இந்தத் திரைப்படம் யாருக்காக என்று யாரேனும் என்னைக் கேள்விகேட்டால், "இன்று அரசியல் மற்றும் இதர வழிகளில் பொதுவாழ்வில் ஈடுபடுவோரின் படிப்பினைக்காக" என்று சொல்வதே என் விடையாக இருக்கும். அதோடு தற்போதையத் தலைமுறைக்குமிகச்சரியானதொரு புரிதலைத் தருமாறும் அமைந்திருக்கிறது.
அப்படியானதொரு ஆழ்ந்த சிந்தனைத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது பெரியாரின் வாழ்க்கை பற்றிய இந்தத் திரைப்படம்.
பெரியாரைப் பற்றித் தங்கள் பாட்டி சொன்ன கதை, உறவுகள் சொன்னதிரிப்பு, (பெரியாரைப்) படிக்காத சோம்பரின் கற்பனை உலகு, சாதிப்பிடிப்பில் பேதலித்துப் போனச் சார்புகள், அங்கொன்றும் இங்கொன்றுமாய்மேடைகளில் கேட்ட தரங்கெட்டப் பேச்சாளர்களின் பரப்புரைகள், மற்றும் இவற்றை அப்படியே அச்சு மாறாமல் ஏற்றிக் கொண்டு வழக்காடும் மிடையங்கள், இணையக் குமுகம், சிந்தனை வட்டம் போன்ற பல்வேறுநிலைகளுக்கு ஒரு உயர்வான புரிதலையும் படிப்பினையும் இந்தப் படம் தந்திருக்கிறது.
திராவிடக் காளைகளும் பாட்டாளிகளும் பலகணிப் பித்துக்குளிகளும் போட்டி போட்டுக் கொண்டு கருத்துச் சுதந்திரத்தைக் காலால்மிதி மிதி என்று மிதித்துக் கொண்டிருக்கிற கால கட்டத்தில் இந்தத் திரைப்படம், வெள்ளைக்காரஞ் சட்டமும்,வைதீகச் சட்டமும் முழுமையாகக் கோலோச்சிய கால கட்டத்தில், கட்டிலாக் கருத்துகளுடன் கருத்துரிமைக்காகப் போராடிய பெரியாரை அரிமாவாகக் காட்டுகிறது.
இன்றைக்கு கருத்துரிமை என்பது மிடைய முதலாளிகளின் எண்ணக்கிடக்கையாக இருந்து உலகுவாழ் தமிழர்களை நசுக்குவதாகஒருபுறமும், மிடையங்களின் சில்லறைக் கருத்துக்களுக்கே சினுங்கிக்கொள்ளும் அரசியல் தளங்களாக மறுபுறமும் நம்முன் காட்சியளிப்பது வெட்கக்கேடுகளில் ஒன்று.
சாதீயத்தின் மொத்த வடிவமாக வைதீகமும், அந்த வைதீகத்தின்மொத்த உரிமையாளராக பார்ப்பனக்குமுகமும் இருந்ததை இரண்டே காட்சிகளில் (ஈரோட்டுக்கு எழுந்தருளிய ஒரு சாமியார் காட்சியிலும், காசி அன்னதானச் சத்திரக் காட்சியிலும்)காட்டிப் பெரிய புரிதலை ஏற்படுத்தும் திரைப்பட வித்தையை இராசசேகரன் செய்திருக்கிறார்.
அது மட்டுமல்ல, அந்த வைதீகப் பார்ப்பனீயத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்த பார்ப்பனரல்லாத சாதியினர் மற்றும் பணக்காரர்களின் முகத்திரையையும் நார் நாறாகக் கிழித்துவிடுகின்றது காசி அன்னச்சத்திரக்காட்சி. இராமசாமி நாயக்கரின் தந்தையாரும், காசிச் சத்திர செட்டியாரும் சாதியக் கொடுமைகளின் வேரை விளங்கவைத்து விடுகின்றனர் இப்படத்தில்.
