Pages

Saturday, December 04, 2010

தமிழ்-யுனிக்கோடு: கிரந்த வியாபாரிகளிடம் தொடர்ந்து ஏமாறும் தமிழக அரசு - பகுதி-3/3

ஆக, தமிழுக்குள் கிரந்த நுழைப்பு தவிர்க்கப் பட்டது;
கிரந்தத்துக்குள் தமிழ் நுழைப்பு மட்டுமே
தற்போதைய இன்னல் ஆகும்.
அதுவும் வேண்டும் என்றே ஒரு தனி
மனிதரால் தமிழ்நாட்டுக்கு ஏற்படுத்திக்
கொடுக்கப்பட்ட இன்னலாகும்.

இதில் எப்படிக் கிரந்த அரசியல் நடக்கிறது
என்று பார்ப்பது மிக அவசியமாகும்.

1)
முதலில் இந்தக் கிரந்தச் சிக்கல்
ஒரே நேரத்தில் மூன்று நிலைகளில் தாக்கியதால்
பலருக்கும் இதனைப் புரிந்து கொள்வதில்
சிக்கல் இருந்தது.

தமிழ்நாட்டரசு பெற்றுத் தந்தக்
காலநீட்டில் ஒவ்வொன்றாக நுணுகிப்
பார்க்கையில் சிக்கல் எங்கே முளைத்தது
என்றும் அது தற்போது எங்கு
போய்க் கொண்டிருக்கிறதென்றும்
தெள்ளென விளங்குகிறது.
அதற்காகத் தமிழ்நாட்டரசிற்குப்
பாராட்டுச் சொல்லவேண்டும்.

நாசா கணேசனின் உந்துதலால்
நடுவணரசு ஏற்படுத்திய முன்மொழிவைப்
பாதுகாக்க கணேசன் பலருடன் அணிசேர்ந்து
பல்வேறு கூட்டணிகளை
உருவாக்கியிருக்கிறார்கள்.

அதன் முதற்கட்டமாக பேராசிரியர் வா.செ.கு
அவர்களை வைத்து "தமிழ் எழுத்துக்களில்
கிரந்த எழுத்துக்கள் வந்து கலப்பது தவிர்க்க
வேண்டியது. தவிர்த்தாயிற்று.
ஆனால் கிரந்த எழுத்துக்களில்
தமிழ் போய் கலப்பது ஒன்றும் தவறில்லை"
என்றவாறு கருத்தை
வெளியிட வைத்து விட்டார்கள்.

நமது தமிழை பிறர் பயன்படுத்துவது
நமக்குப் பெருமைதானே என்ற
பொய்யான ஒரு மாயை கிளப்பி
விடப்பட்டிருக்கிறது.

இந்த மாயையை விலக்கிப் பார்த்தால்
"கிரந்த எழுத்துக்களைக் கொண்டு வந்து
தமிழுக்குள் கலப்பது தீது; தவிர்த்து விட்டோம்.
ஆனால் தமிழ் எழுத்துக்களைக்
கொண்டுபோய் கிரந்தத்துள் கலப்பது
தீதில்லை என்று எப்படிக் கருதுவது?

பாலில் தண்ணீரைக் கலந்தால் என்ன?
தண்ணீரில் பாலைக் கலந்தால் என்ன?
இரண்டும் ஒன்றுதானே?

தமிழ் போய் கிரந்தத்தில் கலக்கலாம்
என்று சொல்லும் அறிஞர்கள் இதை
எப்படி மறக்கிறார்கள்?

வடமொழிக் கலப்பின் பாதகங்களை உணர்ந்த
பேரா.வா.செ.குவின் கண்களையும் கட்டியது
நா.கணேசனிடம் அவருக்கு உண்டான உறவுமுறை
அல்லது நட்பும், நா.கணேசனின் சொற்களை
நல்லது என்று எண்ணும் அவரின் நம்பிக்கையும்
ஆக இந்த இரண்டாக இருக்க முடியும் என்று
சிலர் சொல்வதை எண்ணிப்பார்க்காமல்
இருக்க முடியவில்லை.

தமிழ்ப் பற்றாளரான வா.செ.கு அவர்களின்
அரிய பணிகளுக்கிடையே கணேசன் அணியினர்
திருகுதாளம் ஆடி அவரை நம்ப வைத்திருக்கிறார்கள்.
அதில் வா.செ.கு அவர்களும் ஏமாற்றப் பட்டிருக்கிறார்
என்றே கருத முடிகிறது. வா.செ.குவின் ஏமாற்றம்
அப்படியே அரசையும் ஏமாறச் செய்கிறது..

