சிலம்பு மடல் - 20 மதுரை மாநகர்!
மதுரை:
ஊர்காண் காதை:
காவிரிக்கரையில் மாதவியைப் பிரிந்து, பின்னர் அக்காவிரி வாழ் சோழ நாட்டையும் பிரிந்து, தற்போது கண்ணகியையும், இவ்வையத்தையும் தன் கரையில் பிரியப் போகும் கோவலனை நினைத்துத்தான் வையை அழுதிருக்க வேண்டும்! அவ் வையை நதியைக் கடந்து மதுரை சேர்ந்ததும் கோவலன், காவுந்தி அடிகளிடம் தன் மனைவியைப் பாதுகாக்கச் சொல்லிவிட்டு நகர வாணிகம் பற்றியறிய புறப்படுகிறான்;
அதன்முன் கண்ணகிக்கு துன்பம் நேருமாறு நடந்து கொண்டதை எண்ணி கலங்குகிறான். ஊர் பெயர்ந்தாலே துன்பம்தான். ஆனால் இவனோ முன் பின் அறியா நாட்டுக்குள் மனைவியையும் அழைத்துக் கொண்டு ஏழ்மையாய் வந்து நிற்கிறான். முதன் முதலாய் வேற்று நாட்டுக்கு வாழப்போகும் மனிதன் இந்நாளும் அடையும் துன்பங்களைத்தான், அச்சங்களைத்தான் அன்று கோவலனும் பெற்றிருந்தான்.
வாழ இடம் இல்லை; பொருளீட்ட வகையில்லை! சுற்றி நிற்க சுற்றம் இல்லை!.
ஒரே ஒரு ஆறுதல் அவனுக்கு! அங்கும் அவன் பேசிய அதே மொழி.அதுவும் அன்னைத் தமிழ் நாடே! தமிழ் மட்டுமே அவனை அரவனைத்துக் கொண்டது.
இன்று, புலம் பெயர்ந்த தமிழர்களால், போய்வர தமிழருக்கு நாடிருப்பது போல!.
கோவல-கண்ணகி சோழ நாடு நீங்கி பாண்டிய நாடு சேர்ந்தபோதும் பின்னர் கண்ணகி மட்டும் மதுரை நீங்கி சேர நாடு சேர்ந்தபோதும் எங்கும் குடியுரிமைத் தேவைகள்(Passport, Visa, Immigraion ) இருந்திருக்கவில்லை!
இன்று அமெரிக்க அய்ரோப்பிய நாடுகள் மற்றும் சில தூர கிழக்கு நாடுகள் கொண்டுள்ள புரிந்துணர்வைப்போல!
சேரமாயும், சோழமாயும் பாண்டியமாயும் இன்ன பிறவாயும் தமிழகம் அந்த காலத்தைய குறைந்த போக்குவரத்து, தகவல் தொடர்பு வசதிகளுக்கு ஏற்றவாறு பிரிந்திருந்தாலும் தமிழ்த்தேயமாய் இணைந்திருந்ததின் பயனே அது!
ஒரு நாள் நேரத்தில் உலகையே சுற்ற முடிந்த இந்த காலத்தில் உலகுவாழ் தமிழர்களை எங்கும் காணமுடிவது அதே தமிழ்த் தேயத்தை சிந்தையில் மலரச் செய்கிறது.
"காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி
'நெறியின் நீங்கியோர் நீர்மையேன் ஆகி
நறுமலர் மேனி நடுங்குதுயர் எய்த
அறியாத் தேயத்து ஆர்இடைஉழந்து
சிறுமை உற்றேன்! செய்தவத் தீர்!யான்
தொல்நகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு
என்நிலை உணர்த்தி யான்வருங் காறும்
பாதக் காப்பினள் பைந்தொடி ஆகலின்
ஏதம் உண்டோ அடிகள்ஈங்கு' என்றலும் ......"