"பார்ப்பனீயத்தின் உரிமையாளராகப் பார்ப்பனர்களே இருந்தபோதும், அதன் பங்காளிகளாக மாறிவிட்டிருந்த ஏனைய சாதியரையும் எடுத்துக்காட்டின இந்த இரண்டு காட்சிகளும், தண்ணீர்க் குழாய் உள்ளிட்டஇன்ன சில காட்சிகளும்", என்று சொன்னால் மிகையாகாது.
"பார்ப்பனக் கொடுமைகளுக்குப் பக்க வாத்தியமாக இருந்த பாவத்தின் சம்பளம்"தான் அண்மையில் கூட நாம் கண்டு மனம் வெகுண்ட பாப்பாப்பட்டி,கீரிப்பட்டி, நாட்டார் மங்கலக் கிராமத் தீண்டாமை.
பெரியாரின் பேரில், பார்ப்பனர்களை மட்டும் சாடுமாறு குமுகத்தைத் திருப்பிவிட்டு "பார்ப்பனீயத்தின் பங்காளியம்" சாமர்த்தியமாகத் தப்பிக்கொண்டதன் விளைவுதான் தமிழகத்தில் இன்றும் நடக்கும் சாதிச்சண்டைகளும் சாதி அரசியலும்.
பார்ப்பனீயத்தைப் பெரியார் எதிர்த்தார் என்று சொல்லி சொல்லியேபார்ப்பனீயப் பங்காளிகள் தம்மை வளப்படுத்திக் கொள்கின்றனர் என்றமறுக்கமுடியாத உண்மையை இந்தப் படம் சிந்தனைக்கு இழுத்து வருகிறது.
"பார்ப்பனர்களும் சரி சாதீயத்தில் அவர்களின் பங்காளிகளாக உள்ளவர்களும் சரி, இன்றைக்கும், உள்ளுறும நுட்பவியல் (informationtechnology) துறையில் இருந்து வேளாண்மைத் துறை வரை தாங்கள்பேணி வருகிற மிகையான சாதீய வெறிப் போக்கை மீள் பார்வை செய்துகொள்ள இப்படம் ஒரு நல்ல வாய்ப்பு".
ஒரு சிக்கலான, நெருடலான, மிக நீண்ட போராட்ட வரலாற்றின் வேரைசில காட்சிகளில் விளக்கி விட்ட இராசசேகரனின் உழைப்புவியக்க வைக்கிறது.
குழந்தை மணத்தின் கொடுமையை, பாவேந்தர் பாரதிதாசன் இப்படிக் கூறத் துவங்குவார்.
"ஏழு வயதே எழிற் கருங்கண் மலர்,
ஒரு தாமரை முகம்,
ஒரு சிறு மணி இடை,
சுவைத்து அறியாத சுவை தருங் கனிவாய்,
கூவத் தெரியாத குயிலின் குஞ்சு,
தாவாச் சிறு மான்,
மோவா அறும்பு,
தாலி அறுத்துத் தந்தையின் வீட்டில்...."
இந்த வரிகளை அப்படியே மனத்தில் கொண்டு வந்து தாக்கியது
பெரியாரின் இல்லச் சிறுமிக்கு நடந்த மணமும், அதைத் தொடர்ந்து அந்தச் சிறுமிக்கு தாலி அறுத்த நிகழ்வும். சற்றே மனத்தை உறையவைக்கின்ற காட்சி கண் முன் வந்து சென்றது.
ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வது கை வந்த கலை. அப்படி இல்லாமல், அந்தச் சிறுமிக்குத் மீண்டும் திருமணம் செய்து வைத்து, தன் இல்லத்தில் இருந்து குமுகப் பணியைத் துவக்கிய பெரியாரின் ஆன்மா மிக நேர்மையானது.
நாகம்மையாரை இழந்து அவர் குலுங்கி அழுத காட்சியும், தனிமையும்
அதன் பின்னர் "நான் யார்" என்ற அவரின் ஆன்மத் தேடலும் மனிதத்தின் இயல்பைக் காட்டியது.
பெரியார் என்றவுடன் குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்வது போல பாய விளைவோருக்கும், பெரியார்என்று பேசும்போழ்து ஆன்மத்தையும் மனித இயல்பையும் தத்துவங்களையும் தொலைத்துவிட விளைவோருக்கும் பெரியாரின் ஆழ்ந்த அக உணர்வுகளைஎடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.
