Pages

Sunday, December 31, 2017

தமிழர் தேய்ந்த/அழிந்த வரலாறு: (பொ.பி 1217-2017)

"ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது" என்றொரு பழமொழி உண்டு. 96ல் இரசினியை இரசித்த கருணாநிதி நன்றிக்கடனாக காவேரி விதயத்திலும் இரசினியை இரசித்ததில் இருந்து, இன்று திருமா, அன்புமணி உள்ளிட்ட இரசினி இரசிகர்கள் செய்த செய்கின்ற அரசியல்-தாராளமயமே இரசினிகாந்துக்கு விரிக்கப்பட்ட சிவப்புக்கம்பளம் என்றால் அது மிகையல்ல.
21 ஆண்டுகள் காத்திருந்தவர் வீயூகம் என்ற பெயரில் உள்நுழைவதே அதற்குச்சான்று.
பாகுபலி என்ற திரைப்படக்கதையை, சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் நேரடியாகக்கண்டு கண்கலங்கியது. பிற்கால பாண்டியப்பேரரசின் வாரிசான சுந்தரபாண்டியனுக்கு உரிமையை தராமல் அரசனின் இன்னொரு மனைவி அல்லது வைப்பாட்டியின் பிள்ளையான வீரபாண்டியனுக்கு அரசுரிமை தரப்பட்டதால், சுந்தரபாண்டியனும் வீரபாண்டியனும் மாற்றி மாற்றி போர்செய்து ஆட்சியைப்பிடித்தும் வீழ்ந்தும் போன அந்த 13 ஆம் நூற்றாண்டுக்குப்பின் தமிழரசியல், தமிழராட்சி, தமிழாளுமை என்ற அனைத்துமே இல்லாது போயின.
14ஆம் நூற்றாண்டில் சுல்தான்களின் பிடியிலிலிருந்த மதுரை, 15-16 ஆம் நூற்றாண்டில், கிருட்டிணதேவராயரின் அடப்பக்காரனாக இருந்த விசுவநாத நாயக்கரின் ஆளுமைக்கு போனதும், மீதமிருந்த தமிழ்ப்பண்பாடு, தமிழ் ஆன்மீகம், கலை, குமுக ஒழுங்கு, சாதி ஒழுங்கு என்ற அனைத்துமே சரிந்து சின்ன பின்னமாகின. பலரும் திராவிட அரசியலை வடுக அரசியலின் தொடர்ச்சி என்பதற்கு இதுவே காரணம். சுமார், 150 ஆண்டுகள் தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தை வடுகர்கள் ஆண்டு, சற்றே, சிறிதே தளர்ந்த பொழுது, தஞ்சை மராட்டியரின் ஆளுமைக்குப்போனது 1676ல். அதன்பின்னர் பாண்டிய நாட்டோடு வடுகராட்சியும், சோணாட்டோடு மராட்டியர் ஆட்சியும்,
வடதமிழ்நாட்டில் நவாபுகளின் ஆட்சியும் உருவாகின. தேசிங் என்ற புகழப்பட்ட Tej Singh என்ற இரசபுதனரின் ஆட்சியும் செஞ்சியில் இருந்ததை நினைவு கூரல் வேண்டும்.
அயலவர்களான வடுக நாயக்கர், மராட்டியர், நவாபுகள், இரசபுதனர் ஆகிய இவர்களது ஆட்சியின் பிடிப்பில், ஆட்சிக்குட்பட்ட, நிலப்பகுதியாக தமிழ்நாடு இருந்தபோது தமிழ்நாட்டுப்பற்று, தாய் மண் என்ற உணர்வு இருந்திருக்க வாய்ப்பே கிடையாது அல்லவா? சோழன், கடாரத்தை ஆண்டதனால், கடாரம் தமிழர்களின் தாய்மண் ஆகிவிடுமா என்ன? தாய்மொழி, தாய்மண், தாயினம் என்ற மாண்புகளுக்கு இடமில்லாத அந்த வேளையில்தான், வேறொரு அயலவரான ஆங்கிலேயரிடம் இந்த அயலவர்கள் தமிழ்நாட்டின் சிறுசிறுபகுதிகளில் தொடங்கி ஒவ்வொரு பகுதியாக தமிழ்நாட்டை விற்றுத்தீர்த்தனர்.
தமிழரசர்களும், தமிழாளுமையும் இருந்தபோது வடுகர், ஒய்சளர், சாளுக்கியர் உள்ளிட்ட பலருடன் நிகழ்ந்த போர்கள் இருவேறு அரசுகளுக்கிடையேயான போர்களாக இருந்தன. ஆனால், தமிழகம் அயலவர் ஆட்சியில் போனபின்னர், அவ் அயலவ அரசர்கள், தங்களுக்குட்பட்ட தமிழ் நிலத்தை Real Estate Model - ல் ஆங்கிலேயரிடம் விற்று விட்டுப்போனதையும் ஒப்பிட்டுப்பார்த்தல் தேவையான ஒன்று. தமிழகத்தில் இப்படி வாங்கிய உரிமைகளின் அடித்தளத்தில்தான், ஆங்கிலேயர்கள் இந்தியா முழுதையும் அதே முறையில் கைப்பற்றினர்.
மண்ணின் மைந்தனுக்குத்தான் தன் மண்ணின்மீது, தன் மொழியின் மீது, தன் இனத்தின் மீது பற்றும் அக்கறையும் இருக்கும். யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்ற தாராளமயம் மண்ணை கூறுபோட்டு விற்கத்தான் உதவும் என்பதற்கு சான்றுதான் இந்த வரலாறு.
இப்போது நடப்பதை சற்று எண்ணிப்பார்த்தால், வடுகர்களின் தாக்கம் பெற்ற அரசியலான திராவிட அரசியல் சற்று தளர்ச்சி அடைந்திருக்கும் போது, பழைய நாயக்கர் காலத்தில் நடந்தது போல, இரசினிகாந்து என்கிற மராட்டியரின் அரசியலாளுமை தமிழகத்துள் நுழைகிறது என்ற செய்தி நமக்கு எளிதாக கிடைக்கிறது.
தமிழ்நாட்டானுக்கு ஆன்மீகம் கிடையாதா என்ன? சில நூறு கருப்புச்சட்டைகளைத்தவிர, பலகோடி தமிழர்களும் கோயிலே கதி என்றுதான் கிடக்கிறார்கள். புரட்டாசி மாதத்தில், ஊன்சந்தை வாடிப்போய்க்கிடக்கும் தமிழ்நாட்டிற்கு கெடாக்கறி விருந்து போடவரும் இரசினிகாந்தர் என்ன ஆன்மீகத்தை உள்ளே கொண்டு வருவார் என்று எண்ணிப்பார்த்தால் விடை கிடைக்காமலா போய்விடும் உங்களுக்கு? இருக்கின்ற தமிழ் அடையாளங்களை சுத்தமாக துடைக்கவே இரசினியின் அரசியல் திட்டமிடப்பட்டு தமிழ்நாட்டுக்கு வெளியேயிருந்து, பழைய வரலாற்றைப்போலவே நுழைக்கப்படுகிறது.
96ல் சரியாக இருந்த சிட்டம் தற்போது இல்லாமல் போய்விட்டதா? வடக்கே ஊழலாறு பெருக்கெடுத்து ஓடும் உ.பியும் தில்லியும் பெண்கள் வாழவே தகுதியற்ற இடமாக ஆகியிருக்கும் காலத்தில், ஊழலில் கருநாடகமும் ஆந்திராவும் முதலிரண்டு இடத்தை பிடித்திருக்கும் வேளையில், இரசினிகாந்து இங்கே என்ன சிட்டக்குறையை தீர்க்க காத்திருக்கிறார்? என்ன தத்துவ அரசியலை கொண்டுவருகிறார்?
ஆந்திராவில் என்.டி.இராமாராவ் தெலுங்குதேசம் கட்சியை தனது திரைப்படக்கவர்ச்சியால் கட்டமைத்தபின்னர், அந்தத்தெலுங்கர்கள், திரைப்படத்தின் பின்னாலேயே சென்றுவிடவில்லை என்பதை உற்று நோக்குக. என்.டி.ஆரின் திரைக்கவர்ச்சி அவரோடு முடிந்து போனது. கருநாடக இராச்குமாரின் திரைக்கவர்ச்சி பெரிய அரசியலாகக்கூட மாறவில்லை.
ஆனால், எம்சியாரும் அவருக்குத் தோதாக இருந்த திராவிட அரசியல்-தாராளமயமும் வரிசையாக திரைப்படங்களிலேயே அரசியல் ஆளுமையை தேட வைத்திருக்கிறது தமிழ்நாட்டில் என்பது அவமானமானதல்லவா? அருகிலிருக்கும் தெலுங்கரின் அறிவளவில் சிறிதும் இல்லாத தமிழகத்தில், அரசியல் தலைமையை நயனதாராவிடமும் (தோழர்!) தேடும் இந்த மண்ணிற்கு மதிப்பேது?
எப்படி, பாண்டியர்களின் உட்சண்டை அயலவர்கள் நுழைய வழிவகுத்ததோ, அதேபோன்றுதான் இன்றைய அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரின் தன்னலத்திற்காக, கூட்டணி கனவுகளுக்காக, அதிகார ஆசைக்காக எல்லாவற்றையும் மறந்து அரசியல்-தாராளமயம் காட்டுகிறார்கள்!
நாணமில்லா மக்கள் தொகையை உருவாக்கியதே நாகரிகம் மறந்த தமிழ் தலைமைகள்தான். தமிழுட்பகைகளின் திரட்சிகளே அயலவர் நுழைய இடம் கொடுக்கின்றன.
"ஊசி இடங்கொடுக்காமல் நூல் நுழையாது" - பழமொழி சொல்லும் கதையிதுவே!
தாய்மண், தாய்மொழி, தாயினத்தின் அரசியல் மீட்பு என்பதை அரைவேக்காட்டு அரசியல் தத்துவங்களும் அறியாமையும் கிண்டலடிக்க தமிழர்களே தமிழர்களை அழித்துக்கொண்டிருப்பதன் நேரலைதான் இரசினியரசியல்.
சமயப்பற்று, சாதிப்பற்று, அரசியற்கட்சிப்பற்று ஆகிய எல்லாமே தமிழ்ப்பற்று என்ற ஒரு இடத்தில் சந்திக்காமல் எதிரெதிர் திசையில் செல்வதன் விளைவுதான் இரசினியரசியல்.
பார்க்கும் பெண்ணையெல்லாம் காமுறுவதற்கும், பார்க்கும் நடிகரையெல்லாம் ஆளவைப்பதற்கும் என்ன வேறுபாடு?
விதைப்பதுதானே முளைக்கும்?
இதுவும் கடந்துபோகும் என்றாலும் எப்பொழுது எப்படி என்பனவற்றை தமிழர்கள் கையில் எடுக்கிறார்களா? அல்லது அதற்கும் அயலவன் வரவேண்டுமா என்பதை யாரறிவார்?