2)
அடுத்ததாக, "கல்வெட்டுக்களைப் படிக்க முடியாது,
பழைய ஆவணங்களைப் படிக்க முடியாது"
ஆதலால் நடுவணரசின் (+கணேசன்) முன்மொழிவை
மறுக்க வேண்டியதில்லை என்ற கருத்தை அடிப்படையாகக்
கொண்டு வேறு சிலர் அணியமாக்கப் பட்டுள்ளது தெரிய வருகிறது.

கல்வெட்டு, பழைய ஆவணங்களைப் படிக்க வேண்டும்தான்.
அவற்றை அச்சில் வைத்துப் படிக்க வேண்டும் என்பதும்
பிழையான பார்வை. காலஓட்டத்தின் கணிநுட்ப வளர்ச்சியில்
இந்தக் காப்பெல்லாம் காணாமல் போய்விடும்.

ஆனால், கிரந்தத்தோடு தமிழைக் கொண்டு போய் கலக்காமலே
கல்வெட்டுக்களையும் பழைய ஆவணங்களையும் படிக்க
முடியும் எனும் நிலை இருக்கும்போது, தொழில் நுட்ப வளர்ச்சியில்
அதனை வளர்த்துக் கொள்ளமுடியும் எனும்போது
ஏன் கிரந்தத்துடன் தமிழைக் கலக்க வேண்டும்?

கிரந்தக் குறியேற்றம் அதுபாட்டுக்கு ஒரு மூலையில்
ஒருங்குறிக்குள் கிடந்தால் இரண்டையும் கலக்காமல்
கல்வெட்டுக்களைப் படிக்கவும் செய்யலாம்; தமிழை
வதைக்காமலும் இருக்கலாம்.

கணிச்சூழல் அப்படி இருக்கையில், அதையெல்லாம்
பொருட்படுத்தாது, வெறும் தமிழ் தமிழ் தமிழ் என்று
மட்டும் சிந்திப்பதும், கலவை கலவை கலவை என்றும்
சிந்திப்பதும் எதற்கு?

சவகர்லால் நேரு பல்கலையில் தமிழ்த்துறைப்
பேராசிரியராக இருக்கும் கி.நாச்சிமுத்து அவர்களுக்கு
கல்வெட்டுக்கள், பழைய இலக்கியங்களில்
இருக்கும் தேர்ச்சியை முன்வைத்து அவரிடம் இருந்து
கிரந்தத்துக்குள் தமிழை நுழைக்க
ஆதரவாகக் கருத்துக்கள் பெறப்படுகின்றன.

அதற்குச் சான்றாகத் தமிழக
சட்டமன்ற உறுப்பினர் திரு.இரவிக்குமார் அவர்களின்
"நிறப்பிரிகை" என்ற இணையத்தளத்தில் இடப்பட்டிருக்கும்
"தமிழ் கிரந்தம் ஒருங்குறி சில விளக்கங்கள் - கி.நாச்சிமுத்து"
என்ற தலைப்பில் "http://nirappirikai.blogspot.com/2010/11/blog-post_8125.html"
என்ற முகவரியில் இடப்பட்டிருக்கும் கட்டுரையைக் காட்டலாம்.

கட்டுரை வழியே நாச்சிமுத்து அவர்களின் தமிழறிவைப்
புரிந்து கொள்ளமுடிந்தாலும், அவரிடம் மொழிபெயர்ப்பு,
சொற்பெயர்ப்பு, குறிபெயர்ப்பு போன்ற கணி,
யுனிகோடு நுட்பங்களில் சிறிதும் தெளிவைக்
காண முடியவில்லை.

அடுத்ததாக இந்தக் கலவையை ஆராய்ந்து
சொல்லத் தக்கார் என்று அரசு கருதுவது
திரு.மணவாளன் என்ற அறிஞரை.

நா.கணேசன், வா.செ.கு ஆகியோரின்
பேரன்பைக் கொண்டவர்கள் என்ற தகுதியிலும்,
தமிழ் கல்வெட்டுக்களில் தேர்ச்சியுடைய
தமிழ் அறிஞர்கள் என்ற தகுதியில் மட்டுமே
அவர்கள் பணியாற்றுவாரெனின்
"அதற்குப் பதில் தமிழக அரசு கிரந்த, தமிழ்க் கலவை
முன்மொழிவைக் கண்டு கொள்ளாமலேயே
விட்டிருக்கலாம்" என்றே சொல்லலாம்.

ஏனென்றால் வா.செ.கு அவர்கள்
கணேசனை நம்பிச் சொன்ன கருத்தையே
இவர்கள் எதிரொலிப்பார்கள் அன்றி
வேறொன்றும் நடக்கப் போவதில்லை.