யாக்கை நிலையாமை ஒவ்வொரு மனிதனையும் கலக்கிவிடத்தான் செய்கிறது. அந்தக் கலக்கம் இயல்பானது. தவிர்க்க முடியாதது.
பட்டினத்தார் தனது தாயாரை இழந்தபோது புலம்பியதற்கும், பெரியார் அவரின் மனைவியாரை இழந்தபோது புலம்பி நின்றதற்கும் யாரால் வேறுபாடு
காணமுடியும்?
இந்தச் சூழலை இராசசேகரன் காட்சியாக்கி விதம், சத்யராசின் நடிப்பு,தங்கர் பச்சானின் ஒளியோவியம் என்ற இந்த மூன்றன் கூட்டணியின் உழைப்பு பாராட்டத் தக்கது.
பெரியார் - இராசாசி என்ற இருவரின் சித்தாந்த வேறுபாட்டுக்கிடையேயும் இருந்த நட்பும் பண்பும் போற்றத்தக்கது. அதை மாண்புடன் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
இந்தக் கால கட்டத்தில் அரசியல் வாதிகள் ஒருவருக்கொருவர் காறிக் காறி உமிழ்ந்து கொள்கிற கேவலமான அரசியலும், அவர்களின் மொழிகளும், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளச் சகிக்காத பண்பாட்டுச் சீரழிவும் மனதில் ஆடி மிகவும் வருந்த வைத்துவிடுகிறது.
ஏற்பட்ட அரசியல் மாற்றங்களில் மணியம்மையாருடன் ஆன திருமணமும் சிக்கிக் கொண்டது சங்கடமான ஒன்று. அந்தக் குழப்பமான அரசியலின் தொடக்கையும் பின்னர் பேரறிஞர் அண்னா அதனைக் குறித்து வருந்திச் சொன்ன சேதியும் மிகப் பக்குவமாகக் கையாளப்பட வேண்டிய விதயங்களில்ஒன்று. பலரது எதிர்பார்ப்பையும் கடந்த பக்குவத்தோடு படமாக்கியிருக்கிறார்கள். பாராட்டுகள் இங்கு பலமாகக் கொடுக்க வேண்டும்.
பெருகியிருந்த நமசுகாரங்களும் இன்ன பிற சமற்கிருதப் பேச்சுவழக்கும், தற்போதைய அவற்றின் மாற்றங்களும் புரிந்து கொள்ளுமாறு
பதியப்பட்டிருப்பது, நம்பிக்கையை அளிக்கிறது.
பெண்களை முன்னணிப் படுத்திய இரு பெரும் தமிழ்த் தலைவர்கள் என்றால் அந்தப் பெருமை பெரியாரையும் பிரபாகரனையும்தான் சேரும்.
இருபெரும் தலைவர்களில் முதுபெரும் தலைவரான பெரியார் கள்ளுக் கடை மறியலுக்காக தனது சொந்தத் தென்னைகளையெல்லாம் வெட்டி, தன் இல்லப் பெண்களையே அந்தப் போராட்டத்துக்குத் தலைமை தாங்க வைத்தது அவரின் கொள்கைப்பிடிப்பையும் சூதற்ற அரசியலையும் முன்மாதிரியையும் காட்டுகிறது. சொல்லவேண்டிய முக்கிய செய்திகளைச் சுருக்காக அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள்.
வைக்கம் போராட்டத்தின் பகுதியாக வைக்கப் பட்ட "கடவுளா அல்ல கல்லா" என்ற பாடல் பெரியார் குமுகத்திற்கு சிந்திக்க வைத்த வினாக்களை எல்லாம் பட்டியலிட்டு விடுகிறது. இந்தப் பாடல் பெரியாரின் பல மேடைப்பேச்சுக்களை அகத்தில் கொண்டு படத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.