அன்புடன்
நாக.இளங்கோவன்
31/12/2017

Saturday, December 30, 2017

தமிழர் தேய்ந்த/அழிந்த வரலாறு: (பொ.பி 1217-2017)

"ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது" என்றொரு பழமொழி உண்டு. 96ல் இரசினியை இரசித்த கருணாநிதி நன்றிக்கடனாக காவேரி விதயத்திலும் இரசினியை இரசித்ததில் இருந்து, இன்று திருமா, அன்புமணி உள்ளிட்ட இரசினி இரசிகர்கள் செய்த செய்கின்ற அரசியல்-தாராளமயமே இரசினிகாந்துக்கு விரிக்கப்பட்ட சிவப்புக்கம்பளம் என்றால் அது மிகையல்ல.
21 ஆண்டுகள் காத்திருந்தவர் வீயூகம் என்ற பெயரில் உள்நுழைவதே அதற்குச்சான்று.

பாகுபலி என்ற திரைப்படக்கதையை, சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் நேரடியாகக்கண்டு கண்கலங்கியது. பிற்கால பாண்டியப்பேரரசின் வாரிசான சுந்தரபாண்டியனுக்கு உரிமையை தராமல் அரசனின் இன்னொரு மனைவி அல்லது வைப்பாட்டியின் பிள்ளையான வீரபாண்டியனுக்கு அரசுரிமை தரப்பட்டதால், சுந்தரபாண்டியனும் வீரபாண்டியனும் மாற்றி மாற்றி போர்செய்து ஆட்சியைப்பிடித்தும் வீழ்ந்தும் போன அந்த 13 ஆம் நூற்றாண்டுக்குப்பின் தமிழரசியல், தமிழராட்சி, தமிழாளுமை என்ற அனைத்துமே இல்லாது போயின.

14ஆம் நூற்றாண்டில் சுல்தான்களின் பிடியிலிலிருந்த மதுரை, 15-16 ஆம் நூற்றாண்டில், கிருட்டிணதேவராயரின் அடப்பக்காரனாக இருந்த விசுவநாத நாயக்கரின் ஆளுமைக்கு போனதும், மீதமிருந்த தமிழ்ப்பண்பாடு, தமிழ் ஆன்மீகம், கலை, குமுக ஒழுங்கு, சாதி ஒழுங்கு என்ற அனைத்துமே சரிந்து சின்ன பின்னமாகின. பலரும் திராவிட அரசியலை வடுக அரசியலின் தொடர்ச்சி என்பதற்கு இதுவே காரணம். சுமார், 150 ஆண்டுகள் தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தை வடுகர்கள் ஆண்டு, சற்றே, சிறிதே தளர்ந்த பொழுது, தஞ்சை மராட்டியரின் ஆளுமைக்குப்போனது 1676ல். அதன்பின்னர் பாண்டிய நாட்டோடு வடுகராட்சியும், சோணாட்டோடு மராட்டியர் ஆட்சியும்,
வடதமிழ்நாட்டில் நவாபுகளின் ஆட்சியும் உருவாகின. தேசிங் என்ற புகழப்பட்ட Tej Singh என்ற இரசபுதனரின் ஆட்சியும் செஞ்சியில் இருந்ததை நினைவு கூரல் வேண்டும்.

அயலவர்களான வடுக நாயக்கர், மராட்டியர், நவாபுகள், இரசபுதனர் ஆகிய இவர்களது ஆட்சியின் பிடிப்பில், ஆட்சிக்குட்பட்ட, நிலப்பகுதியாக தமிழ்நாடு இருந்தபோது தமிழ்நாட்டுப்பற்று, தாய் மண் என்ற உணர்வு இருந்திருக்க வாய்ப்பே கிடையாது அல்லவா? சோழன், கடாரத்தை ஆண்டதனால், கடாரம் தமிழர்களின் தாய்மண் ஆகிவிடுமா என்ன? தாய்மொழி, தாய்மண், தாயினம் என்ற மாண்புகளுக்கு இடமில்லாத அந்த வேளையில்தான், வேறொரு அயலவரான ஆங்கிலேயரிடம் இந்த அயலவர்கள் தமிழ்நாட்டின் சிறுசிறுபகுதிகளில் தொடங்கி ஒவ்வொரு பகுதியாக தமிழ்நாட்டை விற்றுத்தீர்த்தனர்.

தமிழரசர்களும், தமிழாளுமையும் இருந்தபோது வடுகர், ஒய்சளர், சாளுக்கியர் உள்ளிட்ட பலருடன் நிகழ்ந்த போர்கள் இருவேறு அரசுகளுக்கிடையேயான போர்களாக இருந்தன. ஆனால், தமிழகம் அயலவர் ஆட்சியில் போனபின்னர், அவ் அயலவ அரசர்கள், தங்களுக்குட்பட்ட தமிழ் நிலத்தை Real Estate Model - ல் ஆங்கிலேயரிடம் விற்று விட்டுப்போனதையும் ஒப்பிட்டுப்பார்த்தல் தேவையான ஒன்று. தமிழகத்தில் இப்படி வாங்கிய உரிமைகளின் அடித்தளத்தில்தான், ஆங்கிலேயர்கள் இந்தியா முழுதையும் அதே முறையில் கைப்பற்றினர்.

மண்ணின் மைந்தனுக்குத்தான் தன் மண்ணின்மீது, தன் மொழியின் மீது, தன் இனத்தின் மீது பற்றும் அக்கறையும் இருக்கும். யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்ற தாராளமயம் மண்ணை கூறுபோட்டு விற்கத்தான் உதவும் என்பதற்கு சான்றுதான் இந்த வரலாறு.

இப்போது நடப்பதை சற்று எண்ணிப்பார்த்தால், வடுகர்களின் தாக்கம் பெற்ற அரசியலான திராவிட அரசியல் சற்று தளர்ச்சி அடைந்திருக்கும் போது, பழைய நாயக்கர் காலத்தில் நடந்தது போல, இரசினிகாந்து என்கிற மராட்டியரின் அரசியலாளுமை தமிழகத்துள் நுழைகிறது என்ற செய்தி நமக்கு எளிதாக கிடைக்கிறது.

தமிழ்நாட்டானுக்கு ஆன்மீகம் கிடையாதா என்ன? சில நூறு கருப்புச்சட்டைகளைத்தவிர, பலகோடி தமிழர்களும் கோயிலே கதி என்றுதான் கிடக்கிறார்கள். புரட்டாசி மாதத்தில், ஊன்சந்தை வாடிப்போய்க்கிடக்கும் தமிழ்நாட்டிற்கு கெடாக்கறி விருந்து போடவரும் இரசினிகாந்தர் என்ன ஆன்மீகத்தை உள்ளே கொண்டு வருவார் என்று எண்ணிப்பார்த்தால் விடை கிடைக்காமலா போய்விடும் உங்களுக்கு? இருக்கின்ற தமிழ் அடையாளங்களை சுத்தமாக துடைக்கவே இரசினியின் அரசியல் திட்டமிடப்பட்டு தமிழ்நாட்டுக்கு வெளியேயிருந்து, பழைய வரலாற்றைப்போலவே நுழைக்கப்படுகிறது.