இந்த ஆய்வுகளில் பங்குபற்றும்
இன்னொருவர் அறிஞர் ஐராவதம் மகாதேவன்.
மிகச்சிறந்த கல்வெட்டுப் பேரறிஞராக
இருப்பவர்களுக்கு, வரலாறு அறிந்த அறிஞர்களுக்கு,
கணியிலும், யுனிக்கோடுவிலும் புலமை தானாகவே
வந்துவிடும் என்று அரசு கருதி விட்டதைப்
போன்று பெரும்பாலும் கிரந்தச் சார்பாளர்
அணியாகவே இந்த ஆய்வுக்குழு அமைந்து வருகிறது.

ஆகவே, கணேசனின் கிரந்தச் சேவையைக்
காப்பாற்றும் கணேசனின் அணியினரையே
தமிழக அரசு முழுக்க முழுக்க கிரந்தக்
கலவை ஆய்விற்குத் தேடிக் கொண்டிருப்பது
ஆழ்ந்த கவலைக்குரியதாகும்.

மீண்டும்:
கிரந்த, தமிழ்க் கலவைக்கு மூல காரணமே நாசா கணேசன்.
நாசா கணேசன் கிரந்தக் கலவை பற்றி இணையத்தில்
என்ன சொல்கிறாரோ அதை எதிரொலிக்கும் நிலைக்குத்
தள்ளப்பட்டிருக்கும் வா.செ.கு.
வா.செ.கு மற்றும் கணேசனின்
அன்பைப் பெற்ற மணவாளன், நாச்சிமுத்து;
அனைவருக்கும் அன்பான ஐராவதம். இவர்களினால்
தமிழக அரசுக்கு நற்பெயர் கிடைக்குமா அல்லது
தீராப்பழி கிடைக்குமா என்பதனைக் காலம்தான்
சொல்ல வேண்டும்.

3)

மூன்றாவதாக, கிரந்தச் சிக்கலைச்
சரியாக உணர வாய்ப்பில்லாதவர்களிடையே
சிறீரமணசர்மா சார்ந்திருக்கும் சாதியை
மட்டும் காட்டி எல்லாச் சரவலையும்
அவர்பக்கம் திசை திருப்பி விட்டு விட்டுக்
கணேசனின் முன்மொழிவின்பால்
பார்வை திரும்பாமல் பார்த்துக்
கொள்ளப்படுகிறது.

தமிழ்ப்பற்றாளர்களை "இதோ பார்
இன்னார் இன்னைதைச் செய்தார்"
என்று முடுக்கிவிட, அந்த ஓசையில்
நா.கணேசனின் முன்மொழிவுகள்
கண்டு கொள்ளப்படாமல் காக்கப்
படுகின்றன.

4)
நான்காவதாக, பன்னாடுகளைச் சேர்ந்த
பிற நாட்டு அறிஞர்களின் கருத்துக்கள்
தேவையில்லாமல் நுழைக்கப் படுகின்றன.

காட்டாக, சியார்ச் ஆர்ட் என்ற அமெரிக்க அறிஞர்
ழான் - லக் செவ்வியார் என்ற பிரெஞ்சு அறிஞர்,
அறிஞர் சிப்மென் மற்றும் வெளிநாடுகளில் இருந்து
செம்மொழி மாநாட்டில் சங்கப்பாட்டுக்களைப் பாடி மகிழ்வித்த
எல்லாருக்கும் தமிழில் புலமை இருக்கலாம்.
தமிழ் மேல் மதிப்பு இருக்கலாம்.
ஆனால் அவர்களுக்கெல்லாம்
தமிழைக் காக்க வேண்டிய கடப்பாடு இருப்பதாக
எண்ணிக் கொண்டு அவர்களின் பின்னால்
தொங்கிக் கொண்டு இருந்தால்
தமிழர்களை விட தமக்குத் தவறிழைத்துக்
கொள்பவர்கள் வேறு யாருமாக இருக்க முடியாது.

முக்கியமாகத் தமிழ்ப் புலமை கொண்ட
எல்லா வெளிநாட்டு அறிஞர்களும்
சமற்கிருதத்தின் மேல் இந்தையீரோப்பிய
மொழி அடிப்படையில்
பாசமும் நேசமும் கொண்டவர்கள்.

சியார்ச் ஆர்ட்டுவாக இருந்தால் என்ன?
ழான்-லக் ஆக இருந்தால் என்ன?
அவர்கள் தமிழ் பேசுகிறார்கள், தமிழ் ஆய்வு
செய்கிறார்கள் என்றால், அவர்கள் மேல் நமக்கு
மதிப்பு உண்டு. நமது போற்றுதற்குரியவர்கள் அவர்கள்.

ஆனால் நமது மொழியைக்
காப்பதற்கு இவர்களின் உள்ளத்தையும்
உணர்வையும் சார்ந்திருத்தல் முட்டாற்றனம் ஆகும்!