வைக்கம் போராட்டத்தின் எதிரொலியாக பெரியார் தெய்வ நிந்தனையாளராகச் சித்திரிக்கப் பட்டு அவரின் "எளிமையான கேள்விகளை" எதிர் கொள்ளமுடியாதவர்கள் "கடுமையான யாக வேள்விகளை", மந்திர தந்திரங்களைச்செய்வதானச் சூழலை எண்ணிப் பார்க்க வைத்து அதிர வைக்கிறது படம். இப்பொழுது கூட அரசியலாளர்கள் ஊர் ஊராக மாநிலம் மாநிலமாகச் சென்று யாக வேள்விகள் செய்து அரசியல் செய்வதை நாம் கண்டு கொண்டிருப்பது, பெரியாரை எதிர்த்துச் செய்யப்பட்ட இந்த மந்திர தந்திரப் போராட்டத்தை நம்ப வைக்கிறது.
ஈரோட்டில் சேர்மனாகப் பணியாற்றும்போது சாலையை அகலப் படுத்துவதற்கு ஏற்பட்ட எதிர்ப்பும், தற்காலத்திலே கூட சாலை அகலப்படுத்த இடம்தரமாட்டேன் என்று சொல்லி அடம் பிடிக்கும் அரசியலையும் காணும்போது இன்னும் நாம் போக வேண்டிய தொலைவு நிறையவே இருக்கிறதுஎன்று தோன்றியது.
பெரியாரை மய்யமாகக் கொண்ட படத்தில் எங்கே பிற தலைவர்களின் காட்சிகள் அதிகமாகிடுமோ என்ற அய்யம் முன்பு இருந்தது. ஆனால், மிகப் பக்குவமாக அப்படி ஆகிடாமல் செய்திருக்கிறார் இராசசேகரன். இராசாசி மட்டும் அடிக்கடி வருவார் படத்தில். சிறு வயதில் இருந்தே அரசியல் பொதுவாழ்வில் நண்பரானவர்கள் என்பதால் இராசாசி சம்பந்தப்பட்டக் காட்சிகள் அதிகம் இருந்தது மிகப் பொருத்தமாகவும் தேவையாகவும் இருந்தன. எதிர்பார்த்த அளவிற்குக் கூட அறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் தொடர்புடையக் காட்சிகள் இல்லாமல் அதே நேரத்தில் வைத்தவற்றில் நேர்த்தியாகவும் கையாண்டிருக்கிறார்கள்.
பல தளங்களிலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நின்று போராடிய,வரையறுக்கப்பட முடியாத அந்த மாமனிதரின் பல்வேறு செயல்களையும் படத்தில் குறுகிய நேரத்தில் காட்டிவிடுவது என்பது மிக அரிய செயலாகும். அந்த முயற்சியில் மிகப் பெரிய அளவு வெற்றியை இந்தப் படத்தில் செய்திருக்கிறார்கள். இந்தப் படத்தையே முழுமையாக ஆய வேண்டுமானால் நிறைய பக்கங்கள் பிடிக்கும். அந்தளவுச் செறிவுடன் செய்திருக்கிறார்கள்.
தொடக்கக் காட்சிகள் சில காட்சித் தொகுப்பு போல் இருந்ததாகப் பட்டாலும்15, 20 நிமிடங்களில் படத்திற்குள் முழுமையாகக் கொண்டு போய்விடுகிறார்கள்.
இறுதிக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றியது. கலைஞரின் அறிக்கையோடும் அரசு மரியாதையோடு அவர் மறைவு காட்டப்பட்டதோடு மேலும் மக்களின் உள்ளங்கள் அங்கே சேர்க்கப் பட்டிருக்கலாம்.
பாரதிதாசன், அண்ணா, கலைஞர், நாவலர், மதியழகன் போன்றோர் வந்துபோகிறார்கள். அண்ணா மற்றும் கலைஞர் இவர்களின் ஒப்பனையில் சற்று கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அவர்களாக நடித்தவர்களும் இன்னும் சிறப்பாக செய்திருக்க இடமிருக்கிறது. அண்ணாவின் மீசை மிகையான வெள்ளையாக இருந்தது. கலைஞரின் கண்ணாடி நடிகருக்கு அவ்வளவாகப் பொருந்தவில்லை. வீரமணியாக நடித்தவரின் உரையாடல்
ஒத்து வரவில்லை.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குசுபுவின் நடிப்பு முழுமையாக வெளியாகி இருந்ததாகத் தெரியவில்லை. அவரை அறிமுகம் செய்த காட்சியமைப்பிலும் இன்னும் சற்று இயல்பைக் கூட்டியிருக்கலாம்.