96ல் சரியாக இருந்த சிட்டம் தற்போது இல்லாமல் போய்விட்டதா? வடக்கே  ஊழலாறு பெருக்கெடுத்து ஓடும் உ.பியும் தில்லியும் பெண்கள் வாழவே தகுதியற்ற இடமாக ஆகியிருக்கும் காலத்தில்,  ஊழலில் கருநாடகமும் ஆந்திராவும் முதலிரண்டு இடத்தை பிடித்திருக்கும் வேளையில், இரசினிகாந்து இங்கே என்ன சிட்டக்குறையை  காத்திருக்கிறார்? என்ன தத்துவ அரசியலை கொண்டுவருகிறார்?

ஆந்திராவில் என்.டி.இராமாராவ் தெலுங்குதேசம் கட்சியை தனது திரைப்படக்கவர்ச்சியால் கட்டமைத்தபின்னர், அந்தத்தெலுங்கர்கள், திரைப்படத்தின் பின்னாலேயே சென்றுவிடவில்லை என்பதை உற்று நோக்குக. என்.டி.ஆரின் திரைக்கவர்ச்சி அவரோடு முடிந்து போனது. கருநாடக இராச்குமாரின் திரைக்கவர்ச்சி பெரிய அரசியலாகக்கூட மாறவில்லை.

ஆனால், எம்சியாரும் அவருக்குத் தோதாக இருந்த திராவிட அரசியல்-தாராளமயமும் வரிசையாக திரைப்படங்களிலேயே அரசியல் ஆளுமையை தேட வைத்திருக்கிறது தமிழ்நாட்டில் என்பது அவமானமானதல்லவா? அருகிலிருக்கும் தெலுங்கரின் அறிவளவில் சிறிதும் இல்லாத தமிழகத்தில், அரசியல் தலைமையை நயனதாராவிடமும் (தோழர்!) தேடும் இந்த மண்ணிற்கு மதிப்பேது?

எப்படி, பாண்டியர்களின் உட்சண்டை அயலவர்கள் நுழைய வழிவகுத்ததோ, அதேபோன்றுதான் இன்றைய அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரின் தன்னலத்திற்காக, கூட்டணி கனவுகளுக்காக, அதிகார ஆசைக்காக எல்லாவற்றையும் மறந்து அரசியல்-தாராளமயம் காட்டுகிறார்கள்!

நாணமில்லா மக்கள் தொகையை உருவாக்கியதே நாகரிகம் மறந்த தமிழ் தலைமைகள்தான்.

"ஊசி இடங்கொடுக்காமல் நூல் நுழையாது" - பழமொழி சொல்லும் கதையிதுவே!

தாய்மண், தாய்மொழி, தாயினத்தின் அரசியல் மீட்பு என்பதை அரைவேக்காட்டு அரசியல் தத்துவங்களும் அறியாமையும் கிண்டலடிப்பது தமிழர்களே தமிழர்களை அழித்துக்கொண்டிருப்பதன் நேரலைதான் இரசினியரசியல்.

சமயப்பற்று, சாதிப்பற்று, அரசியற்கட்சிப்பற்று ஆகிய எல்லாமே தமிழ்ப்பற்று என்ற ஒரு இடத்தில் சந்திக்காமல் எதிரெதிர் திசையில் செல்வதன் விளைவுதான் இரசினியரசியல்.

விதைப்பதுதானே முளைக்கும்?

இதுவும் கடந்துபோகும் என்றாலும் எப்பொழுது எப்படி என்பனவற்றை தமிழர்கள் கையில் எடுக்கிறார்களா? அல்லது அதற்கும் அயலவன் வரவேண்டுமா என்பதை யாரறிவார்?

தமிழின் இயக்கம் இருப்பதாக தமிழியக்கம் சொல்லிக்கொண்டிருந்தாலும், அதன் மனசாட்சிக்குத்தெரியும் பொய்யென்று.

Friday, November 03, 2017

ஆர்வர்டு இருக்கையும் சிந்தனைமரபுகளும்

http://www.vikatan.com/news/tamilnadu/106688-these-tamil-teachers-gave-their-one-day-salary-for-harvard-tamil-chair.html

தாம்பரத்தில் ஒரு வேதபாடசாலை இருக்கிறது. திருச்சியில் எங்கள் ஊரில் உள்ள தெலுங்கு பிராமணர்கள் இங்குதான் அவர்களின் பிள்ளைகளை வேதபாடம் படிக்க வைப்பார்கள். படிப்பு முடிந்து கொஞ்சம் பயிற்சி கிடைத்ததும் கடவுச்சீட்டை எடுத்து தயாராகிவிடுவார்கள். அமெரிக்காவில் எங்கே கோயில் கட்டுகிறார்கள் - பரத்வாசர் மடம், சங்கர மடம் அல்லது அமெரிக்காவில் இருக்கும் தெரிந்தவர்கள் வழியே அமெரிக்க கோயில்களில் அருச்சகர் பணிக்கு போவதற்கு ஆளாய் பறப்பார்கள். அப்படியும் ஓரிருவர் தவிர வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அந்த ஊரில் அவா போயிருக்கா, இந்த ஊரில் இவா போயிருக்கா - அவாளுக்கும் இவாளுக்கும் சுலோகமே சொல்லத்தெரியாது - ஆனால் அவாளுக்கெல்லாம் கிடைச்சுடுத்து - எங்க சீதரன் நன்னா படிச்சுருக்கான் - ஆனா அவனுக்கு கிடைக்க மாட்டேங்குது. நல்லவாளுக்கு காலமே இல்லை;  ம்ம்ம்ம் என்று அவர்கள் அலுத்துக்கொள்வது என்னை சிந்திக்க வைத்ததுண்டு. இங்கிருப்பது போலத்தான் அங்கும் அவர்களுக்கு வருமான முறை; கொஞ்சம் தூக்கலாக இருக்கும் அவ்வளவுதான். Jr. Archagar ஆக வேலை கிடைத்து அங்கே போய்விட்டால், தினமும் ஒரே மாதிரியான வேலை. பெயர் நட்சத்திரத்திற்கு அருச்சனை செய்வதும், இறைப்படிமங்களுக்கு செய்ய வேண்டிய தொண்டு, சிறப்பு பூசைகள், விழாக்கள் ஆகியனவற்றை தொடர்ந்து சுழற்சி முறையில் காலம் முழுக்க செய்து கொண்டிருப்பார்கள். இதைச்செய்வது அருச்சகர் மரபில் வருபவர்களின் ஈகை அல்லது தியாகம் என்று சொன்னால் மிகையன்று. தமிழ்த்துறையில் உள்ளவர்களும் பற்றாளர்களும் தமிழ் வாழ்க என்று சொல்லி பத்தியோடு அரைத்த மாவையே நிதமும் அரைக்கும் தமிழ் ஈகை, தொண்டு, தியாகத்தை போன்றதே அருச்சகர் பணியும்.

இது அருச்சகர் வேலைக்கு போவது பற்றியென்றால், அந்தக்கோயிலை கட்டுவது என்பது எப்படி என்று எண்ணிப்பார்த்தால், நம்மூரில் ஊர்க்கோயில் கட்டுவதற்கும் அமெரிக்காவில் கோயில் கட்டுவதற்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஊர்ப்பெரியவர்கள் கூடி முடிவெடுப்பர். ஓரிருவர் பெருநிதியளிக்க, ஊரில் உள்ள எல்லாரின் பங்களிப்பும் சிறிதளவேனும் இருக்கவேண்டியது அவசியம் என்ற மரபின்படி எல்லாரிடமும் நிதி கேட்பார்கள்; எல்லாரும் நிதி அளிப்பார்கள்; செய்தியில் உள்ள தமிழாசிரியர்கள், ஒருநாள் ஊதியத்தை கொடுப்பதைப்போல.  கோயில் குடமுழுக்கு, முதல்மரியாதை, சிறப்பு வேள்விகள் எல்லாம் நடக்கும். கோயிலின் அளவைப்பொறுத்து, அரசு உயரதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் கலந்து கொண்டு, சாமியையும் கோயிலையும் ஆசீர்வதிப்பது வழமை; ஆர்வர்டு இருக்கைக்கு அரசு நிதியளித்து ஆசிகள் வழங்கியது போல.

பேராசிரியர் அரசு, முனைவர் இரவிக்குமார், திரு.ஒளிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்ட நேர்காணலிலும் தமிழ்மன்ற உரையாடல்களிலும் அனைவருமே ஆர்வர்டு இருக்கைக்கு ஆதரவாகவே கருத்தளித்தனர். ஆனால், 1) ஏற்றத்தாழ்வின்மை 2) ஆளுமைக்கட்டுப்பாடு என்ற இரண்டை வலியுறுத்துகிற இராசம் அம்மா, இரவிக்குமார், இராம.கி ஐயா, அடியேன் ஆகியோரின் கருத்துகளுக்கு எப்பொழுது விடைகிடைக்கும் என்பது இறைவனுக்குதான் வெளிச்சம்.

இரவிக்குமார், வெளிநாட்டார் புதுவையிலமைத்த பிரான்சிய நிறுவனத்தில் காணப்படுகிற ஊதிய/பணி ஏற்றத்தாழ்வுகளை சுட்டிக்காட்டுகிறார் என்றால், இராசம் அம்மா தமிழ்நாட்டார் முயன்று கலிபோர்னியாவில் பெர்கலியில் உருவாக்கிய இருக்கையிலும், பென்சில்வேனியாவிலும் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளை சுட்டிக்காட்டுகிறார். நம்மூரிலும் அவர்களின் சட்டம், அவர்களூரிலும் அவர்கள் சட்டம் என்ற போக்கு நமக்கு துளியும் வருத்தமளிப்பதில்லை.