அந்த முட்டாற்றனமும் முன்னெடுக்கப் படுகின்றது.

"நம் மொழியிலே பிற மொழியைக் கலக்க வேண்டுமா?
வேண்டாமா? என்பதை நமக்கு முடிவு செய்ய துப்பில்லை
என்றால், நம் மொழியறிஞர்களிடமும் அரசியலாரிடமும்
துப்பில்லை என்றால், நம் மொழியும் நாமும் இல்லாது
போகத் தகுதியாயினவையே என்று சொல்லுவன் யான்!"

மனதுக்குள் அவர்களும் அப்படி எண்ணினால் வியப்பில்லை.

5) குழப்பம் 1:

இரண்டு வாங்கினாய் ஒன்று எங்கே? என்ற
கவுண்டமணி செந்தில் ஆகியோரின் புகழ்பெற்ற
திரைநகையைச் சற்று நினைவுக்கு கொண்டு
வந்து பார்க்க வைக்கிறது கிரந்த
ஆதரவாளர்களின் குழப்பத் திருப்பணிகள்.

நாமும் இங்கே சொல்லிப் பார்ப்போம்!

எத்தனைப் பிரச்சினையைச் சொல்கிறார்கள்?

இரண்டு பிரச்சினைங்க!

ஒன்று என்ன?

ஒருங்குறியிலே கிரந்தம் நுழையக் கூடாது!

சரி இன்னொன்று என்ன?

ஒருங்குறியிலே கிரந்தம் நுழையக் கூடாது!

சரி அதைத்தான் முன்னாடியே சொல்லிவிட்டீரே?
இன்னொன்று என்ன? அட அதாங்க இது!!

இப்படிப் போகிறது குழப்பம்.

எப்படி என்கிறீர்களா?

ஒருங்குறி என்பது தமிழுக்கு மட்டுமேயான
ஒரு குறியேற்றம் என்பதான ஒரு
உருவகம் ஏற்படுத்தப் படுகிறது.
அது பன்னாடுகளின் பல மொழிகளின்
எழுத்து அடுக்குகளைக் கொண்ட கோர்வை.
அதில் தனியாகக் கிரந்தம் இருந்தால் என்ன?
சீனம் இருந்தால் நமக்கென்ன?

அதில் வருகின்ற கிரந்தத்தில் கொண்டு போய்
தமிழை நுழைக்கக் கூடாது; என்பதை மறைக்க
முயலுமாறு, பலரை "ஒருங்குறிக்குள்ளே
கிரந்தம் நுழையவிடக்கூடாது" என்ற புரிதலுக்குள்
தள்ளிவிடுகிறார்கள். அப்படிச் செய்தால்
அது செல்லாத வாதமாகப் போய்விடும்;
அந்தச் சந்தடி சாக்கில் கிரந்தத்தில் தமிழை
நுழைத்து விடலாம் என்ற அரசியலும்
ஆங்காங்கு ஓடுகிறது.

அதனால் "ஒருங்குறியிலே கிரந்தம்
நுழைவது என்பது வேறு";

"கிரந்த ஒருங்குறிப் பாத்தியிலே
தமிழை நுழைப்பது வேறு" என்ற தெளிவு
எல்லோரிடமும் இருக்க வேண்டும்.

சிறீரமணசர்மாவையே கருவிக் கொண்டு
இருந்து விட்டு கணேசனின்
முன்மொழிவைக் காப்பதற்கே இந்தக்
குழப்பம் வழிவகுக்கும்.

6) குழப்பம் 2:

தமிழ்த்திறன் அல்லது வரலாற்றுத் திறன்
அல்லது தமிழ் சார்ந்த நிர்வாக அல்லது
ஆட்சித் திறன் கொண்டவர்களுக்கு
கணித்திறன், யுனிக்கோடு திறன் என்ற இரண்டும்
தானாகவே இருக்கும் என்று பலரும் கருதிக்
கொண்டிருக்கின்றனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அது உண்மை என்றால் "தமிழ் இணையப் பல்கலைக் கழகம்"
என்று ஆரம்பித்த ஒன்று இன்று தேய்ந்துபோய்
"தமிழ் இணையக் கல்விக் கழகம்" என்று ஆகியிருக்காது.

பலரும், கணித்திறன் கொண்ட கணியறிஞர்கள்
அல்லது கணிப்பணியில் இருப்பவர்களுக்கெல்லாம்
இந்த யுனிக்கோடுச் சரவல் நன்றாகத் தெரியும் என்று
மிகத் தவறாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

கணித்திறன் வேறு யுனிக்கோடு பற்றிய புலமை வேறு.

கணிப்பணியில் இருக்கும் ஆயிரத்தில் யாரோ
ஒருவருக்கு மட்டுமே ஓரளவு இந்தச் சரவல் புரியும்.

