொழி ஏற்பட்டிருந்தது.

சமற்கிருதப் புலமையே புலமை, பண்டிதம்,
அறிஞம் என்ற நிலை ஏற்பட்டிருந்தது.
மணிப்பிரவாள இலக்கியங்கள்
மிகுந்தன. சமற்கிருதமும் தமிழும் கலந்த
கலவையான மணிப்பிரவாளம்
பேசுவது எழுதுவது நாகரிகமாக ஆகி
சென்னை மாநிலம் மணிப்பிரவாள
மாநிலமாக இருந்தது.

தனித்தமிழ் இயக்கம் தோன்றியிருக்கா விட்டால்
தமிழ்நாடு என்பது வரலாற்றில்
கரைந்து இருக்கும். இன்றைக்கு இந்த
அளவு கூட தமிழ் இருந்திருக்காது;
இன்றைய தமிழ்நாட்டுக்குள்
மணிப்பிரவாள மாநிலம் தோன்றியிருக்கும்.

தற்போது உலகில் ஓங்கி நிற்கும் ஆங்கிலத்தால் நமக்கு வேறுவழியில்லாததால் தீவினன ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
இதற்கு ஆங்கிலத்தைக் குற்றம் சொல்லமுடியாது.
நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.


6) தனித்தமிழ் இயக்கம்தான் தமிழ்நாட்டை
மற்றொரு பிரிவில் இருந்து காப்பாற்றியதா?
ஆமாம்.


7) காப்பாற்றுதல் என்றால் என்ன?

காப்பாற்றுதல் என்பதை இரு வகைப் படுத்துகிறார்
செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரன்.
அவரின் "தனித்தமிழ் இயக்கம்" என்ற நூலில்
இப்படிச் சொல்கிறார்:

காவற்கடமை:

"ஒன்று, வளர்ந்து செழிப்படைவதற்கு
வேண்டிய ஆக்கச் செயல் வகைகளையெல்லாம்
செய்தல். மற்றொன்று. பிறவற்றின் தாக்கம்,
அழிப்புகளில் இருந்து காத்தல்.


முன்னது அகக்காவல். பின்னது புறக்காவல்.
இருவகைக் காவலும் மேற்கொண்டால்

அல்லாமல் மக்கள் வாழ்வு சிறப்படையாது. "

அவ்வாறே மொழிவாழ்வும். அகக்காவலும் புறக்காவலும் இல்லாமல்
எடுப்பார் கை பிள்ளையாய் ஆகிப்போனது தமிழ்.

"மக்கள் இனக்கலப்பு தவிர்க்க இயலாமை போல,
மொழிக்கலப்பும் தவிர்க்க முடியாததே. ஆனால்,
தன்னையே அழித்துக் கொள்ளும் வகையில்
எப்படி ஓரினம் மாற்றம் ஆகிவிடக்கூடாதோ,
அப்படியே ஒருமொழியும் மாற்றம் ஆகிவிட
விட்டு விடக் கூடாது"

8) தனித்தமிழ் இயக்கம் என்பது என்ன? அது யாரால்
தோற்றுவிக்கப் பட்டது?

பெருகிவந்த மணிப்பிரவாளம் ஏறத்தாழ
தமிழின் குரல்வளையை
இறுக்கியபோது, அதன் கேடுகளையும்
வரலாற்றையும் உணர்ந்த
நமது முன்னோர்கள், தமிழை மீட்கவும்,
அதன் தனித்தன்மையை
நிலை நிறுத்தவும், தமிழர்கள் அடையாளம்
நிலைக்கவும் தோற்றுவித்த
இயக்கம் தனித்தமிழ் இயக்கம்.

தனித்தமிழ் இயக்கம்
தவத்திரு மறைமலை அடிகளாரால்
தோற்றுவிக்கப் பட்டது.

9) தனித்தமிழ் இயக்கம் தோன்ற முன்னோடியாக
இருந்தது யாது?

திருவிடர் கழகம் என்ற அமைப்பு.
இது குறித்து செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார் கூறுவதாவது:

//
19-11-1908 இல் "திருவிடர் கழகம்" என்னும் அமைப்பு
தோற்றுவிக்கப்பட்டது. அதனை அமைத்தவர்
"மறைத்திருவன் விருதை சிவஞான யோகிகள்"
என்பவர் ஆவார். (திராவிடர் கழகம் வேறு,
திருவிடர் கழகம் வேறு). 99 யாண்டுகள்
உயிர்வாழ்ந்த அந்தப் பெருமகனார் பன்மொழிப் புலவர்.

குற்றாலத் தென்றலாய் தமிழுக்கு அமைந்த
இவ்வமைப்பு தோன்றியதும் குற்றாலத்தில்தான்.