சத்யராசு ஒரு சில இடங்களில் பெரியாராகவே ஒன்றிப் போயிருக்கிறார். அருமையான நடிப்பு. அவரின் ஒப்பனையும் கவனமாகச் செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், உடலில் இருந்த முதுமையை, கரங்களை ஆட்டிப்பேசும்போது சத்யராசின் கரங்களில் இருக்கும் இளமை காட்டிக் கொடுத்திருக்கிறது. இந்த இடத்தில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.
அதேபோல, மிக முதியவராக இருந்த காலங்களில் படுக்கையில் இருந்து எழுவதில்,மேடைகளில் கைகளை ஆட்டிப் பேசும்போதும் இருந்திருக்க வேண்டியஇயல்பான நிதானத்தில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். இராசாசியை மட்டும் ஆரம்பம் முதல் இறுதி வரை அதே இளமை அல்லது முதுமையோடு காட்டியதாகத் தெரிந்தது. அவரின் முதுமைக் காட்சியில் இன்னும் கொஞ்சம் ஒப்பனையில் கவனம் செலுத்தியிருக்கலாம்.
இப்படத்தை இவ்வளவு கவனமாக எடுத்திருப்பதைப் பார்த்ததும்
இளையராசா தனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டு விட்டார்
அல்லது அவரை இந்தப் படத்தினர் தவற விட்டு விட்டார்கள்
என்றே இப்போது எனக்கு சொல்லத் தோன்றுகிறது.
பெரியார் குறித்த புரிதல்கள் அறவே இல்லாமலும், சரியாக இல்லாமலும்,
குழப்படியாகவும், குழப்ப முற்பட்டும் கிடந்த இச்சூழலிற்கு பெரியாரின்ஆன்மாவை அப்படியே எடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.
பெரியாரின் சில உரைகளை மட்டுமே வைத்துக் கொண்டுஅவரை ஆதரித்தும் வெறுத்தும் கருத்து கொண்ட அனைவருக்கும் இந்தப் படம் ஒரு நல்ல அறிதலாக இருக்கும்.
இந்த அளவு பணியாற்றிக் கூடவா இன்னும் இந்த மண்ணில்இத்தனை சாதீய அட்டூழியங்கள் அரசுத்துறை, தனியார்த் துறை, ஆன்மீகம் மற்றும் குமுகத்தின் பல நிலைகளிலும் பார்ப்பனீயமும் பார்ப்பனீயத்தின் பங்காளியமும் பெருகிக் கிடக்கின்றனவே என்று எண்ணும்போது திருமூல நாயனாரின் திருமந்திரத்தில் இருந்து ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.
"ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டு
பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு
சூரையங் காட்டிடைக் கொண்டு போய் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே"
திருமந்திரம்: 145
இந்தப் பாடலின் துவக்கத்தில் பெரியார் என்ற பெயரைச் சேர்த்துப் படித்தால் நமது குமுகாயம் எந்த அளவுக்குப் பெரியாரின் நேரிய எண்ணங்களில் இருந்து விலகி, "நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தது போல்" போலியாகப் பிதற்றிக் கொண்டிருக்கிறது என்பது புரியும்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
17/மே/2007
Thursday, May 17, 2007
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
நண்பர் இளங்கோவன்
தமிழ்த்திரைப்படங்களை தன்னேர்ச்சியாக பார்க்க நேரிட்டாலொழிய, கண்ணுற ஆவலில்லை எமக்கு.
உங்களுடைய பெரியார் படம் குறித்தான கருத்து எம்மை காசு கொடுத்து ஒளிமத்தட்டை வாங்க வைக்கப் போகிறது ! நன்றி.
குறிப்பு :)
வடமொழி எழுத்துக்களோ அல்லது கிரந்த எழுத்துக்களோ தவறியும் வந்துவிட கூடாது என்பதில் கவனத்துடன் இருக்கும் நீங்கள்,
சேர்மன் என்ற சொல்லுக்கு இணையாக
மாற்றுச் சொல்லை பயன்படுத்தியிருக்க வேண்டும் !!
