Pages

Thursday, June 15, 2006

தேரா மன்னா! செப்புவது உடையேன்!

சன்னல் பதிவில் மாலன்:
(http://jannal.blogspot.com/2006/06/blog-post.html )

சிலப்பதிகாரம் பெருமிதம் கொண்ட காவியம் என்கிறார்.
அதில் உள்ள பல கூறுகளைப் பெருமிதம் என்கிறார்.
காவுந்தி அடிகள் முதல், அக்காப்பியத்தில் வரும் புல் பூண்டு வரை எல்லாமே
பெருமிதம் என்கிறார் மாலன். எல்லாவற்றையும் விட அதன் ஆசிரியர்
இளங்கோவடிகளை மிகவும் போற்றுகிறார் மாலன். ஆனால் அக்காப்பியத்தின்
தலைவி கண்ணகி மட்டும் இவருக்கு ஆக மாட்டேன்கிறாள் :-)

முரண்பாடு!

இவரின் பார்வையில் கண்ணகி என்ற பாத்திரம் மோசம்! ஆனால்
அதனை ஆக்கிய படைப்பாளியும், காவுந்தியடிகள் முதல்
வேண்மாள், செங்குட்டுவன், கயவாகு வரையிலான கண்ணகியைப் போற்றும்
அத்தனைப் பாத்திரங்களும் மாலனுக்கு உயர்வு. முரண்பாடு!

>>மாலன் எழுதியது<<<
கவுந்தி அடிகள் குரல் அவரது குரல்தான் என்றால் அதில் காணப்படும்
முதிர்ச்சிக்காகப் பெருமிதம் கொள்ளலாம்.
>>>>>>>>>>>>>>>>>>

காவுந்தி அடிகளாரை அவரின் முதிர்ச்சிக்காகப் பெருமிதம் கொள்ளலாம்
என்று சொல்கிறார் மாலன். உண்மைதான். அவர் ஒரு உயர்ந்த
கதாப்பாத்திரம். "காவுந்தி அடிகள் என்ற அந்த உயர்ந்த பெண்மணிதான்
கண்ணகி அம்மையை மிக உயர்வாகப் போற்றியவர்."
சிலம்பில் காவுந்தியாரின் குரல்தான் இது:

"இன்துணை மகளிர்க்கு இன்றியமையாக்
கற்புக் கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது
பொற்புடைத் தெய்வம் யாம் கண்டிலமால்;"

கண்ணகிக்கு "கற்புக் கடம் பூண்ட பொற்புடைத் தெய்வம்" என்ற
வடிவத்தைக் கொடுப்பதே காவுந்தியாரின் குரல்தான்!

கண்ணகியின் உயர்ந்த குணநலன்களைக் கொண்டு,
அவளை கற்புக்கரசியாகவும், தெய்வமாகவும்
காப்பியத்தில் வடிவம் கொடுக்கும் இளங்கோவடிகளார்,
அதை முதலில் செய்தது, காவுந்தியடிகள் என்ற பாத்திரத்தின்
மூலம்தான்!

அதேபோல அவளுக்கு காவுந்தி அம்மையாரும், அடிகளாரும்
கற்புக்கரசி வடிவமும் தெய்வ வடிவும் கொடுத்தது, கோவலன்
மறைவுக்கு முன்னாடியே!

அப்பொழுது கண்ணகி நீதி கேட்டிருக்க வில்லை!
நெடுஞ்செழியன் மாண்டிருக்கவில்லை!
மதுரை எரிந்திருக்க வில்லை!
கண்ணகியும் மாண்டிருக்கவில்லை கோவலனும் மாண்டிருக்கவில்லை!

அப்படி கண்ணகியைத் தாங்கிய காவுந்தியார் உயர்ந்தவராம்;
உயர்ந்த காவுந்தியார் தாங்கிய கண்ணகி அப்படியெல்லாம்
இல்லையாம் - மாலன் சொல்கிறார். முரண்பாடு!

உயர்ந்தோர் ஏற்றுவது எப்பொழுதும் உயர்வையேதான்!
காவுந்தியம்மை உயர்ந்த குணம் உடையவர்.
அவரால் கண்ணகியை மிக உயர்வாகப் பார்க்க முடிந்திருக்கிறது.


படைத்தவனை விடவா பாத்திரம் பெரிது? என்று கண்ணகிக்கு பதில்
இளங்கோவடிகளைப் போற்றலாமே என்று பரிந்துரைக்கிறார்.
மணிமேகலைக்கு சிலை வைத்திருக்கலாமே என்றெல்லாம் புலம்புகிறார்.

மணிமேகலைக்கோ, இளங்கோவடிகளாருக்கு சிலைகள் வைத்தால்
போற்றினால் மேலும் மகிழ்ச்சிதான். ஆனால் கண்ணகிக்கு வைத்தது
தவறு என்ற இவரின் வாதம் முரண்பாடுகள் நிறைந்தது - அடிப்படைக்
குறைகள் கொண்டது.