இதன் தலைவராக திருவன் சீர்காழி கே.சிதம்பர
முதலியார் இருந்தார். துணைத்தலைவர்களாக இருந்த
மூவர் வருமாறு.

திருவன் பூவை.கலியாண சுந்தர முதலியார்
திருவன் ஏ.பால்வண்ண முதலியார்
திருவன் மு.ரா.கந்தசாமிக் கவிராயர்


இக்கழக உறுப்பினர்களாக 59 பேர் கொண்ட
பட்டியல் உள்ளது.

அவர்களில்
திருவன் இராவ்பகதூர் தியாகராச செட்டியார்,
திருவன் வெ.ப.சுப்பிரமணிய முதலியார்
திருவன் அரசஞ் சண்முகனார்
திருவன் மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை
மறைத்திருவன் சுவாமி வேதாச்சலம்
(மறைமலை அடிகளார்)
திருவன் மு.கதிரேசச் செட்டியார்
திருவன் சோமசுந்தர பாரதியார் (நாவலர்)
ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடத்தக்கவையாக
குறிக்கப் பட்டுள்ளது.
//

திருவிடரின்(திராவிடர்கள்) பழைய
வரலாறுகளையும் மொழியையும்
(தமிழ்) ஆய்ந்து உண்மைச் சேதிகளை
வெளிக் கொணருதலை
இன்றியமையா குறிக்கோள்களில் ஒன்றாகக்
கொண்ட இந்தக் கழகத்தின்
குறிக்கோள்கள், கட்டளைகள், செயல்பாடுகள்
குறித்த பதிவுகளில்
காணப்படும் தமிழ்ச் சொற்கள்
அருஞ்சிறப்பு வாய்ந்தவை.

10) தனித்தமிழ் இயக்கத் தந்தை
தவத்திரு மறைமலை அடிகளாரைப்
பற்றிச் சிறிது அறிய முடியுமா?

செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார்,
பேரறிஞர் வ.சுப.மாணிக்கனார் ஆகியோரது
கீழ்க்கண்ட உரைகள் நமக்கு நிறைய அறியத்தருகின்றன.

அடிகளார் இளந்தைப் பருவத்தில்
நாகையில் வெசிலி கல்லூரியில் உயர்
பள்ளியில் கற்று வந்தார். பள்ளியில் தமிழ்
பயின்றதோடு, பொத்தகக் கடை
வாணிகராகவும் இருந்தார்.

பெரும் தமிழ்ப் புலமையாளர்
திருவன் நாராயணசாமி அவர்களிடம்
செந்தமிழ் இலக்கண இலக்கியங்களைச்
செவ்வையாகக் கற்றார்.

ஒழுக்கத்துக்கு எவர்நடையைப் பின்பற்ற வேண்டும்? ஒழுங்கர்
நடையைத்தானே
?

மாசுக்கட்டுப்பாடு காற்றுக்கும் நீருக்கும்
எவ்வளவு இன்றியமையாததோ
அவ்வளவு இன்றியமையாதது,
மொழிக்கு மாசுக்கட்டுப்பாடு வேண்டுதல்.

அக்கட்டுப்பாட்டைக் கட்டாயம்
உண்டாக்க வேண்டும் என்ற அடிகளாரின்
பேருள்ளத்தில் உருவானதே தனித்தமிழ் இயக்கம்.

தனித்தமிழ் கண்ட அடிகளார்
உடலோம்பலில் தலை நின்றவர்;
உணவு, உடை,உழைப்பு, ஓய்வு, உறக்கம், உலாவல்
இன்னவற்றெல்லாம்
ஓர் ஒழுங்கர். இருப்பிடம் அலுவலகம்
தோட்டம் சூழல் இன்னவெல்லாம்
தூசு தும்பு மாசு மறுவின்றித் திகழத்
திட்டப்படுத்தி ஒழுங்குபடுத்திக்
கொண்ட கடமையர்.

எழுதும் எழுத்து, பேசும் பேச்சு, நடக்கும் நடை,
எடுக்கும் நூல், தொடுக்கும் மிதியடி இவற்றிலெல்லாம்
ஒழுங்குமுறை கடைப்பிடியர். அந்த
ஒழுங்குள்ளத்தில் தோன்றியதே தனித்தமிழ் இயக்கம் என்று சொல்கிறார் புலவர் இரா.இளங்குமரன்.
வ.சுப.மாணிக்கனார்
அவர்கள்,
"அடிகளாரின் தனித்தமிழ் இயக்கம்
தமிழ்த்தாயின் நெஞ்சு புரையோடாதும்,
தமிழர் அறைபோகாதும் காத்தது.
தமிழின் வயிற்றிலிருந்து முன்பு பல
திராவிட மொழிகள் கிளைத்து
அதன் பரப்பைச் சுருக்கியது போல

மீண்டும் தமிழகத்துள் ஒரு புதிய
திராவிட மொழி பிறந்து தமிழைக் குன்றிக்
குலையாதவாறு தடுத்தது"
என்று உரைக்கிறார்.