சேர்மன் = நகரதந்தை ?
// திரைப்பட வித்தையை இராசசேகரன் செய்திருக்கிறார்//
you mean Gnanasekaran?
பெரியார் படத்தை இயக்கியவர் ஞானசேகரன். இராசசேகரன் அல்ல?
வழக்கம்போல அருமையாக எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் எழுதுவதை படிக்கும் போது என் உள்ளத்தை நானே படிப்பது போல உணர்கிறேன்.
அன்புடையீர்,
பெரியார் படத்தை இயக்கியவர்
"ஞான.இராசசேகரன்".
இடுகைக்கு நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்
அன்பின் நண்பர் வாசன்,
அவசியம் பார்க்க வேண்டிய படம் பெரியார். நம்பிப் பாருங்கள் :)
குறுகிய நேரத்தில் பெரியாரின் அகத்தைக் கொண்டு வந்து
நிறுத்தி விடுவதில் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.
ஆனந்த விகடனில் இப்படம் பற்றிய வருணனையைப் பார்த்தேன்.
நேர்த்தியான ஒன்று.
சேர்மன் :-)
பிடிக்க வேண்டிய இடத்தில் சரியாகப் பிடித்து விட்டீர்கள் :-)
சேர்மன் மற்றும் மேயர் (chairman, mayor) என்ற இரு சொற்களும்
தமிழ்ச் சொற்கள்தான் என்று ஒரு நிறுவலை கீ.இராமலிங்கனார்
என்பார் அவர் நூலில் செய்திருக்கிறார்.
அவர், தமிழ்ச் சொல்லாக்க வகைகளில்,
ஒப்பொலியாக்கம் என்ற முறையில் பல சொற்களை ஆக்கியவர்.
காட்டாக,
Quoram = கோரெண் = கோர் + எண் (கோரும் எண்)
Cashier = காசாளர் = காசு + ஆளர்.
அவரே, chairman, mayor என்பதனை இவ்வாறு விளக்குகிறார்.
chairman = சேர்மன் = சேர் + மன்;
மன் = மன்னத்தன்மை
சேர் = சேரப்பெற்றவர்
மன்னத்தன்மை சேரப்பெற்றவர் என்ற பொருளில்
chairman என்பதனை சேர்மன் (சேர்மேன் அல்ல) என்றே வழங்கலாம்
என்று கூறுகிறார்.
(எனக்கென்னவோ சேர்ந்தவர்க்கு மன்னன் என்றே பொருள் வருகிறது)
இந்த ஒப்பொலியாக்க மேற்கோள்களை, பேரா.இலக்குவனார் மறைமலை
அவர்களின் சொல்லாக்கச் சிந்தனைகள் என்ற நூலில் "பெருவழக்குப்
பெறாத சில சொல்லாக்கங்கள்" என்ற தலைப்பில் படித்தேன் சில ஆண்டுகள்
முன்பு.
அதன் பின், மன்னுதல், மன்னுயிர் போன்ற சொற்களின் பயன்பாடுகளை
அடிக்கடிப் பார்த்த எனக்கு இச்சொல் பிடித்துப் போயிற்று. அண்மையில்
என் அக்கம் பக்கத்தில் குடி வந்த ஒருவரின் பெயர் "மன்னு". எனக்கு
வியப்பாகி விட்டது இப் பெயர் கேட்டு.
அதனால் பெருமளவு இந்தச் சொல்லின் மேல் எனக்குப் பிடிப்பு ஏற்பட்டது.
அதே போல, மேயர் என்பதனை
மே + அர் என்று பிரித்து மேலானவர் என்ற பொருளில் அப்படியே
பயன்படுத்தலாம் என்று கீ.ரா வாதிடுகிறார்.