பல்லாயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே இதில்
புலமையும் தெளிவும் இருக்கும்.
தற்போதைய நிலை அதுதான்.

இதை மறந்துவிட்டு தடிஎடுத்தவர் எல்லாம்
தண்டல் காரர்தான் என்று சொல்வது போல
கணிப்பணியில் இருப்பவர்க்கெல்லாம்
இந்தச் சரவல் நன்றாகத் தெரியும் என்று கருதிக்
கொண்டால் அது அறியாமை அன்றி வேறல்ல.

ஆகவே தமிழறிஞர், கணியறிஞர்,
யுனிக்கோடு அறிஞர் எல்லாரும்
சேர்ந்து முதலில் எங்கே சரவல்
என்பதைத் தெளிந்து செயல்திட்டம்
செய்ய வேண்டும்.

தமிழக அரசு காலநீட்டு
வாங்கிக் கொடுத்து
மாதமாகியும் அப்படியான
ஒரு ஒருங்கிணைவு
ஏற்பட்டக் காட்சியேதும்
கிடைக்கவேயில்லை.

எல்லாமே இன்னாருக்குத் தெரியும்
இன்னார் சொன்னால் சரி என்று போனால்
தமிழ் இல்லாது போய்விடும்.

அதுமட்டுமல்ல, பல தமிழறிஞர்கள்,
கணி அறிஞர்கள், யுனிக்கோடு
அறிஞர்கள் என்ற இவர்களின்
கருத்துக்களை எல்லாம் எதிரொலித்த
ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்
முயற்சியும் அரைக்கிணறு தாண்டிய
கதையாய்க் காகிதங்களோடு முடிந்துவிடும்.

ஆகவே, தமிழக அரசு செய்யும் பிழைகளில்
முக்கியமானவையாக நான் கருதுவது:

1) கிரந்தச் சேவைகள்மேல் மென்மைப்
போக்கினைக் கொண்டவர்களையே
கிரந்த, தமிழ்க் கலவைகளை ஆய்வு
செய்யப் போடுவது

2) தமிழறிஞர், புகழ் பெற்ற படைப்புகள்
செய்தவர் என்ற தகுதியெல்லாம்
அச்சில் வரும் தாள்களுக்குப் பொருந்தும்;
அதன் காலங்களிற்குப் பொருந்தும்.
ஆனால் யுனிக்கோடு சிக்கலுக்கு அது பற்றாது.
அவ்வறிஞர்களோடு, கணி நுட்பமும்,
யுனிக்கோடு நுட்பமும் அறிந்த, தமிழும்
அறிந்த யுனிக்கோடு அறிஞர்களையும் சேர்த்து
நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவெடுக்காமல்
மேம்போக்காக "இவர் சொன்னார் அவர் சொன்னார்"
என்று முடிவெடுப்பதும்
பெரும்பிழையில் போய் முடியும்.

"இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே"
என்ற பாடல்வரி நினைவுக்கு வருவதை
தவிர்க்கமுடியவில்லை.

நிறைவு.

அன்புடன்
நாக.இளங்கோவன்

பி.கு: அடியேனின் இந்த எழுத்துக்கள் தமிழுக்கு உயர்ந்த தொண்டாற்றியிருக்கிற
பல அறிஞர்களையும் பெரியவர்களையும் கிடுக்குவது போல இருந்தாலும்,
கிரந்தம் தவிர்த்த மற்ற விதயங்களிலும் எனக்கு அவர்கள் மேல் உயர்ந்த மதிப்பு உண்டு.

கிரந்தத்தில் அவர்களின் செயற்பாடுகள் தமிழுக்கு ஊறு சேர்த்திடுமோ என்ற
அச்சத்தில் கோர்க்கப்பட்டது இக்கட்டுரையன்றி வேறு யாதொன்றுமில்லை.
கணேசன் என்ற ஒருவர் செய்யும் தமிழ்க்கேட்டிற்குப் பலரும் தவிக்க வேண்டிய
சூழல் கவலைஏற்படுத்தும் ஒன்றன்றி மற்றோர்பால் எனக்கு யாதொரு மதிப்புக் குறையும் இல்லை என்று மீண்டும் அன்போடு சொல்லிக் கொள்கிறேன்.

தமிழ்-யுனிக்கோடு: கிரந்த வியாபாரிகளிடம் தொடர்ந்து ஏமாறும் தமிழக அரசு - பகுதி-2/3

ஆக, சிறீரமணசர்மாவின் முன்மொழிவுகளில்
ஒன்றான கிரந்தத்தைத் தமிழில் கலக்கும் முன்மொழிவு
தள்ளுபடியாகிவிட்டது. இனி அடுத்த சரவலுக்கு வருவோம்.