பேராசிரியர் அரசு ஒரு மதிக்கத்தக்க சிந்தனையாளர். திராவிட சிந்தனை மரபும் தனித்துவமும் கொண்டவர். Tamil Entertainers - ஐ மட்டுமே தமிழ்க்கல்வியுலகம் உருவாக்கியிருக்கிறது என்று அழுந்தச்சொல்லும் அவரும் முதலில் இருக்கையை உருவாக்குவோம் - பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்றே சொல்கிறார். அவர் உரையின் சாரம் அதுதான். பலரின் கருத்தும் அதுதான்.

திராவிட ஆட்சிகளில் எத்தனையோ தமிழ்க்கல்விக்களங்களை உருவாக்கினார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஆனால், ஒன்றுகூட விளங்கவில்லை என்பதையும் யாரும் மறுக்கமுடியாது. அதாவது, சொல்லி பெருமைகொள்ளும்படியாக எதுவுமே இல்லை.

திராவிட சிந்தனைமரபு என்பது, ஆரவாரம் செய்யும், களப்பணிகளையும் திறம்பட செய்யும், கட்டடம் கட்டும், விழா எடுக்கும்; எடுத்தபின் பந்தியை போடும் - சாப்பிட்டுவிட்டு, நெற்றியில் வந்த சிறுவேர்வையை துண்டால் துடைத்துவிட்டு, வெற்றிலை பாக்கு போடும்; அப்புறம் அப்படியே தூங்கிவிடும். யாராவது இன்னுங்கொஞ்சம் செய்ங்கன்னு சொன்னால், சரி என்று, திண்ணையில் உட்கார்ந்து சீட்டாடும்.

இப்படித்தான் திராவிட சிந்தனைமரபு உருவாக்கிய திராவிட பல்கலைக்கழகம் தொடங்கி தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் வரை காட்சிகள் இருக்கின்றன. அதனால், வீ.டி.அரசின் கருத்துகள் அந்த சிந்தனைமரபின் தாக்கம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் இப்படியே பேசி பழகிவிட்டார்கள். முதலில் கட்டடத்தை கட்டுல; அப்புறம் என்ன செய்றதுன்னு யோசிச்சுக்கலாம் - என்பதே இந்த சிந்தனை மரபின் போக்கு. ஆர்வர்டு இருக்கையும் இப்படித்தான் அமைகிறது என்று கருதலாம்.

ஒளிவண்ணன் பேசுவது சந்தை மரபு. அது தேவைதான். ஆனால் அடிக்கட்டமைப்பு வலுவாக இல்லாத ஒரு குமுகம் ஆர்வத்தில் செய்யும் உழைப்பு பெரிய சாதனையை கொண்டுவந்துவிடும் என்று அவர் கருதுவதை முழுமையாக நம்பமுடியவில்லை. உள்ளூரிலேயே எங்கள் தமிழ் உயர்வென்று பேசுகின்ற தமிழர்களுக்கு ஆர்வர்டில் மேடையமைத்து கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். அவர் எண்ணுவது போல நடந்தால் சரிதான்.

தமிழ்த்தேசிய சிந்தனை மரபினை பேசும் சீமானும் வெறும் அரசுநிதி வேண்டும் என்ற ஆதரவு கோரிக்கையோடு நிறுத்திக்கொண்டார். அவர்களும் மெதுவாக சிந்திக்கக்கூடும்,

தமிழியக்க, தனித்தமிழியக்க சிந்தனை மரபினரும் திராவிட சிந்தனை மரபால் மழுங்கடிக்கப்பட்டவர்கள்; சொல்லப்போனால் காயடிக்கப்பட்டவர்கள். அவர்கள் வாய் திறக்காததில் வியப்பொன்றுமில்லை. அவங்களுக்கு இன்னும் எதைப்பார்த்தாலும் வியப்பாகவே இருக்கிறது.

தமிழக அரசின் நிதிமரபு என்று ஒன்றுண்டு. தெற்காசிய நிறுவனம் போன்ற நிறுவனங்களுக்கு வருடாவருடம் படியளப்பது அந்த மரபு. அந்தமரபிலே ஆர்வர்டுக்கும் படியளந்து பெருமை சேர்த்துக்கொள்கிறது போல. தமிழக அரசின் வீட்டோ அதிகாரத்துடனான உறுப்பியம் வேண்டும் என்ற எனது கருத்திற்கு, பழனிச்சாமியின் பேத்தியை உறுப்பினராக போட்டால் என்ன செய்வது என்று கேள்வியை நண்பர் வேந்தர் வைத்தார் என்று கருதுகிறேன். பழனிச்சாமியின் பேத்தியானாலும் எனக்கு அது சரி; உலக மாகவிஞரும் தமிழ்ப்பேரறிஞருமான, முத்துவேலரின் பேத்தியாக இருந்தாலும் எனக்கு அது சரிதான். ஒருவேளை முறைகெட்டுப்போனால், இந்த உறுப்பியத்தின்வழியே அழுத்தம் கொடுக்க முடியும். ( all i need is a handle - thats all)

வடக்கத்தி மரபு என்று ஒன்றுள்ளது. அதன்படி, சமற்கிருத இருக்கைகள் தொடங்கும்போது கம்மையாக, வலுவான நிதியோடு அவை துவக்கப்படுகின்றன. அது தெளிவாக சமற்கிருதத்தை முன்வைத்து அமோகமாக ஆராய்ச்சி செய்கின்றது என்பது உண்மைதான். தமிழர்களோ நிதிவலு சற்று குறைவாக, ஆனால் பெரிய ஆரவாரத்தோடு, புனிதப்பணியாக செய்கின்ற தமிழ் இருக்கைகளும் சமற்கிருத இருக்கைகளை வழிமொழியும் இருக்கைகளாக உருவாகிவிடுகிற வாய்ப்புகளைப்பற்றி பயப்படத்தேவையில்லை என்றளவோடு நிறுத்திக்கொள்கிறார்கள்.

இதெல்லாவற்றையும் தாண்டி, பிரபாகர மரபு என்ற ஒன்று உள்ளது. பிரபாகரத்தை சுற்றியுள்ள அரசியலை, போரை விட்டுவிடுவோம். ஆனால், பிரபாகரன் என்ற சிந்தனையாளரை சிங்களர்கூட மதிப்பார்கள். தெளிவான சிந்தனை, நிதானம், செயலுறுதி, எங்கேயும் தமிழ், தமிழரின் தாழ்வை ஏற்றுக்கொள்ளாத போர்க்குணம், பேசாமல் பேசவைப்பது, எண்ணித்துணிதல், ஆளுமை போன்ற அவர் காட்டிய சிந்தனை மரபு உயர்ந்தது என்பதை தமிழ்ப்பற்றாளர்களும், காழ்ப்பின்றி ஆயுநரும் ஒத்துக்கொள்வர். மேதகு பிரபாகரன் ஒரு கல்வித்தளத்தை, ஆய்வுத்தளத்தை உருவாக்குகிறார் என்று வைத்துக்கொள்வோம்; அவர் எப்படி செய்திருப்பார் என்று ஒருகணம் சிந்தித்துப்பார்க்கிறேன்.

அவர், 1) உலகத்தமிழ் நிலையில் தமிழறிஞர்கள், ஆசிரியர்களுக்கு வெளிநாட்டவரைவிட ஊதியத்தாழ்வு தரும் ஒன்றை ஏற்றுக்கொள்ள மாட்டார். 2) வெறும் துபாசிகளாக அவர்களின் நிலையை ஆக்கியிருக்க மாட்டார். 3) தனது அரசு வீட்டோ அதிகாரத்துடன் உறுப்பியம் பெறாத எந்த ஒன்றையும் தமிழ்மொழிக்காக முன்னிறுத்த மாட்டார். 4) தமிழர் தலைமையில்லாத அமைப்பை தன்னமைப்பாக கருதவே மாட்டார். 5) சிறு அமெரிக்க வெள்ளிக்கும் ஐரோப்பிய ஐரோவிற்கும் தலையாட்டும் தமிழ்ப்பணிகளை பாராட்டமாட்டார். 6) உள்நாட்டில் இருக்கும் தமிழ்க்கல்வி, ஆய்வுக்களங்கள் அழுகிப்போக விட்டிருக்க மாட்டார். 7) உருமீன் வரும்வரை காத்திருப்பார்.

இவைதான் நான் அவரிடம் கற்றுக்கொள்ள முயலும் கைமண்னளவு.