>>>>மாலன் எழுதியது<<<<<<
கணவன், வேறு ஒரு பெண்ணின் பால் ஈர்க்கப்பட்டு அவள் வீடே கதி என்று
பல ஆண்டுகள் கிடந்த போது கண்ணகி வருந்தி அழுதாளே தவிர, அவளை
விட்டு விலகி வாழ்வதைக் குறித்து எண்ணிக்கூடப் பார்க்கவில்லை
>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஞாநி செய்த அதேத் தவறை மாலனும் செய்திருக்கிறார்.
கண்ணகியை விட்டு, கோவலன் "பல ஆண்டுகள்" பிரிந்திருந்ததாகச்
சொல்கிறார். அது தவறு என்றும் ஓராண்டுக்குக் கீழேதான் பிரிவின் காலம்
என்று திரு.ஞாநிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

முனைவர் இராம.கி ஐயா, பல படிகள் மேலே போய், ஒரு ஒப்பற்ற
சிலப்பதிகார ஆய்வை, பல தளங்களில் நின்று செய்து, மாதவியுடனான
வாழ்வு ஒரு வருடம் அல்லது அதற்கும் கீழே என்று விவரித்திருக்கிறார்.
சிலப்பதிகாரத்தையும் கண்ணகியும் விமர்சிக்கும் முன்னர் ஒவ்வொருவரும்
valavu.blogspot.com டுரைகளை அவசியம் படிக்கவேண்டும்.
மாலனும் ஞாநியும் இவ்வாய்ப்பை நிச்சயம் தவறவிடமாட்டார்கள்
என்று நம்புகிறேன்.

கண்ணகியின் கணவன் கொலை செய்யப்பட்டதற்கு மதுரையில்
ஏன் அத்தனை பேர் சாவதற்குக் காரணம் ஆக வேண்டும் என்று
கவலைப்படுகிறார். அப்படிப் பட்டப் பெண்மணி மூர்க்கத்தனமானவள்
அல்லவா? என்கிறார்.

அசோகவனத்தில் சீதையை, தேடிக் கண்டுபிடித்து விடுகிறார் அனுமன்.
வாம்மா, தங்களைக் கொண்டு போய் இராமனிடம் சேர்த்து விடுகிறேன்
என்று சொல்கிறார் அனுமன்.

மாலன் மற்றும் பலரின் வினாவையும் ஒப்ப நாமும் வினா வைத்தால்,
இப்படித்தான் கேட்கத் தூண்டும்.

"ஏம்மா சீதா!, அனுமன் கூப்பிட்டானே, அவன் கூடப் போய்
இராமனைச் சேர வேண்டியதுதானே... "! என் கணவனின் வில்லுக்கு அது
இழுக்கு" என்று வசனம் பேசி விட்டு நீ பாட்டுக்கு
உட்கார்ந்திருந்ததால்தான் பல வானரங்கள், கரடிகள், மற்றும் இலங்கை
வாழ் அத்தனை பேரும் செத்தார்கள்?! இது ஞாயமா என்று கேள்வி
கேட்கத் தூண்டும். இப்படி யாரும் கேள்வி கேட்டு விட்டால் உடனே
அவர்களுக்குக் கருப்புச் சட்டை போட்டு விட்டு, திராவிடம், தமிழ்,
பெரியார், நாத்திகம், வெறி, என்று வாய்க்கு வந்தபடி கரித்துக்
கொட்டுவார்கள் பல எழுத்தாளார்கள்.

இளைய தலைமுறை கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது கண்ணகியிடம்
என்று வினா வைக்கிறார் மாலன்!

மாலன், ஞாநி போன்ற முதிய/மூத்த தலைமுறைகள் சிலப்பதிகாரத்தைச்
சரியான தளங்களில் இருந்து பார்க்கத் தவறி,
பாண்டியன் நெடுஞ்ச்செழியனின் காவலர்கள் போல
"இளைய தலைமுறைக்கு ஒன்றுமேயில்லை
கண்ணகியிடம் இருந்து" என்று, சிலப்பதிகாரத்தைத் தீர ஆயாமல்,
தீர்ப்பை எழுதிவிடுவது நிற்குமானால் இளைய தலைமுறைக்கு
நிறைய பயனளிக்கும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

சிலப்பதிகாரத்திற்கும் மாலன்,ஞாநி கட்டுரைகளுக்கும் ஒரு ஒற்றுமை
இதுதான். சிலப்பதிகாரத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனின் காவலர்கள்
தீர ஆயாமல், விசாரிக்காமல் கோவலனைக் கொன்று விடுகிறார்கள்.
மாலனும் ஞாநியும் சிலப்பதிகாரத்தைத் தீர ஆய்வு செய்யாமல்,
தவறான செய்திகளைத் தங்களின் மதிப்பிற்குரிய வாசகர்களுக்குச்
சொல்லி கண்ணகியைக் கொன்று விடுகிறார்கள்.

காவலர்கள் கோவலனைக் கொன்றது அக்காலம்!
எழுத்தாளர்கள் கண்ணகியைக் கொல்வது இக்காலம்!

அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி "தீர ஆய்வு அல்லது தேவையான
ஆய்வு" என்பதனைச் செய்பவர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள்!