கிரந்த எழுத்துக்களை தமிழ் எழுத்துக்களில்
கலப்பதை ஒருங்குறி சேர்த்தியம் புறந்தள்ளி விட்ட
போதும், தமிழ் எழுத்துக்களைக் கொண்டுபோய்
புதிதாக உருவாக்கப்படும் கிரந்தக் குறிகளில்
கலக்கும் முன்மொழிவை ஏற்கவிருந்த சூழலில்
தமிழக அரசு விரைந்து செயற்பட்டு, இது பற்றி
நன்கு கலந்தாலோசித்துக் கருத்துரைக்க
மேலும் ஏறத்தாழ மூன்றுமாத காலம் வேண்டும்
என்று நடுவணரசைக் கேட்டுத் தமிழ்
அறிஞர் உலகிற்குப் பெற்றுத் தந்தது.

அவசரப்பட்டு எதுவும் செய்யாமல்,
அந்தக் காலநீட்டில் தக்க அறிஞர்கள்
கொண்ட குழுவை நியமித்து ஆராய்ந்து
தெளிவான முடிவை எடுப்பதே அரசின் எண்ணம்.

ஆனால் கிரந்த வியாபாரிகள் இந்த
இடைவேளையில் படுசுறுசுறுப்பாக
இதிற்செயற்பட்டு அரசின் தடத்தினை
மாற்றிக் கொண்டுள்ளார்கள்.

அதற்கு ஏற்ற கூட்டணிகளை உருவாக்கியிருக்கிறார்கள்.
அவர்கள் இந்தக் கிரந்த மறுப்பு முயற்சி மழுங்கிப்போக
செய்ய வேண்டிய எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்.

சூழல் என்ன?

இதுவரை யுனிக்கோடுவில் கிரந்தக்
குறிகளுக்கென்று தனியான குறியேற்றம் கிடையாது.

பல மொழிகளும் குறிகளும் சின்னங்களும்
இடம்பெற்றுள்ள யுனிக்கோடுவில்
கிரந்தக் குறிகளுக்கும் இடம் வேண்டும்
என்று சிறீரமணசர்மா வேறொரு
முன்மொழிவை வைக்கிறார்.

யுனிக்கோடுவில், உலகில் இருக்கின்ற
மொழிகளுக்குள்ள எழுத்துகளுக்கெல்லாம்
அவற்றின் எண்ணிக்கையைப் பொறுத்துச்
சிறியதும் பெரியதுமான
தனித்தனிப் பாத்திகள்(blocks) உள்ளன.

தமிழ் அப்படியான பாத்தியொன்றில் இருக்கிறது.
மலையாளம், வங்காளம், அரபி, சீனம்
என்ற ஒவ்வொன்றும் அவற்றின் பாத்திகளில்
இருக்கின்றன.

இந்திய நடுவணரசு சர்மாவின் முன்மொழிவைக்
கையில் எடுக்கையில் நாசா விஞ்ஞானி
நா.கணேசனின் முன்மொழிவு
ஒன்று அவர்களை இடர்கிறது.

நாசா கணேசன் - "கிரந்தக் குறிகள்
உருவாக்குகிறபோது தமிழின்
7 எழுத்துக்களையும் கலந்து உருவாக்க
வேண்டும்" என்று போட்ட
முன்மொழிவே இதற்குக் காரணம்.

சர்மா கேட்டிருந்தது, பல மொழிகளிலும்
காணப்படுகிற சின்னங்கள்,
பழைய கால எழுத்துக்கள்,
தற்போது வழக்கில் இல்லாத குறிகள்,
குறைவாகப் பயன்படுகிற குறிகள்
ஆகியவையெல்லாம் யுனிகோடுவில்
வைக்கப்படுகின்ற பாத்திகள் வரிசையில்தான்.

ஆனால் கணேசன் சூழ்ச்சி முன்மொழிவோ,
"மொழியின் முகன்மை எழுத்துக்கள்
வைக்கப் படுகின்ற முகன்மைப் பாத்திகளில்
தமிழ் மொழிக்கு ஊறு நேருகின்ற விதமாகவும்,
கிரந்தக் குறிகளுக்குள் தமிழின் 7 எழுத்துக்களைக்
கொண்டு போய்ச் சேர்த்துவிட்டால் கிரந்தக்
குறியேற்றத்தை மட்டுமே பயன்படுத்தினால்
போதும் - தமிழ்க் குறியேற்றமே தேவையில்லை
என்று நாளடைவில் எண்ண வைக்கின்ற
இடத்தில் அல்லது பாத்தியில்
கிரந்தக் குறிகளை வைக்கச் சொல்கிறது".

"சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி"
என்பது போல கணேசனின் கிரந்தச் சேவை
அமைந்துவிட்டது.