கோயில்கட்டும் பணி புனிதமானது. அதேபோல ஆர்வர்டு இருக்கை உருவாக்குவதும் புனிதமாகவே கருதுவதில் தவறில்லை. ஆனால், கோயிலில் செய்யும் பணியும் கல்வித்தளத்தில் செய்யும் பணியும் மிக மாறுபட்டவை என்பதை நாம் புரிந்துகொள்ளும் அதேவேளையில், கோயிலில் ஒரேசுழற்சியாக செய்யும் பணியில் கூட ஆளுமை இருக்கிறது என்பதும் அதைவிட சிறந்த ஆளுமை தமிழ் ஆய்வுத்தளத்தில் இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானவையாக படுகின்றன. இருக்கையமைக்க இமைமூடாது உழைப்பவர்களை வாழ்த்துகின்ற அதேவேளை, தற்போது விட்டாலும், ஆர்வர்டிலும் பிறவெங்கும் துபாசி வேலைகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் நீக்கி தமிழாளுமைகள் உருவாக நீங்களே வழிவகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

தொடர்புள்ள நேர்காணலின் காணொளி:
https://www.youtube.com/watch?v=zHRC0lLVECw&feature=youtu.be






















Wednesday, September 20, 2017

பெரியபுராணம்::எறிபத்த நாயனார்::பகுதி1 - மாநவமி

கருவூர். புகழ்ச்சோழநாயனார் என்று எதிர்காலம் போற்றிய புகழ்ச்சோழனின் தலைநகரம். ஆனிலையப்பரும் அலங்காரவல்லியும் எழுந்தருளியிருக்கும் திருப்பதி. இராசராசனுக்கு தோளோடு தோணின்ற கருவூரார் வாழுமிடம். எறிபத்த பூமியது.

மேகங்கள் உலாப்போகும் உயர்ந்த மதில்களும், அம்மதில்களைவிட பலவடுக்கு உயர்ந்து விண்ணை முட்டிப்பார்க்கும் மாடமாளிகைகளும், அவற்றை அரணிக்கும் கோட்டை வாயில்களில், நிறைந்த ஓசையை தரும்பொருட்டு நீதிக்கு விளக்கமாய் நெடிதுயர்ந்து நிலம் பார்த்து நிற்கும் வலிய பெரிய மணிகளும், இவற்றால் சூழப்பட்ட சோலைகள் தமது மலர்களால் ஊரெங்கும் நறுமணம் வீசுதலும், அந்நறுமணங்கமழும் தேன்சொரி மலர்கள், பெண்களின் அழகிய நெற்றியில் சுருண்டு தவழும் கூந்தலையும் சூழ்ந்துகொள்ள, அம்மமலர்களைச்சூடிய சிலபெண்டிர் தெருக்களிலே நடந்து வரும்போது விண்ணின்று இறங்கி நடந்துவரும் முழுநிலவைப்போல வருதலும், கருவூரை தேவ உலகத்தின் அழகையும் செல்வத்தையும் விட உயர்வாக காட்டிக்கொண்டிருந்தன.

இயற்கையை சூறையாடும் மணற்கொள்ளையின் தலைநகரமாய் இன்று நாம் ஆக்கிவைத்திருக்கும் அம்மாநகரத்தை, இயற்கையும் சிவமும் தமிழுமாய் எறிபத்தரொடு ஒப்பற்று விளங்கிய அந்த 11-12 நூற்றாண்டு கருவூரின் உயர்வை, சேக்கிழார் பெருமான் தீட்டி வைத்த சித்திரந்தான் இப்பாடல்.

மாமதில் மஞ்சு சூழும்
...மாளிகை நிரைவிண் சூழும்
தூமணி வாயில் சூழும்
...சோலையில் வாசஞ் சூழும்
தேமலர் அளகஞ் சூழும்
...சிலமதி தெருவிற் சூழும்
தாமகிழ்ந் தமரர் சூழும்
...சதமகன் நகரம் தாழ.
.......பெரியபுராணம்:எறிபத்தநாயனார்::3

இறைவனுக்கு பூச்சாற்றுதல் மாலைசாற்றுதல் எனும் வழக்க, காலத்தால் என்று தொடங்கியதென்று தெரியவில்லை; ஆனால், மனிதன், தான் அணிந்து மகிழும் உயர்வானவற்றை இறைவர்க்கும் இறைவிக்கும் அணிவித்தான் என்பது உண்மைதானே. அரசர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் சூடிக்கொள்ளும் மாலையிலும் அடையாளப்பூ இருந்ததுதானே. "சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்..." என்று அப்பரடிகள் சொன்னதில், பூவிற்கு இறைவன் தருமிடம் எவ்வளவு உயர்ந்தது என்பது நாம் அறிந்ததுதானே.

இன்றெல்லாம், என்றோ பூத்த பூக்களையும் பூச்சரங்களையும் தெருவோரத்தில் வாங்கிவந்து நாட்கணக்காய் தணுப்பியில் வைத்து பாதுகாத்து நாடோறும் இறைக்கு சாற்றுவதுதான் பல வீடுகளிலும் நடப்பன. இறைவர்க்கு எப்படிப்பட்ட பூவை சாற்றவேண்டும்?

அன்றலர்ந்த புது மலர்களை சாற்ற வேண்டும் என்பர்.

அலர்ந்த மலர்களையா சூடவேண்டும்?

மலரவிருக்கும் மொட்டை,
மலர்வதற்கு முன்னர் பறித்து,
மாலையாக்கி, இறைமார்பில் சூடியதும்
அம்மொட்டு மலரவேண்டும்!

இதுதான் மலர்சூட்டும் கணக்கு. அம் மலர்மொட்டு அவிழும்போது அதுதரும் வாசம் இறைவனை சேரவேண்டும். அவனுக்கு அது பிடிக்கும்.

அதற்காகத்தான் சிவகாமியாண்டார் வைகறையில் துயிலெழுந்து அமராவதி (ஆம்பிராவதி) ஆற்றிலே நீராடி, சோலையில் இறைவனுக்கு சாற்றவேண்டிய அலங்கலுக்கு (அலங்கல் = மாலை) தேவையான மலர்களை பறித்துக்கொண்டிருந்தார். இறைவனுக்கு மட்டுமா? அலங்கல் ஆர்த்த வல்லியான அலங்காரவல்லிக்குந்தான்.

நித்தலும் அது அவர் கடன். இம்மியும் பிசகாது செய்துவரும் நெடுநாள்-தொண்டு.

கையிலே ஒரு கோல் அல்லது தண்டு. அதன் முனையிலே ஒரு வளைவு. துரட்டி என்போமில்லையா? அதைப்போல. உயரமான செடிகளிலே பூவிருந்தால் செடியை சற்று வளைத்து பூப்பறிக்கவும், பறித்த பூவை கூடையில் போட்டு, அக்கூடையை அக்கோலிலே மாட்டிவிட்டு தோலிலே சுமந்து கோயிலுக்கு செல்லவும் அக்கோல் அவருக்கு துணையாயிருந்தது.

வைகறை யுணர்ந்து போந்து
...புனல்மூழ்கி வாயுங் கட்டி
மொய்ம்மலர் நெருங்கு வாச
...நந்தவனத்து முன்னி
..............பெ.பு:எ.ப::9

கோலப்பூங்கூடை தன்னை
...நிறைத்தனர் கொண்டு நெஞ்சில்
வாலிய நேசங்கொண்டு
....மலர்க்கையில் தண்டுங் கொண்டங்கு
ஆலயம் அதனை நோக்கி
..............பெ.பு:எ.ப::10

இறைவனுக்கு நித்தலும் இந்த மலர்த்தொண்டினை தவறாது செய்து வந்த சிவாச்சாரிய மரபில் தோன்றிய தமிழ் அந்தணரான சிவகாமி ஆண்டார் என்ற அந்த முனிவர், பூக்கூடையை கோலில் மாட்டி தோளில் தூக்கிக்கொண்டு செல்கிறார் அலங்காரவல்லி உடனுறைகின்ற ஆன் நிலையப்பரின் திருக்கோயிலுக்கு. பொழுது புலர்வதற்குள் அதனை அலங்கல் அல்லது மாலையை ஆக்குநரிடம் கொடுத்து தானும் உதவி, மாலையாக்க வேண்டும்; இறைவர்க்கு சாற்ற வேண்டும். அம்மலர் மொட்டுகள் மலர்ந்து வாசம் போய்விடக்கூடாது; விரைகிறார்.

சோழ-வளநாட்டரசனான புகழ்ச்சோழனின் பட்டத்து யானை! பட்டத்து யானைக்கென்றே இருக்கும் தனிச்சிறப்புகளான வீரமும் வேகமும் அதற்கும் உண்டு. அதே வைகறையில் அமராவதியில் நீராடுகிறது. அரசமங்கல யானைக்கு சூட்டவேண்டிய மங்கல அணிகளையெல்லாம் சூடிவிடுகிறார்கள் பாகர்கள். அதற்குப்பூசவேண்டிய மங்கலப்பூச்சுகளும் திலகங்களும் இடப்படுகின்றன. உயர்ந்த உடுப்புகளும், விரிப்புகளும் அரசயானையை அலங்கரிக்கின்றன.
சிறிது மதநீர் அதன் கண்களில் வருகிறது. பாகர்கள் சற்று கவனத்தை அதிகரிக்கின்றனர்.