மாணவர்கள் முதல், பெரியவர்கள் வரை சிலப்பதிகாரத்தைக் குறித்து
ஏதாவது பேசினால் உடனே வரும் சிலம்பு வரி,
"தேரா மன்னா! செப்புவது உடையேன்!".
அவ்வரியையே மாலன் அவர்களையும் ஞாநி அவர்களையும்
நோக்கிச் சொல்ல வேண்டியிருக்கிறது.

அன்புடன்
நாக.இளங்கோவன்
15/சூன்/06

Thursday, June 08, 2006

் ஞானியின் "கரடி"!! - An open letter to Mr.Gnani

அன்பின் திரு.ஞாநி,

தங்களின் கண்ணகி சிலை குறித்த கட்டுரையை, கீற்றின் இந்த
http://www.keetru.com/dheemtharikida/jun06/jnani_3.html
சுட்டியில் படிக்க முடிந்தது. ஆனந்தவிகடனில் பரபரப்பாக
வந்ததாகவும் அறிகிறேன்.

ஒரு எழுத்தாளர் அல்லது சிந்தனையாளரின் எல்லாக் கருத்துக்களுமே
ஏற்கக் கூடியவை அல்லது ஏற்கப் படவேண்டியவை என்ற கருத்து
ஒரு சிந்தனையாளர் மற்றும் எழுத்தாளராகிய உங்களுக்கு இருக்காது
என்று நான் நம்புகிறேன்.

உங்களின் பலகட்டுரைகளில் ஒரு தரமான பார்வைத்தளம்
இருப்பதை நான் கண்டிருக்கிறேன். எல்லாக் கட்டுரைகள்
அல்லது கருத்துக்களும் சிறந்தன என்று சொல்ல முடியாவிட்டாலும்
ஒரு நல்ல தளத்தில் இருந்து உங்கள் பார்வைகள் பல
கட்டுரைகளில் வந்திருக்கின்றன.

ஆயினும் கண்ணகி சிலை வைப்பு தொடர்பானக் கட்டுரையில்
உங்களின் கருத்துக்கள் ஒரு தரமான தளத்தில் இருந்து
வந்ததாகத் தெரியவில்லை.

கண்ணகி சிலையை மீண்டும் வைத்தது தவறு என்பதை
வாதத்துக்கு ஒப்புக் கொண்டாலும், அதனை ஒரு தரமான
தளத்தில் இருந்து பார்க்கத் தவறி விட்டிருக்கிறீர்கள்.

கருணாநிதியின் மஞ்சள் துண்டு என்பது அவரின் தோளை மட்டும்
சுற்றியது. ஆனால் கண்ணகி சிலை என்பது அவரின் தோளில்
வைக்கப் பட்டிருந்த சிலை அல்ல. அதை அவரே முதலில்
நிறுவியிருந்தாலும் அது அவருக்கு மட்டும் சொந்தமானதும்
பிடித்தமானதும் அல்ல. எனினும், மஞ்சள் துண்டை ஒட்டிய
உங்களின் வாசகத்தில் இருந்த எழுத்துச் சுவை நன்றாகவே
இருந்தது; அதில் ஒன்றும் எனக்குப் பிணக்கு இல்லை.

கற்புக்கரசி, மற்றும் நீதி கேட்டுப் போராடியது என்ற
இரண்டிலும் பசை இல்லை என்று கூறிவிட்டிருக்கிறீர்கள்.
சரி அப்படியே இருக்கட்டும்! அது பற்றியதல்ல என் கவலை.

கண்ணகியை விட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கோவலன்
பிரிந்திருந்தான் என்று சொல்லியிருக்கிறீர்கள். அது தவறு!.

கதைப்படி கண்ணகியைப் பிரிந்து, மாதவியைச் சேர்கிறான்
கோவலன்; மாதவியோடு வாழ்கிறான்; பின்னர் மாதவியையும்
பிரிந்து, கண்ணகியைச் சேர்கிறான். இருவரும் மதுரை
சென்றடைகின்றனர். அப்போது மாதவிக்கு மணிமேகலை
என்ற பெண் குழந்தை பிறந்ததாக கோவலனுக்கு சேதி வருகிறது.

ஒரு கரு வளர்ந்து முழுமையடைய எவ்வளவு காலம் ஆகுமோ
அவ்வளவு காலம்தான் கோவலன் மாதவியோடு இருந்திருக்க
முடியும். பத்தாண்டுகள் அவளோடு இருந்தான் என்று என்
சிற்றறிவுக் கெட்டியவரை சிலப்பதிகாரத்தில் எங்கும்
செய்திகள் இல்லை. தாங்கள் அறிந்திருந்தால் அன்பு கூர்ந்து
சொல்லவும்.

மிஞ்சிப்போனால், ஒரு ஏழெட்டு மாதங்கள் அல்லது அதிக பக்கமாக
ஒரு வருடம் கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன்
வாழ்ந்திருக்க வேண்டும். அவ்வளவுதான்.

இங்குதான் உங்கள் கட்டுரையின் மேலான என் வருத்தம்!