தலையைப் பிய்த்துக் கொண்ட நடுவணரசு
சர்மாவின் கருத்துக்களில் சிலவற்றை
மட்டும் எடுத்துக் கொண்டு கணேசனின்
முன்மொழிவைப் பெருமளவும் உள்வாங்கி
தானே ஒரு தமிழ் கலந்த கிரந்த
முன்மொழிவை உருவாக்கி விட்டது.
இதுதான் இன்றைக்குப் பூதமாகியிருக்கிறது.

உலகில் உள்ள மொழிகளின் எழுத்துக்கள்,
பழங்காலக் குறிகள், சின்னங்களுக்கெல்லாம்
இடம் ஒதுக்கி பன்னாட்டு மொழிகள் ஒருங்கிய
குறியேற்றமாக இருக்கும் ஒருங்குறி என்கின்ற
யுனிக்கோடுவில் கிரந்தக் குறிகளுக்கென
ஒரு ஓரப் பாத்தி கட்டுவது யாருக்கும் இழப்பல்ல.

தமிழுக்கும் அது எந்தவிதத்திலும் நட்டமல்ல.
உலகின் ஆயிரக்கணக்கான எழுத்துக்களில் குறிகளில்
கிரந்தக் குறிகளே இருக்கக் கூடாது என்று
சொல்ல நாம் ஒன்றும் சட்டாம்பிள்ளை அல்ல.
நமக்கு அது தேவையுமில்லை. கவலையுமில்லை.
அது முறையுமில்லை. அப்படிச் சொன்னால்
அது முட்டாற்றனமும் கூட.

ஆனால், "வேலியிலே போகின்ற ஓணானை
வேட்டிக்குள் எடுத்து விடுவது போல",
கிரந்தக் குறியேற்றத்தை ஒரு ஓரப்பாத்தியில்
தனியே செய்யப் போந்த யுனிக்கோடு
சேர்த்தியத்தையும், நடுவணரசையும்,
இரமணசர்மாவையும் இடைமறித்து,
"தமிழ் விஞ்ஞானி நான் கூறுகின்றேன் -
7 தமிழெழுத்துக்களையும் எடுத்து
கிரந்தத்தோடு ஒட்ட வையுங்கள்" என்று
குழப்பி திசை திருப்பிய தமிழ்க்கேட்டைச்
செய்தவர் நாசா விஞ்ஞானியும்
இணையத்தில் தனது கிரந்தச் சேவைகளுக்காக
ஒரு கிரந்தக் குழுவினரிடம் இருந்து
"மரபுச் செல்வர்" என்ற பட்டத்தையும்
வாங்கிக் கொண்ட மாண்புமிகு நா.கணேசன் ஆவார்.

நா.கணேசனே நடுவணரசு இப்படியான
முன்மொழிவைச் செய்வதற்கு முழுக்காரணமுமாக,
பின்னணியுமாக இருந்தவர். இதனை அவரே பல
இணையக் குழுக்களிலும் எழுதிப் பெருமையும்
பெற்றுக்கொண்டவராவார்.

இப்படியான சூழலில் தமிழ்நாட்டரசு
பெற்றுத் தந்த காலநீட்டில் என்ன நடக்கிறது?

கணேசனைக் காப்பாற்ற தமிழ் எழுத்துக்களைக்
கிரந்தத்தில் கலக்கலாம் என்ற பரப்புரை
எப்படி நிகழ்கிறது என்பதை ஆழ்ந்து பார்த்தால்
கவலையளிக்கின்ற காட்சிகளே கிடைக்கின்றன.

(தொடரும்)

அன்புடன்
நாக.இளங்கோவன்

தமிழ்-யுனிக்கோடு: கிரந்த வியாபாரிகளிடம் தொடர்ந்து ஏமாறும் தமிழக அரசு - பகுதி-1/3

யுனிக்கோடுவை தமிழ்நாட்டரசு ஏற்றுக் கொண்ட
செம்மொழி மாநாட்டைத் தொடர்ந்து, உடனடியாக,
ஏறத்தாழ ஒரே நேரத்தில், கிரந்தம் தொடர்பான
மூன்று முயற்சிகள் நிகழ்ந்தன.

1) உலகளாவிய மொழிகளின் எழுத்துக்கள்
அத்தனைக்கும் குறியேற்றம் தருகின்ற
குறிக்கோளுடைய யுனிக்கோடு என்கின்ற
ஒருங்குறியில் 68 கிரந்தக் குறிகளைப்
புதியதாக தனியான இடத்தில் உருவாக்குவது.

2) இருக்கின்ற தமிழ்-யுனிக்கோடுவில்
68 கிரந்தக் குறிகளில் 27ஐக் கொண்டு வந்து நுழைப்பது.