புரட்டாசி அமையுவாவை (அமாவாசை) அடுத்தநாள், சத்தி வழிபாடான ஒன்பான்
திருநாளின் தொடக்கம். சத்தியின் மூன்றுவடிவங்களான மலைமகள், அலைமகள், கலைமகள் ஆகிய மூவருக்கும் மும்மூன்று நாள்கள் சிறப்பு செய்ததும் பெருவிழா நடப்பது வழமை. ஒன்பதாவது திதிக்கு நவமி என்று பெயர். சத்திவிழவின் நிறைவுநாளை மாநவமி என்று பெரியபுராணம் சொல்கிறது. மாநவமியை அடுத்த நாளான பத்தாந்திதியன்று இக்காலத்தைப்போன்றே அக்காலமும் பெருவிழாக்கொண்டாட்டம் இருந்தது. அதற்காக நகரமே இருநாள்கள் முன்பே, அதாவது எட்டாந்திதியான அட்டமி அன்றே திருவிழாக்கோலம் பூணத்தொடங்கியது என்றே சொல்லவேண்டும். ஒன்பான்விழவு நமது தொன்மையான சத்திவழிபாட்டின் தொடர்ச்சி என்பதுதான் பெரியபுராணத்தின் பாடல்வரிகளில் பதிவாகியிருக்கிறது.

மற்றவர் அணைய இப்பால்
...வளநகர் அதனில் மன்னும்
கொற்றவர் வளவர் தங்கள்
...குலப்புகழ்ச் சோழனார் தம்
பற்றலர் முனைகள் சாய்க்கும்
...பட்டவர்த் தனமாம் பண்பு
பெற்ற  வெங்களிறு கோலம்
...பெருகு  மாநவமி முன்னாள்.
..............பெ.பு:எ.ப::11
(மாநவமி முன்னாள் = நவமிக்கு முந்தைய நாளான அட்டமி)

யானையும் அன்று திருநாளுக்கு தயாராகியது போல. சிவகாமியாண்டாரும் அதிகாலை பூசைக்கு சென்றுகொண்டிருக்கிறார்.

சற்றே மதநீர் சொரிய நடந்து வந்த யானைக்கு திணவும் குறும்பும் கூடியதால்
தெருக்களை யானை கடக்கும்போது சில இடங்களை முட்டியும் தட்டியும் வந்து கொண்டிருந்தது.

கோயிலை நோக்கிச்சென்று கொண்டிருந்த சிவகாமியாண்டாரின் பூக்கூடையை
பறித்து நிலத்தில் வீசிவிட்டு நகர்ந்தது. மலர்கள் மண்மேல் சிதறின.

நெடுங்காலமாக தவறாமல், சிந்தாமல், சிதறாமல் செய்துவந்த அவரின் மலர்த்தொண்டு ஒன்பான்விழவின் எட்டாம் நாளான அட்டமியன்று தடங்கிப்போனது.

இறைமேல் இருந்த அவரின் காதல் தூய்மையானது. மனம் மயங்கியது; கண்கள் கலங்கின;  நெஞ்சம் கொதித்தது அந்த எளியவரான கிழமுனிக்கு.

கையறுநிலையில் அடக்கமுடியாத அழுகையோடு, மூப்பில் துவண்ட உடலினரான அந்த முனிவர் தன்னிடம் இருந்த கோலை உயர்த்திக்கொண்டு அந்த யானையை அடிக்க ஓடியது, மழலையொன்று பிரம்பெடுத்து மலையை அடிக்க ஓடியது போல இருந்தது.

ஓடமுடியவில்லை; குழந்தை தடுக்கி கீழே விழுவது போல விழுந்தார். வல்லான் முன்னர் வாடி நிற்கும் எளியரின் கையறு நிலையில் சிவகாமியாண்டார். பொறுத்தாரில்லை; நிலத்தை அடிக்கத்தான் முடிந்தது;  அடித்தார். நிலமகளை சாட்சியாக வைத்து இறைவனிடம் முறையிட்டார்;

களியானையின் ஈர் உரியாய் சிவதா!
எளியார் வலியாம் இறைவா சிவதா!
அளியார் அடியார் அறிவே சிவதா!
தெளிவார் அமுதே சிவதா சிவதா!
..............பெ.பு:எ.ப::16

களிப்பின் மிகையால் ஆணவம் கொண்ட ஒரு யானையின் தோலை உரித்து போர்த்தியவன்தானே சிவன்! அதை எண்ணி சிவனை அழைத்தார் போல!
சிவபெருமானின் காதில் விழுந்ததால்தான் எறிபத்தருக்கும் அது கேட்டது போல.

(தொடரும்)

அன்புடன்
நாக.இளங்கோவன்

Thursday, January 14, 2016

தமிழோற்பலம்::மடல் 3-செஞ்சாலிதரு செந்நெற்பொங்கல் எங்கும் நிறைகவே!



போற்றிவளர்த்த பெருமரங்களின் கிளைகளிலே
தேனடையால் வீடுகட்டி கூடிவாழுந் தேனீக்கள்
குடைக்கூலியென சிந்திவிடுந் தேனொழுக,
ஒழுகுகின்ற தேனோடு போட்டியிட்டு,
பழமரமும் தன்கனியை தான்பிழிய,
தேனோடு தீங்கனிச்சாறும்
ஒட்டி வெட்டி சொட்டி  அங்கே
கட்டி தரும் கரும்பு வயலுக்கு
வாய்க்காலாய் ஓடிவிழ,
கருப்ப வயலின் அண்டையிலே,
தடஞ்சாலி நெல்லெங்கும்
தளதளவென வளர்ந்திருக்க,
அதைத்தடுக்கும் களையதனை
களைந்தெடுக்கும் நீலவிழி நங்கையரின்
கைச்சினத்தை கண்டஞ்சி, சாலிநெல்லுக்கு
களையாக வளர்ந்திருந்த குவளை மலர்களெல்லாம்
ஓடி, அண்டைக்குளத்திற்குள் ஒளிந்திருந்தாலும்,
புணர்ச்சியின் உச்சத்தில் சிவந்திருக்கும் கண்கள்போல
சிவந்திருந்த அந்த மலர்களின் அழகில் மயங்கிய
செஞ்சாலிநெல்லும் வரப்பைத்தாண்டி,
குனிந்து, குவளையை முத்தமிட முயன்றிருக்க,
குளமிருந்த மீன்களெல்லாம்,
நிறைநிலவின் அழகையெல்லாம் அப்படியே
அணிந்திருந்த களையெடுக்கும் அப்பெண்டிரின்
கண்களிலே தம்மைக்கண்டு துள்ளியெழுந்தாலும்,
அவர்களின் எழுந்திருக்கும் முதுகழகும்
வளைந்திருக்கும் இடையழகும், மீன்களை
இடறிவிட்டுக்கொண்டேயிருக்க,
மறுபுறத்தில், வளர்ந்திருந்த பாக்கு மரத்தின்
பிஞ்சுக்குலைகளை நோக்கி, தனது
நெற்கதிரை வளைத்து தொடமுனைந்ததென்னவோ,
வளப்பத்தில்,
செஞ்சாலிநெல்லின் திமிரெனவே சொலமுடியும்! திமிரெனவே சொலமுடியும்!
செஞ்சாலிதரு செந்நெற்பொங்கல் எங்கும் நிறைகவே!!
 
வளப்பமிக்க கஞ்சாறூரில்
செஞ்சாலியின் திமிர்சொல்லும்
சேக்கிழாரின் பொன்வரிகள் மயக்கந்தருவன:
 
“கோலாறு தேன்பொழியக் கொழுங்கனியின் சாறொழுகும்
காலாறு வயற்கரும்பின்  கமழ்சாறூர் கஞ்சாறூர்;”
 
“கண்ணீலக் கடைசியர்கள் கடுங்களையிற் பிழைத்தொதுங்கி
உண்ணீர்மைப் புணர்ச்சிக்கண் உறைத்துமலர்க் கண்சிவக்கும்
தண்ணீர்மென் கழுநீர்க்குத் தடஞ்சாலி தலைவணங்கும்
மண்ணீர்மை நலஞ்சிறந்த வளவயல்கள் உளஅயல்கள்.”
 
“செழுநெல்லின் கொழுங்கதிர்போய் வேறருகு மிடைவேலிப்
பைங்கமுகின் மிடறுரிஞ்சி மாறெழுதிண் குலைவளைப்ப;”
 
பீட்டாவும் மீத்தேனும் செஞ்சாலித்திமிர்தன்னை தீண்டாதிருக்கட்டும்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
16/1/16

 

Friday, December 18, 2015

தமிழோற்பலம்::மடல் 2 - ஏல் ஓர் எம்பாவாய்!

மார்கழி மாதம். வருடமுழுதும் வெய்யில், மழை என பருவங்கள்
வேறுபட்டு வருகையில், பனிக்காலத்தின் தொடக்கமான மார்கழி
மனதுக்கும் உடலுக்கும் இனிமையான மாதம் என்பது
இந்நிலவமைப்பின் இயல்பு.

ஆண்டுமுழுதும் பல்வேறு திருவிழாக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்,
நோன்புகள் எனப்பல கொண்டாட்டங்களையும் சிறப்புகளையும் கொண்ட
குமுகம்தான் தமிழ்க்குமுகமும். அது, பத்திக்கென்று ஒதுக்கிக்கொண்
ஒருதிங்கள் மார்கழி.தமிழ்ச்சைவமும் தமிழ்வைணவமும் கொஞ்சிமகிழும்
மாதம் மார்கழி.

பத்தி எனும்போது, இல்லத்தில் வழிபாடும், கோயிலுக்குச்சென்று
இறைதெரிசன வழிபாடும் செய்வதுமே பொதுமக்களின் மரபு.