>>>>>>.ஞாநி எழுதியது >>>>>>>>>>>>>

தன்னை பத்தாண்டுகளுக்கு மேலாகப் பிரிந்து வாழ்ந்த கோவலனை
சகித்துக் கொன்டு, அவன் திரும்ப வந்ததும் ஏற்றுக் கொண்டதும்,
அதுவரை தான் இன்னொரு ஆனை நாடாமல் இருந்ததும்தான் கற்பு
என்றால் அப்படிப்பட்ட கற்பு நம் பெண்களுக்குத் தேவையில்லை
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

பல சாதாரணப் பிஞ்சு எழுத்தாளர்களைப் போல, நல்ல தளத்தில்
நில்லாது நீங்களும் கற்பு என்பதனைக் கால் கவட்டியில்
தேடியிருக்கிறீர்கள்.

ஒருவருடத்திற்கும் கீழாக தலைவனும் தலைவியும் பிரிந்து
வாழ்வது ஒன்றும் பெரிய விதயமே இல்லை. சங்க காலம்
முதல் இன்றைய கணிக்காலம் வரை நாம் கண் கூடாகக்
கண்டு கொண்டிருக்கிறோம்.

இன்றைக்கும் திரவியம் தேட திரை கடல் ஓடி,
அதிக பக்கம் ஆண்டுக்கு ஒரு முறை மனைவியைத்
தேடி தாயகம் வரும் ஆடவர் இந்தத் தமிழகத்தில்
ஏன் இந்திய நாடு முழுவதிலும் ஆயிரக்கணக்கில்,
இலக்கக் கணக்கில் இருக்கிறார்கள் என்பதை நீங்களும்
இக்கட்டுரை படிப்பவர்களும் நிச்சயம் ஒப்புக் கொள்வீர்கள்
என்று நம்புகிறேன்.

கண்ணகி, கோவலனைப் பிரிந்திருந்தது மிகச் சாதாரண
ஒரு வருடத்திற்கும் குறைவான காலம். இதில்
கண்ணகி பிற ஆடவரை நாடாதது பெரிய விதயமும் இல்லை;
ஒரு வருட காலம் உடல் உறவை வைத்துக் கொள்ளாமல்
இருந்து விடுவது ஒன்றும் வியக்கத் தக்கச் சங்கதியும் இல்லை.

இது ஆணுக்கும் பொருந்தும் பெண்ணுக்கும் பொருந்தும்.

இன்றைக்கும் இலக்கக் கணக்கான தம்பதியினர் ஆடவன்
பொருள் தேடும் பொருட்டு பிரிந்து வாழ்ந்து கொண்டுதானுளர்.

துபாயைச் சேர்ந்த ஒருவர் தன் கவிதையில்,
பொருள் தேடி திரைகடல் ஓடி, "தாம்பத்தியத்தையும் தவணை முறையில்
பெறுகிறோம் நாங்கள்" என்று சொன்னதில் பெரும் சோகம் கப்பித்தான்
கிடந்தது.

கணவன் ஒரு குறைந்த காலம் பிரிந்திருக்கும் போது, மற்றொரு
ஆடவனை நாடாதது மட்டுமே கற்பு என்று நீங்கள் சொல்வீராயின்,
அந்தக் கற்பு ஆடவனுக்கும் உண்டு, பெண்டிருக்கும் உண்டு;
கண்கூடாகக் காண ஏராளமான சான்றுகளும் உண்டு. இதற்குக்
கண்ணகியைத் தேடிப் போகவேண்டிய அவசியம் இல்லை.

ஆனால், அப்படிப்பட்டக் கற்பு நம் பெண்களுக்குத் தேவையில்லை
என்று நீங்கள் கூறுவது வியப்பை அளிக்கிறது! ஏற்கத்தக்கதாயில்லை.

வெளிநாடுகளில் வேலை செய்யும் திருமணமான ஒவ்வொரு
ஆடவனின் உயிர் நாடியே இந்த நம்பிக்கைதான்!

கண்ணகியின் கணவன் அவளை விட்டு விட்டுப் போய் ஊர் மேய்ந்தால்,
கண்ணகியும் ஊர் மேய வேண்டும் என்றும், அப்படிச் செய்யாததால்
அவள் ஒரு முட்டாள் மற்றும் பிற்போக்கானவள் என்றும் கருதும்
மனப்போக்கு மனித நாகரிகம் அற்றது என்று ஒப்புக்கொள்வீர்
என்று நம்புகிறேன்.

அதேபோல, உள்ளூரிலேயே சம்பாதிக்கலாம்; ஆனால் வெளிநாடு போய்
ஆண்டு தாண்டி வந்தால் நான் இப்படித்தான் செய்வேன் என்று
பெண்டிர் சொன்னால் அது ஏற்புடையதா?

(((சேர்ந்திருந்தால் கூட ஆடவரிலும் பெண்டிரிலும் இருக்கும் சில
கழிசடைகளை நாம் பொருட் படுத்த வேண்டாம்)))

எனது காமத்திணவை தீர்த்து விட வேண்டியது உன் கடமை!
அதற்காகவும்தான் நான் உன்னை மணந்தேன்! ஆனால், நீ பிரிந்திருக்கும்
காலத்தில் எனக்குத் திணவெடுத்தால் அதைப் பிறரிடம் தேடிக்
கொள்வது என் உரிமை என்று ஒரு ஆடவனோ பெண்ணோ சொன்னால்
அது குமுகத்திற்கு ஏற்புடையதா?