(அறியாத் தேயத்து=முன் பின் அறியா நாட்டில்)
என்று மேற்கண்டவாறு கோவலன் அடிகளிடம் வேண்ட; தீவினை ஊட்டும் (மற) செயல்களை நீக்கி அறச் செயல்களைச் செய்வீர் என்று "நாவென்ற குறுந்தடியால் வாய் என்ற பறையை அறைந்து" அறத்துறை மாக்களாகிய நாங்கள் எவ்வளவு சொன்னாலும் உறுதியான அறிவில்லா மனிதர்கள் அதன்படி நடக்காமல் பின்னர் தீவினை வந்து சேர்ந்ததும் வருந்துகின்றனர் என்று அடிகளும் வருத்தப்படுகிறார்.
"கவுந்தி கூறும்; 'காதலி தன்னொடு
தவம்தீர் மருங்கின் தனித்துயர் உழந்தோய்!
மறத்துறை நீங்குமின் வல்வினை ஊட்டும்என்று
அறத்துறை மாக்கள் திறத்தில் சாற்றி
நாக்கடிப்பு ஆக வாய்ப்பறை அறையினும்
யாப்புஅறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்"
மேலும் அடிகள், "நீ மட்டும் அல்ல; உன் போல் பலர் தீச்செயல் காரணமாக மனைவியுடன் நாட்டை விட்டு வெளிப்போந்து துயருற்றனர்; நீ நாடு மாறி உறும் துன்பங்கள் போலவே இராமன் சீதையுடனும், நளன் தமயந்தியுடனும் நாடு நீங்கித் துயருற்றனர்! " என்று உரைத்தார்;
"தாதை ஏவலின் மாதுடன் போகிக்
காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்..."
(தயரதன் ஏவலால் சீதையுடன் காடு போன இராமன் )
"வல்லாடு ஆயத்து மண்அரசு இழந்து
மெல்இயல் தன்னுடன் வெங்கான் அடைந்தோன்...."
(வல்=சூது; நளன் சூதாடி நாட்டைத் தோற்று
தமயந்தியுடன் காடு போனது )
ஒருபுறம் வருத்தம்; மறுபுறம் உற்சாகத்தோடு மதுரை மூதூரை உலாவிப் பார்க்கிறான் கோவலன். காண்கிறான் முதலில் பரத்தையர் வீதியை;
இக்காதையின் பாதிக்கு பரத்தையர் காதை என்று இளங்கோவடிகள் பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். பரத்தையரை ஆராய்வோர்க்கு திரளாகச் செய்திகள் உண்டு; புகார் பரத்தையரை மதுரை பரத்தையரோடு ஒப்பிட்டும் பார்க்கலாம்.
காலை முதல் இரவு வரை பரத்தையரின் பொழுது போக்கு நிகழ்ச்சிகள், கார், கூதிர்,முன்பனி,பின்பனி,இளவேனில் மற்றும் முதுவேனில் காலங்களில் அவர்களின் உடைகள் மற்றும் ஒப்பனை வேறுபாடுகளின் விளக்கம் பல செய்திகளைத் தருவதாக அமைந்திருக்கிறது.
மதுரை மாநகரில், பரத்தையர் வீதி, அரசப் பரத்தையர் வீதி, கலைஞர்கள் வாழ்ந்த இரு பெரும் வீதிகள், அங்காடி வீதி,மணிக்கல் வீதி, பொன் கடை வீதி, அறுவை வீதி (பருத்தி, எலி மயிர், பட்டு ஆகியவற்றால் நெய்யப்பட்ட துணிகள் விற்கப்படும் வீதி), கூலவீதி (தானியங்கள், பாக்கு, மிளகு போன்றவை விற்கப்படும் வீதி), இவை யாவையையும் கோவலன் சுற்றிப்பார்த்து விட்டு மீண்டும் கண்ணகியும் காவுந்தியும் இருந்த புறஞ்சேரிக்கு மீள்கிறான்!
அனைத்து வீதிகளிலும், இந்த மணிக்கல் வீதியில் விற்கப்பட்ட ஒன்பது வகை மணிகள் பற்றிய குறிப்புக்கள் சிறப்புவாய்ந்தவை.