கோயிலுக்குச்சென்று செய்யும் வழிபாடுகளில், தொலைவில் இருக்கும்
கோயில்களுக்குச்செல்வதற்கு மார்கழி மாதமும், தைமாதமும்தான்
மிக உகந்த மாதங்கள். மெல்லிய இதமான குளிரடிக்கும்
இரவுகளும், உடலை வருத்தாத வெயிலடிக்கும் பகல்களும் மார்கழியில்
தொடங்குகின்றன.

இன்றைய போக்குவரத்து வளர்ச்சியில், தமிழ்நாட்டின் எந்த ஓரிடத்திற்கும்
ஒருபகற்பொழுது அல்லது இரவுப்பொழுதில் சென்றுவிடலாம். ஆனால்
பழையகாலங்களில் அப்படியில்லை. நடைப்பயணமாகவும்,
மாட்டுவண்டிப்பயணமாகவும் சில நாள்களேனும் பயணிக்கவேண்டும்.
சென்னையிலிருந்து பழனி செல்லவேண்டுமானால்,
திருச்செந்தூர் செல்லவேண்டுமானால், அல்லது அங்கிருந்து திருமலைக்கோ
காளத்திக்கோ,தணிகைமலைக்கோ வரவேண்டுமானால் ஒருவார பயணமாகிவிடும்.
ஆக, நெடுந்தொலைவு செல்லும் திருத்தலப்பயணத்திற்கு உகந்த மாதம்
மார்கழியில் தொடங்குகிறது. மாசியிலும் பங்குனியிலும் சிறிது தொடர்கிறது.

ஆகவேதான் இயல்பாகவே மார்கழி சிறப்புப்பெற்று பத்திமாதமாகிவிடுகிறது.
இன்றைக்கும் சபரிமலை செல்பவர்கள் மார்கழி,தையில்தான் நோன்பிருக்கிறார்கள்.
தைப்பூச விழாவுக்கு முருகனைக்காண தைமாதத்தில்தான் செல்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு வடக்கேயும் மார்கழிக்கு
மார்கசீசம் என்றும், தையிற்கு தைசம் என்றும் வடமொழிப்பெயர்கள் உண்டு. இந்தமாதங்களைதான் அவர்களும் திருத்தலப்பயணங்களுக்கு மிகவும் ஏற்றதாக கருதுவதை அருத்தசாற்றத்தில் காணமுடிகிறது. அவர்களின் மார்கழியும் தையும் சிலநாள்களின் முன்னரே தொடங்கிவிடும். பத்திக்காலத்துக்கும் பருவகாலத்துக்கும் தொடர்பு இருக்கவே செய்கிறது. கயிலாயப்பயணம் மேற்கொள்ளுபவர்கள் அக்தோபர் முதல் மார்ச்சு மாதம்வரை
பயணம் போவதில்லை. மழை, பனிக்கடுமைகளை தவிர்த்துவிடுகிறார்கள்.

ஆக, பருவகாலம்தான் மார்கழியின் சிறப்பா? அல்ல.

"இறைவனை அண்டும் ஓர் ஆன்மா, இறையின் அருமையை துய்ப்பதற்கு
இன்னொரு ஆன்மாவையும் தூண்டி தன்னோடு இறைவனைக்காண
கூட்டணி கொள்ளும் அருமையான மாதம்தான் மார்கழி". இதுதான் அதன் சிறப்பு.
இதனாலேயே மார்கழி சிறப்புப்பெறுகிறது.

ஆமாம் - மனிதகுலம், தான் இன்பமாகக்கருதுவதை தன்னோடு சேர்ந்து
பிறரும் துயக்கவேண்டி ஏற்படுத்திக்கொள்ளும் கூட்டுறவே மார்கழி நோன்பு.

தமிழ்ச்சிவநெறி தமிழ்க்குமுகத்தை சாதிவேறுபாடின்றி ஏற்றத்தாழ்வின்றி
கட்டியமைக்க முற்பட்டதன் பதிவுகள்தான் மார்கழிப்பத்திமை.

வைதீக நெறியைப்போல சனாதன,வருணாசிரம கருத்துகளால் இறைவழிபாட்டில்
தீண்டாமையை நுழைக்கவில்லை. வைதீகம் ஒரேக்குமுக மக்களில் ஒருபகுதியை
கோயிலுக்குள்ளே வராதே என்றது. தமிழ்ச்சிவ நெறியோ அனைவரையும்
வா வா என்றது. வந்தவர்களை கைகூப்பி அடியாராக அணைத்துக்கொண்டது.
வைதீக நெறியின் ஊடாட்டத்தால் சிவநெறியினர் சிலபல வேளைகளில்
தவறுகளைச்செய்திருக்கிறார்களன்றி, "தமிழ்ச்சிவ நெறியில்" பிழையில்லை. 

தமிழ்ச்சிவநெறியில் "அடியார்க்கூட்டு","அடியார்க்குத்தொண்டு" என்பதற்கு உயர்ந்த மதிப்புண்டு. இதில் உணரவேண்டிய ஒன்றே ஒன்று - "அடியாரும் மக்களும்" வேறு வேறு அல்ல என்பதுதான். தேவார மூவரும் மாணிக்கவாசகரும் பாடியதெல்லாம் இறையடியாரை ஒன்று சேர்த்து சிறந்த குகத்தை கட்டியமைக்க வேண்டித்தான்.

மார்கழியில் நாம் பாடுகின்ற திரு எம்பாவையை மாணிக்கவாசகர் அருளியது அதற்காகத்தான்.

"ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம் பாடக்கேட்டேயும்,

வாள் தடங்கண் மாதே, வளருதியோ?
வன்செவியோ நின்செவிதான்?

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க்கேட்டலுமே, விம்மி விம்மி மெய்ம்மறந்து
போது ஆர் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள்! கிடந்தாள்! என்னே! என்னே!!

ஈதே எந்தோழி பரிசு, ஏல் ஓர் எம்பாவாய்!

"....திருவெம்பாவை-1

பரம்பொருளாகிய சிவபெருமானுக்கு பிறப்பும் இறப்பும் ஏது? அடியையும்
முடியையும் அறியமுடியாத நீள் நெடுஞ்சோதியாய் இவ்வுலகினரின்
அகத்துக்கும் புறத்துக்கும் ஒளியாய்த்திகழும் ஈசனை, போற்றி, நாங்களெல்லாம்
பாடி மகிழ்ந்து வருகையிலேயும், மாதே, உன் மனத்தின் உறக்கம் இன்னும்
கலையாமலிருப்பது என்ன விந்தையோ? இறைவன் என்ற உண்மையையும்
உன் செவிக்கு எட்டவிடாமல் உன்னை அழுத்தியிருக்கும் மாயை என்னவோ?

ஆங்கோர் வீதியில், எமது போற்றிகளோடும் புகழ்ச்சிகளோடும், நாங்கள்
நுழைகையிலேயே, அங்கொருத்தியின் கண் மட்டுமல்ல, உள்ளமும்
ஒருங்கே விழித்துக்கொண்ட வேகத்தை எப்படி எம்மால் விவரிக்கமுடியும்?
உள்ளம் விழித்துக்கொண்டதும், அவளின் நெஞ்சில் நிறைந்த சிவனன்பு,
விழித்த கண்களில் நீராய் ததும்பியதோடு, அன்பின் மிகையால்
தொண்டையையும் அடைத்ததோ அறியோம் - ஆனால் அவள் கண்களிலும்
நெஞ்சிலும், கம்மிய குரலிலும்  சிவமே நிறைந்திருக்க, என்ன செய்கிறோம்
என்று தெரியாமலேயே புரண்டு கீழே விழுந்தாள்.விழுந்தாளெனினும், அதுவும் அவளிடமிருந்து சிவத்தை கலைக்க முடியவில்லை.

தன்னை அண்டினோரை அன்பில் கரைத்து ஆட்கொண்டுவிடுவான்  இறைன். இது அவன் தன்மை. அப்படியிருக்க, அவனை அண்டாமல் உன்னைத்தடுக்கும் மாயை என்னவென்று யாமறியோம்?

அவன் கழல்களையும் கருணையையும் ஆழ்ந்து சிந்தித்துப்பார் என் தோழி!
அம் மாமாயையில் இருந்து விடுபட்டு நீ எழுந்தோடி வந்துவிடுவாய் என் தோழி!! நாமனைவரும் ஒன்றாகிவிடுவோம் என் தோழி!!

இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட ஓர் ஆன்மா, மாயையில் சிக்கிக்கிடக்கும்
மற்றொரு ஆன்மாவை அன்போடு தூண்டி ஈர்த்துக்கொள்ளும் குமுக
ஒற்றுமைப்பாட்டு இஃது. இறையை முன்வைத்து குமுகத்தை கட்டியெழுப்பும்
பெருநெறியாகுமிது. குலதெய்வ வழிபாடுகள் உறவுகளை உறவுசேர்க்கிறது;
சைவப்பெருநெறி குமுக மக்கள் யாவரையும் உறவு சேர்க்கிறது.

சமயநெறிகள் மக்களை  வேறுபாடின்றி வா வா என்று அழைக்கும்போது, ஒற்றுமை பெருகி ஏற்றத்தாழ்வு குறைகிறது. வாசலிலேயே நில், உள்ளே வராதே என்றபோது குமுகம் பாழ்பட்டுப்போனது.