அது குமுகத்திற்கு ஏற்புடையது என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்
ஸொள்வோம்!

அப்பொழுதும் கூட அவ்வாறு ஒழுகாத ஆடவனையும் பெண்டிரையும்
தங்களின் கற்பு இலக்கணப்படி என்ன சொல்வீர்கள்?
முட்டாள் என்றா? பிற்போக்குத்தனம் என்றா?

கோவலன் கண்ணகியைப் பிரிந்ததுவும், திட்டமிட்டு மாதவி என்பாளை
எண்ணி, தேடி, கோவலன் சென்ற கதையல்ல சிலம்பு. ஆடவன்
இல்லத்தை எதற்கெல்லாம் விட்டு வெளியே செல்வானோ
அந்தக் காரணத்திற்காகத்தான் அவனும் சென்றிருக்கிறான்.
அவன் பொருள் தேடும் விசயமாகக் கூடப் போயிருக்கலாம்.

அப்படிப் போனவன் தவறிப்போனான் என்றவுடன் கண்ணகியும்
அப்படிச் செய்து விட வேண்டும் என்றோ, அல்லது அவனை
மீண்டும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றோ ஒரு பெரிய
புரட்சித் தீர்ப்பைப் பேசி விடமுடியாது!

கண்ணகியைப் பிரிந்திருந்ததே ஒரு வருடத்திற்கும் கீழாக
என்று சொல்லும்போது ஏழாண்டு தம்பதிப் பிரிவுச் சட்டத்தை
எண்ண வேண்டிய அவசியம் எழவேயில்லை.

அப்படியே அதை எண்ணினாலும், ஏன் ஒரு சட்டம்,
ஏழாண்டுகள் வரைப் பொறுத்திருக்க வேண்டும் என்று
சொல்கிறது என்பதனையும் நீங்கள் தாழ்மையுடன்
சிந்திக்க வேண்டும்!

ஆறாண்டு போதாதா? ஐந்தாண்டு? நான்கு? ஏன் ஏழு?
என்ற சிந்தனை எழத்தான் செய்கிறது.

>>>>>>. ஞாநி எழுதியது >>>>>>>>>>>>>
அரசனுக்கெதிராக கண்ணகி பேதராடியது எந்த சமூகப்
பிரச்சினைக்காகவும் அல்ல. தனக்கு அநீதி செய்த கணவனுக்கு நீதி
கேட்டுப் பேதராடிய முட்டாள்தனம்தான் அது
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

மன்னிக்கவும். கண்ணகி போராடியது அவளின் இழப்பிற்காகத்தான்!
இல்லை என்று சொல்ல முடியாது.

ஆனால், ஏன் அவள் போராடி
இருக்கக் கூடாது என்று நீங்கள் கருதுகிறீர்கள்? போராடினால்
ஒரு குமுகாயத்திற்காக மட்டுமே போராட வேண்டும் என்று
ஏன் கருத வேண்டும்?

தனிப்பட்ட இழப்பிற்கான போராட்டம் முடங்கிப்போகுமானால் குமுகப்
போராட்டம் என்பது இருக்கவே இருக்காது!

தனக்கு அநீதி செய்த தன் கணவனுக்காகப் போராடினாள்
என்பது முட்டாள்தனம் என்றால், உலகில் பல மென்மைகளும்
உயரிய பண்புகளும் கேலிக்குரியனவாக ஆகிவிடுகின்றன.

இதே போன்ற கேள்வியை, கோவலனே கண்ணகியைப்
பார்த்துக் கேட்பான் இறப்பதற்கு முன்னர். நான் இவ்வளவு
அநீதிகள் செய்திருந்தும் என்னை ஏற்றுக் கொண்டாயே; ஏன்?
என்று வினவுவான் கோவலன். அதற்கு கண்ணகி சொல்லும் பதில்
மிக உயர்ந்தது; ஒப்பற்றது. அவள் ஒன்றும் "கல்லானாலும் கணவன்

புல்லானாலும்
புருசன்" என்று எண்ணி உன் கூட வந்தேன் என்று சொல்லவில்லை.
அவளின் ஒப்பற்ற பதில் படித்து எண்ணத்தக்கது.

எனினும் நீளம் கருதி அதன் உள் தற்போது நான் செல்ல

விரும்பவில்லை.

அதனால் தங்களின் இந்தக் கேள்வி முழுமையானது அல்ல என்பதை
என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

அதேபோல, நல்ல சிந்தனையாளரான நீங்கள் கண்ணகி ஏதோ
தீப்பந்தத்தைச் சுமந்து வீடு வீடாகச் சென்று தீ வைத்துக்
கொளுத்தினாற் போல எழுதியிருப்பது வியக்க வைக்கிறது.