வயிரம்:
காகபாதம், களங்கம், விந்து, இரேகை என்ற நான்கு குற்றங்களும்
இன்றி, நுட்பமான முனைகளையும், நால்வகை நிறத்தையும், நிறை ஒளியையும் கொண்டவை வயிர மணிகள். வயிரத்தில் வகைகள் வெண்மை, செம்மை, பொன்மை, கருமை என நான்காகச் சொல்லப்பட்டிருக்கிறது.
"காக பாதமும் களங்கமும் விந்துவும்
ஏகையும் நீங்கி இயல்பிற் குன்றா
நூலவர் நொடிந்த நுழைநுண் கோடி
நால்வகை வருணத்து நலம்கேழ் ஒளியவும்...."
மரகதம்:
கீற்று, மாலை, இருள் என்னும் மூன்று குற்றங்கள் இல்லாது பசுமையான நிறத்தையும், இளங்கதிரின் ஒளியை உடையது.
"ஏகையும் மாலையும் இருளொடு துறந்த
பாசார் மேனிப் பசுங்கதிர் ஒளியவும்..."
மானிக்கம்:
பதுமம்(சிவப்புக்கல்) , நீலம், விந்தம்(குன்றுமணி நிறம்), படிதம்(கோவைப்பழ நிறம்) என்று நால்வகையான, விதிமுறை மாறாத மாணிக்க மணிகள்:
"பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும்
விதிமுறை பிழையா விளங்கிய சாதியும்...."
புருடராகம்:
பூச மீனின் வடிவமும், பொன்னைத் தெளிய வைத்தைப் போன்ற நிறமும் கொண்டது:
"பூச உருவின் பொலம் தெளித்தனையும்"
வைடூரியம்:
குற்றமற்ற ஞாயிற்றின் ஒளி போலவும் தெளிந்த தேன்துளி போன்ற நிறத்தையும் கொண்டது:
"தீதுஅறு கதிர்ஒளித் தென்மட்டு உருவவும்"
நீலம்:
இருளைத் தெளிய வைத்தாற் போன்ற நீலமணிகள்.
"இருள் தெளித்தனையவும்....."
கோமேதகம்:
மஞ்சள் சிவப்பு என்ற இரு நிறங்கள் கலந்தது.
"இருவேறுரு உருவவும்......."
மேற்கண்ட மானிக்கம், புருடராகம்,வைடூரியம்,நீலம்,கோமேதகம் ஆகிய ஐமணிகளும், ஒரே பிறப்புடையது/தோற்றத்துடையது ஆனால் ஐந்து வேறுபட்டவனப்பினை உடையவை.
"ஒருமைதோற்றத்து ஐவேறு வனப்பின்
இலங்குகதிர் விடூஉம் நலம்கெழு மணிகளும்"
முத்து:
காற்று, மண், கல், நீர் என்பவற்றால் ஏற்பட்ட குற்றங்கள் சிறிதும் இல்லாமல், தெளிந்த ஒளியுடையனவும், வெள்ளியையும் செவ்வாயையும் (கோள்கள்) போல வெண்மையும் செம்மையும் உடையனவும், திரட்சியுடையவவுமான முத்துக்கள்.
"காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும்
தோற்றிய குற்றம் துகள்அறத் துணிந்தவும்
சந்திர குருவே அங்கா ரகன்என
வந்த நீர்மைய வட்டத் தொகுதியும்.."
பவளம்:
நடுவே துளையுடையனவும், கல்லிடுக்கிற்பட்டு வளைந்தனவும், திருகுதல் பெற்றனவும் என்னும் குற்றங்கள் நீங்கிய கொடிப்பவளங்கள்.
"கருப்பத் துளைவும் கல்லிடை முடங்கலும்
திருக்கு நீங்கிய செங்கொடி வல்லியும்..."
இப்படியான ஒன்பது வகை மணிகளும் ஆங்கு விற்கப்படுதலை கோவலன் கண்டான்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
28-திசம்பர்-1999
1 comment:
மிகவும் அருமை
Post a Comment