இந்த விளக்கத்தின்பால் எனக்கு அவ்வளவு ஈர்ப்பு முன்னர் இல்லை ஆயினும்,
மேய, மேயவன், என்ற சொற்களைப் பற்றி அறிந்த பின்னர்
(பெருந்துறை மேய பிரான், வலிவலம் மேயவன்) இதன்பாலும்
எனக்கு ஈர்ப்பு வந்துள்ளது :-)
மேயவன் என்றால் ஆளுபவன் என்று பொருள்.
மேயவன் = மேயவர் > மேயர் என்று சொல்லலாம் என்று
எனக்குத் துணிவு :-) வந்தது.
நீண்ட நாள்களாகவே இச்சொற்களைப் பயன்படுத்த வேண்டும்
என்று எண்ணியிருந்தேன். முதல் முறையாக சேர்மனை வெள்ளோட்டம்
விட்டுப் பார்த்தேன். சரியாக உங்கள் பார்வையில் பட்டிருந்தது கண்டு மகிழ்ச்சி.
எனினும், சொல்லாக்கத்தில் "ஒப்பொலி" முறையை மிகக் குறைவாக,
அதாவது கடைசி வாய்ப்பாகவே பயன்படுத்தவேண்டும் என்று
பேரா.மறைமலை வலியுறுத்துகிறார்; அதோடு எச்சரிக்கையும்
நூலில் செய்திருக்கிறார்
அதன்படி, சேர்மன் என்பதற்குப் புழக்கத்தில் இருக்கும்
நகர் மன்றத் தலைவர்/தந்தை என்ற சொல்லே சிறந்தது என்றே கருதுகிறேன்.
புதிதாக ஒன்றைச் செய்ய வேண்டியது இல்லை.
(எனினும் சேர்மன், மேயர் போன்ற சொற்கள் ஒரு வேளை நம்மதாக
இருந்து ஓடிப்போயிருக்குமோ என்ற ஒரு அய்யம் இன்னும் எனக்கு
உண்டு)
இது குறித்து இராம.கி ஐயாவிடம் மேலும் கேட்க வேண்டும்.
நல்ல ஒரு வினாவை இட்டமைக்கு மகிழ்ச்சி.
அந்த நூலைத் தேடி எடுக்க வைத்து விட்டீர்கள் :)
நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்
அன்பின் லக்கிலுக்,
வருகைக்கும் கருத்துக்கும்
நன்றி மற்றும் மகிழ்ச்சி.
அன்புடன்
நாக.இளங்கோவன்
நல்ல விமரிசனம்.
வலையில் விரவிக்கிடக்கும் Periyar Bashing-ஐயே பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன மனதுக்கு
கோடையில் கிடைத்த குளிர்தருவாக இந்த விமரிசனம் காட்சியளிக்கிறது.
//JayBee said...
நல்ல விமரிசனம்
//
ஐயா, வணக்கம்.
தங்களின் வருகையும் கருத்தும்
மகிழ்ச்சியளித்தன.
நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்
//குழந்தை மணத்தின் கொடுமையை, பாவேந்தர் பாரதிதாசன் இப்படிக் கூறத் துவங்குவார்.
"ஏழு வயதே எழிற் கருங்கண் மலர்,
ஒரு தாமரை முகம்,
ஒரு சிறு மணி இடை,
சுவைத்து அறியாத சுவை தருங் கனிவாய்,
கூவத் தெரியாத குயிலின் குஞ்சு,
தாவாச் சிறு மான்,
மோவா அறும்பு,
தாலி அறுத்துத் தந்தையின் வீட்டில்...."
இந்த வரிகளை அப்படியே மனத்தில் கொண்டு வந்து தாக்கியது
பெரியாரின் இல்லச் சிறுமிக்கு நடந்த மணமும், அதைத் தொடர்ந்து அந்தச் சிறுமிக்கு தாலி அறுத்த நிகழ்வும். சற்றே மனத்தை உறையவைக்கின்ற காட்சி கண் முன் வந்து சென்றது.//
right now i dont have tamil fonts... i am deeply moved by this lyrics of Paavaender. Incidentally, I am also reminded of short story by Anuththamma (in the 1950s) too brings a vivid picture of this cruel practis of child marriage.
Your review on Periyar film is a tribute to the Social Reformer. Would like to add one line to the review..'Ithu Padamalla Paadam'
Post a Comment