அப்படியெல்லாம் அந்த அம்மையார் செய்யவும் இல்லை. அப்படிச்
செய்திருந்தாலும் ஊரில் இருப்பவர்கள் விட்டிருக்க மாட்டார்கள்!
இதில் சற்று நீங்கள் ஆழத்தான் சிந்திக்க இருக்கிறது.

கம்பராமாயணத்தில் அனுமார் வாலில் தீப்பந்தம் ஏற்றி
இலங்காபுரியை இரசினிகாந்த சொல்வது போல "பறந்து பறந்து
கொளுத்துவார்"! அப்போ, அனுமாரை Terrorist என்று சொல்கிறீர்களா?

கண்ணகி கையில் தீப்பந்தம் ஏற்றவும் இல்லை. கூரைகளின்
மேல் பறந்து பறந்து தீ வைக்கவுமில்லை.

பறந்து பறந்து இலங்காபுரியைக் கொளுத்திய அனுமாரைக்
கோயில்களில் வைத்துக் கும்பிட்டால் குற்றமில்லை; ஆனால்,
கண்ணகிக்கு சிலை வைப்பதே பாவம் போல எழுதும்
ஆனந்தவிகடனையும், அதைப்போலவே அரைகுறையாக
சிந்திக்கும் பல வலைப்பதிவர்களையும் நினைத்தால்
சற்று நகைப்புதான் வருகிறது.

கட்டுரையின் ஆரம்பத்தில் மஞ்சள் துண்டு மர்மம் பற்றி
எழுதி தங்களின் எழுத்துச் சுவையைக் காட்டித்தான் இருந்தீர்கள்.

அதே போல இறுதியிலும், கரடி ஒப்புமை சொல்லி என்னை
மிகவும் இரசிக்க வைத்திருக்கிறீர்கள். கரடி பொம்மையோடு
உறங்கும் குழந்தையின் உவமை அற்புதம். அந்தக் குழந்தைக்கு,
கரடி பொம்மையின் மேல் இருக்கும் அன்பும் பற்றும் மென்மையானதும்,
மிக உண்மையானதும் ஆகும். அதே குழந்தை உள்ளத்தோடு,
மென்மையாகவும், உண்மையாகவும் கண்ணகியை நேசிப்பவர்,
கற்பு போன்ற விசயங்களைக் கடந்து, அவளின் குண நலன்களை
நேசிப்பவர் பல ஆயிரம் பேர் உண்டு.

தொடைக்கிடுக்குக் கற்பு நிலையைக் கடந்து எண்ணற்ற
பண்புகளைக் கண்ணகியிடம் காண பலரால் முடிகிறது.

ஆகவே, நீங்கள் காட்டிய அந்தக் கரடி பொம்மை ஒப்புமை
அற்புதம். அது சிறந்த எடுத்துக் காட்டு.

கருணாநிதியும் பிறரும் இதற்காக உங்களையும் விகடனையும்
ஏசியிருந்தாலும் எனக்கு இந்தக் கரடி சங்கதி மகிழ்வான விசயம்.

தங்களின் கரடி ஒப்புமையை நான் இரசிக்கும் அதே வேளையில்
தங்கள் கட்டுரையின் இடையில் நீங்கள் சொல்லியிருக்கும்
கருத்துக்களுக்கும், குறிப்பாக அந்தப் பத்தாண்டுப் பிரிவிற்கான
விளக்கத்தையும் சான்றையும் நீங்கள் அளிக்க வேண்டும்!

இல்லாவிடில், தங்களின் கட்டுரையும் கருத்தும் கண்ணகி பற்றி நீங்கள்
விட்ட கரடியாகத்தான் எல்லாருக்கும் தெரியும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
8-சூன்-06

Sunday, May 07, 2006

பாரதிதாசன் மொழிபெயர்த்த தெலுங்குக் கீர்த்தனங்கள்!

தியாகராசர் கீர்த்தனைகளை மொழிபெயர்த்து தமிழ்க் கீர்த்தனங்கள் ஆக ஆக்கி,
தெலுங்கு, சமக்கிருதம் மட்டுமே கீர்த்தனை மொழிகள் என்ற மாயைப் போக்கிய
பாவேந்தர் பாரதிதாசன் பற்றிய குறிப்பைத் தெரிந்தெடுத்துப் பதித்திருக்கிறார் முனைவர் இராம.கி.
காண்க: http://valavu.blogspot.com/2006/04/blog-post_23.html

அன்புடன்
நாக.இளங்கோவன்

Tuesday, May 02, 2006

பாவேந்தர் கவிதைகள் பற்றி புதுமைப்பித்தன்!

தமிழ்ப்பற்று மிகுந்திருந்த காரணத்தினாலேயே, பாவேந்தர் பாரதிதாசனைத்
தள்ளி வைத்திருந்த அவர்காலத் தமிழ்க்கவிக்்குமுகாயத்தினை
விமர்சிக்கிறார் புதுமைப்பித்தன்.

அதைத் தெரிந்தெடுத்துப் பதித்திருக்கிறார் தன் வலைப்பதிவில் நண்பர் வாசன்.
படிக்க வேண்டிய ஒன்று. காண்க http://vassan.kollidam.com/?p=24

அன்புடன்
நாக.இளங்கோவன்

Friday, April 28, 2006

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்!