11) மறைமலை அடிகளார் தூயதமிழ்
போற்றுபவர்களிடம் இருந்து
"தமிழ் விடுதலை ஆகவேண்டும்" என்று

சொல்பவர்களையும், நல்ல தமிழ் செய்பவர்களைக்
கேலி பேசுபவர்களையும் பற்றி என்ன சொல்கிறார்?
மறைமலை அடிகளாரை அவர்காலத்தில் கிடுக்காத,
தாக்காத கீழ்மொழி தாசர்கள் குறைவு.
அவர் சந்திக்காத கிடுக்கல்கள்
கிடையாது. அது இன்றும் பொருந்தும்.

மறைமலை அடிகளார், தம் தமிழ்ப்பணியை
"கலிகாலக் கொடுமை"
என்று நகைத்தார்க்கு பதிலிறுக்கிறார்;

"பண்டு தொடங்கிப் புனிதமாய் ஓங்கி நிற்கும்
நம் தனித் தமிழ்த்தாயைப் பிறமொழிச் சொற்கள்
என்னும் கோடாரியினுள் நுழைந்து கொண்டு,
இத்தமிழ்ப் புதல்வர் வெட்டிச் சாய்க்க

முயல்வதுதான் *கலிகாலக் கொடுமை*!
இத்தீவினை புரியும் இவர் தம்மைத் தடுத்து,
எம் தமிழ்த்தாயைப் பாதுகாக்க
முன்நிற்கும் எம்போல்வாரது நல்வினைச்

செயல் ஒருகாலும் கலிகாலக்
கொடுமை ஆகாது என்று

உணர்மின்கள், நடுநிலையுடையீர்"!

12) தமிழின் தனித்தன்மை பேணாமையால்
எய்திய கேடு என்ன என்று
அடிகளார் கூறுகிறார்?

மறைமலையடிகள் கூறுகிறார்:

"மக்களை விட்டு மொழியும், மொழியை விட்டு
மக்களும் உயிர்வாழ்தல் சிறிதும் இயலாது.

எனது விருப்பப்படிதான் யான் பேசும்
மொழியைத் திரித்தும், அயல்மொழிச் சொற்களோடு கலந்து
மாசு படுத்தியும் வழங்குவேன்;


அம்மொழியின் அமைப்பின்படி யான்
நடக்கக் கடவேன் அல்லன்' என்று
ஒவ்வொருவனும் தனது மொழியைத்
தன் விருப்பப்படி எல்லாம் திரித்துக் கொண்டு
போவானாயின் சிறிது காலத்தில்
ஒரு மக்கட் கூட்டத்தாரிலேயே ஒருவரை
ஒருவர் அறிந்து கொள்ள முடியாத
வகையாய் ஒவ்வொரு சிறு கூட்டத்திற்கும்
ஒவ்வொரு புதுமொழி காலந்தோறும்
உண்டாகி அம்மக்களை ஒன்று சேரவிடாமல்
அவர்களைப் பல சிறு கூட்டங்களாகப் பிரித்து விடும்"
(தொடரும்)

அன்புடன்
நாக.இளங்கோவன்

8 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

நல்ல தொகுப்பு. நன்றி

குமரன் (Kumaran) said...

நிறைய தகவல்களைத் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி ஐயா.

Sathis Kumar said...

ப‌ய‌னுள்ள‌ க‌ட்டுரை, மிக்க‌ ந‌ன்றி ஐயா.. இங்கு ம‌லேசியாவில் த‌னித்த‌மிழுக்கென்று போராடும் ஒரு வ‌லைத்த‌ள‌ம் உங்க‌ள் பார்வைக்கு.. http://www.tamiluyir.blogspot.com/

nayanan said...

அன்பின் நண்பர்கள் இரவிசங்கர் மற்றும் திரு.குமரன் அவர்களுக்கு
மிக்க நன்றி.

நண்பர் சதீசு குமார்:
தாங்கள் தந்த சுட்டியினை சென்று பார்த்தேன். மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
மிக்க நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்

பாச மலர் / Paasa Malar said...

அரிய தகவல்கள்..அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறோம்..வாழ்த்துகள்.

nayanan said...

பாசமலர் அவர்களே,
மிக்க நன்றி. இயன்றவரை எழுதுகிறேன்.
அன்புடன்
நாக.இளங்கோவன்

மணிவானதி said...

மிக அருமையான செய்திக்கட்டுரை.ஆசிரியருக்கு என் மனம் மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்.

அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.

nayanan said...

நன்றி முனைவர் மணிகண்டன்.
கோவையிலும், திருச்சியிலும் உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சியளித்தது.

அன்புடன்
நாக.இளங்கோவன்