திருவெம்பாவையின் முதற்பாடலே மனதைக்கரைத்துவிடுகின்றது. சாமிப்பாட்டு
சாமிப்பாட்டு என்றளவிலேயே பலரும் புரிந்து கொள்கின்ற திருவாசகப்பாடல்கள்
ஆழ்ந்த அகப்பாடல்கள்.அந்த அகத்தின் அளவிற்கும் அடியுமில்லை முடியுமில்லை.

குறிப்பு: ஏல் = மீள்தல், (Reviving from a state)
                ஓர் = சிந்தி, ஆய், ஆராய்
 அன்புடன்
நாக.இளங்கோவன்
19/12/2015

Sunday, December 06, 2015

"குமிழி"- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது?


மேலைநாட்டிடம் எதற்குத்தான் தமிழர்கள் மயங்கவில்லை? அவர்களின் மதகுகளில் மதிமயங்கி,
ஏரி குளங்களில் இருந்து குமிழிகளை ஒழித்துவிட்டோமா?

ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர்நிலைகளுக்கு மழை, வாய்க்கால், ஓடைகளின் வழியே
நீர்வரும்போது நீரோடு, களிம்பும், வண்டலும் சேர்ந்தே வரும். நீர்நிலைகள் தூர்ந்து போவதற்கு
இது முக்கியமான காரணம். இதற்கு தீர்வு என்ன? தமிழரிடம் தீர்வு தெளிவாகவே இருந்தன.

 

மதகுகள் நீரை வெளியேற்றும் வேலையைச்செய்யும். குமிழிகள், நீரை வெளியேற்றுவதோடு,
ஏரி, குளம், கண்மாய்களுக்குள் வாய்க்கால்களில் வந்துவிழும் வண்டல்களையும் அகற்றிவிடும்.
இந்தக்குமிழிப்பொறியியலை புரிந்துகொள்ளவேண்டுமானால், பண்டிதர் மணி.மாறனின் "தமிழ் இலக்கியங்களில் நீர் மேலாண்மை" என்ற ஆய்வுக்கட்டுரையை படிக்கவேண்டும்.

பாசனக்கால்வாய்களுக்கு தண்ணீரைத்திறந்துவிடும் பண்டைய தமிழ்ப்பொறி "குமிழி" ஆகும். குமிழிகள் ஏரிக்கரையில் மதகுகளைப்போல அமைக்கப்படுவதில்லை. ஏரிக்கரையிலிருந்து 200-300 அடிகள் தள்ளி
ஏரிக்குள்ளே அமைக்கப்படுவது குமிழி. இன்னும் உள்ளே இருந்தாலும் வியப்பில்லை. ஏரியின் அமைப்பைப்பொறுத்தது இந்த இடைவெளி. ஒவ்வொரு பாசனக்கால்வாய்க்கும் ஒரு குமிழி இருக்கும்.
கால்வாய் அல்லது ஆற்றின் அளவைப்பொறுத்து குமிழிகளின் எண்ணிக்கை கூடவும் இருக்கும். ( 1:1 அல்லது M:1)

ஏரியின் தரைமட்டத்தில் வலிமையான கற்தளம் அமைத்து, அதனடியில் கருங்கற்களால் ஆன தொட்டியை வடிவமைப்பார்கள். தொட்டியின் மேற்பாகத்தில் நீர் போவதற்கான பெரிய "நீரோடித்துளை" இருக்கும். தொட்டிக்கடியில் அதே அளவில் துளைபோட்டு, அதனை சுரங்கக்கால்வாயால், ஏரிக்கு வெளியில் இருக்கும் பாசனக்கால்வாயோடு இணைத்துவிடுவர்.

தொட்டிக்குள் நீர்போவதற்கான துளையை மூடவும், தேவையான அளவு திறக்கவும் பயன்படும் தூம்புக்கல்லை ( conical stone valve) மேலும் கீழும் இயக்குமாறு கற்சட்டகம் உண்டு. இதுவரை, குமிழி செய்வதெல்லாம் மேலைநாட்டு மதகைப்போலத்தான்.

படத்தில், அந்தக்கற்தொட்டியின் பக்கவாட்டிலே மூன்று துளைகள் இருக்கின்றன பாருங்கள், அதுதான் நமது சிறப்பு. அந்தச்சிறுதுளைகளுக்கு "சேறோடித்துளை" என்று பெயர்.

பாசனக்கால்வாய்க்கு நீர் திறக்கும்போது என்னவாகும்? தொட்டியின் மேலேயுள்ள நீரோடித்துளையை அடைத்துக்கொண்டிருக்கும் தூம்புக்கல்லை தூக்குவார்கள். நிறைய வேண்டுமெனில் முழுதாகவும்,
குறைவாக நீர் அனுப்பும்போது சிறிய அளவிலும் தூம்பை தூக்குவார்கள் அல்லவா? ஏரிக்கடியில் இருக்கின்ற இந்த அமைப்பில், ஏரியின் நீர்மட்டத்திற்கேற்ற அழுத்தத்தில் நீரோடித்துளைவழியே நீ சுழித்துக்கொண்டு ஓடுமல்லவா? ஏரிக்கடியில் சிறுதுளை என்றால் சுழலின் வேகத்தை கேட்கவா வேண்டும்? சுரங்கக்கால்வாய் வழியே ஏரிக்குவெளியே உள்ள பாசனக்கால்வாயை நீர் சென்று சேர்ந்துவிடும்.

நீரோடித்துளை வழியே நீர் சுழித்தோடும் வேகத்தில், பக்கவாட்டில் உள்ள சேறோடித்துளைவழியே,
ஏரியின் அடிமட்டத்தில் இருக்கும் கலங்கியசேறு இழுபடும். இந்தச்சேறும் நீரோடு சேர்ந்து பாசனக்கால்வாய்க்குச்சென்றுவிடும்.

இந்தச்சேறு அடியிலேயே தங்கித்தங்கி வலுவடைவதாற்றான் ஏரி தூர்ந்துபோகிறது. நீரைவிட சேறு அடர்த்தியில் அதிகமென்பதால் அடியில் தங்குவது நாம் நன்கறிந்ததே. அதை அவ்வப்போது இழுத்து, தன்னியக்கமாக, இயல்பாக, நிகழ்நேரத்தில் வெளியேற்றுவதுதான் தமிழர்களின் குமிழிப்பொறியியல்.
(it is a real-time disilting system). எப்போது ஏரியிலே நீர் வற்றும் என்று ஆண்டுக்கணக்கில் காத்திராமல், அவ்வப்போது, தூரை வெளியேற்றிவிட்டதால் நீரும் வளமும் மிகுந்திருந்தன பண்டைய தமிழகத்தில்.

இந்த வண்டல், சேறு என்பன, வயலுக்கு உரமாகவும் பயன்பட்டன. குமிழிகள் மதகாகவும், சேறோட்டும் பொறியாகவும் பயன்பட்டன. ஆனால், மேலைநாட்டுமதகுகளில் மதிமயங்கிப்போனதால் குமிழிகளை ஒழித்துக்கட்டி புதுமை என்ற பெயரில் ஏரிகளிலும் மதகுகளை வைத்துக்கொண்டோம். விளைவு, ஏரி, குளம், கண்மாய், ஊரணி, குட்டை, ஏந்தல் போன்ற எல்லா நீர்நிலைகளும் தூரேறிப்போயின.

தூர்வாருதல் என்பதனை வருடாவருடம் செய்துகொண்டே இருக்கமுடியாது. அப்படியே செய்தாலும், ஒரு சிறு அளவிற்கு, வயலுக்கு வரப்பு வெட்டுவோமே (அல்லது சீர்படுத்தல்) அந்தளவில் பேணப்படுவதுவதாகவே இருக்கமுடியும். இன்றைக்குப்பெய்திருக்கும் மழையும், ஏரி, குளங்களை நீரால் மட்டும் நிரப்பவில்லை; சேறாலும்தான்?

இந்தச்சேற்றை எப்போது வெளியேற்றுவோம்? ஏரிகளிலும், குளங்களிலும் இருக்கும் மதகுகளை ஒழித்துவிட்டு, தமிழ்க்குமிழிகளை கட்டமைக்கவேண்டும்.

நீர்நிலைகளின், வெளிப்புறத்தை வீடுகளாலும், நிறுவனங்களாலும் கைப்பற்றினோம். நீர்நிலைகளின் அடிமட்டத்தில் இருந்த குமிழிகளை தொலைத்துக்கட்டினோம். கழிவுகளை நீர்நிலைகளில் செலுத்தினோம். நாகரிகத்தையும் இழந்தோம். தொன்ம அறிவையும் இழந்தோம். தொன்மத்தையாவது மீட்போம். இருக்கும் ஏரிகளைக்காப்போம். நமது பழம் அறிவியலை மீட்போம்.

கட்டுரை: நாக.இளங்கோவன். மூலமும், படமும்: "தமிழ் இலக்கியங்களில் நீர் மேலாண்மை" - ஆய்வுக்கட்டுரை, தமிழ்ப்பண்டிதர் மணி.மாறன், சரசுவதிமகால் (வெளியீடும்)