"கொலை வாளினை எடடா, மிகு கொடியோர் செயல் அறவே!
குகைவாழ் ஒரு புலியே, உயர் குணம் மேவிய தமிழா!"

என்ற பாவேந்தர் பாரதிதாசனை,
அவ்வப்போது, தேவைப்படும்போது,
பயன்படுத்திக் கொண்டு,
பின்னால் சொகுசாக மறந்துவிடும் தமிழர்களே!
திராவிடர் முன்னேற்றத்திற்கான கழகங்களே!
பெரியாரின் பேரப்பிள்ளைகளே!
கவிஞர் பெருமக்களே! கவிதாயினிக் குயில்களே!
தமிழ் ஆசிரியர்களே! உழவர்களே, தொழிலாளிகளே!
தமிழ் இணைய மடற்குழுக்கள் மற்றும் வலைப்பதிவுகள்,
இதழ்கள் முதற்கொண்டு எல்லா மூலைகளிலும்
தமிழ் தமிழ் என்று கொந்தளிக்கும் எழுத்துப் புலிகளே!
என் உயிரினும் மேலான கோழைக் கூட்டங்களே!
இரத்தத்தின் இரத்தமான இழிகுலமே!
இனம் என்றொன்றிலாத இனமே!

இது கேளீர்!

இன்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாள்! (29-ஏப்ரல்)
"உலகாள உனது தாய் உயிர் வாதை அடைகிறாள்,
உதவாதினி ஒரு தாமதம் உடனே எழு தமிழா'

என்று ஒரு தடவையேனும் தமிழ் மக்களை எழுப்பி விட்டவர் பாவேந்தர்.

எழுப்பி விட்டும் எழாத,
எழும்பியும் மற்றவர்களை எழுப்பாத,
எழும்பியது போல் நடிக்கின்ற "தமிழர்களை என்ன சொல்வது?" என்று
யோசித்த போது, நினைவுக்கு வந்தவை மீண்டும் பாவேந்தரின் சொற்கள் மட்டுமே!

அவர் சொல்வார் தமிழர்களைப் பார்த்து!

"பள்ளம் பறிப்பாய்! பாதாளம் நோக்கி அழுந்துக அழுந்துக!,
பள்ளந்தனில் விழும் பிள்ளைப் பூச்சியே, தலையைத் தாழ்த்து! முகத்தைத் தாழ்த்து!
தோளையும் உதட்டையும் தொங்க வை!
ஈன உளத்தை, உடலை, உயிரைச் சுருக்கு!
நக்கிக்குடி, அதை நல்லதென்று சொல்!
தாழ்ந்து தாழ்ந்து தாழ்ந்த நாயினும் தாழ்ந்து போ!
குனிந்து தரையைக் கெளவி, ஆமையைப் போலே அடங்கி ஒடுங்கு!
பொட்டுப் பூச்சியே, புன்மைத் தேரையே, அழு! இளி! அஞ்சு! குனி! பிதற்று!
கன்னங்கருத்த இருட்டின் கறையே!
தொங்கும் நரம்பின் தூளே!"

இந்த வரிகளைப் படிக்கும் போது, ஏதாவது ஒரு தமிழ்நாட்டுத் தலைவர் அல்லது அவரின் தொண்டர்
நினைவில் வருவர். அவரும் தமிழ், திராவிடர் என்றெல்லாம் குதிப்பவராக, குதித்தவராக
இருப்பர். குதித்து விட்டு மீண்டும் பாவேந்தரின் மேற்சொன்ன வரிகளுக்கு
ஒப்பாகிப் போவதும் நாம் கண்டு வருவது.

ஒரு தமிழ்நாட்டில் சாதீயமும், சழக்கும், சந்தர்ப்பவாதமுமே என்றும் அரசோச்சும்.
ஒரு தமிழ்நாட்டில் தமிழினத்தையே வேரோடு அழித்துக் கொண்டிருப்பார் பகைவர்.

தமிழர் தன்னையே அழித்துக் கொள்வர். பகைவராலும் அழிக்கப் படுவார். :-(

தமிழர்களின் பேனாக்களும் தட்டச்சுப் பலகைகளும் பஞ்சாரக் கோழிகளாகப் படுத்துத்
தூங்கும். மீறி வெளியே வந்தால் காற்றிலே வாள் வீசிக் களித்திருக்கும்!
நாக்குகள் நட்டுக் கொள்ளும்! குரல்கள் குன்றிப்போகும்!

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த/நினவு நாளிலே,
அவரை மறந்து விட்ட தமிழ் பேசும் அனைவரையும்
பாரதிதாசனின் மேற்கண்ட வருணனைகளோடு
ஒப்பிட்டுப் பார்ப்பதை ஒரு ஆய்வாகக் கொள்கிறேன்!

அன்புடன்
நாக.இளங்கோவன்
29-ஏப்ரல்-2006

Friday, April 21, 2006

எழிற் கொள்ளை! (செங்காந்தள் மலர்) - (உரை வீச்சு)

என் வீட்டு வாசலிலே என்னை வரவேற்கும்!
கொல்லையிலே கையும் குலுக்கும்.