3) புதிதாக உருவாக்கப் படுகின்ற கிரந்த-யுனிகோடுவில்
7 தமிழ் எழுத்துக்களையும் சேர்த்துவிடுவது.

இந்த மூன்று செய்திகளும் தமிழக அரசிற்குத்
தக்கவண்ணம் சென்று சேராதவாறு பார்த்துக்
கொள்ளப்பட்டது. அப்படி இருந்த போதும்,
கணித்தமிழ் ஆர்வலர்களின் முயற்சியாலும்,
நல்ல அறிஞர்களின் முயற்சியாலும்,
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழக
முதலமைச்சரிடம் எடுத்துச் சொல்லியும்,
விடுதலையில் அறிக்கை விடுத்தும்
ஆற்றிய அரும்பெரும் தொண்டாலும்
தமிழக அரசு நிலைமையை அறிந்து
விரைந்து செயற்பட்டது.

இந்தச் செயற்பாடு ஒருபுறம் கிளர்ந்து எழ,
எதையும் நுட்பியல் ஏரணங்களோடு
முடிவெடுக்கும் பன்னாட்டுப் பெருங்கணி
நிறுவனங்களின் கூட்டுச் சேர்த்தியமான
யுனிக்கோடு சேர்த்தியத்தினர்க்கு (Unicode Consortium),
முன்மொழிவுகளை ஏற்கவோ தள்ளவோ
ஒவ்வொன்றிற்கும் நுட்பியல் ஏரணங்கள்
(Logical Technical Reasoning) தேவைப்பட்டது.

தமிழ்-யுனிக்கோடுவில் 27 கிரந்த எழுத்துக்களை
நுழைக்க வேண்டும் என்று மேலே
இரண்டாவதாகச் சொல்லப்பட்டிருக்கும்
திரு.சிறீரமணசர்மாவின் முன்மொழிவு,
சரியான ஏரணம் முன்வைக்கப்படாவிட்டால்
ஏற்கப் பட்டிருக்கக் கூடிய நிலையில்,
யுனிக்கோடு அறிஞர்களான
திரு.முத்து நெடுமாறன் (மலேசியா),
திரு.மணி.மு.மணிவண்ணன் (தமிழ்நாடு)
ஆகியோரின் நுணுக்கமான,
ஆழ்ந்த நுட்பியற் கருத்துக்கள்
ஒருங்குறி சேர்த்தியத்திற்குத் தெளிவாகப் புரிந்தன.

தெளிந்த யுனிக்கோடு புலமை கொண்ட
அவர்கள் சொன்னது பெரிதாக ஒன்றுமில்லை.

"தமிழ்-யுனிகோடுவிற்குள் 27 கிரந்த எழுத்துக்களை
நுழைக்காமலேயே சிறீரமணசர்மா,
அவர் விரும்பும் வடமொழி நூல்களை எப்படி
எழுத, படிக்க இயலும்" என்பதே.

திரு.முத்து நெடுமாறன்,
இமைப்பொழுதிலா நொடிப்பொழுதிலா
என்று அறிய முடியாத விரைவில்
அக்கருத்தைச் செயலாக்கித் திரையிலும்
காட்டிவிட்டார். அதன் அடிப்படையை
உணர்ந்து கொண்ட ஒருங்குறி
சேர்த்தியத்திற்கு திரு.இரமணசர்மாவின்
முன்மொழிவை நிராகரிக்க அதிக நேரம்
பிடிக்கவில்லை.

மேலே கூறிய 3 கிரந்த முயற்சிகளில்
2ஆவது முயற்சி தமிழக அரசு, ஆசிரியர்.கி.வீரமணி மற்றும்
ஆர்வலர்கள், யுனிக்கோடு அறிஞர்கள் ஆகியோரின்
செயற்பாட்டால் தகர்ந்து போனது. (அல்லது தமிழ் தப்பித்தது).

இங்கே விதயத்தை நன்கு உள்வாங்கி ஒத்திசைவுடன்
அவரவர் ஆற்றிய பணிகள் தமிழைக் கரை சேர்த்தன.

ஆக ஒரு விதயத்தில் தமிழர்களால் தமிழைக் காக்க முடிந்தது.
ஆக, மீதி இரண்டு விதயங்கள்.

இவை எத்தகையன? அதில் நடப்பது என்ன?

(தொடரும்)

குறிப்பு: கிரந்த, தமிழ்க் கலவை பற்றிய சிக்கலான நுட்ப விதயங்களில் மேலும் தெளிய முனைவர் இராம.கி அவர்களின் http://valavu.blogspot.com/2010/11/1.html ல் அவர் எழுதியிருக்கும் கட்டுரைத் தொடரைப் படிக்கவும்.

அன்புடன்
நாக.இளங்கோவன்