உன் வீடு நான் வந்தால்,
அங்கேயும் என்னை வரவேற்கும்;

சாலையிலே நான் போயின், அங்கங்கே,
தன்னை என்னிடம் காட்டிக் கொள்ளும்;

கோயிலுக்குப் போயந்தக் குமரனைக் கும்பிட்டால்,
கும்பிட்ட கைகளில் குமரன் தருவான் அதை;
அது அவனுடையதாம்!

ஆறுமுகன் அள்ளித்தருவதில்
கொள்ளை ஆசை ஆருக்கில்லை?

இந்தக் கோடைகாலத்தில் கூதிர்கால நினைவுகள்!

கண் எட்டிய தொலைவு வரை ஒரே நிறம்.
காணும் திசைகளிலே பூரிப்பின் பொரிப்பு.

பச்சை வண்ணத்தின் மச்சியிலே செவ்வடுக்கு.
அதைக் கொஞ்சி விடத் துடிக்கின்ற என் குருதி!
அவற்றின் உச்சி முகர்கின்ற
உள்ளங்களின் முகங்களில் விதவிதமான ஒளி!

காலையில் பிறந்து மாலையில் மறைவதல்ல!
ஏழு மாலை மாறா வாழ்க்கை, மென்மை, உறுதி!

என் காதலியின் கண்வரிகளில் யான் கண்டு
கொள்ளை போன அதே நிறம்.
என் தாய் என்னைச் சிந்தியபோது சிந்திய அதே நிறம்.
என் மண்ணின் மைந்தர்கள், மண்ணில் கொட்டிய அதே நிறம்!

அழியாத வரலாற்றில்,

அத்தி சூடியவன் சோழன்;
பனை சூடிய சேரன்;
வேம்பு சூடிய பாண்டியன்;

"கார்த்திகை அழகன் காந்தள் சூடினன்!"

தமிழ்ப் பூவே! தமிழர்ப் பூவே!, தமிழ் நிலத்தின் பூவே!
செங்காந்தள் பூவே!
கவர்ந்திழுத்த கார்த்திகைப் பூவே!!

அன்றவள் கண்வரிகளில் கண்டபோது
களவு போய்த் தொலைந்தேன் - சொன்னேனன்றோ?!

"இன்றிவர் விதைத்ததெலாம் முளைப்பது" சொல்ல
ஏழு மாலை எழுந்து நிற்கும் இக்குலத்தின் பூவே!,
பூப்பது மென்மை! பூத்து நிற்பது வீரம்!

உன் எழிலை இன்று கொள்ளை கொள்கின்றேன் -
உன்னிடம் சொல்லிவிட்டே!

என் நெஞ்சள்ளும் கொள்ளையை எது தடுக்கும்?

"எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே" என்றவன் பாவேந்தன்!

கார்த்திகை மலரே, காந்தள் குலமே,
"எங்கு பூப்பினும் எங்கும் நிறைகவே" என்றனன் கேள்!

அன்புடன்
நாக.இளங்கோவன்
21-ஏபரல்-2004

பாரதிதாசனுக்கு என் வீரவணக்கம்! (உரை வீச்சு)

தமிழனே, எம் மூச்சோடு கலந்து போனவனே,
பாரதிதாசனே,

எமது சொற்களுக்கு சாணை பிடித்துக் கொடுத்தவன் நீ!
தமிழின் காலமெல்லாம் உன் காலம்.

எமது கொம்புகளுக்குக் கூர் சீவியவன் நீ!
அவற்றில் வண்ணம் தீட்டாமல் விட்டு வைத்தனையே! புரிகிறது.

எமது சுண்டிப் போன குருதியையும் சுழியிட்டு ஓட வைத்தவன் நீ!
மதகுகள் அதற்கு மணல் மேடு.

எமது திசைகள் நூறெனினும், உன் திசையில் ஒன்றச் செய்தவன் நீ!
காண்கிறது தமிழ் மண் அவ்வப்போது.

எமது அகத்துக்கு முகம் கொடுத்தவன் நீ!
அங்கு வாழ்வது தீ!

எமது சிந்தைக்கு செயல் கொடுத்தவன் நீ!
தெளிவு கொண்டோ ம் யாம்.

எமது கரங்களில் வாள் தந்து சென்றவன் நீ!
இன்னும் உறை போகவில்லை அது.

எமது அறிவிற்கு, பகை அறியும் பாடம் தந்தவன் நீ!
களை அரியவும் கற்றுக் கொண்டோ ம் யாம்.

உன்னைக் கசடறக் கற்றவர் கையளவு;
கற்க வேண்டியோர் தமிழளவு.

கற்போர் தமிழர்;
கற்பார் தமிழர்!
நிற்பார் தமிழர்!
நிற்கிறேன் உன் திசை தொழுது!

விரைத்த என் விரல்கள் என் நெற்றிப் பொட்டிலே;
வீர வணக்கம் சொல்கின்றேன் உன் நாளில்! ஏற்றுக் கொள்.
வாழ்க நின் புகழ். வளர்க தமிழகங்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்
21-ஏப்ரல்-200